
பாலிவுட் நடிகர் ஆமிர்கான் தற்போது ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளியான ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தை இயக்கிய ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ளார். ஜெனிலியா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை ஆமீர்கானே தயாரித்தும் உள்ளார். சங்கர் மகாதேவன் உள்ளிட்ட மூன்று பேர் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ஆமிர்கான்.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஆமிர்கான், தனது அடுத்த பட லைனப் குறித்தும் பேசியிருந்தார். அதில் லோகேஷ் கனகராஜுடன் இணைவது குறித்து பேசிய அவர், “லோகேஷும் நானும் ஒரு படத்தில் இணைகிறோம். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. அது ஒரு சூப்பர் ஹீரோ படம். பெரிய பொருட்செலவில் எடுக்கக்கூடிய ஆக்ஷன் படமாக இது இருக்கும். அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் பட பணிகள் தொடங்கும்” என்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு பேட்டியிலும் லோகேஷ் கனகராஜ் படம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “லோகேஷ் கனகராஜ் இப்போது கைதி 2 ஷூட்டிங்கிற்கு செல்கிறார். அதனால் அடுத்த வருஷம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் சமயத்தில் பணிகளை தொடங்குவோம்” என்றுள்ளார். லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினி வைத்து இயக்கியுள்ள ‘கூலி’ படம் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. இதில் கேமியோ ரோலில் ஆமிர்கான் நடித்துள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து மும்மையில் ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஆமிர்கான் பேசியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கூலி படத்தில் தன்னுடைய கேரக்டர் சுவாரஸ்யமாக இருக்கும் எனவும் அனைவருக்கும் அது பிடிக்கும் எனவும் அவர் சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.