மனோ கிரியேசன் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிப்பில், இயக்குநர் சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியான படம் ‘4த் ஃப்ளோர்’. தரன் குமார் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்த நிலையில் இப்படம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆரி, மால்களில் இப்படத்தை திரையிட மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் பேசியதாவது, “எல்லா மால்களிலும் இந்த படத்துக்கு தியேட்டர் கொடுக்கமாட்டேங்குறாங்க. அதுக்கு காரணமா படத்துக்கு விளம்பரம் பத்தலன்னு சொல்றாங்க. அதோடு தாய் கிழவி படத்தை பாருங்க எப்படி விளம்பரம் பன்றாங்கன்னு சொல்றாங்க. தாய் கிழவி படத்தோட தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன். அவருக்கு அந்த படத்தை விளம்பரம் பன்ற அளவுக்கு சக்தியும் பணமும் இருக்கு.
ஆனா எங்க பட தயாரிப்பாளர் திருப்பூர்ல சொந்தமா தொழில் பண்ணி சம்பாதிச்சு அதுல வந்த காசுல ஒரு நல்ல படம் பண்ணிருக்காரு. அவரால என்ன செய்ய முடியுமோ அதை விளம்பரம் பண்ணியிருக்காரு. அப்போ எதை தீர்மானிச்சு தியேட்டர்ல ஸ்க்ரீன் கொடுக்குறாங்க. ரெண்டு நாலா அவரும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸும் தியேட்டர் ஓனர்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்காங்க, கொடுக்கமாட்டேங்குறாங்க. இந்த படத்துல என்ன பிரச்சனை இருக்கு.
தமிழ்நாட்டுல ஒரு தமிழன் படம் எடுத்து ரிலீஸ் பண்ண முடியல. இது ஒரு அவமானமான விஷயம். உங்கள்ல இருந்து தான் நான் வந்திருக்கேன், என் படத்தை ஏன் போட மாட்டேங்குறாங்க. படம் நல்லாலைன்னா, அதை மக்கள் சொல்லணும். ஷோக்கு கூட்டம் வரலைன்னா, அந்த ஷோவ கேன்சல் பண்ணுங்க. பந்தயத்துக்கே சேர்த்துக்க மாட்டேன்னா எப்புடி? அப்போ எந்த படம் ஓடனும் எந்த படம் ஓடக்கூடாதுன்னு தியேட்டர் ஓனருங்க தான் தீர்மானிக்கிறாங்களா? இந்த சூழல் சரியானது கிடையாது.
ஆரி என்றால் தமிழ்நாட்டுக்கு தெரியும். நான் ரூ.100கோடி சம்பளம் இல்லைன்னாலும் தமிழ்நாட்டில் அனைவருக்கும் என்னை தெரியும். எனக்கே இந்த பிரச்சனைன்னா நாளைக்கு புதுமுகம் வந்தால் அவங்க நிலைமை? அப்போ சின்ன படங்களுக்கு எவ்ளோ செலவு பண்ணனும். அதுக்கு என்ன அளவு கோல்?” என ஆதங்கமாக பேசினார்.
Follow Us