Skip to main content

பட்டப் படிப்புக்கு உதவிய பேரறிவாளன்; சிறை நட்பான வைகோ - சிறையின் மறுபக்கம்: 02

Published on 10/06/2023 | Edited on 16/06/2023

 

Nagendran - Siraiyin Marupakkam 02

 

சிறையின் இன்னொரு பக்கத்தை சிறையில் இருந்த கைதிகளின் அனுபவங்களின் மூலம் 'சிறையின் மறுபக்கம்' தொடரின் மூலம் நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஆயுள் தண்டனைக் கைதி ஒருவரின் சிறை அனுபவங்கள் இதோ.

 

வியாசர்பாடியைச் சேர்ந்த என்னுடைய பெயர் யேசுதாஸ். குடும்பத்தில் நான் தான் மூத்த பிள்ளை. 1995 காலகட்டத்திலேயே ஒரு நாளைக்கு நான் 500 ரூபாய் சம்பாதிக்கும் நிலையில் இருந்தேன். வாழ்க்கை நிம்மதியாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது எனக்கு ஒரு காதலும் இருந்தது. திருமணம் செய்துகொள்ளும் நிலையில் இருந்தபோது தான் இந்த சம்பவம் நடைபெற்றது. என்னுடைய நண்பர் ஒருவரின் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. அவருடைய அப்பாவுக்கும் மாமாவுக்கும் சண்டை. அப்பாவை மாமா மார்பில் குத்தினார். ஆனால் அப்பாவுக்கு எதுவும் ஆகவில்லை. 

 

அதனால் அவருடைய மாமாவைப் பழிவாங்க வேண்டும் என்று என்னுடைய நண்பர் நினைத்தார். அவரைக் கொலை செய்ய வேண்டும் என்று நினைத்து எங்களை அழைத்துச் சென்றார். அவருடைய வீட்டுக்குச் சென்று அவரைக் கொலை செய்தோம். அந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்றேன். தலைவர்களின் பிறந்தநாளில் எங்களை விட்டுவிடுவார்கள் என்கிற நம்பிக்கையில் இருந்தோம். நான் செய்த குற்றத்தால் என்னுடைய குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டனர். என்னைப் பற்றிக் கவலைப்பட்டே என்னுடைய தந்தை இறந்து போனார். அவருக்கான இறுதிக் காரியத்தைக் கூட என்னால் செய்ய முடியவில்லை. 

 

வெறும் நான்கு சுவற்றுக்குள் எத்தனை நாட்கள் இருக்க முடியும்? அந்த நேரத்தில் தான் நாம் செய்த தவறைப் பற்றி நாம் யோசிப்போம். நான்கு ஆண்டுகள் கழித்து என்னுடைய சகோதரியின் திருமணத்துக்கு நான் பரோலில் வந்தேன். என்னுடைய நல்ல நடவடிக்கைகளினால் எனக்குத் தொடர்ந்து பரோல் கொடுத்தனர். ஒருமுறை பரோலில் வந்து சரியான நேரத்தில் நான் சிறைக்குச் செல்லத் தவறியதால் எங்கள் வீட்டுக்கு போலீஸ் வந்தது. அதன் பிறகு நான் சிறை சென்றேன். ஒருமுறை எங்களுக்கு விடுதலை கிடைக்கும் நிலை ஏற்பட்டது. என்னோடு 11 வருடங்கள் ஒன்றாக இருந்த ஒருவரை வெளியே அனுப்பிவிட்டு என்னை மீண்டும் உள்ளே வைத்தனர். 

 

பரோலில் நான் செய்த தவறால் ஏற்பட்ட நிலை அது. அப்போது தான் கதறி அழுதேன். தற்கொலை செய்யும் எண்ணம் கூட வந்தது. சிறையில் இருந்தே நான் எம்.ஏ தேர்வு எழுதினேன். அப்போது எனக்கு உதவியவர் பேரறிவாளன். பழகுவதற்கு அவர் ஒரு குழந்தை போன்றவர். நாங்கள் நண்பர்களாக மாறினோம். சிறையில் விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தினோம். பொடா வழக்கில் சிறைக்கு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் மீது அவர் மிகுந்த அன்பு செலுத்தினார். நட்பாக பழகினார். சிறையில் கைதிகளுக்கு சரியான மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதில்லை. எவ்வளவு கெஞ்சினாலும் நீண்ட நேரம் கழித்து தான் சிகிச்சையே வழங்கப்படும்.

 

சிறையிலேயே டெய்லரிங் கற்றுக்கொண்டு சம்பாதிக்க ஆரம்பித்தேன். நான் செய்த தவறுக்கான பலனை நான் அனுபவித்து விட்டேன். என்னை ஒரு உதாரணமாக வைத்து இனி யாரும் இதுபோன்ற தவறுகளைச் செய்யக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். சிறைக்குச் சென்றால் வாழ்க்கையே வீணாகிவிடும். எந்தத் தப்பும் செய்யாமல் அனைவரும் சராசரி மனிதர்களாக சந்தோஷமாக வாழ வேண்டும்.

 

 

Next Story

“சிறையில் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றன” - சிறையின் மறுபக்கம் : 07

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

S

 

'சிறையின் மறுபக்கம்' தொடரில் 11 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற மைதீன் தன்னுடைய சிறை அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அப்போது எனக்கு வயது 28. நண்பர்களுக்காக செய்த கொலை அது. நாங்கள் மொத்தம் ஆறு பேர். கொலை செய்யும்போது எங்களுடைய குடும்பத்தைப் பற்றி நாங்கள் யோசிக்கவில்லை. நம்முடைய குடும்பம் கஷ்டப்படும்போது தான் நண்பர்கள் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. நான் சிறையில் இருந்தபோது என்னைப் பார்க்க என்னுடைய நண்பர்கள் யாரும் வரவில்லை. என்னுடைய தாய், தகப்பன், மனைவி மட்டும்தான் எனக்கு உதவி செய்தனர். ஒரு சாராய வியாபாரியிடம் எங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. எங்களைக் கொன்றுவிடுவேன் என்று அவர் மிரட்டினார். கொடூரமான நபர் அவர். 

 

அவரைக் கொன்றுவிடலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். அதன்படியே கொன்றோம். ஒரு வாரம் கழித்து தான் நான் சரண்டர் ஆனேன். நமக்கு பரோல் வழங்கப்படும்போது அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதேனும் தவறோ அல்லது தாமதமோ செய்தால், அடுத்த முறை பரோல் வழங்க மாட்டார்கள். சிறையில் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றன. படிக்காமலேயே நிறைய விஷயங்கள் தெரிந்த நபர்கள் சிறையில் இருக்கின்றனர். கிட்டத்தட்ட அது ஒரு கல்விக்கூடம் போல் தான். சட்டம் உட்பட பலவற்றையும் அங்கு கற்றுக்கொள்ளலாம். 

 

பலருடைய அனுபவங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு சிறையில் கிடைக்கும். சிறையில் சில அதிகாரிகள் எங்களோடு நன்கு பழகுவார்கள். நாங்கள் செய்யும் வேலைக்கு ஒரு நாளைக்கு எங்களுக்கு 10 ரூபாய் சம்பளம். இந்த விஷயத்தில் நம்மைத் துன்புறுத்த மாட்டார்கள். அங்கு இருப்பவற்றில் நமக்குப் பிடித்த வேலையை நாம் செய்யலாம். பெரிய ஆட்களும் சின்ன ஆட்களும் சிறையில் ஒன்றுதான். அனைவருக்கும் சாப்பாடு ஒரே அளவில் தான் வழங்கப்படும். யாருக்கும் தனி மரியாதை என்பதெல்லாம் கிடையாது.

 

குடிப்பழக்கத்திற்கு அடிமையான பலரையும் சிறையில் காண முடியும். தெரியாமல் போன் பேசினால் அதற்கான தண்டனையாக வேறு சிறைக்கு மாற்றிவிடுவார்கள். சிறைக்குள் பெரிய குற்றங்கள் செய்தால் அடி விழும். சிறை தான் எனக்கான பாடமாக இருந்தது. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் பலர் குறித்தும் நம்மால் சிறையில் இருக்கும்போது அறிய முடியும். சிறையில் கற்ற பாடங்களை வைத்து தான் இப்போது திருந்தி வாழ்கிறேன். சிகிச்சை கொடுக்க நேரமாவதால் சிறையில் மாரடைப்பு ஏற்பட்டு பலர் மரணமடைந்திருக்கின்றனர். சிறையில் தற்கொலைகளும் நடைபெறும். கைதிகளுக்குள் நிறைய சண்டைகளும் ஏற்படும்.

 

 

Next Story

தண்டனை முடித்து வந்த அப்பா; அடையாளம் மறந்த குழந்தை - சிறையின் மறுபக்கம் : 06

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

siraiyin-marupakkam-05

 

'சிறையின் மறுபக்கம்' தொடரில் 15 வருட சிறைத் தண்டனை பெற்ற மணிகண்டன் தன்னுடைய சிறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்...

 

நட்பால் தான் நான் சிறைக்குச் சென்றேன். அறியாத வயதில் பசங்களோடு சேர்ந்து செய்த தவறு அது. கொலை செய்ய வேண்டும் என்கிற நோக்கில் செய்யவில்லை. அந்த சம்பவத்தில் நாங்கள் ஆறு பேர் ஈடுபட்டோம். சில நாட்கள் கழித்து நானாகவே சென்று காவல் நிலையத்தில் ஆஜரானேன். மரண வாக்குமூலம் கிடைத்ததால் எங்களுக்கு 90 நாட்களில் பெயிலும் கிடைக்கவில்லை. என்னுடைய திருமணம் காதல் திருமணம். பெண்ணின் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்தது. இதனால் பெண்ணின் ஊருக்கு பல நாட்கள் நான் செல்லாமலேயே இருந்தேன்.

 

ஒருநாள் நாங்கள் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த சிலர் எங்களோடு இருந்த ஒருவரைத் தாக்கினர். அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். நண்பர்களோடு சென்ற நானும் அந்தக் கொலையில் ஈடுபட்டேன். அவரை வெட்டிவிட்டு அனைவரும் தப்பினோம். இந்த வழக்கில் சம்பந்தப்படாதவர்களும் பாதிக்கப்பட்டனர். அந்த வழக்கில் சிறை சென்று வந்த பிறகு எந்தத் தவறான காரியங்களிலும் நான் ஈடுபடவில்லை. ஆனால் காவல்துறையினர் அடிக்கடி என்னிடம் வந்து விசாரிப்பார்கள்.

 

சிறை என்பது கொடுமையான ஒரு இடம்தான். உள்ளே செல்லும்போது அட்மிஷன் அடி என்று ஒன்று இருக்கும். குடும்பத்தை நினைத்து தான் நான் அதிகம் பயந்தேன். நான் சிறை சென்றபோது என்னுடைய பெண் குழந்தை பயங்கரமாக அழுதாள். அது என்னை மிகவும் பாதித்தது. நான்கு வருடங்கள் கழித்து பரோலில் நான் வந்தேன். அப்போதுதான் வாழ்க்கை குறித்த புரிதல் எனக்கு வந்தது. என்னுடைய இரண்டாவது பெண் குழந்தை ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போது நான் சிறை சென்றதால் நான் திரும்பி வரும்போது அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.

 

நான் சிறையில் இருந்த சமயத்தில் என்னுடைய மனைவி வீட்டு வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார். என்னுடைய குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளித்தவர் என் மனைவி தான். சிறையில் இருக்கும்போது நமக்கு பிரச்சனையும் வரும். சிலர் நமக்கு ஆறுதலாகவும் இருப்பார்கள்.