babu

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'என் உயிர்த் தோழன்' படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் பாபு. நடிகர், வசனகர்த்தா எனப் பன்முக ஆளுமை கொண்ட பாபுவிற்கு முதல் படமே பெரிய அளவில் கைகொடுத்ததால் அடுத்த ஆறு மாதங்களிலேயே 18 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. பகல், இரவு எனப் பாராது தொடர்ந்து படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்த பாபு, படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக விபத்தைச் சந்திக்கிறார். ஏறக்குறைய 20 வருடங்களுக்கு மேலாக, படுத்த படுக்கையாக இருக்கும் இவர், தற்போது பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளார். இது தொடர்பான விவரம் அறிந்து நாம் அவரைச் சந்திக்கையில், நம்மிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

Advertisment

அதில் ஒரு சிறுபகுதி...

'என் உயிர் தோழன்' படத்திற்கு முதலில் வசனம் எழுதினேன். பிறகு நீ தான் ஹீரோ என்றார் இயக்குனர் பாரதிராஜா. அந்தப் படத்திற்குப் பிறகு அடுத்த ஆறு மாதத்தில் 18 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எந்த அளவிற்கு என்னை வேலை வாங்கி இருப்பார்கள் என்று பாருங்கள். ஆரம்பித்த இடத்திலேயே எல்லாம் முடிந்துவிட்டது.காலையில் படப்பிடிப்பைத் துவங்கினால் முடித்துக் கொடுத்துவிட்டு வீடு திரும்ப மறுநாள் அதிகாலை 4 மணி ஆகிவிடும். மீண்டும் 5 மணிக்கு எந்திரிக்க வேண்டி வரும். ஹீரோ ஆகவேண்டும் என்று அப்படி உழைத்தேன். எல்லாம் முடிந்துவிட்டது.

Advertisment

தவறி கீழே விழுந்து இப்படி படுத்த படுக்கையாகிவிட்டேன். ஒரு முறை வலிப்பு வந்தது, சில நாட்கள் கோமாவில் இருந்தேன். நான் மருத்துவமனையில் இருந்த போது எனக்கு நெருங்கிய ஒருவரே என் கதையைத் திருடிவிட்டார். அது படமாக வந்த போது நான் புகார் அளிக்கலாம் என முடிவெடுத்தேன். அப்போது என் தம்பி, "அவன் நம்ம வீட்டுல சாப்பிட்டிருக்கான்... நீ அவங்க வீட்டிலுல சாப்பிட்டிருக்க...கிட்டத்தட்ட அவனும் எனக்கு அண்ணன் மாதிரிடா. அவன் மேல போய் கேஸ் போடப்போறியா?. உனக்கு வேற கதை தெரியாதா என்ன.. இதோட விடு என்றார். என் தம்பிக்கு கேன்சர் இருந்தது. அவன் பேச்சை அதனால் மீற முடியவில்லை".