Skip to main content

எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே முதல்வரானவர் கதை!  - முதல்வரைத் தெரியுமா? #10  

Published on 18/12/2018 | Edited on 23/12/2018

இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிந்து முதல்வர்கள் பதவியேற்றிருக்கிறார்கள். ஜனநாயகத்தின் பெரும் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இது முன்னோட்டம் என்று கூறப்படுகிறது. அந்தந்த மாநிலங்களின் அரசியல் சூழ்நிலை மட்டுமே என்றும் சிலர் கூறுகின்றனர். மோடியின் போட்டியாளர் தான் தான் என்று நிறுவியிருக்கிறார் ராகுல். இப்படி அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் வென்று முதல்வராகியிருப்பவர்களை தெரியுமா? தெரிந்துகொள்ள வேண்டாமா? கடந்த பகுதியில் நாம் அப்போதைய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் கதையைப் படித்தோம். அப்பொழுதே அடுத்த தேர்தலில் பாஜகவின் வாய்ப்புகள் குறைவு என்பதை பேசியிருந்தோம். அது நிகழ்ந்திருக்கிறது.  ஆனால், மக்களைப் போலவே நாமும் சச்சின் பைலட் முதல்வராவார் என்று எதிர்பார்த்தோம். இங்கோ அசோக் கெலாட் முதல்வராகியிருக்கிறார். இதுதான் காங்கிரஸ், இதுதான் அரசியல்.


 

ashok gehlot



இந்திய வரைப்படத்தில் உச்சத்தில் இருக்கும் மாநிலம் ராஜஸ்தான். ராஜஸ்தானிகள் மற்ற மாநில மக்களை விட தனித்தே தெரியும் வகையில் அவர்களது ஆடைகள் இருக்கும். அதேபோல் வீரத்திலும் அவர்கள் தனித்துவமானவர்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் அங்கு தனித்துவம் நிறைந்து இருந்தாலும், அரசியல் என்பது மற்ற மாநிலங்களைப்போல்தான். தமிழகத்தில் திமுக அதிமுக போல், ராஜஸ்தானில் காங்கிரஸ் – பாஜக. மாறி மாறி ஆட்சிக்கு வரும்.

ராஜஸ்தான் சட்டசபையில் மொத்தம் 199 இடங்கள். 2018 டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலின் முடிவில் காங்கிரஸ் 99 இடத்திலும், பாஜக 73 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 6 இடத்திலும், சுயேட்சைகள் 13 இடத்திலும், மீதியுள்ள இடங்களை சிறு சிறு கட்சிகளும் கைப்பற்றின. இதில் ஆட்சி அமைப்பதற்கான இடங்களை விட கூடுதல் இடங்களை காங்கிரஸ் பெற்றதால் அந்தக்  கட்சியே ஆட்சி அமைத்துள்ளது. ராஜஸ்தான் மாநில முதல்வராக பதவிக்கு வரப்போகிறவர் இவர்தான் என ஒருவரை ராஜஸ்தானின்பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்த நிலையில் அதற்கு நேர் எதிரான இன்னொருவரை பதவியில் அமர்த்தியுள்ளது காங்கிரஸ் கட்சி தலைமை.

காங்கிரஸ் கட்சியின் வரலாறு என்றுமே வித்தியாசமானது. ஊழல் புகார் கூறி யாரை கட்சியில் இருந்து ஓரம் கட்டினார்களோ   அவரையே அழைத்து வந்து மீண்டும் பதவி தந்து சிம்மாசனத்தில் அமரவைத்து அழகு பார்ப்பது அதன் வழக்கம். அந்த சிம்மாசனத்துக்காக உண்மையாக உழைத்தவர்கள் தெருவில் நிற்பார்கள். அப்படித்தான் மாநில அரசியலில் ஓரம் கட்டிவைக்கப்பட்டவர், முதல்வராக தேர்வு செய்யப்பட்டு மீண்டும் பதவிக்கு வருகிறார்... அசோக்கெலாட். தீவிரமாக உழைத்த இளம் தலைவரான சச்சின் துணை முதல்வராகியுள்ளார்.

 

rahul gandhi sachin pilot ashok gehlot



1951ல் இருந்து 1990 வரை ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. 1952ல் காங்கிரஸை சேர்ந்த ஹீராலால் சாஸ்திரி, அதன்பின் வெங்கடாச்சாரி, அடுத்து ஜெய் நாராயணன் வியாஸ், பின்பு   டீக்காராமன், அதற்கடுத்து மோகன்லால் சுகாத்தியா, பிறகு பர்கத்துல்லா கான், ஹரி தேவ் ஜோஷ், ஜெகன்நாத், ஷிவ் சரண் மத்தூர், ஹீரா லால் தேவ்பூரா, ஹரி தேவ் ஜோசி என மாறி மாறி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தனர். மோகன்லால் சுகாத்தியா 1954ல் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார். அது முதல் தொடர்ச்சியாக 17 ஆண்டுகள், அதாவது 1971 வரை முதலமைச்சராக பதவியில் இருந்தார். இவர் காலத்தில்தான் ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சி பாதையில் தட்டுத்  தடுமாறி எழத்துவங்கியது. மாடர்ன் ராஜஸ்தானின் உருவாக்கத்துக்கு அடிக்கல் நாட்டியவர் இவர் என்கிறது ராஜஸ்தானின் வரலாறு.

இந்திராகாந்தி அம்மையாரால் நாட்டில் நெருக்கடி நிலை அறிமுகப்படுத்தப்பட்டு பின் அது திரும்பப் பெறப்பட்ட பின் நடைபெற்ற தேர்தலில் ஜெயபிரகாஷ் நாராயணன் தொடங்கிய ஜனதாதளம் கட்சி, ராஜஸ்தானில் காங்கிரஸ் சரித்திரத்தை உடைத்தது. 1977ல்   ஜனதா தளத்தின் சார்பில் பைரன் சிங் ஷெகாவத் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார்.  30 மாதங்கள் ஆட்சி பொறுப்பில் இருந்தார். மத்தியில் ஜனதா கட்சியில் ஏற்பட்ட தலைமை மோதலால் ஆட்சி கலைந்தது. மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும்   1980ல் ராஜஸ்தானின் சட்டசபையை கலைத்தது, முதல்வர் பதவியில் இருந்து இறங்கினார் ஜனதா தளம் ஷெகாவத். அதன்பின் அவர் முறையாக பாஜகவில் இணைந்தார். அதன்பின் ஒன்பது ஆண்டுகள் காங்கிரஸோடு மோதிக்கொண்டு இருந்தார்.
 

bairan singh shekawat

பைரன்   சிங்   ஷெகாவத்



1989ல் பாஜக – ஜனதா தளம் கூட்டணி   138   இடங்களில்   வெற்றி   பெற்றது.  இரண்டாவது முறையாக   பைரன்   சிங்   ஷெகாவத்   முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றார். இரண்டு ஆண்டுகளில் மீண்டும் ஆட்சியை கலைந்து, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஒரு வருடம் ஜனாதிபதி வழியாக ஆட்சி நடத்திய காங்கிரஸ் 1993ல் தேர்தலை நடத்தவைத்தது. மீண்டும் பாஜக-ஜனதா தளம் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. கடந்த காலத்தை விட இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தது பாஜக. வெற்றி பெற்ற 98 எம்.எல்.ஏகள் பைரன் சிங் ஷெகாவத்தை முதலமைச்சராக தேர்வு செய்ய அவர் பொறுப்பு ஏற்றார்.

இந்த முறை 5 வருடங்கள் முழுமையாக ஆட்சி செய்தார் ஷெகாவத். இந்துத்துவ வெறியை பைரன் சிங் ராஜஸ்தானில்   வளர்த்தார். சாமானிய மக்களின் வாழ்க்கையில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. இதனால் மக்கள் அதிருப்தியில் இருந்தனர். அதனை கச்சிதமாக அறுவடை செய்தது காங்கிரஸ் கட்சி. 1998ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தேசிய அரசியலில் இருந்த அசோக்கெலாட்டை மாநில அரசியலுக்கு அனுப்பி அவருக்கு முதலமைச்சர் நாற்காலியை தந்தது. அப்போது ஒரு முறை கூட எம்.எல்.ஏ ஆகாமலேயே முதல்வர் வாய்ப்பைப் பெற்றார் அசோக் கெலாட். இப்போதும் அவர்தான் முதல்வராகியிருக்கிறார். 

அந்த அளவுக்கு இவர் மதிக்கப்பட காரணம் என்ன? அரசியலில் இவர் வளர்ந்து வந்த கதை என்ன?  அப்போது முதல்வராக என்ன சாதித்தார், இப்போது முதல்வராக இவரிடம் என்ன எதிர்பார்க்கலாம்? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.     

முந்தைய பகுதி :

முத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்! முதல்வரைத் தெரியுமா #9 

அடுத்த பகுதி:

பாஜகவை சமாளிக்க இவர்தான் சரி? - முதல்வரைத் தெரியுமா? #11 

 

 

 

Next Story

வயநாட்டில் ராகுல் காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த செல்வப்பெருந்தகை!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
selvaperunthagai who collected votes in support of Rahul Gandhi in wayanad!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் நேற்று கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தியை ஆதரித்து சுல்தான் பத்ரி தேர்தல் பொறுப்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் தலைமையில் தமிழநாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சுல்தான் பத்ரீ கடைவீதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் கோவை மணிகண்ட பிரசாத்,  சிந்தை வினோத் மற்றும் ஏராளமான தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.