Skip to main content

பிஞ்ச செருப்பும் ஊக்குக் குத்துன சட்டையும் வெளிய... ஆனா உள்ள இருந்தது வேற! அதை அஜித் பார்த்தார்! 

Published on 20/07/2020 | Edited on 05/11/2020
vaali ajith simran

 

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என சினிமாவில் பல அவதாரங்களை எடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. நடிகர் அஜித்தின் சினிமா கரியரில் முக்கியப்படமான 'வாலி' மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். தமிழ்ப் படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என பிறமொழிகளிலும் சில படங்களை இயக்கியுள்ளார். வெற்றிகரமான இயக்குனரான பின் அவரது லட்சியமான நடிப்பில் காலடி வைத்தார். அவருடைய வித்தியாசமான நடிப்பு, கலகல சிரிப்பு மற்றும் இரட்டை அர்த்த வசனங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. ஆரம்பக் காலகட்டங்களில் துருதுருவென காதல் நாயகனாக நடித்துக் கொண்டிருந்த இருந்த எஸ்.ஜே.சூர்யா தற்போது முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார். சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தன்னுடைய கடின உழைப்பினால் உயரம் தொட்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் பயணத்தில் ஒரு சிறிய பகுதி இது...

 

எஸ்.ஜே.சூர்யாவை இயக்குநராக அடையாளம் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியவர் அஜித்தான். "தல அஜித் இல்லையென்றால் எஸ்.ஜே.சூர்யா இன்று இல்லை " என அவரே பல இடங்களில் சொல்லியும் இருக்கிறார். "அஜித் சாரோட முதல் சந்திப்பு அவரோட  'ஆசை' படத்தின்போது நடந்தது. அதில் நான் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். என்னுடைய குடும்பம் ஓரளவு வசதியான குடும்பம்தான். அவர்களுக்கு நான் சினிமாவிற்குப் போவது பிடிக்கவில்லை. அதனால் நான் என்னுடைய சுயஉழைப்பினால் முன்னேறவேண்டும் என்று தீர்மானித்தேன். வீட்டில் பணம் ஏதும் வாங்கமாட்டேன். ஒரு வேளை நான் வெற்றி பெறாவிட்டால் வீட்டில் பணம் வாங்கி வீணாக்கி விட்டோம் என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாக நேரிடும் என்று அதை தவிர்த்து வந்தேன். 'ஆசை' படத்தில் வேலை பார்க்கும் போது என் சட்டையில் சில பட்டன்கள் இருக்காது. ஊக்குதான் குத்தியிருப்பேன். என்னுடைய செருப்பும் தேய்ந்து போய் அடியில் பிய்ந்திருக்கும். இதையெல்லாம் அஜித் சார் கவனித்து இருக்கிறார். "யாரு இந்தப் பையன்... எதைப் பற்றியும் கவலை இல்லாமல் இப்படி வேலை செய்கிறான். நாம் பெரிய நடிகரானால் இவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்த அந்த எண்ணம்தான் பின்னாளில் 'வாலி' பட வாய்ப்பாக வந்து அமைந்தது. 'வாலி’ வெளியானபோது, அதன் மேக்கிங், பாடல்கள், க்ளாஸ் ஆகியவற்றில் தெரிந்தது, உண்மையான எஸ்.ஜே.சூர்யா யார் என்பது.

 

kushi

 

'வாலி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் இயக்கிய 'குஷி'யும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அஜித்திற்கு எப்படி 'வாலி' மிக முக்கியமான படமோ, அது போலவே விஜய்க்கு 'குஷி' முக்கியமான காலகட்டத்தில் கைகொடுத்த திரைப்படம். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விஜய்க்குத் தேவையான வெற்றியை, தேவைக்கு மிக அதிகமான பெருவெற்றியை தந்தது 'குஷி'. பின் 'குஷி' தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 'நியூ', அன்பே ஆருயிரே, இசை என அடுத்தடுத்த  படங்களை இயக்கினார். அதுவரை இயக்குநராகவும், நடிகராகவும் இருந்த எஸ்.ஜே.சூர்யா இசை படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புதிய பரிமானம் காட்டினார். இவர் நடித்து வெளிவந்த 'இறைவி' மற்றும் சமீபத்திய 'மான்ஸ்டர்' திரைப்படம் நடிகராக இவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது.

 

காதல் நாயகனாக நடித்துக்கொண்டிருந்த எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய பாணியை சிறிது மாற்றி ஏ.ஆர்.முருகதாஸின் 'ஸ்பைடர்' திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இப்படத்தில் அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் வித்தியாசமான முகபாவனையுடனும், பின்னணி இசையுடனும் பார்வையாளர்களைத் திகிலூட்டினார். தற்போது வெங்கட்பிரபு சிம்புவை வைத்து இயக்கும் 'மாநாடு' திரைப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார். என்னதான் அன்று, அவருடைய செருப்பும் சட்டை பட்டனும் பிய்ந்து இருந்தாலும் அவருடைய நம்பிக்கையும் உத்வேகமும் உறுதியாக இருந்ததால்தான் இன்று தான் விரும்பிய இடத்தைப் பிடித்து வெற்றியாளராகியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்கத்திலும் அசத்துங்கள் சூர்யா...  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இந்த முறை காரில் வருகை; கையில் பிளாஸ்திரி’ - ஜனநாயக கடமையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
casted his vote at Neelankarai polling station. T.V.K. Leader Vijay

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வீட்டிலிருந்து வந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் தற்போது தனது வீட்டில் இருந்து கார் மூலம் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையாற்றியுள்ளார்.  சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் த.வெ.க. தலைவராக முதல்முறையாக வாக்களித்துள்ளார். காயம் காரணமாக கையில் ப்ளாஸ்திரி ஒட்டியுள்ள நிலையில் தற்போது வாக்கினை செலுத்தியுள்ளார்.முன்னதாக கோட் படப்பிடிப்பிற்காக துபாயில் இருந்த விஜய் இன்று காலை விமானத்தின் மூலம் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தொடங்கியது சர்ச்சை - விஜய் பாடலுக்கு எதிராகப் புகார் 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
complaint against vijay the goat song whistle podu lyrics

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, புதுச்சேரி, கேரளா, உள்ளிட்ட இடங்களில் நடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதிர்த்தியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘விசில் போடு’ பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது. விஜய் பாடியுள்ள இப்பாடல் யூட்யூபில் தற்போது வரை 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் நமபர் 1 இடத்தில் இருக்கிறது. விஜய்யுடன் இணைந்து இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் பாடியுள்ளனர். ராஜு சுந்தரம் நடனம் அமைத்திருக்க மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல், படத்தில் ஒரு குழுவாக பணியாற்றும் விஜய், பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல் ஆகியோர் ஜாலியாக ஒரு பார்ட்டி செய்யும் சூழலை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பாடலில் ‘கேம்பைன தான் தொறக்கட்டுமா, மைக்க கையில் எடுக்கட்டுமா’ என விஜய்யின் அரசியல் டச்சும், ‘நண்பா நண்பி விசில் போடு’ என விஜய்யின் ஃபேவரட் டயலாக்குகளும் இடம்பெறுகின்றன.  

இந்த நிலையில் இப்பாடலின் வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புகார் மனு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மனுவில், “நடிகர் விஜய் தொடர்ந்து பிரச்சனையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். லியோ திரைப்படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல் வெளியிட்டார் என்பதையும் இங்கு சுட்டி காட்டுகிறேன். தற்போது அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகியுள்ள விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார். குறிப்பாக பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டத்தின்படி போதைப் பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக இடம் பெறும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும். ஆனால் நடிகர் விஜய் அதை வைக்கவில்லை.!

அதிரடி கெளப்பட்டுமா? சேம்பைன தான் தொறக்கட்டுமா? இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் ரவுடியிசத்தை ஆதரிக்கும் வகையில் அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றுள்ளது. மைக்கை கையில் எடுக்கட்டுமா? தமிழக அரசியலில் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பாக சீமான், கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை கையில் எடுக்கட்டுமா என்ற வாசகத்தை, ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது. இடி இடிச்சா என் வாய்ஸ் தான் வெடி வெடிச்சா என் பாய்ஸ், விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொணியில் வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார் விஜய். குடிமக்கள் தான் நம் கூட்டணி, விஜய் மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்கவில்லை. குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்டும் காணாமல் தன் படத்திற்காக வாயைத் திறக்கும் நடிகராக விஜய் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் வகையில் விஜய் செயல்பட்டு வருகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடி தான்’ பாடல் லிரிக் வீடியோ வெளியான போது, விஜய் புகைபிடித்துக் கொண்டே பாடல் முழுவதும் நடனமாடியது விமர்சனத்துக்குள்ளானது. மேலும் பாடல் வரிகளில் மதுபானம் போன்றவை இடம்பெற்றிருப்பதாலும் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளிக்க பின்பு அப்பாடலில் 'புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரைக் கொல்லும்' என்ற எச்சரிக்கை வாசகம் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விஜய்யின் படங்கள், தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் தற்போது தி கோட் படத்திற்கும் அது தொடர்கிறது.