தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகராக இருக்கிறார். தனது கரியரின் பீக்கில் இருக்கும் அவர் அட்லீ இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் இவரை சந்திக்க ஏகப்பட்ட விதிமுறைகள் இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பிராண்ட் மேலாளர் காவேரி வருவா என்பவர் கூறி இருந்தார். அவர், கூறியதாவது, அல்லு அர்ஜுனை சந்திக்கும் போது அவரது கண்களை பார்க்கக்கூடாது, கை கொடுக்கக் கூடாது, மூன்றடி தூரம் தள்ளி நிற்க வேண்டும் போன்ற 42 கடுமையான விதிமுறைகள் இருக்கிறது என்றார். 

Advertisment

இது அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கியது. இதனால் பேட்டிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். பின்பு யூட்யூபில் அந்த பேட்டி நீக்கப்பட்டு விட்டது. அதுபோக பேட்டி கொடுத்த காவேரி வருவாவின் இன்ஸ்டாகிராம் பக்கமும் டீ - ஆக்டிவேட் செய்யப்பட்டது. இது போக அவரைப் பேட்டி எடுத்த தொகுப்பாளர் ஸ்வீகிருதி, காவேரி வருமாவுக்கு பேட்டியை நீக்க வேண்டும் என தொடர் மிரட்டல் வந்ததாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். இது இந்த விவகாரத்தை இன்னும் பெரிதாக்கியது. 

Advertisment

இதனை தொடர்ந்து அல்லு அர்ஜின் தரப்பு தற்போது விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அல்லு அர்ஜுன் பற்றி சமீபத்தில் கூறப்பட்ட சில கருத்துக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை. அவர் எப்போதும் மிகுந்த கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடந்து கொள்பவர். இந்த பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். அதனால் எங்கள் சட்டக் குழு இதற்கு எதிராக அவதூறு வழக்கை தொடரவுள்ளது. அனைவரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.