Skip to main content

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி - 11

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Vietnam-travel-series-part-11

வியட்நாம் தேசத்தின் தன்ஹோ (ச்சியௌசோ) மாகாணத்தின் யென்பின் மாவட்டத்தில் கி.பி 226ஆம் ஆண்டு பிறந்தவர் லேடி ட்ரியூ. நாங் காங் மாவட்டத்தில் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த லேடி ட்ரியூ, தனது சகோதரருடன் வாழ்ந்து வந்தார். அவர் பிறந்த அதே ஆண்டில் வியட்நாமின் பெரும்பாலான பகுதிகள் சீனாவின் வூ வம்ச ஆளுகையின் கீழ் இருந்தது. வியட்நாமின் ஒவ்வொரு பகுதியையும் ஆக்கிரமித்து தமது ராஜ்ஜியத்தை வூ வம்சம் விரிவுப்படுத்திவந்தது. 

ச்சியெளசோவை ஆக்கிரமிக்க தமது படையினர் சுமார் 2,000 பேரை வூ அரசர் அனுப்பினார். அப்போது அந்த பகுதி ஹான் வம்சத்தைச் சேர்ந்த பேரரசின்கீழ் இருந்தது. ஷீ ஸீ ஆளுகையில், அங்கு வாழ்ந்த மக்களில் பலர் பெளத்த மதத்தவராக இருந்தனர். ஷீ ஸீயின் குடும்பத்தை அழித்து அப்பகுதியை தனது ராஜ்ஜியத்துடன் இணைக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படியே அந்த நகருக்குள் நுழைந்த வூ படையினர், ஷீ ஸீ வம்சத்தினரை சிறைப்பிடித்து முக்கியமானவர்களின் தலையைத் துண்டித்தனர். எதிர்த்த ஆயிரக்கணக்கான போர்வீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

நகரங்களின் ஆக்கிரமிப்பு முடிந்தவுடன் ச்சியெளஸீ மாகாணத்தை ச்சியெளசோ மற்றும் குவாங்செள என இரண்டாக பிரித்தது வூ வம்சம். அதன் நிர்வாகியான சன் குவான் தலைமையின் கீழ் நிர்வாகம் நடந்துவந்தது. லேடி ட்ரியூ, தனது இருபதாவது வயதில் தன்னைக் கொடுமைப்படுத்தி வந்த தனது அண்ணியை கொலை செய்து விட்டு மலையில் போய் வசிக்கத் தொடங்கினார். துணிச்சல் மிக்க அந்த பெண்ணின் பின்னால் சிலர் திரண்டனர். தவறுகளை தட்டிக்கேட்கும் தலைவியாக அப்பகுதியில் வளர்ந்தார். அவரின் போக்கைப் பார்த்து பயந்த அவரது சகோதரர், அவரை தடுக்க முயன்றபோது, நான் யாருக்கும் அடிபணிய மாட்டேன், யாருக்கும் அடிமையாகவும் இருக்கமாட்டேன் என்றார். அவரை ஒடுக்க வூ வம்சம் முடிவு செய்து அவரை பிடிக்க படைவீரர்களை அனுப்பியது. அவர்களை விரட்டியடித்தார் ட்ரியூ. இதனால் அவரின் வீரம் மக்களிடம் பரவியது. அப்பகுதி இளைஞர், இளைஞிகள் அவரது தலைமையில் அணி திரண்டனர். அவர்களின் எண்ணிக்கை ஆயிரங்களானது. 

கி.பி 248 ஆம் ஆண்டு  ச்சியெளஸீ மற்றும் ச்சியூஸென் பகுதி மக்கள் சீனாவின் வூ படையினருக்கு எதிராகத் கொதித்தெழுந்தனர். அப்போது ச்சியூஸென் பகுதி கிளர்ச்சிக்குழுவை வழிநடத்தியவர் லேடி ட்ரியூ. அவரது தலைமையில் சுமார் ஐம்பதாயிரம் குடும்பங்கள் ஒரே அணியாக திரண்டன. இந்த ஆள் பலம் பெரும் படைக்கு நிகரான தோற்றமாக இருந்ததால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடவடிக்கையை தொடங்கியது வூ பேரரசு. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வூ வம்ச படையினரை லேடி ட்ரியூவின் படையினர் தாக்கத் தொடங்கினார்கள். லேடி ட்ரியூ தனது தலைமையிலான கிளர்ச்சிக்குழுவை குஃபோங் மாவட்டத்திலிருந்து, வூ வம்ச படைகள் மீது தாக்குதல் நடத்தச்சொன்னார். முப்பதுக்கும் மேற்பட்ட முறை வூ வம்ச படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. சுமார் ஐந்து முதல் ஆறு மாதங்கள்வரை இந்த மோதல் விட்டு, விட்டுத் தொடர்ந்தது. ஆனால், ஒவ்வொரு முறை பின்வாங்கியபோதும், வூ வம்ச நிர்வாகம், படை வீரர்களை கூடுதலாக அனுப்பியது. கடைசியில் ராணுவத்தை அனுப்பி வைத்தது வூ வம்சம். இதனால் போதிய பரிவாரங்களில்லாமல் ட்ரியூ வீழ்ச்சியடைந்தார். 

இதைத்தொடர்ந்து போயியென் என்ற பகுதிக்கு தப்பிச் சென்ற அவர், அங்கு தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக வியட்நாமிய வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அவர் இறந்து போனாலும், தங்களின் காவல் தெய்வமாக ட்ரியூவை உள்ளூர் மக்கள் போற்றி வழிபட்டனர். வியட்நாமின் ஹனோயி, ஹோ ச்சி மின் உள்ளிட்ட நகரங்களில் ட்ரியூவின் வீரத்தை அங்கீகரிக்கும் வகையில் அவரது பெயர், சில வீதிகளுக்கு சூட்டப்பட்டுள்ளன. தனோவா மாகாணத்தில் அவருக்காக ஒரு கோயிலும் எழுப்பப்பட்டிருக்கிறது. அதேபோல் கிரியேட்டிவ் அசெம்பிளி என்ற வீடியோகேம் தயாரிப்பு நிறுவனம், த்ரீ கிங்டம் என்ற விளையாட்டில் லேடி ட்ரியூவின் பெயரில் கதாபாத்திரம் வைத்துள்ளது. மற்றொரு நிறுவனமான ஃபிராக்ஸிஸ் கேம்ஸ், வியட்நாமிய நாகரிகத்தின் தலைவி என்று ட்ரியூவை அழைத்து பெருமைப்படுத்தி உள்ளது. வியட்நாமில் சுதந்திரத்துக்கான கிளர்ச்சிக்குழுவை உருவாக்கிய முதல் பெண்ணாக லேடி ட்ரியூ அறியப்படுகிறார்.

வியட்நாம் பெண்களின் வீரத்துக்கு முன்னோடி இவர்கள் மட்டுமல்ல என்கிறது ஹோவா லோ சிறைச்சாலையின் வரலாற்று பக்கங்கள். இந்த சிறையில் ஆண் கைதிகள் மட்டும் அடைக்கப்படவில்லை, பெண் கைதிகளும் அடைக்கப்பட்டு கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக பல பெண் அரசியல் கைதிகள் தங்களது குழந்தைகளோடு அடைக்கப்பட்டிருந்தனர், கர்ப்பிணியாக இருந்தவர்கள் சிறைக்குள் வந்தபின் குழந்தை பெற்றனர். இந்த சிறையில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான அரசியல் பெண் கைதிகள் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்படும் பெண்களை நிர்வாணமாக இருக்கவைத்தனர் பிரெஞ்ச் அதிகாரிகள். அந்த அறைகளில் குளிக்க, கழிவறை செல்ல தடுப்புகளோ, தனி அறைகளோ கிடையாது. தினமும் ஒரு தேங்காய் கொட்டாங்குச்சியில் தான் குடிக்க தண்ணீர் தருவார்கள். அன்றைய நாள் முழுவதும் அந்த தண்ணீர் தான் குடிக்கவேண்டும். 1944 ஆம் ஆண்டில் பெண் கைதிகளை சித்தரவதை செய்து 14 பேரை கொன்றது பிரெஞ்ச் அரசாங்கம். 

1930 அக்டோபர் 20 ஆம் தேதி வியட்நாம் பெண்கள் சங்கம் தொடங்கப்பட்டது. பின்னர் விடுதலைப் பெண்கள் சங்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு பெண்கள் சங்கம், ஜனநாயகப் பெண்கள் சங்கம் என பெயர்களை மாற்றிக்கொண்டு களத்தில் இயங்கிவந்தன. 1931 முதல் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டு 1945 வரை வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்காக மக்களிடம் ஆதரவை திரட்டுவதில் தீவிர பங்காற்றி வந்தது. பிரெஞ்ச் ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தின. அதோடு இந்தோசீனா போரில் இச்சங்க பெண்கள் கலந்து கொண்டனர். துப்பாக்கி பிடித்து களத்தில் சண்டையிட்டனர். அதில் முக்கியமானவர் நுகுய்ன் தை டிங் என்கிற பெண்மணி. ஹே சி மின் தலைமையிலான தேசிய விடுதலை முன்னணி அமைப்பின் முக்கிய பெண் தலைவராக இருந்தார். இந்த பெண் ஆளுமைகள் மட்டுமல்லாமல் அவர்களின் போராட்டம், வீரம் குறித்து அறிந்துகொள்ள இந்த சிறைச்சாலையில் மட்டுமல்ல இதன் அருகிலேயே வியட்நாம் பெண்கள் அருங்காட்சியகத்தில் அதன் குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

பயணம் தொடரும்...

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி - 10

Next Story

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி - 13

Published on 05/03/2024 | Edited on 06/03/2024
vietnam travel series part 13

கடிகாரத்தில் நேரம் 5 மணியை காட்டியது. 5 மணிக்கெல்லாம் இருட்டிவிட்டதே என நினைத்தால் காலநிலை அப்படி. 4 மணிக்கெல்லாம் சூரியன் மறைந்து இருள் கவ்வத் தொடங்கிவிடுகிறது. வியட்நாமில் 5 மணி என்றால் இந்தியாவில் மாலை 3.30 மணி.

நம்மை முதல் நாள் ஹோட்டலில் இறக்கிவிட்டபின் இரவு உணவுக்காக தலைநகர் ஹனாய் வீதிகளில் வலம் வந்தோம். அங்கு நாம் கண்டது, நகரத்தின் பல பகுதிகளில் பல்வேறு விதமான கடைகள், ஷாப்பிங் மால்கள் எல்லாம் 7 மணிக்கெல்லாம் மூடப்பட்டு இருந்தது. சுற்றுலாப்பயணிகள் அதிகம் புழங்கும் பகுதிகளில் மட்டும் கடைகள், தங்கும் விடுதிகள், சாலையோர உணவகங்கள் இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணி வரை இயங்குகின்றன. இதிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய உணவு கடைகள் மட்டுமே இரவு 11 மணி வரை இயங்குகின்றன.  

இந்தியாவில் விதவிதமாக சாப்பிட்டு நாக்கு நளபாகத்துக்கு அடிமையானவர்கள் வியட்நாம் உணவை சாப்பிட்டால் முகம் சுருங்கிவிடும். வியட்நாமின் பிரதான உணவு ’போ’ என சொல்லப்படும் சூப். சுடச்சுட தருகிறார்கள். அதில் சைவம் என்றால் நூடூல்ஸ், நறுக்கப்பட்ட வெங்காயதண்டு, வேகவெக்கப்பட்ட முட்டைக்கோஸ் இலை, ஏதாவது ஒரு கீரையை போட்டு தருகிறார்கள். அசைவம் என்றால் நூடூல்ஸ்சுடன், எலும்பு இல்லாத வேகவைக்கப்பட்ட சிக்கன் துண்டுகளை பஞ்சுபோல் பிச்சிப்போட்டு தருகிறார்கள். பீப், பன்றிக்கறி வேண்டும் என்றாலும் கலந்து தருகிறார்கள். அவர்களின் உணவு எதிலும் உப்பு கிடையாது, காரம்  கிடையாது, பெப்பர் கூட கிடையாது. சில ஹோட்டல்களில் மட்டும் பெப்பர், உப்பு தந்தார்கள். வியட்நாமிய மக்கள் பெரும்பாலும் உணவில் உப்பு, காரம் சேர்த்துக்கொள்வதில்லை. உணவில் மஞ்சள் தூள் மட்டும் போட்டு வேகவைத்த உணவை தருகிறார்கள். உணவில் காரம் வேண்டும் என்றால் பொடிசாக நறுக்கிய பச்சை மிளகாய் 4 அல்லது 5 துண்டு தருகிறார்கள் அல்லது மிளகாய்சாஸ்  தருகிறார்கள்.

காலை, மதியம், இரவு மூன்று வேளையும் கட்டாயம் வியட்நாமியர்கள் போ உணவை சாப்பிடுகிறார்கள். அதற்கு தொட்டுக்கொள்ள பொரித்த நத்தை, வேகவைக்கப்பட்ட மஸ்ரூம், மீன் துண்டுகளை வாங்கிக்கொள்ளலாம். அவர்கள் தரும் உணவை அந்த இரண்டு குச்சிகளில் எடுத்து சாப்பிடுவதுதான் எங்களுக்கு சிரமமானதாக இருந்தது. அவர்களும், மேற்கத்திய சுற்றுலாப்பயணிகள் அசால்டாக அதனை பயன்படுத்துகிறார்கள். கைக்கும் வாய்க்கும் ஒரு தொடர்பு  இருக்கணும்ங்க, உணவை கைகளால் பிசைந்து அதை எடுத்து நாம் வாயில் வைத்து  சாப்பிடும்போதுதான் உணவு மேல் மரியாதை வரும், அது உடம்பில் ஒட்டும் என வாட்ஸ்அப் வாத்தியார்களின் மெசேஜ் எப்போதே படித்தது நினைவுக்கு வந்ததால் அவுங்க சொல்றது நியாயம்தானே என சமாதானம் செய்துக்கொண்டு நம்மவூர் ஸ்டைல்க்கே மாறிவிட்டேன்.  

அசைவத்தில் சிக்கன், கடல் உணவுகள், பீப், பன்றிக்கறி பிரதானமாக உள்ளது. மட்டன் எனச்சொல்கிறார்கள் அது ஆட்டுக்கறி இல்லை. பன்றிக்கறி. சாப்பிட்டு பழக்கம் இல்லாததால் தினமும் சிக்கன், கடல் உணவையே சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். அதிலும் எண்ணெய்யில் பொறித்த குட்டி ஆக்டோபஸ் அவ்வளவு அற்புதமாக இருந்தது.

ஹோட்டல்களில் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் என்கிற பெயரில் மரவள்ளி கிழங்கில் செய்யப்பட்ட வடை, வேகவைத்து வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், வெங்காய போண்டா அற்புதமாக செய்து தந்தனர். உப்பு இல்லாத பண்டம் குப்பைக்கு என்பது நம்மவூர் பழமொழி. அங்கே உப்புயில்லாத பண்டம் வயிற்றுக்கு என்கிறார்கள். உப்புதான் இல்லை. ஆனால் அவ்வளவு அற்புதமாக இருந்தது.

வியட்நாம் உணவு பழிவாங்கிவிடுமோ என நினைத்திருந்தோம். முதல் இரண்டு நாள் வியட்நாம் உணவுகளை ஏற்றுக்கொள்ள நாக்கு அடம்பிடித்தது. அதன்பின் அதன் சுவைக்கு பழக்கமாகி அங்கிருந்த 14 நாட்களும் உடம்பை எதுவும் செய்யவில்லை.

வெள்ளை சோறு வியட்நாமில் எல்லா ஹோட்டல்களிலும் தருகிறார்கள். நம்மவூரில் சாப்பாடு என்றால் அதனோடு சாம்பார், காரக்குழம்பு, மோர்க்குழம்பு, ரசம், மோர், பொறியல், கூட்டு என வகைவகையாக தருவார்கள். அங்கே அதெல்லாம் கிடையாது, அரைவேக்காட்டில் வேகவைக்கப்பட்ட கத்தரிக்காய், வெங்காயம், புதினா வைத்து அதன்மேல் எண்ணெய்யில் பொறிக்கப்ட்ட சிறியதாக கட் செய்யப்பட்ட வெங்காய தாள்களை தூவி சாஸ் ஊத்தி தனியாக ஒரு பிளேட்டில் தந்தார்கள். சாதத்தோடு இதனைத்தான் கலந்து சாப்பிடவேண்டும். தொட்டுக்க மரவள்ளிக்கிழங்கு வடை தருகிறார்கள்.

வெள்ளை சாதமே சர்க்கரை பொங்கல் போல் லேசாக தித்திப்பாக இருந்தது.  காலை, இரவு நேரத்தில் ப்ரைட்ரைஸ் கண்டிப்பாக இருக்கிறது. சிக்கன் ரைஸ், பீப் ரைஸ், வெஜிடபிள் ப்ரைட்ரைஸ் தருகிறார்கள். முட்டை அங்கே வெஜ் கேட்டகரியில் வைத்துள்ளார்கள். ஒரு ஆம்லேட் என்றால் இரண்டு முட்டை ஊத்தி செய்கிறார்கள்.

உலகளவில் சாலையோர உணவகங்களில் புகழ்பெற்றது வியட்நாம். வியட்நாம் நாட்டில் தலைநகரம் ஹனாய், ஹோசிமின், அலாங் பே போன்ற எந்த நகரமாக இருந்தாலும், சிற்றூராக இருந்தாலும் நடந்துபோகும்போது தடுக்கி விழுந்தால் சாலையோர உணவகங்கள் மேல்தான் விழவேண்டும். அந்தளவுக்கு சாலையோரங்களில் உணவகங்கள் உள்ளன. 80 சதவித சாலையோர உணவகங்கள் அசைவம். 20 சதவிதம் அளவுக்கே சைவ உணவகங்கள். 

வியட்நாம் மக்கள் பெரும்பாலும் இந்த சாலையோர உணவகங்களிலேயே உணவு சாப்பிடுகின்றனர். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஆர்வமாக இங்கே சாப்பிடுகின்றனர். அந்தளவுக்கு  சாலையோர உணவகங்கள் தூய்மையாக இருந்தன. சாலையோர ஹோட்டல்களில் குறைந்த விலை, தரமான உணவாக இருக்கிறது. பெரிய ஹோட்டல்களில்  அதிகவிலை, அதே தரத்திலான உணவு கிடைக்கிறது.

ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய உணவகங்கள் இருந்தாலும் உணவு பொருட்களின் விலை நம்மவூரைவிட அதிகமாகவே இருக்கிறது. சாலையோர உணவு விடுதியாக இருந்தாலும், ஓரளவு பெரிய உணவு விடுதியாக இருந்தாலும் விலை கிட்டதட்ட  ஒரே விலையாகத்தான் இருந்தது. கொஞ்சம் தான் வித்தியாசப்படுகிறது.

நம்மவூர் சாப்பாட்டத்தை தான் சாப்பிடனும் என விரும்பி இந்திய ரெஸ்டாரெண்ட்டுக்குள் சென்றால் அங்கே கிடைப்பது நார்த் இந்தியா உணவுகள் தான். தென்னிந்திய உணவுகள் 99 சதவிதம் நாட்டின் எந்த பகுதியிலும் கிடைப்பதில்லை. 

இங்குள்ள ஹோட்டல்களில் உள்ள ஒரே ஒற்றுமை குடிக்க தண்ணீர் வைப்பதில்லை. 300 மில்லி லிட்டர் குடிதண்ணீர் பாட்டிலின் விலை நம்மவூர் மதிப்புக்கு 80 ரூபாய் வருகிறது. கம்பெனிக்கு தகுந்தார்போல் விலையும் மாறுகிறது. சாப்பிடும்போது விக்கல் எடுத்தால் என்ன செய்வது? அதற்கு இதை குடிங்க என நம் கையில் திணிப்பதை பார்த்து அதிர்ச்சியாக இருந்தது.

பயணங்கள் தொடரும்…………..  

Next Story

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி – 12

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
vietnam-travel-series-part-12

1930 அக்டோபர் 20 ஆம் தேதி வியட்நாம் பெண்கள் சங்கம் தொடங்கப்பட்டது. பின்னர் விடுதலைப் பெண்கள் சங்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு பெண்கள் சங்கம், ஜனநாயகப் பெண்கள் சங்கம் என பெயர்களை மாற்றிக்கொண்டு களத்தில் இயங்கி வந்தன. 1931 முதல் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட 1945 வரை வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்காக மக்களிடம் ஆதரவை திரட்டுவதில் தீவிர பங்காற்றி வந்தது. பிரெஞ்ச் ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தின. அதோடு இந்தோசீனா போரில் இச்சங்க பெண்கள் கலந்துகொண்டனர். துப்பாக்கிப் பிடித்து களத்தில் சண்டையிட்டனர். அதில் முக்கியமானவர் நுகுய்ன் தை டிங் என்கிற பெண்மணி. ஹேசிமின் தலைமையிலான தேசிய விடுதலை முன்னணி அமைப்பின் முக்கிய பெண் தலைவராக இருந்தார். இந்த பெண் ஆளுமைகள் மட்டுமல்லாமல் அவர்களின் போராட்டம், வீரம் குறித்து அறிந்துகொள்ள இந்த சிறைச்சாலையில் மட்டுமல்ல இதன் அருகிலேயே வியட்நாம் பெண்கள் அருங்காட்சியகத்தில் அதன் குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

1985 ஆம் ஆண்டு வியட்நாம் பெண்கள் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் தலைவரான நுகுய்ன் தை டிங் என்பவரால் அது தொடங்கப்பட்டது. இவர் இரண்டாம் இந்தோசீனா போரின்போது தேசிய விடுதலை முன்னணியில் முக்கிய பெண் தலைவராக இருந்தார். அவரின் வேண்டுகோளின்படியே பெண்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. ஹனாய் நகரத்தில் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டு 1987 ஜனவரி 10ஆம் தேதி வியட்நாம் சோசலிஸ்ட் குடியரசின் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. 1995 அக்டோபர் 20 ஆம் தேதி நான்கு மாடி கட்டிடமாக திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்திற்குள் குடும்பத்தில் பெண்கள், வரலாற்றில் பெண்கள், பெண்கள் ஃபேஷன் என மூன்று தலைப்பில் பிரித்து வைக்கப்பட்டு, நாட்டில் உள்ள 54 இனங்களின் பெண்களின் கலாச்சாரம், உணவு, உடை, கலாச்சாரம், விடுதலை போராட்டம், இந்தோசீனா போர், இரண்டாம் இந்தோசீனா போரில் பெண்களின் பங்கை பறைச்சாற்றும் ஆவணங்களாக 40 ஆயிரம் பொருட்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

வியட்நாமில் உள்ள 64 மாகாணங்கள் மற்றும் நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாலினம் மற்றும் பெண்களின் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் குறைவாக உள்ளது. கிராமப்புற பெண்களிடம் விழிப்புணர்வே இல்லை. தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் பொதுவாக அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. பெண்களுக்கு ஓய்வு மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு குறைந்த நேரமே உள்ளது. அவர்களின் பெரும்பாலான நேரங்கள் வீட்டு வேலைகள் செய்யவும், வயல்களில் வேலை செய்யவும், கால்நடைகளை வளர்த்து பொருளீட்டவே நேரம் சரியாக இருக்கின்றன என்றுள்ளார்கள். இதனால் எல்லா மட்டத்திலும் பெண்களின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவத்தை நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிகளவு தடை செய்துள்ளன.

தற்போது நாடு முழுவதும் 10,472 உள்ளூர் பெண்கள் சங்கங்களைச் சேர்ந்த 13 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் வியட்நாம் பெண்கள் சங்கத்தில் உள்ளனர் என்கின்றனர். அருங்காட்சியக நிர்வாகிகள் நாடு முழுவதும் பெண்களிடம் நடத்திய ஆய்வில் நாடு விடுதலை பெற்றது, ஆனால் இன்னமும் ஆணாதிக்க சமுதாயத்திடம் இருந்து பெண்கள் விடுதலை பெறவில்லை என்கிறது.  

சுதந்திரத்துக்காக, உரிமைக்காக ஒருக்காலத்தில் பெரும் பேரரசுகளை எதிர்த்து, துப்பாக்கி குண்டுகளுக்கே பயப்படாத வியட்நாம் பெண்கள் இப்போது மக்களுக்காக குரல் கொடுத்துவிட்டு சிறையில் கொடுமைகளை அனுபவித்து வரும் சக பெண்களுக்கு குரல் கொடுக்ககூட தைரியமுற்று இருப்பதை காண முடிந்தது. 

பயணம் தொடரும்...

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி - 11