Skip to main content

'மாயி' படத்துல அந்த ஸீனு சரி சலம்பலா இருக்கும்... வாமா மின்னல் கதை சொல்லும் வடிவேலு! - இம்மை அரசன் டாக்ஸ் #4

Published on 15/10/2019 | Edited on 23/10/2019

'வடிவேலு' தமிழ் சினிமா தந்த சிரிப்பு மருத்துவர். ஆம், சிரித்தால் நோய் தீர்ந்து போகுமென்றால் அந்த சிரிப்புக்கு காரணமானவர்களை எப்படி அழைப்பது? இந்த பெயரை விட்டுவிட்டு. கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமைவை தன்னுடைய தனித்துவமான உடல்மொழியால் வசீகரித்து வருகிறவர். அவருடைய இந்த சிரிப்பு பயணத்தில் அவர் கடந்து வந்த பாதைகளை நம்முடைய இதழில் தொடராக எழுதி வந்தார். அதில் ஒரு பகுதி வருமாறு,

"மாயி' படத்துல அந்த ஸீனு சரி சலம்பலா இருக்கும். டைரக்டர் பாண்டியன் இந்த ஸீன சொன்னதுமே... ஊர்ல நான் பார்த்த அலம்பலயெல்லாம் நெனச்சுப் பாத்துக்கிட்டேன். நிமிஷத்துல கடய தொவம்சம் பண்ணுன நாய்களோட ரகளயும் கண்ணுக்குள்ள வந்து போச்சு. அதுல இருந்து சில பீஸுகள கோர்த்து மெருகேத்திட்டு... ‘"இப்புடி பண்ணலாமா?'னு டைரக்டர்கிட்ட கேட்டு ஓகே வாங்கிட்டு வந்து நின்னேன்.

என்னயப் பொருத்தவர தினசரி ஷூட்டிங் ஸ்பாட்ல நான் கும்புடுறது கேமரா லென்ஸத்தான். அது ஒரு லென்ஸுதானனு நெனைக்கலாம். ஆனா... அந்த ஒத்த லென்ஸுதான் கோடி கண்கள். அதுதான என்னய படம் புடிச்சு தெரயில காட்டுது. மக்கள் பாக்குறாங்க. கும்புட்டுட்டு ஆரம்பிச்சா எதுக்க கேமரா இருக்கது மறந்து போயிறுவேன். சால்னா கடக்குள்ள தள்ளாடிக்கிட்டே உள்ள வருவேன். கெழவி ஏவாரம் பாத்துக் கிட்டு இருக்கும். அதுக்கு தொனையா பேத்திக இருக்கும். 

ghj

‘இன்னொருத்தன் நக்கிக்கிட்டிருக்க ஊறுகாய நானும் தொட்டு நக்குவேன்."வக்கில்லாத பயக வந்துட்டாய்ங்க'னு ஒருத்தன் திட்டுவான். குடுச்சவனுக்கு சல்லுன்னு கோவம் வருமே! ‘"ஏலே... வாடா... வாடா... வாடா... ஓம்பணத்துக்கும் ஏம் பணத்துக்கும் ஜோடிபோட்டுக்குவமா ஜோடி'னு ரகள கள கட்டும். கடயில இருக்க சுண்டலு, அவிச்ச முட்டயெல்லாம் பறக்கும். ஊர்ல மொறப்புள்ளைககிட்ட வம்பு பண்ற மேட்டரெல்லாம் அதுல வச்சாச்சு."ஏத்தா மாமனுக்கு எப்ப கறிக்கஞ்சி ஊத்தப் போற?'னு அந்தப் புள்ளய கையப்புடுச்சு இழுத்து கேப்பேன். ‘"எங்கக்கா வருது. அது ஊத்தும் கஞ்சி'னு அந்தப் புள்ள சொல்லும். "நொக்கா வேற இருக்காளா நொக்கா'னு சொல்லிக்கிட்டே பாத்தா கோவை சரளா வருவாங்க.


இப்படித்தேங்... ஃபுல் மப்ல நடக்கக்கூட முடியாம கட ஓரத்துலயே படுத்துருவாய்ங்க. சில பேரு. காலைல நாய்வந்து மூஞ்சிய நாலு நக்கு நக்குனப்புறம்தான் முழுச்சுப்பாத்துட்டு வீடு போய் சேருவாய்ங்க. இல்லேன்னா பொண்டாட்டி வந்து நாலு சாத்து சாத்தும்.  டேக் ஓக்கேவாகி வந்தா... என்னியவே சுத்திச் சுத்தி வாராரு ஒரு பப்புளிக்கு. 
நானும் எம்புட்டு நேரத்துக்குத்தான் பொறுக்குறது?

"என்னா விசயம்?'

"எது என்னா விசயம்?'

"எதுக்குய்யா சுத்தி வார?'

"ஒரு டவுட்டு கிளியர் பண்ணணும்...'

"என்னா டவுட்டு?'

"அப்புடியே குடுச்சுப்புட்டு நான் பண்ற மாதிரியே பண்றியே. அதான்... நீயும் குடிச்சிட்டு நடிக்கிறியோ?'னு டவுட்டு.'

"அதெல்லாம் இல்லய்யா'னு போலீஸ்காரவுக கிட்ட வாய ஊதிக் காமிக்கிறது
மாதிரி ஊத வேண்டியதாப் போச்சு.

 

vgh



தெருவுக்கு நாலு வடிவேலாவது நாட்ல இருக்காங்க. வெட்டி அலம்பல் பண்ணிக்கிட்டு, நக்கலும், நையாண்டியுமா திரிவாக. அதனாலதான் அவங்க சினிமாவுல என்னய பாக்கும் போது தங்களவே பாக்குற மாதிரி பாத்து ரசிக்குறாங்க. தலைவர் எம்.ஜி.ஆர். தன்னோட படங்கள்ல நெறைய்ய தத்துவ பாட்டு பாடுவாரு.மக்கள்ட்ட இருக்க மோசமான குணாதிசயங்கள பாட்டுல எடுத்துச் சொல்லியே மக்கள்ட்ட பேரு வாங்குவாரு.தலைவர் எம்.ஜி.ஆர். வழிதான் நம்ம வழியும். மக்கள்ட்ட இருந்தே விஷயங்கள எடுத்து அத மக்கள்ட்டயே குடுக்கிறேன்.

"வடிவேலு... நீ ஒருத்தந்தான் மதுர மக்களோட வெள்ளந்தியான பேச்சயும், அவங்களோட பாடிலாங்வேஜயும் தத்துரூபமா திரயில கொண்டுக்கிட்டு வர்றே'னு இளையராஜா அண்ணன் சொல்லுவாரு. மதுரயில இருக்கும்போது சுத்தியிருக்க கிராமங்களுக்கும் போயி ரவுண்டடுச்சிட்டு வருவம். அப்ப பாக்குற சங்கதிகள அப்புடியே மெருகேத்தி மெருகேத்தி சொல்லுவேன். பிரெண்டுகள்லாம் சிரிப்பாய்ங்க. வீட்டுக்குப்போயி ஆக்ஷனோட எங்கம்மா கிட்டயும் சொல்லுவேன். சிரி சிரின்னு  சிரிக்கும் எங்கம்மா. ஒரு கிராமத்துல பொருள காணாம்ண்டு மரத்தடி பஞ்சாயத்து தாக்கீது ஆகுது. பஞ்சாயத்து பெருசு கேக்குது.... "ஒனக்கு ஆருமேலயாவது சந்தேகமா இருக்காப்பா?' பிராது குடுத்தவரு அப்புடியே ஒரு ஆள பாக்குறாரு.

அந்த ஆளு மீசய தடவிக்கிட்டு வெறப்பா... ‘"சொல்றா... சரியான ஆம்பளதான... சொல்லு. தயிரியமிருக்குல்ல... சொல்லு. அட... தயிரியமிருந்தா சொல்றா'னு டபுள் மீனிங்லயே பேசுறாரு. அதாவது "தயிரியமா சொல்லு'ங்கிற மாதிரியும் இருக்கும். "தயிரியமிருந்தா என்னய காட்டிக்குடு பாப்பம்'ங்கிற மாதிரியும் இருக்கும். இப்புடியே போய்கிட்டிருந்துச்சு பஞ்சாயத்து. களவாண்டவன் போட்ட போடுல... ‘"பொருளு போனா போகுது. என்னய ஆளவிடுங்க சாமி'ன்னுட்டு கௌம்பீட்டாரு.
 

jk



இதேபோல, எங்க தெருவுல நடக்குற ஒரு ஸீனயும் காமெடி பீஸாக்குனேன். அது என்னாங்குறீகளா? ஒருத்தனப் போட்டு நாலஞ்சு பேரு அடி பிரிச்சு மேஞ்சுக்கிட்டிருப்பாய்ங்க. தெருச்சனம், போறசனம், வாறசனம்னு வேடிக்க பாக்க கூட்டம் கூடிப் போகும். அடிதடி முடிஞ்சதும் அடிபட்டவன் என்னா பண்ணுவான்னா... கைல இருக்கும் துண்ட சுத்திக்கிட்டே... ‘"ப்போலாம் போலாம் என்னா வேடிக்க... ஏத்தா வெரசா போயி வீட்ல ஒல வையி. இங்ஙன நின்னு பெராக்கு பாத்துக்கிட்டுருக்க. ஏய்ய்.. போ... போ... கூட்டம் போடாத. டேய் மாப்ள... அதான் அடுச்சுட்டேல... இன்னமும் என்னா நிக்கிற... கௌம்புய்யா'னு கூட்டத்த வெலக்கிவிடுவான். அடிபட்டவனே கூட்டத்த வெலக்கி விடுறதப் பாத்துப்புட்டு வேடிக்க பாத்தவுக கொழம்பிப் போயிருவாக.

"கண்ணாத்தாள்' படத்துல டைரக்டர் பாரதிகண்ணன் ‘ஆடு திருடு போன ஒரு பஞ்சாயத்து ஸீன சொன்னாரு. திருடுனவனே திருட்டு குடுத்தவன மெரட்றதயும், கூடுன கூட்டத்த அவனே கலைக்கிறதியும் சொன்னேன். "நல்லாருக்கு. இதயும் சேத்துப் பண்ணுங்க'ன்னு சொன்னாரு. அதுதான் அந்த சூனாபானா காமெடி. பஞ்சாயத்து கூடி கலஞ்சதும் "ஏ..சூனாபானா அப்புடியே மெயிண்ட்டன் பண்ணு'னு சொல்லீருப்பேன். "நீங்க கொடுத்து வச்சவரு. காமெடியா சிரிக்க சிரிக்க இருக்கீங்க. ஒங்களுக்கெல்லாம் கஷ்டமே வராதுல்ல'னு சில பேர் கேப்பாங்க. திர வேற... தர வேற. எனக்கும் தனிப்பட்ட கஷ்டநஷ்டம், கவலை, கண்ணீரும் இருக்கு.

சினிமாவுல எப்படியாவது பெரிய ஆளாகிரணும். இனிமே நமக்கு அதுதேன் தொழில்னு வந்துட்டேன். படங்கள்ல நடிச்சுக்கிட்டிருந்தாலும் பெருசா வருமானம் கெடயாது. ஆனாலும் நம்பிக்க. ஆனா... "எப்பா நீ நெனைக்கிற மாதிரி சினிமாவ மட்டுமே நம்பி பொழைக்கிறது லேசுப்பட்ட காரியங் கெடயாது'னு சினிமா நண்பர்கள் சொல்றாங்க. ‘"என்னாடா வடிவேலு இப்புடி கௌப்புறாங்க பீதிய'னு எனக்குள்ள கொழப்பம். இருந்தாலும் "விடுறா வடிவேலு போராடி பாத்துருவம்'னு வீராப்பு. "டப்பிங் பேசி சம்பாதிக்கலாம், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டா போயிரலாம்'னு தேத்திக்கிட்டேன்.

"மொதல்ல ஒரு பழய கார வாங்கிப் புடணும். அப்புறமா ஒரு வீட்ட வாடகைக்கி புடுச்சுறணும். அதுக்குப் பின்னாடி குடும்பத்த கூட்டியாந்துரணும்'னு போராடினேன். அதுபோலவே அமைஞ்சது. இப்படி பத்தியும் பத்தாமயும் போயிக்கிட்டிருந்த நேரத்துலதான்... கமல் சார் குடுத்த ஷாக்குல கண்ணு கலங்கிப் போச்சுல்ல.

அடுத்த பகுதி - 5

 

 

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

''டக்குனு நீங்களும் உள்ளே வந்து ஒரு கட்சிய ஆரம்பிங்க'' - நடிகர் வடிவேலு பேட்டி 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
vadivelu

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் மோட்ச தீபம் ஏற்ற வந்த நடிகர் வடிவேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''அம்மா இறந்து ஒரு வருடம் ஆகிறது. அம்மாவின் திதிக்கு இங்கு மோட்ச விளக்கு போடுவதற்காக நான் வந்திருக்கிறேன். என்னுடைய தெய்வம் அவர்கள். அவர் இறந்த துக்கம் என்னை விட்டு இன்னும் போகவில்லை. அம்மா இறந்த ஆறு மாசத்தில் தம்பி இறந்துட்டாரு. அந்த இரண்டு துக்கமும் இன்னும் குடும்பத்தை போட்டு வாட்டுது. இன்னும் அதில் இருந்து நாங்கள் மீளவில்லை. இப்பதான் அம்மாவிற்கு முடிந்திருக்கிறது. இன்னும் ஆறு மாதம் கழித்து தம்பிக்காக இங்க வந்து மோட்ச தீபம் ஏத்தணும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''எல்லாருமே வரலாமே (செய்தியாளர்களை நோக்கி) நீங்களும் கூட வரலாம். வீடியோ கேமரா எடுத்துக் கொண்டிருக்காமல் நீங்களும் வரலாம். வேலை இருக்கிறதா? வர வேண்டியதுதானே. இப்படியே கேமராவை பிடித்துக் கொண்டு எத்தனை நாள் வேலை பார்ப்பீர்கள். டக்குனு நீங்கள் உள்ளே வந்து ஒரு கட்சிய ஆரம்பிங்க. வாங்க எல்லாரும் அரசியல் கட்சி ஆரம்பிங்க. மக்களுக்கு நல்லது செய்வதற்கு யாராக இருந்தாலும் வரலாம். யாரும் வரக்கூடாது என்று சொல்லக்கூடாது. எல்லாரும் வந்தார்கள். டி.ராஜேந்தர் வந்தாரு, ராமராஜன் வந்தாரு, பாக்யராஜ் வந்தாரு எல்லாரும் நல்லது செய்யத்தான் வந்தாங்க. அது மாதிரி நல்லது செய்ய வருகிறார்கள். வருபவர்களை வரவேற்கிறோம். வரட்டும் வந்து மக்களுக்கு நல்லது செய்வது தப்பில்லையே வரட்டும்'' என்றார்.