Next Story
சிவகார்த்திகேயன் - சமந்தா ஜோடியாக நடித்து, பொன்ராம் இயக்கத்தில் உருவான 'சீமராஜா' திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இது சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் முதல் நாள் வசூலை காட்டிலும் அதிகமாக ரூ.13.5 கோடி வசூலானதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து பட தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா பேசும்போது...
"இந்த வெற்றிக்கு காரணமான சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒரு ஜனரஞ்சகமான படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் நிறைத்து ஒரு படத்தை தயாரிப்பது என்பது, அனைத்து மக்களையும் சென்று அடைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான். குடும்பமாக படம் பார்க்கும் ரசிகர்களையும், இளைஞர்களையும் கவர வேண்டும் என்பதே பிரதான நோக்கம். சிவகார்த்திகேயன் நிறைய வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்று நிலையை தாண்டி, அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு கலகலப்பான படமாக 'சீமராஜா' படத்தை கொடுத்துள்ளார். முதல் நாளே திரையரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருகிறார்கள் என்று திரை அரங்கு உரிமையாளர்கள் கூறும் போது உள்ளம் பூரிப்பு அடைகிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை இந்த படம் முறியடிக்கும் என்பதில் எந்த வித ஐயம் இல்லை. முதல் நாள் வசூலே 13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. இதுவரை 550 காட்சிகள் திரையிடபட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும். ஊடக நண்பர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், பொது மக்களுக்கும், இந்த மாபெரும் வெற்றிக்கு என் மனமார்ந்த நன்றிகள்" என்றார்.
Next Story
24 எ.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயரித்துள்ள படம் 'சீமராஜா'. சிவகார்த்திகேயன்-சமந்தா இணைந்து நடித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமாக வெளியாக இருக்கின்ற நிலையில் படத்தின் கலை இயக்குனர் முத்துராஜ் இப்படம் குறித்து பேசியபோது... "கிராமப்புற திரைப்படங்களுக்கு அதிக வேலை இருக்காது, மிகவும் எளிதாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். பச்சைப்பசேலென வயல் வெளிகள், அமைதியான ஏரிகள், தெளிவான சிற்றோடைகள், வண்ணமயமான திருவிழாக்கள், இனிமையான குயில் சத்தம் ஆகியவை மட்டுமே கிராமத்து படங்களின் ஆதாரம் என்ற நினைப்பு இருக்கிறது. ஆனால் உண்மையில், தொழில்நுட்பக் குழுவின் இமாலய உழைப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக 'கலை இயக்குனர்' பங்கு அதிகமாக தேவைப்படுகிறது. ஒரு 'திருவிழா' படம் என்று சாதாரணமாக சொல்லி விடலாம். ஆனால் அந்த திருவிழா அனுபவத்தை திரையில் கொண்டு வருவது மலையை இழுப்பதற்கு சமம்.
சீமராஜாவில் என் வேலை நன்கு கவனிக்கப்படுகிறது என்றால், அதற்கு காரணம் பாலசுப்ரமணியம் சாரின் ஒளிப்பதிவு தான். அவர் என் கலை வேலையின் ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களையும் ரசித்தார். அவர் படப்பிடிப்புக்கு முன்பே வாட்ஸாப்பில் என் பரிந்துரையையும் கேட்பார். இசையமைப்பாளர் டி இமான் திருவிழா சூழலை தன் இசையால் உருவாக்கியிருக்கிறார். பொதுவாக, ஒரு கிராமத்து படம் பண்ணும் போது அதன் தயாரிப்பாளருக்கு எங்கள் ஆர்ட் டிபார்ட்மெண்ட் மீது சில கட்டுப்பாடுகள் இருக்கும். பெரும்பாலும் எங்கள் வேலை கோயில் திருவிழா அல்லது மார்க்கெட் உருவாக்குவதோடு நின்று விடும். ஆனால் ஆர்.டி.ராஜா என் கற்பனை திறனை வெளிப்படுத்த எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். சில நேரங்களில், நான் செலவை மனதில் வைத்து சமரசம் செய்து கொண்டாலும், படம் நன்றாக வருவதற்கு என்னை ஊக்குவிப்பார். மேலும், பொன்ராம் சாரின் கிராமப்புற வாழ்க்கையை மிகவும் வண்ணமயமாக வழங்கும் நோக்கம் என்னை இன்னும் பரிசோதனை செய்ய தூண்டியது. இயல்பாகவே ஒரு வெற்றிப் படத்தில் பணிபுரிந்த உணர்வு சீமராஜாவில் எனக்கு கிடைத்தது" என்றார்.