Skip to main content

"சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு..." - கேப்டனின் பிரச்சார கலகலப்பை மிஸ் பண்றோம் - கடந்த கால தேர்தல் கதைகள் #2

Published on 24/03/2019 | Edited on 24/03/2019

ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு களம்... முன்னணி வீரர்கள் மாறுவர். பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மாறாமல் இருப்பவை அதிமுக-திமுக, இரு கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைவது. சென்ற தேர்தலில் கொஞ்சம் வித்தியாசமாக கூட்டணிகள் அமைந்தன. காங்கிரஸ் இல்லாத திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தேமுதிக - பாஜக - மதிமுக - பாமக கூட்டணி, காங்கிரஸ் தனியே என நான்கு முக்கிய அணிகள் போட்டியிட்டன. கம்யூனிஸ்டுகள், ஆம் ஆத்மி கட்சிகளும் போட்டியிட்டன. தேர்தல் முடிவுப்படி அதிமுக, பாமக, பாஜக மட்டுமே தொகுதிகளில் வென்றிருந்தாலும் வாக்கு சதவிகிதம் பல கட்சிகளுக்கும் பிரிந்திருந்தது. கடந்த தேர்தலுக்கும் இந்தத் தேர்தலுக்கும் கூட்டணிகள் அடிப்படியில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட புதிய கட்சிகள் களத்தில் உள்ளன. பிரச்சாரம் தொடங்கிவிட்டது. இந்தத் தேர்தல் கலவரத்தில் நாம் மிஸ் பண்ணும் ஒரு முக்கிய குரல், "மக்கழே..." என அழைக்கும் அந்தக் குரல். அதற்கென ஒரு கவர்ச்சி இருந்தது. உடல்நிலை காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சார களத்தில் இல்லை. இருக்கும் நாட்களில் அவர் மேடையேறுவாரா என்பது தெரியவில்லை. கடந்த முறை அவர் நடத்திய கலகல  பிரச்சாரம் குறித்து கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்.

 

vijayakanth on stage



"மக்கழே... உங்களுக்காகத்தான் நான் கட்சியை ஆரம்பிச்சேன் மக்கழே... ஆண்ட கட்சியும், ஆளுற கட்சியும் உங்க பிரச்சினைகளைத் தீர்த்திருந்தா நான் ஏன் கட்சியை நடத்தப்போறேன். யாரு நல்லது செய்றாங்களோ அவங்களை இந்த விஜயகாந்த் ஆதரிச்சிருப்பேனே மக்கழே''… -தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இப்படிச் சொல்லும்போது, அவரது பேச்சைக் கேட்க வந்திருக்கும் கட்சிக்காரர்களும், பார்க்க வந்திருக்கும் பொதுமக்களும் கை தட்டுகிறார்கள். உடனே விஜயகாந்த், "இப்படித்தான் கைதட்டுறீங்க மக்கழே... ஆனா ஓட்டுப் போட மாட்டேங்குறீங்க மக்கழே'' என்கிறார் விஜயகாந்த். கூட்டத்தில் இருப்பவர்களும் அவரது பிரச்சாரத்தை டி.வியில் பார்ப்பவர்களும் கலகலவென சிரிக்கிறார்கள்.

'என்னதான்யா சொல்ல வர்றாரு' என்ற ஆவல் விஜயகாந்த்தின் பேச்சைக் கேட்பவர்களுக்கு ஏற்படுத்தியது. 2014 ஆம் ஆண்டு கும்மிடிப்பூண்டியில் தனது பிரச்சாரத்தை விஜயகாந்த் தொடங்கிய நாளில் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. யாரை ஆதரித்துப் பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டது. எந்தக் கூட்டணி என்று சொல்லாமல், வேட்பாளர் யார் என்று சொல்லாமல் முரசு சின்னத்திற்கு ஓட்டு போடும்படி பிரச்சாரம் செய்தார் விஜயகாந்த். அவருடைய பேச்சில் ஜெ. ஆட்சியின் மீதான அட்டாக்கே அதிகமாக இருந்தது. "கரண்ட்டு பிரச்சினையை  அவங்க தீர்க்கலைன்னுதானே இவங்க தீர்க்குறதா சொல்லி ஓட்டு வாங்குனாங்க. தீர்த்துட்டாங்களா, இல்லையே.. இவங்க மக்கழுக்காக என்னதான் செய்திருக்காங்க சொல்லுங்க மக்கழே'' என்று போட்டுத் தாக்கினார்.

வேட்பாளரே தெரியாம யாருக்குன்னு ஓட்டுப் போடுறது? மக்கள்கிட்டே யாருக்குன்னு ஓட்டு கேட்கிறது? -என தே.மு.தி.கவினரே யோசித்தனர். கூட்டணி உறுதியாகும் முன்பே கூட விஜயகாந்த் சென்ற இடமெல்லாம் ம.தி.மு.க தொண்டர்கள் கொடியோடு வந்து பிரச்சாரத்தில் கலந்துகொண்டனர். அப்போது பா.ம.கவினரும் விஜயகாந்த்தின் கூட்டத்திற்கு வரவில்லை. விஜயகாந்த்தும் அவர்களுக்காக பிரச்சாரம் செய்யவில்லை. இதற்கிடையில், நாமக்கல்லுக்கு அறிவிக்கப்பட்ட தே.மு.தி.க வேட்பாளரான மகேஷ்வரன், விஜயகாந்த் அங்கு பிரச்சாரத்திற்கு சென்ற நாளில், "போட்டியிடப் போவதில்லை' என அறிவித்து ஒதுங்கிவிட, யார் பெயரையும் சொல்லாமல் ஓட்டுக் கேட்டார் விஜயகாந்த். அவருடைய பேச்சில் கூட்டணி பற்றிய சிக்னல் வெளிப்படத் தொடங்கியது. தொடர்ந்து பேசிய இடங்களில் மத்தியில் ஊழலற்ற ஆட்சியை நரேந்திர மோடி வழங்குவார் என்றும் தன் பேச்சை நம்பி மோடிக்கு வாக்களிக்கும்படியும் சொன்னார்.

 

vijayakanth reactions



கூட்டணி பேச்சுவார்த்தையில் சேலம் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்படவிருக்கிறது என்ற செய்தி அரசல்புரசலாக வெளிவர அதைக் கேட்டு சேலத்தில் பா.ம.க தொண்டர் ஒருவர் தீக்குளிப்பு முயற்சி போராட்டம் செய்தார். அதே நாளில் சேலம் கோட்டை மைதான பொதுக்கூட்ட மேடையில் மச்சான் எல்.கே.சுதீஷுடன் வந்து மைக் பிடித்தார் விஜயகாந்த். அப்போது வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. ஆனால் பேனர்களில் நமது வேட்பாளர் சுதீஷ் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. விஜயகாந்த்தின் பேச்சு வழக்கம் போலவே இருந்தது. அடிக்கடி வாட்சை பார்த்துவிட்டு திரும்பி அழகாபுரம் மோகன்ராஜை பார்த்து "டைம் இருக்கா? பேசலாமா?'’ என்ற விஜயகாந்த் "மக்கழே என் வாட்ச் ஓடலை, இப்போதான் பார்த்தேன். என்னடா 8.20-லேயே இருக்குன்னுதான் மோகன்ராஜ்கிட்ட கேட்டேன். ஏன்னா அப்புறம் தேர்தல் விதிமுறை மீறிட்டேன்னு வழக்கு போட்டுட்டா பாவம் மோகன்ராஜ்தான் மாட்டிகிட்டு முழிப்பார்'' என்றவர் அடுத்தடுத்து மீண்டும் டைம் பார்த்துகொண்டே இதே விஷயத்தை பேசினார். பின் "தி.மு.க., அ.தி.மு.க.வை வீழ்த்த மோடியை பிரதமர் ஆக்குங்கள்...'' என்றவர் "திரும்பவும் இந்தத் தொகுதிக்கு வருவேன் இது முக்கியமான தொகுதி'' என சூசகமாக சொல்லிவிட்டு 9.37க்கு மேடையை விட்டுக் கிளம்பினார்.

பின்னர் பா.ஜ.க.வுடனான கூட்டணி உறுதியாகி, ராஜ்நாத்சிங்கே தே.மு.தி.க.வுக்கு 14 சீட் என அறிவித்த நிகழ்வும், விஜயகாந்த்தை அன்புமணி சந்தித்து சால்வை போர்த்தியதும் பிரச்சாரத்தின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியது. "கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என அறிக்கை கொடுத்தார் விஜயகாந்த். "ஊழலை ஒழிக்க நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும்' என வலியுறுத்திப் பேச ஆரம்பித்தார்.

"நான் நடிச்ச 'கள்ளழகர்' பட ஷூட்டிங்கிற்காக குஜராத்துக்குப் போயிருந்தேன். அங்கே தேடிப் பார்த்தும் ஒரு ஒயின்ஷாப்கூட இல்லை.  ஒயின்ஷாப்பே இல்லாத அளவுக்கு மோடி அங்கு திறமையாக ஆட்சி நடத்துகிறார்'' என்று பாராட்டிப் பேசினார் விஜயகாந்த். குஜராத்தின் முதல்வராக மோடி பதவியேற்றது 2001-ஆம் ஆண்டில். விஜயகாந்த்தின் 'கள்ளழகர்' படம் ரிலீசானது 1999-ஆம் ஆண்டில். அதாவது, மோடி முதல்வராவதற்கு முன்பாகவே. மகாத்மா காந்தி பிறந்த மாநிலம் என்பதால் இந்தியாவிலேயே குஜராத்தில் மட்டும் மதுவிலக்கு ரொம்ப காலமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை. கேப்டன் பேச்சில் இதெல்லாம் சகஜம்தான். இன்று அவர் மட்டுமல்ல எல்லா கட்சிகளிலும் மாற்றிப் பேசுபவர்கள், குழப்புபவர்கள் தலைவர்களாக இருக்கிறார்கள்.

அப்போது விஜயகாந்த் மாற்றி மாற்றிப் பேசுவதும், யாராவது கூட்டத்திலிருந்து பலமாக வாழ்க கோஷம் போட்டால், "நீ வந்து பேசு, நான் கேட்கிறேன்' என்று கூட்டத்தினரைப் பார்த்துச் சொல்வதும், கேப்டன் பிரச்சாரத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்கிற அளவிற்கு ஆகிவிட்டது. தன் பிரச்சாரத்தில் பெரும்பாலான நேரத்தை ஜெ. அரசை விமர்சிப்பதற்கே எடுத்துக்கொண்டார் விஜயகாந்த். "எல்லாத்துக்கும் அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா திட்டம்னு பேர் வச்சீங்கள்ல. டாஸ்மாக்குக்கு மட்டும் ஏன் அந்தப் பெயரை வைக்கலை? அதற்கும் வைங்களேன்'' என்று விமர்சித்தார். "டாஸ்மாக்கில் வாங்கும் பிராந்திக்கு சைடிஷ்ஷா ஒரு ரூபாய் இட்லி?'' எனக் கேட்க, கூட்டம் ஆர்ப்பரித்தது.

கன்னியாகுமரி தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்தபோது, உடன் வருவதாக சொல்லியிருந்த அப்போதைய தமிழக பா.ஜ.க தலைவரும் தொகுதியின் வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன், திருப் பதிக்கு போய்விட்டதால் விஜயகாந்த் மட்டும்தான் ஓட்டுக் கேட்டார். பா.ஜ.க தொண்டர்கள் கொடியை உயர்த்தியபடி கோஷம் போட, "மைக்கைத் தரட்டுமா... ஒவ்வொருத்தரா வந்து பேசுறீங்களா, தூக்கிப்பிடிச்சிருக்கிற ஒங்க கொடிகளை கீழே வையுங்க'' என்றார். அவரே தொடர்ந்து, "ஹெலிகாப்டரில் பறக்கிற ஜெயலலிதாவுக்கு தரையில வாழுற மக்களோட பிரச்சினை எங்கே தெரியப்போகுது மக்கழே? சிறுபான்மை சமுதாயத்தோட எதிரியும் துரோகியும் ஜெயலலிதாதான். நான் சொல்றதைக் கேட்டு மோடியை பிரதமராக்க ஓட்டுப்போடுங்க. நான் அவர்கிட்டே சண்டை போட்டு உங்க கோரிக்கைகளை நிறைவேற்றித் தர்றேன்'' என்றார். பேச்சின் நிறைவாக, உங்கள் ஓட்டு யாருக்கு என்று விஜயகாந்த் கேட்க, முரசுக்கு என்றது கூட்டத்தின் ஒரு பகுதி. அந்தத் தொகுதியில் நிற்பது பா.ஜ.க. என்பதை உணர்த்தும் வகையில், "இது தாமரை தொகுதி. அதனால தாமரைக்கு ஓட்டுன்னு சொல்லுங்க. மொதல்ல நம்ம கூட்டணி சின்னத்தை நீங்க தெரிஞ்சிக்கணும். சொல்லுங்க பார்ப்போம். பா.ஜ.க.வுக்கு தாமரை, பா.ம.க.வுக்கு மாம்பழம், ம.தி.மு.க.வுக்கு பம்பரம்'' என வகுப்பெடுத்தவர், "கொங்கு கட்சியோட சின்னம்... ஆங்... எனக்கும் தெரியாது. அந்தக் கட்சித் தலைவர்கிட்ட கேட்டு சொல்றேன்'' என்றார்.

இப்படி கலகலப்பான ஒரு பிரச்சாரத்தை இந்தத் தேர்தலில் நாம் மிஸ் பண்ணுகிறோம் என்பது உண்மை. தேமுதிகவின் நிலைப்பாடுகள், முடிவெடுப்பதில் ஏற்படும் தாமதம், ஒரே நேரத்தில் இரண்டு பக்கமும் பேச்சுவார்த்தை நடத்தியது என பல விஷயங்கள் மக்களிடையே பல்வேறு கருத்துகளை ஏற்படுத்தியிருந்தாலும் தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் நலம் பெற வேண்டும் என்பது மட்டும் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. 

செய்தியாளர்கள்: ஜெ.டி.ஆர்., மணிகண்டன், அரவிந்த்

முந்தைய பகுதி:

அழகிரிக்குத் தூது விட்ட அதிமுக, ஆறுதல் சொன்ன ரஜினி... - கடந்த கால தேர்தல் கதைகள் #1

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.