சென்ற வருடம் (2020) கரோனா பரவல் உச்சத்திலிருந்தபோதும், ஆகஸ்ட் 05 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மிகப் பிரமாண்டமாக நடந்தது. விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் உறுப்பினர்கள் அனைவரும் “இந்துக்களின் பல வருடக் கனவு நிறைவேறியதாக” நெகிழ்ந்தனர். ஆனால், உண்மையில் 1528ல் பாபரால் கட்டப்பட்ட மீர் பாங்கி மசூதியின் (பாபர் மசூதி) பிரச்சனை இந்துக்களின் அரசியல் பிரச்சனையாக மாற்றப்பட்டது 1949 ல் பாபர் மசூதிக்குள் சில இந்து அமைப்புகளால் ராமர் சிலை நிறுவப்பட்டதற்கு பிறகுதான்.
ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் பாபர் மசூதியை அகற்றிவிட்டு அதே இடத்தில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. 1980 வரை உள்ளூர் அரசியலில் மட்டுமே சலனத்தை ஏற்படுத்திய இந்த விவகாரம் பா.ஜ.க. நிறுவப்பட்ட பிறகு ராம ஜென்ம பூமி மீட்பு இயக்கமாக வலுப்பெற்றது. 1984 ஆம் ஆண்டு விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய ராம்-ஜானகி யாத்திரை பல இயக்கங்களையும் மக்களையும் ராம ஜென்ம பூமி மீட்பில் இணைந்துகொள்ள ஊக்கப்படுத்தியது. அந்த யாத்திரையில் இடம்பெற்ற ராமர்-ஜானகி கூண்டிற்குள் அடைக்கப்பட்டது போன்ற தேர் அயோத்தியை அடைந்த போது இந்து மக்களின் உணர்ச்சியைத் தூண்டி பாபர் மசூதி இடிக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தைப் பலப்படுத்தியது. கூடவே பா.ஜ.க.வும் பலம் பெற்றது.
1990 ,செப்டம்பர் 25 அன்று, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலிலிருந்து அயோத்தி நோக்கி ரத யாத்திரை தொடங்கினார். ராமர் கோவிலை முன்வைத்து பா.ஜ.க. விற்கு ஆதரவாக மக்களைத் திரட்டும் இந்த முயற்சி பெருமளவு வெற்றிபெற்றது. ரத யாத்திரை பாட்னாவை அடைந்தபோது எல்.கே.அத்வானியின் உரையைக் கேட்கக் காந்தி மைதானத்தில் சுமார் மூன்று லட்சம் பேர் கூடினர். அத்வானிக்கு இவ்வளவு பெரிய மக்கள் ஆதரவு இருந்தபோதிலும் அப்போதைய பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அக்டோபர் 23 ஆம் தேதி அத்வானியைக் கைது செய்தார். யாத்திரையையும் நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக அக்டோபர் 30 ஆம் தேதி கர சேவகர்கள், இந்து அமைப்பினர் பலரும் அயோத்தியை முற்றுகையிட்டனர். அவர்களைத் தடுக்க நினைத்த முலயாம் சிங் அரசின் முயற்சிகள் தோல்வியடைவே மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதன் முடிவில் 16 கரசேவகர்கள் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டிருந்தனர். இந்த நிகழ்வுகள் பாபர் மசூதி இடிப்புக்கு அடித்தளமாக அமைந்தன.
1992 டிசம்பர் 6, பா.ஜ.க. எதிர்பார்த்த அந்த நாள் வந்தது. விஷ்வ ஹிந்து பரிஷத் அயோத்தியில் பேரணிக்கு ஏற்பாடு செய்தது. அதற்காக நாடு முழுவதும் இருந்து ஒன்றரை லட்சம் கர சேவகர்கள் அங்கு குவிந்தனர். பேரணி விரைவில் கலவரமாக மாறியது. ஒரே மூச்சில் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, உத்தர பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, சட்டசபையைக் கலைத்தார். தொடர்ந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஏற்பட்ட கலவரங்களில் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர். இன்றளவும் ஆண்டுதோறும் டிசம்பர் 6 ஆம் தேதியைப் பதற்றமான நாளாக மாற்றிய இந்த சம்பவத்தால் பா.ஜ.க. அடைந்த பலன்கள் ஏராளம்.
இத்தகைய கலவரம் நடப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே பாபர் மசூதி விவகாரத்தில் பா.ஜ.க.வின் அரசியல் குறித்து 30.7.1992 தேதியிட்ட இதழில் நக்கீரன் அம்பலப்படுத்தியது.
அயோத்தி:-
பாரதீய ஜனதா கட்சிக்கு அரசியல் தொய்வு ஏற்படும் போதெல்லாம் ராமர் கோவிலை துணைக்கு அழைத்து கோஷம் போடுவது வாடிக்கையாகி விட்டது. ‘‘பாபர் மசூதியை இடித்து அந்த இடத்திலேயே ராமர் கோவிலைக் கட்டுவோம்’’ என்று தேர்தல் அறிக்கையிலேயே அந்தக் கட்சி அறிவித்திருந்தது அரசியல் சட்டத்துக்குப் புறம்பான விஷயமே. ராமரின் செல்வாக்கில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்த பாரதீயஜனதா இடையில் கொஞ்சநாட்கள் மௌனவிரதம் இருந்துவிட்டு தற்போது மீண்டும் முருங்கை மரம் ஏறியுள்ளது. ‘‘பாபர் மசூதியை சுற்றியுள்ள இடங்களை ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது’’ என்று அலகாபாத் நீதிமன்றம் தடை உத்தரவு விதித்திருந்தும் கடந்த ஜூலை ஒன்பது அன்றிலிருந்தே பாரதீய ஜனதா கோர்ட் உத்தரவை காலில் போட்டு மிதிக்க ஆரம்பித்து விட்டது.
ஏறக்குறைய அறுபதாயிரம் ‘‘கர சேவா தொண்டர்கள் கட்டுமானப் பணியில்’’ ஈடுபட்டிருப்பதாக பா.ஜனதா பெருமையோடு அறிவித்துள்ளது. உத்திரப் பிரதேச முதல்வர் கல்யாண்சிங்கை கேட்டாலோ அவர்கள் ‘‘சாதுக்கள் ரிஷிகள் நாங்கள் என்ன செய்ய முடியும்?’’ என்று கையை விரிக்கிறார். இதுவரை ‘‘ராமர் பாபர்’’ பிரச்சனைக்காக எழுபத்திமூன்று முறை கூடிப் பேசிய தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் எதையும் சாதித்து விட்டதாகத் தெரியவில்லை.
இந்தப் பிரச்சினையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரதமர் நரசிம்மராவ் ‘ஏனோதானோ’வென்ற அறிக்கைகளை மட்டுமே விட்டுக் கொண்டிருக்கிறார். இடதுசாரி கட்சிகள் தேசிய முன்னணியினர் உ.பி.அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி பலத்த குரல் எழுப்பியும் மத்திய அரசிடம் இருந்து எந்தவிதமான ‘ரெஸ்பான்ஸ்’ ஆன பதிலும் இல்லை. பா.ஜனதா ஆட்சி நடத்தும் உ.பி.அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு நாடு முழுவதும் பரவலான குரல்கள் கிளம்பியுள்ள இந்த நிலையில் ராமர்-பாபர் மசூதி பிரச்னை குறித்து சில பிரபலங்களிடம் கருத்து கேட்டோம்.
சர்வ பள்ளி கோபால்: வரலாற்று ஆராய்ச்சியாளர். (முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் மகன்.)
இந்தியா என்பது இந்திய நாடுதானே தவிர இந்து நாடு அல்ல. சீக்கியர்கள் முஸ்லிம்கள் போன்ற மதத்தினரும் இந்தியாவின் பிரஜைகளே. பா.ஜ.கவின் கருத்துப்படி ‘‘ஹிந்துஸ்தான்’’ ஆகி விட்டால் மற்ற மதத்தினர் இரண்டாம்தர பிரஜைகளாகி விடுவார்கள்.
கடவுள் வழிபாடும் மத ஈடுபாடும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள். இதிலே அரசியலைக் கலப்பதோ அரசியலில் மதத்தைக் கலப்பதோ சுயநலம்தான். பாரதீய ஜனதாவின் ஓட்டு வாங்கும் குறுகிய எண்ணம்தான் ராமர் கோவில் விவகாரம். ஆதாரமே இல்லாத ஒரு விஷயத்தை விஸ்வரூபம் ஆக்குவதை நாம் அனுமதிக்கக் கூடாது. நான் ஒரு வரலாற்றாளன் என்கிற முறையில் இதை தெளிவாகச் சொல்கிறேன். ‘‘அயோத்தியில் ராமர் பிறந்ததற்கு எந்த ஆதாரமும் கிடையாது.’’ நாடு இவ்வளவு நாகரீகமாகி முன்னேறிய பிறகும் மதத்தைச் சொல்லி பிரிப்பது அநாகரீகமான விஷயம்.
பா.ஜனதாவும், விஸ்வ ஹிந்து பரிஷத்தும் வேறு வேறு என்று சொல்வது ஒருவிதமான நாடகம். மத சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நம் தேசத்தில் இப்படி ஒரு கலவரம் நடப்பது கேவலமே. வரலாறு இதை மன்னிக்காது.இதனால் அரசியல் நீதி நாசம் அடைகிறது. பாரதீய ஜனதா தனது அரசியல் செல்வாக்கை பெருக்கிக் கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைதான் ராமர் கோவில் கட்டுமானப் பணி. பிரதமர் நரசிம்மராவ் இந்த விசயத்தில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விசயத்தில் இடதுசாரிக் கட்சிகளும் தேசிய முன்னணியும் ஒரே கருத்தைக் கொண்டிருப்பதால் நரசிம்மராவ் ‘‘மைனாரிட்டி அரசு’’ என்று தன் ஆட்சியை நினைத்து பயப்பட வேண்டியதில்லை. எந்த நேரத்திலும் பாரதீய ஜனதா செயல்பாட்டை அனுமதிக்க முடியாது. ஏனென்றால் இது மனித குல வரலாற்றின் நாகரிகம் தொடர்பான விஷயம்.
என். ராம். (ஆசிரியர். ஃபிரண்ட்லைன்)
பாரதிய ஜனதா கிளப்பியுள்ள இந்த விவகாரம் சீரியஸான ஒரு பிரச்னை. ஆனால், மத்திய அரசு மிகவும் மெதுவாக அக்கறையின்றி செயல்படுகிறது. நரசிம்மராவ் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டும் பா.ஜ.க.அதை மீறுகிறது என்றால் நாம் எப்படி இதை அனுமதிக்க முடியும்? உத்திரப்பிரதேச அரசு இந்த விஷயத்தில் நாடகம் ஆடுகிறது.
ராமர் என்பதே ஒரு கட்டுக்கதை. ராமர் பெயரைச் சொல்லி மசூதியை இடிப்பது தவறு. அவ்வாறு செய்யக் கூடாது. மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்ய அரசாணையை இதற்கு முன்பு காங்கிரஸ் பல முறை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இப்போது நியாயமான முறையில் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதில் ஒன்றும் தவறில்லை. அப்போதுதான் பல உயிர்கள் பலி ஆவதை தடுத்து நிறுத்த முடியும்.
வி.விஜயராகவலு. மாநிலத் தலைவர் - பாரதீய ஜனதா.
சோமனாதபுரம் கோவிலின் மீது கஜினி முகமது படையெடுத்து தரைமட்டமாக இடித்துத் தள்ளியது வரலாறு. சுதந்திரம் அடைந்த பிறகு அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் நேருவை எதிர்த்து சோமநாதபுரம் கோவிலுக்கான கட்டுமானப் பணிகளைச் செய்தார். அது போலத்தான் ராமர் கோவிலும். ராமர்கோவில் இருந்தது என்பது இந்துமத மக்களின் நம்பிக்கை. அதனால் மசூதியை அகற்றிவிட்டு கோவில் கட்டியே தீரவேண்டும். வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. இதற்கான வரலாற்று சான்றுகளும் எங்களிடம் உள்ளன. இந்து மதத்தை அழிப்பதற்காக இந்து மத புனித ஸ்தலங்களை உருத்தெரியாமல் சிதைப்பதுதான் மொகலாய மன்னர்களின் வழக்கம். அப்படித்தான் பாபரும் செய்தார்.
நாங்கள் சட்டத்தை எந்த இடத்திலும் மீறவில்லை. எதிர்க் கட்சிகள்தான் அனாவசியமாகப் புலம்புகின்றன.. மத்திய அரசிடம் நேரில் பேசியாவது ராமர் கோவிலைக் கட்டி முடிப்போம்.