சமீபகாலமாக பிரபலங்களின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மெயில் வருவது அதிகரித்து வருகிறது. இதில் திரைபிரபலங்களின் வீடுகளும் அடங்குகிறது. சமீபத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் அவர்களின் வீட்டில் சோதனை நடத்திய போது அது பொய்யான தகவல் எனத் தெரிய வந்தது.
இதன் தொடர்ச்சியாக தற்போது நயன்தாரா வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு ஒரு மெயில் வந்துள்ளது. அதில் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள நயன்தாராவுக்கு சொந்தமான வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்த நிலையில் தேனாம்பேட்டை போலீசார் நயன்தாரா வீட்டிற்கு சென்றனர். அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர். முடிவில் வழக்கம்போல இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீஸர் தேடி வருகின்றனர். நயன்தாரா இந்த வீட்டிற்கு அவ்வபோதுதான் வருவாராம். இப்போது அவர் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.