Skip to main content

மருமகளை அடைய மாமனார் போட்ட திட்டம்; இறுதியில் நடந்த விபரீதம் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 22

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

thilagavathi-ips-rtd-thadayam-22

 

மருமகளின் மீது மாமனார் கொண்ட இச்சையால் பெண் கொல்லப்பட்ட வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விவரிக்கிறார்.

 

லீலாவிடம் அவளுடைய மாமனார் பலமுறை அத்துமீறலில் ஈடுபட முயன்றார். ஒருமுறை அவ்வாறு அத்துமீறலில் ஈடுபட்டபோது விபத்து ஏற்பட்டு அவள் இறந்ததாக ஒரு பார்வையும், இச்சைக்கு இணங்க மறுத்ததால் விஷம் கொடுத்து அவளை மாமனார் கொன்றதாக இன்னொரு பார்வையும் இருக்கிறது. அத்துமீறலில் அவர் ஈடுபட்டபோது, லீலா மயங்கி விழுந்தாகவும், அவளைப் பயன்படுத்திக்கொண்ட மாமனார், அதன் பிறகு அவளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாகவும், நடப்பவற்றை சகித்துக்கொள்ள முடியாமல் லீலா தானாகவே விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாகவும் பல்வேறு கோணங்கள் இதில் சொல்லப்பட்டன. 

 

இது சப்-கலெக்டரின் விசாரணைக்குள் வந்தது. ஊரில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த வழக்கு சம்பந்தப்பட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடந்தது. மாமனார் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அவருக்கு உயர்நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அங்கும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தண்டனை கிடைப்பதற்கே பல ஆண்டுகள் ஆனது. சிறையில் அடைக்கப்பட்ட அவர், நன்னடத்தையின் காரணமாக 7 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார். 

 

லீலா தன்னுடைய முன்னாள் காதலனின் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டதாகவும் ஒரு கதை பரவியது. ஆனால் நீதி விசாரணையில் மாமனார் தான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. சயனைடு கலந்த நீரை பசு மாடுகளும் குடித்து இறந்ததால் தான் அனைவருக்கும் சந்தேகம் வந்து இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. உண்மை என்பது ஏதாவது ஒரு வழியில் வெளிவந்தே தீரும். ஒரு பெண் அகால மரணமடைந்துவிட்டால் அதில் ஒரு சிலராவது தங்களுடைய கற்பனைகளைப் புகுத்தி அது ஒரு மர்ம மரணம் என்பது போல் தவறாகப் பேசுகின்றனர். இறந்த பிறகும் அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கின்றனர். இது போன்று பேசுவதே மிகவும் தவறானது.