தமிழில் ‘சித்திரம் பேசுதடி’, 'வெயில்', 'தீபாவளி', 'ஜெயம்கொண்டான்' என பல ஹிட் படங்களில் நடித்துபிரபலமானவர் பாவனா. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வந்த அவர், தனிப்பட்ட சில காரணங்களால் தொடர்ச்சியாக நடிக்க முடியாமல் போனது. பின்பு அண்மைக் காலங்களில் மீண்டும் பழையபடி நடிக்கத் தொடங்கினார். ஆனால் தமிழில் நடிக்கவில்லை. கடந்த ஆண்டு வெளியான ‘தி டோர்’ என்ற படத்தில் மட்டும் நடித்திருந்தார்.
இப்போது அவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாகும் படம் ‘அனோமி’. இப்படம் மலையாளம் படமாகும். ரியாஸ் மரத் இயக்கியுள்ள இப்படத்தில் ரஹ்மான், ஷெபின் பென்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ள இப்படத்தை பனோரமா ஸ்டுடியோஸ், பிளிட்ஸ்கிரீக் பிலிம்ஸ், ஏபிகே சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இவர்களோடு பாவனாவும் ஒரு தயாரிப்பாளராக ‘பாவனா பிலிம் புரொடக்ஷன்ஸ்’ என்ர பேனர் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் மலையாளத்தில் சமீபத்தில் வெளியானது. இப்போது தமிழில் நாளை(06.03.2026) வெளியாகவுள்ளது. இதையொட்டி சென்னையில் பத்திரிக்கையாளர்களின் காட்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாவனா காட்சி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “மலையாளத்துல படத்துக்கு நல்ல ரிவ்யூ வந்திருக்கு. நீங்களும் படம் பார்த்துட்டு புடிச்சா ரிவ்யூ கொடுங்க. நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம்” என்றார். அப்போது அவரிடம் தமிழில் ஏன் கேப் விட்டீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழில் நடிக்கக்கூடாது என்ற நோக்கம் எதுவும் இல்லை. நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன். கன்னடம், மலையாளம் என பிஸியாகிவிட்டதால் தமிழில் நடிக்க முடியாமல் போனது. மற்றபடி வேண்டுமென்றே கேப் விடவில்லை” என்றார்.
Follow Us