தன்னுடைய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிய நடிகர் சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்து நடிகர் பொன்னம்பலம் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக அறியப்பட்ட பொன்னம்பலத்திற்கு கடந்த ஆண்டு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை எடுத்தார். அப்போது நடிகர் கமல்ஹாசன் பொன்னம்பலத்தின் சிகிச்சைக்கான செலவுகளைக் கவனித்துக்கொண்டார். இந்த நிலையில், பொன்னம்பலத்திற்கு சிறுநீரக பாதிப்பு மோசமடைந்ததால் தற்போது அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கு பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ரூ. 2 லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள பொன்னம்பலம், நடிகர் சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"சிரஞ்சீவி அண்ணனுக்கு வணக்கம். ஜெய் ஸ்ரீராம். ரொம்ப நன்றி அண்ணா. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு எனக்கு நீங்கள் அளித்த ரூ.2 லட்சம் மிகவும் உதவியாக இருந்தது. இந்த உதவியை உயிருள்ளவரை மறக்கமாட்டேன். அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் பெயரைக் கொண்ட ஆஞ்சநேயர் என்றும் உங்களை சிரஞ்சீவியாக வைத்திருப்பார். நன்றி அண்ணா" எனப் பொன்னம்பலம் உருக்கமாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.