காவிரி கலவரம்! ஜெயலலிதாவின் மெத்தனமும், ரஜினியின் ஆவேச அறிக்கையும்! 

Jayalalithaa's complacency

1870 துவங்கி நூற்றாண்டுகள் கடந்து நடைபெற்றுவரும் காவிரி நதிநீர் பிரச்சனை 1990களில் உச்சம் பெற்றது. 1990, ஜூன் மாதம் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் இப்பிரச்சனை குறித்து விசாரித்து, ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 205 டிஎம்சி தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், நடுவர் மன்றத்துக்கு இடைக்கால உத்தரவு வழங்கும் அதிகாரம் இல்லை என்று கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பை உறுதிசெய்தது. அடுத்த மாதமே 1991 டிசம்பர் 10 ஆம் தேதி அந்த உத்தரவை அரசிதழில் பதிவு செய்தது. இதையடுத்து, கர்நாடகாவில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. அங்கு வாழ்ந்த தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அப்போது முதல்வராகப் பதவியேற்றிருந்த ஜெயலலிதாவின் செயல்பாடுகள் தமிழக மக்கள் மத்தியிலும் அ.தி.மு.க. தொண்டர்களிடமும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அது குறித்து, பெங்களூரு, மைசூர் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகளும் நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கையும் 11.01.1992 தேதியிட்ட நக்கீரன் இதழில் வெளியானது.

Jayalalithaa's complacency

காவிரி பிரச்சனையில் ஜெயலலிதா.

காவிரிக்காக எல்லோரும் ஒன்று படுவோம். உள்ளாட்சித் தேர்தல் கூடத் தேவையில்லை என்று அதிரடி கோதாவில் இறங்கிய ஜெயலலிதாவை காவிரிக்காக அவர் போடும் சால்ஜாப்பு வேஷங்களே அவரைக் காட்டிக் கொடுத்துள்ளது.

பெங்களூர் நகரம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது தனி விமானத்தில் பறந்து சென்று புனாவில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்காரப்பாவை கர்நாடகாவின் நீரோ மன்னன் என்றார்கள். அதை தமிழக அமைச்சர்களும் மேடைக்கு மேடை அட்டகாசமாக முழங்கினார்கள்.

ஆனால் அதே வாரத்தில் சென்னை மியூசிக் அகாடமி இசை விழாவில் பட்டத்து ராணியாகக் கலந்து கொண்ட ஜெயலலிதா இசையைப் பற்றியும் இசையின் ரசனை பற்றியும் பெருமையோடு பேசிவிட்டு அகாடமிக்கு ஒரு லட்சம் ரூபாய் தனது சொந்தப் பணத்தில் இருந்து உடனுக்குடனே ‘செக்’ போட்டு கொடுத்து ‘இசை நாயகி’ என்று புகழ்ப் பட்டங்களைப் பெற்றார்.

என்றுமில்லாத அளவுக்கு அப்பாவித் தமிழர்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது மிக மிக ஆடம்பரமாக நடந்த டாக்டர் பட்டமளிப்பு விழாவில் கர்நாடகப் பிரச்னையைப் பற்றி தொட்டுப் பார்க்கக் கூடத் தவறி விட்டார். நடப்பு உலகுக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பதை அப்பட்டமாகக் காட்டிக் கொண்டார்.

இந்த விழா முன் கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால்தான் இச் சூழ்நிலையிலும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறேன் என்று கூட சொல்லக் கூடிய அடிப்படை நாகரீகமோ மனிதாபிமானமோ ஜெயலலிதாவிடம் இல்லை என்கிறார் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. கர்நாடகத்தில் பங்காரப்பா ஒரு நீரோ மன்னன் என்றால் தமிழகத்தில் ஜெயலலிதா ஒரு ‘‘நீரோயிணி’’யாக தன்னைக் காட்டிக் கொண்டது என்னைப் போன்ற உண்மையான எம்.ஜி.ஆர். தொண்டர்களைக் காயப்படுத்தி விட்டது என்கிறார் விஜயராகவன் என்கிற அ.தி.மு.க.வின் தீவிரத் தொண்டர்.

சென்ற மாதம் தமிழகத்தில் கடுமையான வெள்ளச் சேதம் ஏற்பட்ட போதும், இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் அகதிகளாக வந்த பிறகும் கர்நாடக தமிழர் முகாம்களை திரும்பிக்கூடப் பார்க்காமல் போயஸ் தோட்டத்திலேயே முடங்கிவிட்ட ஜெயலலிதா போலீஸ் எச்சரிக்கையை மீறி மன்னார்குடிக்குச் சென்று துக்கம் விசாரித்து விட்டு திரும்பினார். அப்போது கூட தமிழர்கள் அதிகமாக வந்து குவியும் சத்தியமங்கலத்துக்கோ கோபிக்கோ போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,ரோட்டில் கிடந்த நெற்கதிர்களை தூக்கி எறிந்து பல ஆயிரம் தஞ்சாவூர் விவசாயிகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார். பங்கரப்பாவைப் போல அவசரமாக சட்டமன்றத்தைக் கூட்டி அவசரச் சட்டத்தை இயற்றாவிட்டாலும் அட்லீஸ்ட் பத்திரிகையாளர் களையாவது பார்த்திருக்கலாம். அதையும் தவிர்த்து விட்டார்.

வி.பி.சிங். பிரதமராக இருந்த போது தி.மு.க.வுக்கு ஒரு இடம் கூட இல்லாத பட்சத்திலும் நடுவர் மன்றக் குழுவை அமைக்கும்படி நிர்ப்பந்தம் கொடுத்தார் கருணாநிதி. ஆனால் தான் நினைத்தால் மத்திய அரசையே கதிகலங்க வைக்க முடியும் என்று ஜெயலலிதாவுக்கு தெரிந்தும் கூட மத்தியஅரசின் மேல் அதிருப்தியோடு மட்டுமே நின்று கொண்டார். மத்திய அரசை நிர்ப்பந்திக்கவில்லை. கடந்த முப்பதாம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டம் கண்டனத் தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றி விட்டு முடித்துக் கொண்டது உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலால் நாங்கள் பலியானோம். - மைசூர் தமிழ்ச் சங்க செயலாளர் பேட்டி.

சார்.....தமிழனுங்க தினம் தினமும் செத்து மடியறான். பெங்களூரில் பத்திக்கிட்ட கலவரம் இப்ப மைசூர்லயும் புடிச்சுகிச்சு. இந்தப் பிரச்னையை எப்பவோ பேசித் தீர்த்திருக்கலாம். ஜெயலலிதாவும் கருணாநிதியும் சேர்ந்து இந்த விவகாரத்தை அரசியலாக்கி ஆதாயம் தேடப் பாக்குறாங்க.

‘‘பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை’’ என்று ஜெயலலிதா அடம் பிடித்ததால்தான் கன்னட வெறியர்கள் எங்கள் வீடுகளில் தீ வைக்கத் தொடங்கினார்கள். கருணாநிதி இதுவரை மவுனமாக இருந்துவிட்டு கண்ட கண்ட கண்டன அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் என்ன நடந்தாலும் அதை இங்கு கூர்ந்து கவனிக்கிறாங்க. பாதிப்பு ஜெயலலிதாவுக்கோ கருணாநிதிக்கோ அல்ல. இங்குள்ள தமிழர்களுக்குத்தான். எண்பது லட்சம் தமிழர்கள் இங்கு உள்ளனர். அதனாலாயே காவிரிப் போராட்டத்தில் கர்நாடகாவுக்கு சாதகமாகப் போராடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டோம்.

விசாரணைக் கமிஷன் தேவையில்லை! - கர்நாடக உள்துறை மற்றும் போலீஸ் மந்திரி தரம்சிங் பேட்டி.

மைசூர் மாவட்ட வன்முறைகளை பார்வையிட்டு விட்டு அரசு விடுதியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மந்திரி தரம்சிங்கிடம் நாம் சில கேள்விகளைக் கேட்டபோது அவர் அளித்த பதில்:

நாங்களாக தமிழர்களை வெளியேற்றவில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தயாராக உள்ளோம். எதிர்பாராமல் சில பாதிப்புகள் நிகழ்ந்திருக்கலாம். வெளியேறிய தமிழர்களை விட கர்நாடகாவுக்கு வந்த கன்னடர்கள் எண்ணிக்கைதான் அதிகம்.! பாதிக்கப் பட்ட தமிழர்களின் சொத்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மற்றபடி இதற்கு விசாரணைக் கமிஷன் போட வேண்டும் என்பது தேவையற்ற ஒன்று. வன்முறைச் சம்பவங்களுக்கும் பங்க்காரப்பாவுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது.

கர்நாடக போலீஸ் டைரக்டர் ஜெனரல் ரகுராமன் பேட்டி:

தமிழ்நாட்டுல கன்னடர்கள் தாக்கப்படுறதா வந்த செய்திதான் மறுபடியும் கலவரம் ஏற்படக் காரணம். இடம் மாத்தி இடம் மாத்தி கலவரம் நடந்ததால எல்லா இடத்துக்கும் போலீசை அனுப்ப முடியல. அப்பாவிகள் பலியாகிட கூடாதுன்னுதான் கலவரத்தை அடக்க துப்பாக்கி சூடு நடத்தாம இருக்கோம். துப்பாக்கி சூடு நடத்தி தமிழரோ கன்னடரோ யாராவது செத்துட்டா பிரச்சனை இன்னும் அதிகமாயிடும். மற்றபடி துப்பாக்கி சூடு நடத்தாதற்கு அரசியல் பின்னணி ஏதும் கிடையாது. தமிழ்நாட்டுக்கு சென்ற தமிழர்கள் மறுபடியும் கர்நாடகம் திரும்ப வேண்டும்.விரைவில் பிரச்சினை தீர்ந்து விடும்.(எதற்கு?தப்பிச் சென்றவர்கள் மீண்டும் உதைபடவா?)

ஜெயலலிதா பதவி விலக வேண்டும்.- பண்ருட்டி பேட்டி.

கே: கொலை கொள்ளை கற்பழிப்பு வரை சென்று விட்ட கர்நாடகத்தின் கொடூரம் எதில் போய் முடியும்?

ப: கடந்த பதிமூன்றாம் தேதி கர்நாடக அரசு அங்குள்ள அனைத்துக்கட்சி தலை வர்களை அழைத்து கர்நாடகா முழுவதும் முழு அடைப்பை நடத்திய போதே ஒரு பயங்கரம் தட்டிக் கொடுக்கப்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்டது. ஒரு அரசாங்கமே தமிழர்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு துணை நின்று வேடிக்கை பார்க்கிறது. இது எதில் போய் முடியும் என்று சொல்ல முடியாது. இந்திய ஒற்றுமைக்கே வேட்டு வைத்தாலும் வைக்கலாம்.

கே: ஜெயலலிதா கூட்டிய அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கலந்து கொள்ளாதது ஒரு கூட்டுமுயற்சியில் உங்களின் பொறுப்பின்மையைத்தானே காட்டுகிறது?

ப: தமிழகஅரசு அனைத்துக் கட்சிகளை கூட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டு இருபது நாட்களுக்குப் பின் எல்லாப் படுகொலைகளும் நடந்து முடிந்த பிறகுதான் ஜெயலலிதா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இதிலிருந்தே யார் பொறுப்பில்லாதவர்கள் என்று நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

கே: அப்படியென்றால் ஜெ கூட்டிய கூட்டம் அர்த்தமற்றது என்கிறீர்களா?

ப: காலம் கடந்து விட்ட நிலையில் அனைத்துக் கட்சிகளைக் கூட்டியிருப்பது தமிழ் மக்களின் உணர்வை திசை திருப்பும் ஏமாற்று வேலை....பித்தலாட்டம்.

கே: மத்தியஅரசு தமிழர்களைக் காப்பாற்றத் தவறினால் இந்தியாவும் ரஷ்யாவைப் போல சிதறி விடும் என்று நெடுஞ்செழியன் காட்டமாக அடித்துல்லாரே?

ப: நாவலர் சொன்ன கருத்து ‘ஜெ’ கருத்தல்ல. பெருங்காயம் இருந்த பானையின் வாசம் போகாது என்பதுபோல பழைய உணர்ச்சிகள் அடிப்படையில் அவர் பேசுகிறார்.

கே: அப்படியென்றால் ஜெயலலிதா தமிழர்கள் மீது அக்கறையில்லாமல் அலட்சியப்படுத்துகிறார் என்கிறீர்களா?

ப: தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். தமிழச்சிகள் கற்பழிக்கப்படுகிறார்கள்...என்ற வேதனை உணர்வில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர்களை ஜெயலலிதா அரசு சுட்டுக் கொல்கிறது என்றால் இது தமிழர்களுடைய அரசா? ஜெயலலிதா யாருக்குத்தான் முதல்வர்?

கே: அனைத்துக் கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு அரசாங்கமே நடத்தும் ‘பந்த்’தில் நீங்கள் கலந்து கொள்ளாததன் நோக்கம் என்ன? வேறு ஏதாவது அதிரடித் திட்டங்கள் வைத்திருக்கிறீர்களா?

ப: ‘ஜெ’ நடத்தும் ‘பந்த்’தில் கலந்துகொள்ள மாட்டோம். பந்த் தேவையற்றது. பந்த் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் பிரச்சினை. இதன் மூலம் பிரச்னையை திசைதிருப்பப் பார்க்கிறார் ‘ஜெ’. இத்தனைக்கும் காரணமான காங்கிரஸ் கட்சிக்கு இவர் தரும் ஆதரவை விலக்கியிருக்கலாமே?அல்லது தமிழர்களைப் பாதுகாக்க முடியாத நான் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்க மாட்டேன் என்று தனது பதவியை ராஜினாமா செய்திருந்தால் இந்நேரம் பிரச்னைக்கு தீர்வு தானே வந்திருக்கும்.‘ஜெ’வையோ அல்லது காங்கிரஸ் அரசாங்கத்தையோ நாங்கள் நம்பத் தயாராயில்லை. எனவேதான் தமிழனைக் காப்பாற்ற ஆயிரம் வாகனங்களில் நாங்கள் போகிறோம்.அப்போது இந்தியா என்பது இருக்கிறதா? இல்லையா என்பதை ஒரு கை பார்த்து விடுவோம்.

கே: எது எப்படி இருந்தாலும் தமிழர்களின் உயிரும் மானமும் உடனடியாகக் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு மத்திய மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டும்?

ப: இந்தியஅரசின் கையில் எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன. கலவரப்பகுதிகளை மத்திய அரசு தன் கையில் ஆரம்பத்திலேயே எடுத்துக் கொண்டு அமைதியை நிலைநாட்டி இருக்கலாம். அதற்குப் பதிலாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததுதான் வேதனை தரத் தக்கது. இனிமேலாவது மத்திய அரசு அந்த முயற்சியில் இறங்கி தமிழர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள்.

தமிழர்களைக் காக்க நானே புறப்படுவேன்.

ரஜினி ஆவேசம்.

காவிரி பிரச்சினை கர்நாடகத் தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்சினை ஆனதும் வழக்கம் போல் தமிழகத்து அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள பந்த் போராட்டங்களை அறிவித்தனர். இவை எல்லாவற்றையும் விட ஒரே ஒரு அறிக்கை கர்நாடகத் தமிழர்களுக்கு தெம்பையும் ஒரு பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தி விட்டது.

அதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசியல்வாதிகளின் மத்தியில் ஒரு கிலியையும் ஏற்படுத்தியது. அந்த அறிக்கைக்கு சொந்தக்காரர் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான். அந்த அறிக்கையில் ரஜினிகாந்த் சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த நடந்து கொண்டிருக்கிற நிகழ்ச்சிகளை கண்டு வேதனைப்படுகிறேன். கர்நாடக மக்கள் ஈவு இரக்கமற்ற ராட்சசர்கள் ஆக மாறுவார்கள் என்று நான் எதிர்பார்க்க வில்லை.

Jayalalithaa's complacency

"சுப்ரீம் கோர்ட்டின் முடிவை எதிர்த்து நடைபெறும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது கண்டும் நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமையை நினைத்தும் வேதனைப்படுகிறேன். ஒரு சில அரசியல் வாதிகளும் மொழி வெறி பிடித்த தலைவர்களுமே காரணம்.மதவெறி, ஜாதிவெறி, மொழி வெறி இவைகள் சமுதாயத்தின் அழிவுக்கு காரணமாகும். நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணம் வேண்டும். இக்கருத்தை எல்லா மொழிவாதிகளும் தலைவர்களும் உருவாக்க வேண்டும்.

இந்த பிரச்சினையில் அரசு துரிதமாக ஓர் நல்ல முடிவை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இங்கும் ஒரு பஞ்சாப் அஸ்ஸாம் உருவாகும் நிலை ஏற்பட்டுவிடும்.கர்நாடகாவில் வன்முறையால் பாதிக்கப்பட்டு கோவை நீலகிரி வட ஆற்காடு அம்பேத்கார்,சம்புவராயர், பெரியார், தருமபுரி மாவட்டங்களில் தங்கி இருக்கும் தமிழர்களுக்கு வேட்டி சேலை அரிசி போன்ற அடிப்படை தேவைகளை நான் நேரடியாகச் செய்யப் போகிறேன்.

பாதிக்கப்பட்ட தமிழர்கள் சென்னைக்கு வந்தால் அவர்களுக்கு உதவ என் இல்லம் எப்போதும் திறந்திருக்கும். இந்த வன்முறைச் சூழல் இப்படியே தொடருமானால் இந்த ரஜினிகாந்த் தலைமையில் தமிழ் நாட்டில் இருந்து ஒரு படை கர்நாடகம் புறப்படும். அங்குள்ள ஒவ்வொரு தமிழன் வீட்டுக்கு முன்னாலும் என்னுடைய படை வீரர்கள் நூறு பேர் பாதுகாப்பாக நிற்பார்கள். அதற்கு என் ரசிகர்கள் எந்நேரமும் தயாராக இருக்கக் கேட்டுக் கொள்கிறேன்." இதுதான் ரஜினிகாந்தின் அறிக்கை.

இந்த அறிக்கை வெளிவந்த பின் தமிழகத்தில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் தயார் நிலையில் உள்ளனர் தலைவனின் ஆணைக்காக. பற்றியெரியும் கர்நாடகத் தமிழர்களின் பிரச்னையை மொழி இனம் கடந்து மனிதநேயத்தோடு கவனித்து ஆறுதலும் பாதுகாப்பும் தர தனது கரத்தை உயர்த்தியிருக்கும் ரஜினிகாந்த் உண்மையிலேயே சூப்பர் ஸ்டார்தான். ரஜினிகாந்தின் இந்த அறிக்கை வெளிவந்த பின் ஏராளமான கர்நாடகத் தமிழர்கள் ரஜினியின் வீட்டுக்கு வந்த வண்ணம் உள்ளார்கள். அவர்களின் தேவையறிந்து ரஜினியே நேரடியாகவும் தனது ரசிகர் மன்றங் கள் மூலமாகவும் தாரளமாக உதவிகளைச் செய்துவருகிறார்.

Actor Rajinikanth cauvery Jayalalithaa
இதையும் படியுங்கள்
Subscribe