இந்தியில் ஆமிர்கான் நடிப்பில் கடந்த 20ஆம் தேதி வெளியான படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. இப்படத்தை தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளியான ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தை இயக்கிய ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ளார். ஜெனிலியா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை ஆமீர்கானே தயாரித்தும் உள்ளார். சங்கர் மகாதேவன் உள்ளிட்ட மூன்று பேர் இசையமைத்துள்ள இப்படம் ஸ்பேனிஷில் வெளியான ‘சாம்பியன்ஸ்’ படத்தின் ரீமேக்காகும்.
ஒரு பாஸ்கெட் பால் கோச், தான் செய்த சட்ட ஒழுங்கு தவறுக்காக மாற்றுத்திறனாளி குழந்தைகள் அடங்கிய டீமிற்கு பாஸ்கெட் பால் பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற தண்டனையை நீதிமன்றம் மூலம் பெறுகிறார். இதையடுத்து அவர் பயிற்சி கொடுத்து அந்த டீமை ஜெயிக்க வைத்தாரா இல்லையா என்பதை கதை விவரிக்கிறது. இதில் பயிற்சி கொடுக்கும் பாஸ்கெட் பால் கோச்சாக ஆமிர்கான் நடித்துள்ளார். இப்படம் இந்தியை தவிர்த்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது. இந்தியில் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.120 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்திற்கு தமிழ் வெர்ஷனில் சிவகார்த்திகேயனை நடிக்க விரும்பியதாக தற்போது ஆமீர்கான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் நடிக்க முடியாமல் போனதற்கு மன்னிப்பும் கேட்டதாக கூறியுள்ளார். இது தொடர்பாக சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், முதலில் சித்தாரே ஜமீன் பர் படத்திற்கு முன்பு வெளியான ‘லால் சிங் சத்தா’ பட தோல்வியால் மனம் உடைந்து போய்விட்டதாக கூறினார். பின்பு பேசிய அவர், “நான் ஆர்.எஸ்.பிரசன்னாவிடம் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அதனால் கொஞ்சம் பிரேக் வேண்டும் எனவும் கூறினேன். அவருக்கு இதை கேட்டவுடன் பேரதிர்ச்சி வந்துவிட்டது. பின்பு புரிந்து கொண்டார். அப்புறம், ‘உங்கள் நிலைமை எனக்கு புரிகிறது. நீங்கள் எமோஷ்னலாக நடிப்பில் இருந்து பிரேக் எடுக்க விரும்புகிறீர்கள். ஆனால் தயாரிப்பாளராகத் தொடருங்கள்’ எனக் கூறினார். அதை நான் ஒப்புக்கொண்டேன். அந்த சமயத்தில் சித்தாரே ஜமீன் பர் படத்தை தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் எடுக்க திட்டமிட்டோம். இந்தியில் ஃபர்ஹான் அக்தரையும் தமிழில் சிவகார்த்திகேயனையும் வைத்து எடுக்க முயற்சி செய்தோம். அவர்களுக்கும் கதை பிடித்துவிட்டது. தேதிகளும் கை கூடி வந்தது.
ஆனால் படம் தொடங்குவதற்கு முன்பு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம், நான் படத்தின் ரைட்டர் மற்றும் டைரக்டரிடம் கதை குறித்து விரிவாக படித்து விவாதிப்பேன். அதன்படி முதல் நாளில் கதையை விரிவாக படித்த போது, அரை மணி நேரத்திலே நான் ஏன் இந்த படத்தில் நடிக்கக்கூடாது என யோசித்தேன். அதுவே எனக்கு தொடர்ந்து பத்து நாள் தோன்றிக்கொண்டே இருந்தது. இதை ஆர்.எஸ்.பிரசன்னாவிடம் சொன்ன போது முதலில் இக்கதைக்கு நீங்கள் தான் நாயகன் என்று முடிவு செய்திருந்ததால், இப்போது கூட எனக்கு ஒகே தான் என்று ஒப்புக் கொண்டார். பின்னர் ஃபர்ஹான் அக்தர் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரிடமும் மன்னிப்பு கோரினேன். இருவரிடமும் என்ன நடந்தது என்பதை தெளிவுப்படுத்தினேன். அவர்களுக்கு முதலில் ஏமாற்றமாக இருந்தாலும் பின்னர் எனது சூழலை புரிந்துக் கொண்டார்கள்” என்றார்.