கார்த்தி தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். போஸ்ட் புரொடைக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. மேலும் நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் போஸ்ட் புரொடைக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்படங்களை அடுத்து டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படம் 1960களில் நடக்கும் ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்குமென கூறுகிறார்கள். இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் மற்றும் பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
பட அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையிலும் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. ஆனால் படத்தின் பணிகள் கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது. ‘மார்ஷல்’ என்ற தலைப்பில் இப்படம் உருவாகும் நிலையில் படப்பிடிப்பு விரைவில் ராமேஸ்வரத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக ராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்பு தகவல் வெளியானது. அந்த முக்கியமான கதாபாத்திரம் வில்லன் என சொல்லப்பட்டது.
இந்த நிலையில் ஆதி இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிவின் பாலி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆதி கடைசியாக அறிவழகன் இயக்கத்தில் ‘சப்தம்’ படத்தில் நடித்திருந்தார். இப்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் அகண்டா 2 படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். இதையடுத்து மீண்டும் வில்லனாக கார்த்தி படத்தில் நடிப்பதாகத் தெரிகிறது.