Skip to main content

11 வருடங்கள் கழித்து சர்ச்சையாகும் ‘3 இடியட்ஸ்’ படம்!

Published on 22/07/2020 | Edited on 22/07/2020

 

amir khan

 

கடந்த 2009ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி பலரையும் கவர்ந்து, வசூல் சாதனை படைத்த படம் '3 இடியட்ஸ்'. இந்தப் படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்க ஆமிர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி, கரீனா கபூர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

 

இந்தப் படத்தை நண்பன் என்ற தலைப்பில் இயக்குனர் ஷங்கர், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்களை வைத்து தமிழில் ரீமேக் செய்தார். பதினொறு வருடங்கள் கழித்து '3 இடியட்ஸ்' படம் குறித்து சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.

 

இந்தியாவின் பிரபல ஆங்கில எழுத்தாளர் சேத்தன் பகத், பாலிவுட்டில் உள்ள விமர்சகர்களைக் கடுமையாகச் சாடி சில ட்வீட்களை வெளியிட்டார். அவரது ட்வீட்களை மேற்கோளிட்டு விமர்சகர் அனுபமா சோப்ரா தனது ட்விட்டர் பதிவில் "ஒவ்வொரு முறையும் வார்த்தைகளின் தரம் இதைவிட தாழ்ந்து போகாது என்று நினைக்கும் போதெல்லாம் தாழ்ந்து போகிறது" என்று குறிப்பிட்டார்.

 

உடனடியாக சேத்தன் பகத், அனுபமா சோப்ராவின் ட்வீட்டை மேற்கோளிட்டு, “மேடம், உங்கள் கணவர் என்னைப் பொதுவெளியில் துன்புறுத்தியபோது, சிறந்த கதைக்கான அனைத்து விருதுகளையும் பெற்றபோது, எனது கதைக்கான உரிமையை மறுக்க முயற்சித்தபோது, என்னைத் தற்கொலைக்குப் பக்கத்தில் தள்ளியபோது நீங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்தீர்கள். அன்று உங்கள் வார்த்தைகள் எங்கே போயின” என்று பதிவிட்டிருந்தார். அனுபமா சோப்ராவின் கணவர்தான் '3 இடியட்ஸ்' உள்ளிட்ட பல முன்னணி படங்களைத் தயாரித்த விது வினோத் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

 

பலரும் சேத்தன் பகத்தின் இந்த ட்வீட்டைப் பார்த்துக் குழம்பினார்கள். இது பெரும் சர்ச்சையாகவும், இணையத்தில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இதன்பின் என்ன பிரச்சனை என்பதை விளக்கும்படி சேத்தன் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், “இது பலருக்குத் தெரியும். இங்கு புதியவர்களுக்குச் சொல்கிறேன். '3 இடியட்ஸ்' எனது '5 Point Someone' நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. அந்த வருடம் கதைக்கான அத்தனை விருதுகளையும் அந்தப் படம் வென்றது. எனக்கு அதில் எந்த விருதும் கிடைக்கவில்லை. அவர்களே அனைத்தையும் எடுத்துக் கொண்டார்கள். துறையில் செல்வாக்கு இல்லாத புதிய நபரான நான் துன்புறுத்தப்பட்டேன். அதனால் அதிகமாகப் பாதிக்கப்பட்டேன்

 

பகட்டான மேல்தட்டு விமர்சகர்களுக்குத் தனி வாட்ஸ் அப் குழுக்கள் உள்ளன. விமர்சனத்துக்கு முன் அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு படத்தையோ அல்லது நடிகரையோ சாட ஒன்றாக முடிவெடுப்பார்கள். அவர்களிடம் யாரும் பிரச்சினை செய்ய விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் ஒன்றுசேர்ந்து உங்களைச் சாடுவார்கள். எனவே மற்றவர்கள் அமைதி காப்பார்கள். பாலிவுட்டில் பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் நான் சொல்வதை உறுதிப்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்