Skip to main content

நோட்புக் வாங்க காசில்லாத ஒருவர் ஃபேஸ்புக்கை திரும்பிப்பார்க்க வைத்தது எப்படி? வாட்ஸ்அப்  ஜான் கோம் | வென்றோர் சொல் #42

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

Jan Koum

 

உலகின் இயக்கத்தைத் தீர்மானிப்பதில் பிரதானமானது தகவல் பரிமாற்றம். கற்காலம் தொடங்கி தற்போதைய டிஜிட்டல் காலம்வரை தகவல் பரிமாற்றத்தின் வடிவமும் முறையும் மாற்றம் கண்டிருந்தாலும் அதனுடைய தேவை என்பது அளப்பரியதாகவே உள்ளது. காடுகளில் இடப்பெயர்வு அடைந்து நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனிதச் சமூகம் தகவல் பரிமாற்றத்திற்குச் செடி, கொடிகளைப் பயன்படுத்தியது. ஓரிடத்தில் நிலைபெற்று வாழத்தொடங்கிய பின், மனிதச் சமூகத்தின் தகவல் பரிமாற்றம் கழுதை, புறா உள்ளிட்ட பிற உயிரினங்களைச் சார்ந்திருந்தது. பின்னர் அது, தந்தி, தபால், வானொலி, தொலைக்காட்சி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி, சமூக வலைதளம் என ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப தொடர்ந்து பரிணமித்துவருகிறது.

 

குறிப்பாக 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட இணைய மற்றும் டிஜிட்டல் புரட்சி உலகெங்கும் தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்தியுள்ளது. அந்த வகையில், தகவல் தொழில்நுட்பங்கள் அரசாளும் இந்த டிஜிட்டல் யுகத்தின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது வாட்ஸ்அப். தனிமனிதர்களுக்கு இடையேயான உரையாடல் தொடங்கி அலுவலகப் பயன்பாடுவரை வாட்ஸ்அப்பின் பயன்பாடு மிகப்பெரியது. டிஜிட்டல் யுகத்தின் இயங்கியலைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் வாட்ஸ்அப் தொடங்கப்பட்டது எப்படி? ஜான் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் என்ற இரு தனி மனிதர்களின் முயற்சியினால் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப், டிஜிட்டல் யுக இயங்கியலைத் தீர்மானிக்கூடிய ஒன்றாக உருவெடுத்தது எப்படி?

 

வாட்ஸ்அப்பின் நிறுவனரான ஜான் கோம், 1976ஆம் ஆண்டு உக்ரைனில் பிறந்தார். நடுத்தர யூத குடும்பத்தில் பிறந்த ஜான் கோமின் குழந்தைப் பருவம் அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை. அவருடைய தாயார் இல்லத்தரசி. கட்டுமான மேலாளராக பணியாற்றிவந்த அவரது தந்தையுடைய வருமானத்தின் மூலமாகவே குடும்ப வாழ்க்கை நடந்துவந்தது. உக்ரைனில் நிலவிய அசாதாரண அரசியல் சூழல் காரணமாக ஜான் கோமின் குடும்பம் உக்ரைனை விட்டு வெளியேற முடிவெடுக்கிறது. தன்னுடைய தாயார் மற்றும் பாட்டியுடன் சேர்ந்து உக்ரைனை விட்டு வெளியேறுகிறார் ஜான் கோம். அவருக்கு அப்போதைய வயது 16. உக்ரைனில் இருந்து அமெரிக்கா சென்ற அவரது குடும்பம் அமெரிக்கா அரசு அளித்த மானியத்தைச் சார்ந்தே வாழ்க்கை நடத்திவந்தது. பின், அமெரிக்க பள்ளியில் சேர்ந்து தன்னுடைய பள்ளிப்படிப்பைத் தொடருகிறார். பிற அத்தியாவசியத் தேவைகளைச் சமாளிக்க மளிகைக் கடையில் பகுதிநேர வேலை செய்து வருவாய் ஈட்டுகிறார். பள்ளிப்படிப்பின் மீது பெரிய ஆர்வம் இல்லாத ஜான் கோமிற்கு கணினி ஃப்ரோகிராம் மொழி மீது தீராத ஆர்வம் ஏற்படுகிறது.

 

புத்தகக் கடையில் அது தொடர்பான பழைய புத்தகம் ஒன்றை வாங்கி, படிக்க ஆரம்பித்த ஜான் கோம், கணினி ஃப்ரோகிராம் மொழியை வெகுவிரைவிலேயே கற்றுக்கொள்கிறார். குடும்பத்தாரின் ஆசைக்கிணங்கி கல்லூரியில் சேர்ந்த ஜான் கோமிற்கு யாஹூ நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. கல்லூரி படிப்பைப் பாதியில் கைவிட்டு யாஹூ நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். வாட்ஸ்அப்பின் இணை நிறுவனரான பிரையன் ஆக்டனை அங்குதான் ஜான் கோம் சந்திக்கிறார். சில ஆண்டுகள் அங்கு பணிபுரிந்த ஜான் கோம், தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு வாட்ஸ்அப் செயலியை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார். ஆரம்பக்கட்ட தோல்விகள், பல அப்டேட்கள் எனக் கடுமையான சோதனைகளைத் தாண்டி மிகப்பெரிய சக்தியாக இன்று வாட்ஸ்அப் உருவெடுத்துள்ளது.

 

Jan Koum

 

"உக்ரைனில் இருந்து நாங்கள் வெளியேறியபோது எனக்கு 16 வயது. அமெரிக்காவில் வாழ்க்கையைத் தொடங்க மிகவும் சிரமமாக இருந்தது. பள்ளிக்குத் தேவையான நோட் புக் வாங்குவதற்குக்கூட எங்களிடம் பணமில்லை. அதனால் உக்ரைனில் இருந்து எடுத்துவந்த பழைய நோட்டுகளைத்தான் பயன்படுத்தினேன். என்னுடைய அம்மா குழந்தைகள் பராமரிக்கும் வேலை செய்தார். நான் ஒரு மளிகைக்கடையில் உதவியாளராகப் பகுதிநேர வேலை செய்தேன். 'நீங்கள் செல்லுங்கள். சில ஆண்டுகள் கழித்து நான் உங்களுடன் வந்து சேர்ந்து கொள்கிறேன்...' எனக் கூறிய என் அப்பா, உக்ரைனிலேயே இறந்துவிட்டார். அந்தச் சம்பவம் நடந்த சில வருடங்களிலேயே என் அம்மா இறந்துவிட்டார். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது இணைய சர்வர்களுக்கான பாதுகாப்பு சோதனையாளராகப் பகுதிநேர வேலை பார்த்தேன். யாஹூ நிறுவனத்தின் சர்வர் பாதுகாப்பு சோதனைக்காக அங்கு செல்லும்போது அங்குள்ளவர்களுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. ஒருநாள் கல்லூரியில் இருந்தபோது யாஹூ நிறுவனத்தில் இருந்து சர்வர் பிரச்சனை காரணமாக அழைப்பு வந்தது. நான் கல்லூரியில் இருக்கிறேன் எனக்கூறியதும், அங்கு என்ன செய்துகொண்டு இருக்கிறாய்... நீ இருக்க வேண்டிய இடம் இது என்றனர்.

 

உடனே கிளம்பிச் சென்று அந்தக் குறையைச் சரி செய்தேன். பின், கல்லூரி படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு அங்கேயே வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். நண்பர் பிரையன் ஆக்டனை அங்குதான் சந்தித்தேன். நாங்கள் இருவரும் ஒத்த சிந்தனை கொண்டவராக இருந்தோம். சில ஆண்டுகள் அங்கு பணியாற்றிவிட்டு வேலையை ராஜினாமா செய்தேன். பின், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வேலைக்கு விண்ணப்பித்தேன். போதுமான திறமை இல்லை எனக்கூறி இரண்டு இடங்களிலும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் குறுஞ்செய்தி அனுப்புவது என்பது மிகவும் கடினமானதாகவும் அதிகம் செலவாகக்கூடியதாகவும் இருந்தது. இதை எளிமைப்படுத்தும் வகையில் ஒரு செயலி உருவாக்க ஆரம்பித்தோம். அதுதான் தற்போது வாட்ஸ்அப் என அழைக்கப்படுகிறது. முதல் வெர்ஷனை ஆப்பிள் ஃபோன்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைத்தோம். நீங்கள் ஒருவருக்கு ஃபோன் செய்யும் முன் அவருக்கு மெசேஜ் செய்து அவர் ஃபோன் பேசும் நிலையில் இருக்கிறாரா என்பதை உறுதிசெய்துவிட்டு அவருக்கு ஃபோன் செய்யலாம் என்பதே வாட்ஸ்அப் முதல் வெர்ஷனின் நோக்கம். அதை உருவாக்கியபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். துரதிர்ஷ்டவசடமாக அந்த வெர்ஷன் தோல்வியைத் தழுவி மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. அதன் பிறகு, ஒவ்வொரு அப்பேட்டிலும் ஒரு புதுமையான விஷயத்தை முயற்சி செய்து இன்று சிறப்பான ஒரு வாட்ஸ்அப் வெர்சனை உருவாக்கியுள்ளோம்".

 

வாட்ஸ்அப்பின் அபார வளர்ச்சியைக் கண்ட ஃபேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்அப் நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்தது. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ரூ.1.25 லட்சம் கோடிக்கு தன்னுடைய வாட்ஸ்அப் நிறுவனத்தை ஃபேஸ்புக்கிடம் விற்றார் ஜான் கோம். தனக்குத் திறமையில்லை என்று கூறி நிராகரித்த நிறுவனத்திற்கே போட்டியாக வளர்ந்த ஜான் கோம், இறுதியில் அந்த நிறுவனத்தையே தன்னுடைய தயாரிப்பிற்காகத் தன் வாசலில் காத்திருக்க வைத்தார். ஒருவேளை ஃபேஸ்புக் அன்று ஜான் கோமை வேலைக்குச் சேர்த்திருந்தால் ஒரு சில லட்சங்களை ஊதியமாகப் பெற்றுக்கொண்டு இன்றும் அங்கு ஓர் ஊழியராக பணியாற்றிக்கொண்டு இருந்திருப்பார். அந்த நிராகரிப்பையே மூலதனமாக்கிய ஜான் கோம் இன்று தொட்டுள்ள உயரம்? வாழ்க்கையில் நிராகரிப்பை எதிர்கொள்ளும்போது துவண்டுவிடக்கூடாது என்பதற்கு ஜான் கோமின் வாழ்க்கையே ஆகச்சிறந்த உதாரணம்.

 

வாழ்க்கையில் நீங்கள் விருப்பப்படும் விஷயம் குறித்து மிகவும் கவனமாக இருங்கள். ஏனென்றால் அதுதான் வரவிருக்கும் நாட்களில் உங்களை வழிநடத்தப்போகிறது.

 

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...

 

உலக சண்டியரான அமெரிக்காவின் முகத்தில் குத்துவிட்ட கலகக்காரன்! முகமது அலி | வென்றோர் சொல் #41

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.