Skip to main content

"நீ பிக்பாஸுக்கு போ என்று ஊக்கப்படுத்தியவர் இன்று இல்லை!" - ஆரி அர்ஜுனன் வேதனை!

Published on 27/04/2021 | Edited on 27/04/2021
cwafa

 

கடந்த சில மாதங்களாக கரோனா பரவல் ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது கரோனா இரண்டாம் அலை. இது கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் உட்பட பல்வேறு பிரபலங்களும் மீண்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கே.பாலச்சந்தரின் ரெட்டை சுழி, சமுத்திரக்கனியின் 'ஆண் தேவதை' படங்களை இயக்கிய இயக்குநர் தாமிரா, சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டார். இவர் சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (27.04.2021) காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு திரைத்துறை சார்ந்த பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி அர்ஜுனன் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... 

 


"என் முதல் வெள்ளித்திரை பயணத்திற்கு வித்திட்ட இயக்குனரும் மாபெரும் கதாசிரியருமான தாமிரா இன்று நம்மோடு இல்லை என்ற செய்தி எனக்கு பேரதிர்ச்சி கொடுத்து என்னை மிகவும் மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தபோது எனக்கு சிறியதாக தயக்கம் இருந்தது. அப்போது 'நீ சரியாக இருக்கும்போது உன்னை யார் மாற்ற இயலும்' என்று என் தயக்கத்தை போக்கி என்னை பிக்பாஸில் அடி எடுத்து வைக்க ஊக்கப்படுத்தினார். அவர் நம்மிடையே இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் மறைவினால் அவரது எண்ணங்களில் தோன்றிய எத்தனையோ சிறந்த கதைகளும் மரணித்து விட்டது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்