Skip to main content

‘சீல் அகற்றப்படும்; சாதனங்கள் ஒப்படைக்கப்படும்’ - நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை

Published on 18/06/2025 | Edited on 18/06/2025
aakash baskaran ed raid issue case update

டாஸ்மாக்கில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

இதையடுத்து அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வீடு அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘எதன் அடிப்படையில் ஆகாஷ் பாஸ்கரனிடம் விசாரணை நடத்தப்படுகிறது? எதன் அடிப்படையில் விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது? என பல்வேறு கேள்விகள் எதிர்தரப்பினருக்கு நீதிமன்றம் கேட்டது. மேலும் சோதனை மேற்கொண்ட போது என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும் என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. 

இதற்கடுத்து நேற்று நடந்த இந்த வழக்கின் விசாரணையில், ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்புள்ள ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு அடுத்த கட்ட விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று நடந்த இந்த விசாரணையில் அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனுக்கு டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் தொடர்புள்ள ஆவணங்களை தாக்கல் செய்தார். இதையடுத்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுக்கும் உங்களின் வாதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நீதிபதிகள் கருத்து கூறினார். பின்பு டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குப் பதிவுகளில் இருவரின் பெயர்கள் இருந்ததா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத் துறை தரப்பில், “பெயர் இருக்க வேண்டிய தேவையில்லை,” எனத் தெரிவிக்கப்பட்டது. 

பின்பு நீதிபதிகள் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம்  ரவீந்திரன் வீடுகளுக்கு அமலாக்கத்துறை சீல் வைக்க என்ன அதிகாரம் உள்ளது என கேள்வி எழுப்பினர். இதற்கு சோதனையின் போது கைப்பற்றப்பட்ட லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும் வீட்டில் ஒட்டப்பட்ட சீல் அகற்றப்படும் என்றும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக உரிய பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்கு கால அவகாசம் வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பு கேட்க வழக்கின் விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்