தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளமாகச் செங்கோட்டை விளங்கி வருகிறது. இங்குள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, நேற்று (10.11.2025) மாலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால், அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்து தீக்கிரையாகி உருக்குலைந்தன. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அங்கு விரைந்து சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த காரை ஓட்டி வந்தவர் மருத்துவர் முகமது உமர் என்பவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானாவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு கைதான மருத்துவர் ஷக்கீர், முகமது உமரின் கூட்டாளி எனக் கூறப்படுகிறது. ஃபரிதாபாத்தில் வெடிபொருட்கள் வைத்திருந்ததாக கைதானவர்கள் பணியாற்றிய அதே மருத்துவமனையில் உமர் நபி மருத்துவராக பணியாற்றியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை சார்பில் தெரிவிக்கையில், “காலை 8 மணியளவில் ஹரியானா வழியாக கார் டெல்லிக்குள் நுழைந்தது. அதன் பின்னர் பிற்பகல் 3 மணியளவில் வடக்கு டெல்லியில் இருந்துள்ளது. இதற்கு இடைப்பட்ட 7 மணி நேரத்தில் இந்த கார் எங்கே சென்றது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த காரை இயக்கியதாக கூறப்படும் உமர் நபி, இந்த 7 மணி நேரத்தில் யார், யாரை சந்தித்தார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் பிற்பகல் 3 மணியில் இருந்து அடுத்த 3 மணி நேரம் வரை ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், அங்கு பொதுமக்கள் அதிகம் கூடுவதை உறுதி செய்வதற்காக ஒரே இடத்தில் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது எனத் தெரியவந்துள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/11/dl-car-cctv-pt-2025-11-11-15-21-02.jpg)
இந்த கார் வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து பிரதமர் மோடி தலைமையில் நாளை (12.11.2025) மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை கூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி விவாதித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கார் வெடிப்பின் போது அருகில் இருந்த சாந்தினி சௌக் பகுதியில் பதிவான சிசிடிவி கேமராவின் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (N.I.A. - National Investigation Agency) உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாகச் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (Unlawful Activities (Prevention) Act - UAPA) டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதோடு பி.என்.எஸ். (BNS) வெடிபொருட்கள் சட்டப்பிரிவுகளும் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Follow Us