காவிரி நீர் பங்கீடு தொடர்பான முதல் கலவரம்... தமிழர்களின் திக்திக் காலம்...

cauvery water sharing issue in karnataka at 1991

cauvery water sharing riot in karnataka at 1991

மொழிவாரி மாநிலங்கள் பிரிப்புக்குப் பிறகு, தமிழகத்தின் தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக இன்றுவரை விளங்கிவருவது காவிரி நதிநீர் பங்கீடு. பல ஆண்டுகளாக பற்பல போராட்டங்கள், வழக்குகள் எனக் கடந்து வந்திருந்தாலும், இன்றுவரையிலும் இதற்கான தீர்வுகள் என்பன பெரும்பாலும் தமிழகத்துக்குச் சாதகமாக அமைந்ததில்லை. தமிழகத்தின் விவசாய தேவைக்கு மிகவும் இன்றியமையாததான இந்த காவிரி நீருக்காகத் தமிழகம் மேற்கொண்ட போராட்டங்கள் ஏராளம். அதேபோல, இப்பிரச்சனை காரணமாகக் கர்நாடகத்தில் வசிக்கும் மற்றும் கர்நாடகா செல்லும் தமிழர்கள் எதிர்கொண்ட வன்முறைகளும், அடக்குமுறைகளும் எண்ணிலடங்காதவை. இன்றளவும் கூட இந்த பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் என்பதை இன்றைய தலைமுறையினரும் கண்கூடாகப் பார்த்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் 90 களின் பிற்பகுதியில் அம்மாநிலத்தில் அதிகளவில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. காவிரி பிரச்சனையால் இன்றுவரை இப்படிப்பட்ட பல வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், அதன் தொடக்கப்புள்ளியாக அமைந்தது 1991 கலவரம். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 1991 ஆம் ஆண்டு முதன்முறையாகக் கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. வாட்டாள் நாகராஜ் தூண்டுதலால் ஏற்பட்ட இக்கலவரத்தில் ஏகப்பட்ட தமிழர்கள் உயிரையும், உடைமைகளையும் இழந்து நிர்கதியாகினர். இந்த கலவரம் காரணமாக 48 மணிநேரத்தில் சுமார் 50,000 தமிழர்கள் கர்நாடகாவை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். காவிரி நீர் பங்கீட்டு வரலாற்றில் முதன்மையானதும் மற்றும் மறக்கமுடியாததுமான இக்கலவரத்தைப் பற்றிய செய்திகளைக் களத்திலிருந்து நேரடியாக மக்களுக்கு எடுத்துச்சென்றது நக்கீரன் குழு. அந்தவகையில், 28.12.1991 நக்கீரன் இதழில் அக்கலவரம் தொடர்பாக வெளியான கட்டுரை.

காவேரி தண்ணீர் பிரச்சனை..!

இரு மாநிலங்களுக்கு இடையில் காவேரி தண்ணீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததன் விளைவு! தமிழனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பில்லை! தமிழச்சி தாலிக்கு உத்தரவாதமில்லை! பிஞ்சுக்குழந்தைகள் ஈவு இரக்கமின்றி கிள்ளி எறியப்படுகின்றனர். இளம் பெண்கள் கதறக் கதற கன்னடக் காலிகளின் காமத்துக்குப் பலியாகின்றனர்..

விளைவு!

அந்நிய நாட்டு அகதிகள் போல சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாய் வெளியேற வேண்டிய சோகம்.

12.12.91. அன்று மத்திய அரசு 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் தரவேண்டும் என்ற நடுவர் மன்ற உத்தரவை வெளியிட்டது.

கர்நாடக வாழ் தமிழர்கள்தான் இதற்குக் காரணம் என்று முட்டாள்தனமாக நினைத்த எரியும் வீட்டில் புடுங்கும் எண்ணம் கொண்ட சில கர்நாடக அரசியல்வாதிகள் உள்ளூர் ரவுடிகளுக்கு உத்தரவுபோட, 13ஆம் தேதியில் இருந்தே மேற்சொன்ன சம்பவங்கள் அரங்கேறத் துவங்கின. இதை அறிந்து நாம் கனத்த இதயத்துடன் அங்கு ஆஜரானோம்..

மதியம் சுமார் 12.30 மணியளவில் நாம் கெம்பே கவுடா ரோடு வழியாக மெஜஸ்டிக் போய்க் கொண்டிருந்தபோதே ஆங்காங்கே கடைகளை அவசர அவசரமாக மூடிக் கொண்டிருந்தனர். கெம்பே கவுடா ரோடு, ஓவர் பிரிட்ஜ் அருகே திடீரென ஒரு கும்பல் அருகில் திறந்திருந்த கடைகளை சூறையாட ஆரம்பித்தது. இதைக் கண்டதும் மற்றவர்களும் கடைகளை அடைக்க ஆரம்பித்து விட்டனர். ஆகஸ்ட் 11ஆம் தேதியே பதட்டம் ஆரம்பமாகி விட்டது.

மத்திய அரசு கெஜட்டில் டிரிப்யூனல் தீர்ப்பை வெளியிட்டமைக்கு கண்டனம் தெரிவிக்க, அனைத்துக் கட்சி சார்பிலும் 13.12.91 அன்று ஒருநாள் ‘பந்த்’ துக்கு அழைப்புவிடப்பட்டது. இது முறைப்படி விடுக்கப்பட்ட அழைப்பானாலும் இதன்பின்னணி வன்முறைக்கும் சேர்த்து விடுக்கப்பட்ட அழைப்பானது.

13.12.91ஆம் தேதிதான் பந்த் அழைப்பு என்று கருதிய நம் தமிழகத்து வாகனங்கள் 12ஆம் தேதியே கர்நாடகத்துக்குள் இருந்து தமிழ்நாட்டுக்குள் வர ஆரம்பித்து விட்டன. ஆயினும் இந்த மாதிரி விவகாரங்களில் அரசியல்வாதிகளுக்கு மூளை கொஞ்சம் அதிகமல்லவா?

13 ஆம் தேதி பந்த் என்றால் வன்முறைக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும் என்பதால் 12 ஆம் தேதியே வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.

விளைவு 12 ஆம் தேதி மதியம் முதலே வாகனங்கள் எரிய ஆரம்பித்து விட்டன.

பஸ்கள், லாரிகள் எரிந்து சாம்பலாகி விட்டன. கடைகளின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. வெளியூர் ஆட்களுக்கு லாட்ஜில் தங்கக்கூட இடம் கொடுக்கவில்லை. எந்த நேரத்தில் என்ன நடக்கும்! என்ற பயம் எங்கும் சூழ்ந்திருந்தது.

13 ஆம் தேதி காலை முறைப்படி சர்வகட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட பந்த். ஆனாலும் யாரும் ஊர்வலமோ கண்டன கூட்டங்களோ நடத்தவில்லை. மாறாக தமிழர்களின் வாகனங்களை கொளுத்துதலும் தமிழர்களின் கடைகளை சூரையாடுதலும்தான் தொடர்ந்து நிகழ்ந்தன.

தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட கர்நாடக இருசக்கர ‘மொபட்கள்’ ஆனாலும் கூட வழி மறிக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன.

நாம் 13 ஆம் தேதி பகல் பெங்களூர் மைசூர் ரோட்டில் வலம் வந்து கொண்டிருந்த போது பல தமிழ்நாட்டு லாரிகள் எரிந்து சாம்பலாகி இருந்தன. அவற்றில் இருந்த உதிரி பாகங்களைக்கூட விடாமல் கழட்டி எடுத்துக் கொண்டிருந்தனர் மகா கன்னட ஜனங்கள். இவர்களுக்கு ஒத்தாசையாக கன்னட போலீஸாரும் ‘போல்ட் நட்டு’களைக் கூட விடாமல் கழட்டினர்.

மேடான இடத்தில் நின்று நாம் பெங்களூரைப் பார்த்தபோது நாம் எங்கு உள்ளோம் என்ற பிரமையே ஏற்பட்டது. காரணம் எங்கு பார்த்தாலும் தீ வைக்கப்பட்டு போர்க்களத்தில் நடக்கும் குண்டு வீச்சைப்போல புகை மண்டலமான காட்சி.

அன்றாட வயிற்றுப் பிழைப்புக்கு குப்பைக் கூளங்களைக் கிளறி காகிதங்களையும் அட்டைகளையும் பொறுக்கி வாழ்க்கை நடத்தி வந்த தமிழ்ப் பெண்களின் குடிசைகளையும் இவர்களிடம் காகிதங்கள் வாங்கும் கடைக்காரர்களின் கடைகளையும், தமிழ் திரைப்படங்களைத் திரையிட்டு வந்த ‘‘சந்தோஷ், ஹோப்பி, புஷ்பாஞ்சலி, வீரபத்ரேஸ்வரா, கோகுலா’’ உட்பட எட்டு திரையரங்குகளையும் தீ வைத்துக் கொளுத்தினர்.

தினத்தந்தி தினசரிப் பத்திரிகையின் பெங்களூர் பதிப்பு அலுவலகம் ராஜாஜி நகரில் நான்காவது பிளாக்கில் உள்ளது. வன்முறைக் கும்பல் ரோட்டில் தடைகளை ஏற்படுத்திவிட்டு தினத்தந்தி அலுவலகத்தை தாக்கி முன்புறம் தீயிட்டுள்ளது. இதுதவிர கன்னட அபிமானி என்கிற பத்திரிகை அலுவலகமும் தாக்குதலுக்குள்ளானது.

பெங்களூர் நகரமே இதுவரை காணாத அளவுக்கு தீச் சம்பவங்களால் நாசமானது.

பெங்களூர் தீயணைப்பு அலுவலகங்களுக்கு குறைந்தது ஆயிரம் தீ வைப்பு சம்பவ போன்கள் வந்தன. இது மட்டுமன்றி தீ வைப்பு சம்பவங்கள் பற்றிய தகவல்களைக் கூட தீ அணைப்பு நிலையங்களுக்கு தர விடாமல் தடுக்கப்பட்டனர்.

நாம் ‘ஆர்.பி.சி.லேஅவுட்’டில் இருந்த சந்தோஷ் திரையரங்குகள் கொழுந்து விட்டு எரிவதை அறிந்தவுடன் ‘டி.வி.எஸ்.50’வாகனத்தில் விரைந்தோம். நமது வாகனத்தை ஒட்டியே வந்த டி.வி.எஸ்.50யில் சென்னையைச் சேர்ந்த சிவகுமாரும் லதாவும் வந்தனர். நாம் வண்டி ஓட்டிய நமது நண்பரை வேகமாக ஓட்டு எனத் தமிழில் துரிதப்படுத்தியதைக் கண்ட சிவகுமார் தம்பதிகள் நம்மை நெருங்கி, ‘‘என்னங்க ரொம்ப கலாட்டாவா இருக்கு...பயமாயிருக்குங்க...எங்க போனா தப்பிக்கலாம்?’’ என பயந்தவாறே வண்டியை ஓட்டிக்கொண்டே கேட்டபோது, எதிரே ஒருகும்பல் தீப் பந்தங்களுடன் வெறி கொண்டவாறு ஓடி வந்தது.

உடனே நாம் நமது வண்டியை ரோட்டின் ஓரத்தில் போட்டு விட்டு பெரிய மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டோம். சிவகுமார் தம்பதியும் நம்மிடம் வந்து மறைந்து கொண்டார்கள். கூட்டம் காட்டுக் கத்தலாய் ஓடி வர, நம் அருகில் இருந்த லதா அழ ஆரம்பித்து விட்டார்.

‘‘வெங்கடாசலபதியே எங்களைக் காப்பாத்து...காப்பாத்து’’ என பயத்தால் உடல் நடுங்க தேம்பி அழ ஆரம்பித்தவரை தேற்றினோம்.

கன்னடக் காலிக்கூட்டம் நம்மைத் தாண்டி ஓடிய பின்னர்தான் மூச்சையே நிம்மதியாக விட முடிந்தது.

அவசர அவசரமாக ஓடி வண்டியை நிமிர்த்தி ஸ்டார்ட் செய்தோம். சிவக்குமாரையும் லதாவையும், ‘‘எங்கும் நிறுத்தாமல் போய் விடுங்கள். யாராவது வழி மறித்தால் என்ன குரு! என்று கன்னடத்திலேயே பேசுங்கள்’’ என்று அவர்களை வழியனுப்பி விட்டு எரிந்து கொண்டிருந்த தியேட்டரை படம் பிடிக்க விரைந்தோம்.

தியேட்டர் முன் நின்ற காலிக்கூட்டம் நம்மைச் சூழ்ந்து கொண்டது. எதை எடுக்கற? ஏன் எடுக்கற? எதுக்கு எடுக்கற? யார் நீ? என்று கண்டபடி கன்னடத்தில் கேட்ட கும்பலிடம் கன்னட மொழியிலேயே பதில் தந்தோம். அவர்கள் உற்சாகத்தோடு, ‘‘போட்டோதான! நல்லா எடு! பெருசா போட்டு தமிழ் நாயிடம் காண்பி’’ என ஹோவென சிரித்தார்கள். பீறிட்டுக் கொண்ட நமது உணர்ச்சியை மெல்ல மெல்ல அடக்கியவாறே கிளம்பினோம்.

நாம் திரும்பும் வழியில் ராஜாஜி நகர் ரோட்டில் முப்பது நாப்பது இளைஞர்கள் யாரையோ சூழ்ந்து கொண்டு ஹோவென கத்திக் கொண்டிருந்தனர்.

‘‘அய்யோ அம்மா’’ என தமிழில் இளம் பெண்ணின் குரல் கத்தலாக வர நாம் விரைவதற்குள் அனைத்தும் முடிந்து போயிருந்தது. நாம் வழியனுப்பி வைத்த சிவக்குமாரும் லதாவும் வயிற்றில் கூரான கம்புகள் சொருகப்பட்டு தரையில் இரத்தவெள்ளத்தில் கிடந்தனர்.

அந்த கன்னட வெறிக்கூட்டம், ‘‘தமிழச்சி தாலி ஒண்ணு கூட தொங்கக் கூடாதுடா! அறுத்து எறிங்கடா!’’எனக் கத்தியவாறே ஓடியது.

செய்வதறியாது திகைத்த நாம் சிவக்குமாரையும் லதாவையும் நண்பர் உதவியுடன் தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சாதி,மதம், இன பேதமின்றி உயிரைக் காப்பாற்றும் பொறுப்பு வாய்ந்த டாக்டர் பதவியில் இருந்த பிரகாஷ் என்ற கன்னடவெறியன் மருத்துவமனையின் உள்ளேயே அனுமதிக்க மறுத்தான். தக்கசமயத்தில் உதவினார் லட்சுமண ஐயங்கார் என்னும் டாக்டர். இவரும் கன்னடக்காரர்தான்.ஆனால்,மனிதர். சிவகுமார் லதா உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்ற நற்செய்தியைக் கேட்டு கொஞ்சம் சந்தோஷத்தோடு பெங்களூரை வலம் வந்தோம்.

14ஆம் தேதி ‘பந்த்’ முடிந்து விட்டாலும் வன்முறைகளும் தீவைப்பு சம்பவங்களும் துப்பாக்கி சூடும் தொடர்ந்தன.

பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 13 பேர் இறந்தனர். ஆனால், ஆறு பேர் தான் என்று போலீஸ் சொல்கிறது. கத்திக் குத்துக் காயங்களுடன் சுமார் நாற்பது பிணங்கள் சவக்கிடங்கில் போடப்பட்டது. அத்தனையும் தமிழர்களின் உடல்கள்.

11ஆம் தேதியே ஆரம்பமாகி விட்ட வன்முறைகளைத் தடுக்க கர்நாடக அரசு எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை. 13ஆம் தேதி பந்த்தை அமைதியான முறையில் நடத்த யாரும் கேட்டுக் கொள்ளவுமில்லை. மாறாக 14 ஆம் தேதி பெங்களூர் தீப்பற்றி எரியும் வேளையில் பங்காரப்பா புனேயில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் பங்குபெற சென்று விட்டார். தகுதியற்ற முதல்வர்.

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான ராஜாஜி நகர், மாகடி ரோடு, காமாட்சி பாளையம், மல்லேஸ்வரம், மகாலட்சுமி லே-அவுட் போன்ற பல இடங்களில் வன்முறை தாண்டவமாடியது. மேலும் தமிழர்களின் லாரி புக்கிங் அலுவலகங்கள் நிறைந்துள்ள சாம்ராஜ்புரம் பகுதியும் கலவரத்தால் அதிகம் பாதிப்பை சந்தித்தது. இனி காவேரி பிரச்சனை முடியும்வரை கலவரம் ஓய்வதாகத் தெரியவில்லை.

பெங்களூர் மட்டுமன்றி மைசூர், மாண்டியா மாவட்டங்களிலும் கலவரம் எல்லை மீறிப் போய் உள்ளது. கர்நாடகாவில் எந்தப் பிரச்னையானாலும் முதலில் கலவரம் நடக்கும் இடமாகவோ அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தும் இடமாகவோ பிள்ளையார் சுழி போடப்படுவது மாண்டியா மாவட்டம்தான்.

இம்முறையும் இங்குதான் கலவரம் தொடங்கி போலீஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

நாம் 14 ஆம் தேதி பெங்களூரை விட்டு புறப்பட்டு ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது நூற்றுக்கணக்கான மக்கள் மூட்டை முடிச்சுக்களோடு பரிதாபமாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். நாம் ஓசூர் வந்து சேர்ந்த போது ஏதோ பெங்களூரில் போர்க்கட்சிகளை காண சென்றது போல் பிரமைதட்டியது நமக்கு.

App exclusive Cauvery dispute karnataka
இதையும் படியுங்கள்
Subscribe