Skip to main content

“ரஜினிக்காக கதை கேட்காமலே நடித்தேன்” - ஆமிர்கான்

Published on 12/06/2025 | Edited on 12/06/2025
aamir khan about cameo in rajini coolir movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருந்தது. இதற்கான படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் படக்குழுவோ ஆமிர்கானோ உறுதி செய்யாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் ஆமீர்கான் இதனை உறுதிசெய்துள்ளார். 

சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், “நான் கூலி படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளேன். ரஜினியுடன் என்ஜாய் பண்ணி நடித்தேன். அவருடைய மிகப்பெரிய ரசிகன் நான். அவர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். லோகேஷ் என்னிடம் கூலி படத்தில் கேமியோவில் நடிக்க வேண்டும் என சொன்னதும் கதையைக் கூட கேட்கவில்லை. என்ன கேரக்டராக இருந்தாலும் சரி, நடிக்கிறேன் என ஓகே சொன்னேன்” என்றார். மேலும் லோகேஷு இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் பண்ணுவதாகவும் அப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கும் என்றும் தெரிவித்தார். 

நடிகர் ஆமிர்கான் தற்போது ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற 20ஆம் தேதி வெளியாகவுள்ளதையொட்டி புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் அவர் சமீபத்திய பேட்டிகளில் பெரும்பாலும் லோகேஷ் படம் குறித்தும் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்