Skip to main content

குடும்பத்தையே கொலை செய்த இளம்பெண்; கூடத்தாய் வழக்கு - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 04

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

Thilagavathi IPS (Rtd) Thadayam : 04

 

கேரளாவையே உலுக்கிய கூடத்தாய் கொலை வழக்கு பற்றிய திடுக்கிடும் தகவல்களை தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

 

ஜாலி கொடுத்த பிரட்டை உண்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. பிரட் தொண்டையில் சிக்கியதால் தான் குழந்தை உயிரிழந்ததாக அனைவரும் நம்பினர். சாஜு என்பவரோடு ஜாலிக்குப் பழக்கம் இருந்தது. அவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினாள். அந்த இரண்டு வயது குழந்தை பிற்காலத்தில் தனக்குப் பிரச்சனையாக வந்துவிடக்கூடாது என்று அதையும் கொன்று விடுகிறாள் ஜாலி. சாஜுவின் மனைவியிடமும் அவள் அன்பாகப் பழகினாள். 

 

ஒருமுறை மாத்திரை போடத் தண்ணீர் வேண்டும் என்று சாஜுவின் மனைவி கேட்டபோது ஜாலி தன்னுடைய பையில் இருந்த வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள். அதைக் குடித்தவுடன் வாயில் நுரை தள்ள மயங்கி விழுந்தார் சாஜூவின் மனைவி. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் அவருடைய உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அதன் பிறகு சில மாதங்களில் சாஜுவை ஜாலி திருமணம் செய்துகொண்டாள். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

 

இந்தக் கொலைகளில் ஜாலி தவிர வேறு யாருக்காவது சம்பந்தம் இருக்குமா என்கிற ரீதியிலும் போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். பல்வேறு முயற்சிகளின் மூலம் சிலரின் உதவியுடன் சைனைட் ஜாலியின் கைக்குக் கிடைத்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தனர். உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் மூலம் குடும்ப சொத்துக்களைத் தன் பெயருக்கு ஜாலி மாற்றி எழுதிக்கொண்டதும் தெரிந்தது. அனைவருமே குற்றவாளிகளாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். ஜாலி சிறையில் அடைக்கப்பட்டாள். 

 

ஜாலியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தான் செய்த குற்றங்கள் அனைத்தையும் போலீசாரிடம் ஜாலி ஒப்புக்கொண்டாள். கோழிக்கோடு பகுதியிலிருந்து ஜாலிக்காக வாதாட யாரும் முன்வரவில்லை. அந்த சமயத்தில் புனேவிலிருந்து வினு ஆண்டனி என்ற வழக்கறிஞர் வந்தார். அவர் கேரளாவைச் சேர்ந்தவர் தான். சமீபத்தில் கேரள நடிகை ஒருவரை நடிகர் ஒருவர் அடியாட்கள் மூலம் பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், குற்றம் செய்த நடிகரின் சார்பில் ஆஜராகி அவர் வெளியே வர உதவியவர் தான் இந்த வினு ஆண்டனி. அவர்தான் ஜாலியின் சார்பில் ஆஜரானார்.

 

இந்த வழக்குக்காக கொல்லப்பட்டவர்களின் கல்லறைகள் மீண்டும் திறக்கப்பட்டன. கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியதாக ஜாலி கூறியதும் பொய் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னுடைய கல்வி குறித்து ஜாலி அதுவரை சொல்லி வந்தவையும் பொய் என்பது தெரிந்தது. இன்னமும் சிறையில் இருக்கும் ஜாலி, இடையில் ஒருமுறை சிறையிலேயே தற்கொலை செய்யவும் முயன்றிருக்கிறாள். இனி ஜாலியுடன் வாழ்வதற்கு தனக்கு பயமாக இருக்கிறது என்று சாஜுவும் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.