Skip to main content

மம்பட்டியான் நல்லவரா? கெட்டவரா? - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 02

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

Thilagavathi IPS (Rtd) Thadayam : 01

 

காவல்துறைக்கு கடும் சவாலாக விளங்கிய மம்பட்டியானின் வாழ்க்கையிலிருந்து சில பகுதிகளை  ஏற்கனவே பார்த்தோம். இன்னும் பல சுவாரசியமான தகவல்களை நமக்கு விவரிக்கிறார் தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி அவர்கள்.

 

காட்டுப் பகுதிகளில் நடந்து செல்வதே மம்பட்டியானின் வழக்கம். காடுகளின் அமைப்பு முழுவதும் அவருக்கு அத்துப்படி. ஊர் மக்களுக்குப் பல வேளைகளில் அவர் உதவியிருக்கிறார். தன்னுடன் பயணிப்பவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அவர் கொள்ளைகளை மேற்கொண்டார். இதனால் காவல்துறையின் கோபத்திற்கு அவர் ஆளானாலும் மக்களில் பெரும்பாலானோர் அவர் மீது பயம் கலந்த அன்பு வைத்திருந்தனர். மம்பட்டியானைப் பிடிப்பதற்கு உளவாளிகள், மலபார் போலீஸ், கர்நாடக போலீஸ் என்று பலருடைய உதவியையும் தமிழ்நாடு போலீசார் நாடினர்.

 

மம்பட்டியான் குறித்து சட்டசபையில் காரசார விவாதங்கள் எழுந்த பிறகு, மம்பட்டியானை உயிருடனோ பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்தது. மம்பட்டியானோடு இணக்கமாகச் செல்ல காவல்துறை நினைக்கவில்லை. என்கவுண்டர்கள் பலமுறை நடைபெற்றாலும் அதில் மம்பட்டியானை ஒன்றும் செய்ய முடியவில்லை. மம்பட்டியானுக்கு இரண்டு முறை திருமணம் நடைபெற்றிருக்கிறது. அவருக்கு மொத்தம் 5 குழந்தைகள். 

 

மம்பட்டியான் உண்மையில் நல்லவரா கெட்டவரா என்று சொல்ல முடியவில்லை. சிறு வயதில் எனக்கு அவர் ஒரு ராபின்ஹுட் போல தான் தெரிந்தார். பிற்காலத்தில் காவல்துறை அதிகாரியான பிறகு, சட்டவிரோதமாக அவர் செய்த செயல்களை அறிந்த பிறகு, அவர் காவல்துறையின் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியவர் தான் என்பதை உணர்ந்தேன். தன் நண்பரின் சகோதரியான நல்லம்மாள் மீது அவர் கொண்ட காதல் தான் அவருடைய உயிருக்கு ஆபத்தாக மாறியது. அதற்கு முன்பே அந்த நண்பரின் இன்னொரு விதவை சகோதரியோடும் மம்பட்டியானுக்குத் தொடர்பு இருந்தது. அதனால் அவருடைய நண்பனே அவருக்கு எதிரியாக மாறி, காவல்துறையோடு சேர்ந்துகொண்டு இறுதியில் பாயாசத்தில் விஷம் வைத்து தான் மம்பட்டியானைக் கொல்ல முடிந்தது.

 

மம்பட்டியானின் உடல் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டபோது மிகப்பெரிய கூட்டம் திரண்டது. பெண்கள் பலர் அன்று முழுவதும் சாப்பிடவே இல்லை. பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து மம்பட்டியானின் உடலைப் பார்க்கச் சென்றனர். சமீபத்தில் மம்பட்டியானின் மகன் கொடுத்த பேட்டி ஒன்றைப் பார்க்க முடிந்தது. மிகவும் உடல் தளர்ந்து போயிருந்த அவருடைய பேச்சில் மம்பட்டியான் குறித்த எந்தப் பெருமிதமும் இல்லை. மம்பட்டியானால் தான் இன்னும் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியுள்ளது என்று அவர் விரக்தியோடு பேசினார். போலீசாரின் தொந்தரவு இல்லை என்றாலும் சொந்த ஊரில் இருந்த பகை காரணமாக அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

 

 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.