பவாரியா கொள்ளையர்களின் முன்னோடிகள்... கோவையைக் குலுக்கிய வட இந்தியக் கொள்ளையர்கள்...

bawaria like incidents happened in coimbatore

bawaria like incidents happened in coimbatore

ஈவு இரக்கமற்ற கொள்ளைக்கும்பல் ஒன்றை வட இந்தியா முழுவதும் தேடி அலையும் தமிழக காவல்துறையினரின் கதையை 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் தத்ரூபமாக நம் கண் முன்னே காட்டியிருப்பார் இயக்குனர் வினோத். 1995 - 2006 காலகட்டத்தில் தமிழகத்தின் நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள வீடுகளைக் குறிவைத்து கொலை, கொள்ளை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட பவாரியா கொள்ளைக்கூட்டத்தைப் பிடித்த காவல்துறையினரின் சாகசக்கதையே இப்படத்தின் கரு. கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனன் கொல்லப்பட்ட பிறகு, இந்த கும்பலைப் பிடிக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதன் அடிப்படையில், இந்த கொள்ளையர்களைப் பிடிப்பதற்கான அதிரடி நடவடிக்கைகள் தொடங்கின. அவற்றின் முடிவில் அவர்கள் கைதும் செய்யப்பட்டனர். ஆனால், இதேபோன்ற ஒரு தொடர் கொள்ளை சம்பவம் 1990 களின் தொடங்கத்தில் கோவை மாவட்டத்தையே அச்சத்தில் ஆழ்த்தியிருந்தது. 1991, நள்ளிரவுகளில் கதவுகள் உடைக்கப்பட்டு, வீட்டின் உரிமையாளர்கள் கொல்லப்பட்டு, உடைமைகள் திருடப்படுவது அப்பகுதியில் வாடிக்கையாகிக்கொண்டிருந்த காலம். அந்த காலகட்டத்தில் அங்கு நடந்த சில கொலை சம்பவங்கள் குறித்து 28.9.1991 நக்கீரன் இதழில் வெளியான கட்டுரை.

கோவையைக் குலுக்கும் கொள்ளைக் கூட்டம். ஒரு உஷார் ரிப்போர்ட்!

கோவைக்கு அருகில் உள்ள காரமடையின் கடைக்கோடி வீடு!

நடக்கவிருக்கும் விபரீதம் தெரியாமல் உறங்கிக் கொண்டிருக்கிறார் வீட்டு எஜமானி ருக்மணியம்மாள். அருகில் காவலுக்கென்று பதினாலு வயது சிறுவன் ஜேக்கப். பதினாறாம் தேதி இரவு சுமார் பன்னிரெண்டு முப்பது மணி.

‘தட தட’ வென்று கதவு இடிபடும் சத்தம்!

தூக்கக் கலக்கத்திலேயே எழுந்துவந்து கதவைத் திறந்தான் சிறுவன்.உள்ளே நுழைந்த கும்பலின் கண்களில் தட்டுப்பட்டவன் கதவைத் திறந்த அந்த அப்பாவி சிறுவன்தான்!

ஒரே அடி!.

பேச்சுமூச்சின்றி கீழே விழுகிறான் அவன்.!’ ‘ஹக்’ என்ற மரணமுனகல் அவன் தொண்டையில் இருந்துவர, செத்துவிட்டான் சிறுவன் என நினைத்த கும்பல் உள்ளே செல்ல கண்களில் தட்டுப்படுகிறார் ருக்மணியம்மாள்.

ஓங்கி ஒரே போடு!

அம்மா! என்று அலறக்கூட அவகாசம் கிடைக்கவில்லை ருக்மணி அம்மாவுக்கு.

ஸ்பாட்டிலேயே தன் மூச்சை அடக்கி உயிர்விட்டார் அவர்.

பீரோவை உடைத்து பணத்தை எடுத்துக் கொண்டு ருக்மணி கழுத்தில் காதில் கிடந்த நகைகளையும் அறுத்துக்கொண்டு பறந்து விடுகிறது கும்பல். போலீசார் வழக்கம்போல செக்சன்களைப் போட்டு வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் இன்று வரை.

இது நடந்த மறுநாள் பதினேழாம் தேதி இரவு! மணி ஒன்று முப்பது.

கோவையின் ஒதுக்குப்புறமான மதுக்கரையே அமைதியில் இருந்தது. அந்தஅமைதியைக் கிழிக்கும்வகையில் பில்டிங் காண்ட்ராக்டர் முரளிதரனின் வீட்டுக்கதவு உடைக்கப்படுகிறது. உள்ளே முரளிதரன், அவர் மனைவி கெளரி, அப்பா ராமச்சந்திரன், அண்ணன், அவர் மனைவி இந்திரா, மகன் ராஜேஷ், மகள் ஷோபனா! அனைவரது கண்களிலும் மரண பீதி!

கதவை உடைத்து உள்ளேபுகுந்த கும்பல் நேராக முரளிதரனின் மகன் ராஜேசையும் மகள் ஷோபனாவையும் காண்கின்றனர். அவர்கள் மனதில் தாங்கள் பார்க்கும் சினிமாப் படங்களில் வருவதுபோல பளிச் சென்று ஒரு

ஐடியா. குழந்தை ராஜேஷின் கழுத்தில் கைவைத்து உயரத் தூக்குகிறான் ஒருவன்.

இன்னொருவன் எங்கே பீரோ சாவி? எங்கே நகை? என்று இந்தியில்கேட்கிறான்.

கொடுக்காவிட்டால் குழந்தை காலி என்று சைகைமூலம் கூறுகிறான்.

பீரோவைக் காட்டி சாவியைக் கொடுக்கிறார் முரளி. ராஜேஷை விட்டுவிட்டு சாவகாசமாக நடந்துசென்று பதினைந்து பவுன் நகையையும் பணத்தையும் கொள்ளையடிக்கின்றனர். முரளி வீட்டில் கொள்ளை நடந்து கொண்டிருக்கும்போது சத்தம் கேட்டு கண் விழிக்கிறார் பக்கத்து வீட்டு வாத்தியார் ராமன்குட்டி. லைட்டைப் போடுகிறார். இதை முரளி வீட்டில் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிற கும்பல் அறிந்துகொள்ள, ‘‘சரி வந்தது வந்தோம்! அந்த வீட்டிலும் ஆதாயம் தேடுவோம்’’ என்று எண்ணி வேலியை விலக்கி விரைகின்றனர்.

கதவைத் ‘தட்டோ தட்’டென்று தட்டுகின்றனர்! வேறு வழி! கதவை உடைக்கின்றனர். உள்ளே சென்ற கொள்ளையர்கள் எதிர்பாராத வகையில் ராமன்குட்டியின் கையிலிருந்த தடி கொள்ளையர்கள் மீது சரமாரியாகவிழுகிறது. சுதாரித்த கொள்ளையர்கள் ராமன்குட்டியைக் கீழே தள்ளுகின்றனர். இதற்குள் ராமன்குட்டியின் மகள்கள் லதா,சுகுணா இருவரும் கைகளில் உலக்கைகளுடன் சினிமா கதாநாயகிகள் போல் ஆக்ரோசமாக மோதுகின்றனர். ஆனால் இது சினிமாவா என்ன? மகள்கள் இருவரையும் அடித்துத் தள்ளி விட்டு உள்ளே சென்ற கும்பல் தூங்கிக் கொண்டிருந்த ராமன் குட்டியின் அம்மா காவேரியை தூக்கத்திலேயே ஒரு போடு போடதூக்கம் கலையாமலேயே மயக்கமடைகிறார் அவர்.

அங்கே இங்கே தேடியும் ஒன்றும் கிடைக்காததால் காவேரி அம்மாள் காதில் இருந்த மூன்றரை பவுன் தோட்டை மட்டும் அறுத்துக்கொண்டு வெளியேறுகின்றனர்.

ராமன்குட்டி கூறுகிறார், ‘‘ஏற்கெனவே ரெண்டு மாசத்துக்கு முன்னாடி என் வீட்டைக் கொள்ளையடிக்க நினைச்சு கதவைத் தட்டுனாங்க.நாங்க லைட்டைப் போட்டுப் பாத்துட்டு கதவைத் திறக்கல.அப்புறம் போயிட்டாங்க. இப்பவும் லைட்டைப் போட்டுப் பாத்தேன். ஆனா அவங்க உடைச்சுட்டு வர்றாங்க. முடிஞ்ச அளவு நானும் என் இரண்டு மகள்களும் சமாளிச்சோம். என் மகளுக ரெண்டுபேரையும் அடிச்சுட்டாங்க. அம்மா

காதுலஇருந்த மூன்றரைப் பவுன் தோட்டை எடுத்துட்டுப் போயிட்டாங்க’’ என்றார்.

கோவை நகரத்தின் ஒதுக்குப் புறமான ஏரியாக்களில் கொள்ளை நடப்பது தற்போது அதிகமாகி இருக்கிறது. ஆனால்,மேற்கண்ட கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் கொலை செய்யவும் அஞ்சுவதில்லை என்பதுருக்மணியம்மா கொலை, சுகுணா, லதா தாக்கப்பட்டது மூலம் தெரிகிறது. கோவைமாநகரக் கலெக்டர் கலைவாணன், ‘‘இரவுநேரத்தில் யார் கதவைத் தட்டினாலும் லைட்டைப் போட்டுப் பார்த்துவிட்டு பிறகு கதவைத் திறங்கள்’’ என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார். கோவை கலெக்டர் அலுவலகத்துக்குள் கழிவறைக்குள்ளேயே இரண்டு பெண்கள் கோமதி, மகாலட்சுமி கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

கலெக்டர் இப்போது சொல்வதற்கெல்லாம் முன்பே ராமன்குட்டி லைட்டைப் போட்டார். யாரென்று பார்த்தார். கதவையும் திறக்கவில்லை. ஆனால், கதவை உடைத்து உள்ளே வந்திருக்கின்றனர். இதற்கு ஒரு வழிசொல்லவேண்டும் கலெக்டர்.

அடுத்து இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் போலீசார். ஜெயலலிதாவின் சாராய சஸ்பென்ட் நடவடிக்கைகளுக்குப் பிறகு போலீசாரின் சகல நோக்கமும் கள்ளச்சாராய ஒழிப்புதான். சாராயம் விற்பது தெரிந்தால் சஸ்பெண்ட். கொள்ளையடித்தால் சஸ்பெண்ட் கிடையாதே! என்பதால் கொள்ளைகள் விஷயத்தில் போலீஸ் முன் அக்கறை எடுப்பதில்லை என்கின்றனர் சில பொது மக்கள்.

அடுத்ததாக போலீசாரின் எண்ணிக்கை குறைவு.கோவை மாவட்டத்தில் எல்லா ஸ்டேஷன்களிலும் போலீசார் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கிறது. இதை வைத்து நாங்கள் எத்தனை பிரச்னைகளைச் சமாளிப்பது

என்று முணுமுணுக்கின்றனர் போலீசார். மொத்தத்தில் கோவைநகர மக்கள் எந்தநேரத்தில் எந்தவீட்டின் கதவு

உடைக்கப்படுமோ என்ற பயத்துடனேயே படுக்கைக்குச் செல்கின்றனர்.

மக்கள் பயமின்றி படுத்துத்தூங்கி எழ ஆளும் அரசு கொஞ்சம் அக்கறை காட்டுவது நல்லது.

கொள்ளையர் தோல்வி!

பிணமாய் இருந்த ருக்மணியம்மாளின் விரலில் இருந்த மோதிரத்தைக் கழட்ட முயற்சித்து முடியாமல் விரலை ஒடித்து கழட்டப் பார்த்திருக்கின்றனர். அப்படியும் முடியாததால் அப்படியே விட்டுவிட்டுதோல்வியுடன் சென்றுள்ளனர்.

இதற்குத்தானா இத்தனை அடி!

ராமன் குட்டியிடம் அடிவாங்கிய கொள்ளையர்கள் அவரது மகள்கள் இருவரிடமும் அடிவாங்கி பின்னர் அவர்களைத் தாக்கிவிட்டு வீடு முழுக்க ஏதாவது பணம் கிடைக்குமா என்று தேடியும் அவர்களுக்கு கிடைத்ததுமூன்றரை பவுன் தங்கம் மட்டுமே. கோவையில் ரூரல் டி.எஸ்.பி. முத்துச்சாமி இப்பொழுது அங்கு பணியில்இல்லாததுதான் இத்தகைய கொள்ளைகளுக்கு காரணமாய் அமைந்துவிட்டது.

அவர் பணியிலிருந்த போது தீவிர கண்காணிப்புகள், இடைவிடாத ரோந்துகள் மற்றும் சந்தேகப்படுவர்களின் மீது கைது நடவடிக்கை என்று சுறுசுறுப்பாக வைத்திருந்தார் காவல்துறையை.. பொறுப்புவாய்ந்த அதிகாரி இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதற்கு கோவை ரூரல் எஸ்.பி.முத்துசாமியின் இடமாற்றம் ஒரு உதாரணம்.

App exclusive Coimbatore
இதையும் படியுங்கள்
Subscribe