"நடிப்பிலிருந்து விலகுகிறேன்" - ஆமீர் கான் திடீர் முடிவு

aamir khan takes break from acting

பாலிவுட்டில் முன்னணி நடிகர் ஆமீர் கான் கடைசியாக 'லால் சிங் சத்தா' படத்தைத்தயாரித்து நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதற்கு 'பாய்காட்' கலாச்சாரம்தான் காரணம் எனப் பரவலாகப்பேசப்பட்டது. இது சமீப காலமாக பாலிவுட்டின் சில முன்னணி திரை பிரபலங்களின் திரைப்படங்களுக்குத்தொடர்ந்து ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆமீர் கான் தனது அடுத்த பட அறிவிப்பை அறிவித்துள்ளார். அதன் படி 'சாம்பியன்ஸ்' என்ற தலைப்பில் தனது தயாரிப்பு நிறுவனமான 'ஆமீர்கான் புரொடக்‌ஷன்ஸ்' சார்பில் தயாரிக்கவுள்ளதாகத்தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "திரைத்துறையில் நான் சந்திக்காத மோசமான நிகழ்வுகளை தற்போது சந்தித்து வருகிறேன். அடுத்ததாக நான் தயாரிக்கும் சாம்பியன்ஸ் படம் அற்புதமான, அழகான கதை. இது மனதைக் கவரும் ஒரு அழகான படம். ஆனால் நான் என் குடும்பத்துடன் இருக்க ஆசைப்படுகிறேன். அம்மா மற்றும் குழந்தைகளுடன் இருக்க விரும்புகிறேன்.

எனது வாழ்க்கையில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணிக்கிறேன். திரைப்படங்களில் மட்டுமே எனது முழு கவனத்தைச் செலுத்தி வந்தேன். இது என்னைச் சுற்றியுள்ளோருக்கும் எனக்கும் நியாயமானதாகப் படவில்லை. அதனால் நடிப்பிலிருந்து சிறிது காலம் விலகியிருக்க முடிவு செய்துள்ளேன். இருப்பினும் படங்களைத்தயாரிப்பேன். எனவே ஒரு நடிகனாக இல்லாமல் வாழ்வது எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தோடு வருகிற ஆண்டை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு நெருக்கமானவர்களோடு நேரத்தைச் செலவழிக்க விரும்புகிறேன்." என்றார்.

இதனிடையே நடிகை ரேவதி இயக்கத்தில் கஜோல், விஷால் ஜெத்வா நடிப்பில் உருவாகியுள்ள 'சலாம் வெங்கி' படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Bollywood
இதையும் படியுங்கள்
Subscribe