கேரளாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு 2017 ஆம் ஆண்டு நடந்த நடிகை பாலியல் வழக்கு. அந்த ஆண்டு ஆறு பேர் கொண்ட கும்பல் ஓடும் காரில் ஒரு பிரபல நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பின்பு அதை வீடியோவாகவும் எடுத்து மிரட்டியுள்ளனர். இந்த சம்பவ நாட்டையே உலுக்கிய நிலையில் நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த கொச்சி காவல் துறையினர், கடத்தப்பட்டவர்களில் ஒருவரான பல்சர் சுனில் என்பவரை முதலில் கைது செய்தனர்.
பின்பு வழக்கின் திருப்பமாக இந்த கடத்தலின் பின்னணியில் பிரபல மலையாள நடிகர் திலீப் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. திலீப்புக்கும் அந்த நடிகைக்கும் முன் விரோதம் இருந்ததாகவும் அதன் காரணமாக அவர் சதித்திட்டம் தீட்டி இந்த பாலியல் சம்பவத்தை நிகழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனிடையே திலீப் மீது கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டது. இவர் உட்பட மொத்தம் 12 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். திலீப் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆனால் பின்பு 85 நாட்கள் கழித்து ஜாமீனில் வெளியே வந்தார்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டே வந்தது. மொத்தம் 8 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் இன்று எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஏ1 முத ஏ6 வரை மொத்தம் ஆறு பேர் குற்றவாளி எனவும் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட திலீப் நிரபராதி எனவும் தீர்ப்பு வழங்கியது. திலீப் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹனி வர்கீஸ் தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பு பெருங் கவனத்தை பெற்றுள்ளது. சில மலையாள நடிகைகள் இத்தீர்ப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகை பார்வதி, “இது என்ன நீதி? இப்போது நாம் கவனமாக வடிவமைக்கப்பட்ட திரைக்கதை மிகவும் கொடூரமாக விரிவடைவதை பார்க்கிறோம்” என தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகைகள் ரம்யா நம்பீசன் மற்றும் ரீமா கலிங்கல் ஆகியோர் ‘அவள்கொப்பம்(Avalkoppam)’ என்ற வாசகம் அடங்கிய புகைப்படத்தை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து நடிகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த வாசகம் மலையாள திரைப்படத் துறையின் சகோதரத்துவத்தை குறிப்பிடும் வகையில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் பெண்கள் நல அமைப்பும் திலீப்பின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் மலையாள நடிகர் சங்கம், நீதிமன்ற தீர்ப்பை எப்போதும் சங்கம் மதிப்பதாக தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு நடிகைகள் மத்தியில் கடும் எதிர்த்து கிளம்பியுள்ளதால் திரைத்துறையில் சற்று பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Follow Us