Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #19

Published on 13/04/2022 | Edited on 13/04/2022

 

saambavi sankar's maayapura part 19

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

கொல்லைப் புறத்தில் "டமால்" என்ற சத்தமும், ’அம்மா’ என்ற அலறலும் கேட்டதும் அனைவரும் விழுந்தடித்துக் கொண்டு அங்கு ஓடினர். வீட்டின் தோட்டத்தில் இருந்த சிமெண்ட்டாலான தண்ணீர்த் தொட்டிக்குள், தனம் பாட்டி கால்வழுக்கி விழுந்திருந்தாள். அவளது சத்தம் தான் அந்த பிராந்தியத்தையே அதிர வைத்தது.

 

பதற்றத்துடன் ஓடி வந்தவர்கள், பாட்டியைப் பரபரப்பாகத் தூக்கினார்கள். பாட்டி வலி தாங்க முடியாமல் துடிக்க, மெதுவாகத் தூக்கி உட்கார வைத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினார்கள்.

 

பதற்றத்துடன் பரபரப்பாக இந்த வேலைகளை எல்லாம் குறிப்பாக சங்கவிதான் செய்தாள். தங்கத்திற்கு அம்மா விழுந்ததும் என்ன செய்வது என்று புரியவில்லை.

 

அந்த இடம் லேசான பாசியாக இருப்பதை பார்த்ததும் தங்கம் "வெட்டியாக இருக்கியே.. இந்தப் பாசியை  எல்லாம் கழுவக் கூடாதா?" என்று சங்கவி மீது கோபத்தை வார்த்தைகளாகக் கொட்டினாள்.

 

மனிதர்களின் இயல்பே தன் தவறுகளைப் பிறர் மீது சுமத்துவது தான். முள்ளு குத்தி விட்டது என்று கூறுவோம். நான் முள்ளில் தெரியாத் தனமாகக் கால் வைத்துவிட்டேன் என்று கூற மாட்டோம். முள்ளு என்னவோ  நாம் இருக்கும் இடத்தைத் தேடி வந்து குத்தியது போலச் சொல்வோம். தனம்மா பாட்டி கவனமாக காலை அழுத்தி வைத்து நடந்து இருக்கலாம். ஆனால் விழுந்ததற்கான காரணமே சங்கவி பாசியைச் சரியாகக் கழுவாமல் விட்டது தான் என்று தங்கம் குற்றம் சாட்டினாள்.

"அத்தை, நான் நேத்து கூட செங்கல்லைப் போட்டு நல்லா தேய்த்துத் தரையைக் கழுவினேன்" என்று பயத்துடன் சொன்னாள் சங்கவி. 

கைத் தாங்கலாகப் பிடித்துக்கொண்டு வந்து, கூடத்தில் பாட்டியை உட்கார வைத்தனர். 

"என்  வலது கை ரொம்ப வலிக்குது" என்று வலியில் துடித்தாள் பாட்டி. அவளது வலதுகை எண்ணெயில் போட்ட பூரி மாதிரி  "புசு புசு" என்று  வீங்கிப் போயிருந்தது.

"இந்த மூதேவி கால் வச்ச நேரம், என் பாட்டிக்கு இப்படி கை உடைஞ்சு போச்சு" என்று மணி குத்தலாக சங்கவியைக் குறிவைத்து வார்த்தையை எறிந்தான்.

 

உடனே செல்வம், ”எந்த மூதேவியைச் சொல்ற மணி? இங்க உனக்கும் அசோக்குக்கும் ஒரே நேரத்தில் தான் கல்யாணம் நடந்தது. ரெண்டு மருமகள்களும் ஒரே  நாள்லதான் இங்க காலெடுத்து வச்சிருக்காங்க " என்று சொல்லவும் கப்சிப் ஆகிவிட்டான் மணி.

 

இதைக்கேட்டதும் மணியின் புது மனைவி, அவனை முறைத்தாள்.

"இந்த  அப்பா அடிக்கடி நமக்கு ஆப்பு வைக்கிறாரே" என்று  நினைத்துக் கொண்டு மௌனமாக இருந்தான் மணி. 

 

சங்கவி வேகமாக ஓடிப்போய் பக்கத்து வீட்டிலிருந்து தென்னமரக்குடி எண்ணெய் வாங்கி வந்து, தங்கத்திடம் கொடுத்து, பாட்டிக்கு நன்றாகத் தேய்த்து விடச் சொன்னாள். தேய்க்கத் தேய்க்க வலியும் வீக்கமும் அதிகமாகியது. அதற்குள் அந்தத் தெருவில் இருக்கும் தனம்மாவின் வயதொத்த அக்கப்போர் தோழிகள் அங்கு கூடிவிட்டனர்.

"பானை பானையாய் நெல்லு அவிச்சி, கலங்கலமாய் அரிசி குத்தி,  பத்துப்பட்டி சந்தையில பந்தல் போட்டு வியாபாரம் பண்ணுன தனம்மாக, இப்படி கை ஒடிஞ்சி நிற்பதைப் பார்க்கையில் மனசு பதறுது" என்று அவர்கள் பொய்யாய்ப் பெருமூச்சுவிட்டனர்.  அவர்கள் பேசியதைக் கேட்டதும் 

"விதியை நெனச்சு  வெசனத்தில் போனாளாம்... வானத்தில் போன பிசாசு... மண்டையில ஆடுச்சாம். அந்த மாதிரி என் கை ஒடிஞ்சி போச்சு” என்று அவர்களிடம் புலம்பினாள் தனம்மா .

 

கண்ணுசாமிக்கு  செய்தி போக, அவரும் வந்துவிட்டார். தனம்மா பாட்டிக்கு வலி குறைந்த மாதிரி தெரியவில்லை. வயக்காட்டில்  வேலைக்கு ஆட்கள் வந்துவிட்டார்கள். அதனால் சங்கவியை வயலுக்கு அனுப்பிவிட்டு, வண்டி கட்டிக்கொண்டு போய், பொலம்பாக்கம்  நாட்டு மருத்துவரிடம் பாட்டிக்கு கட்டுப் போட்டுக் கொண்டு வந்தார்கள். சங்கவிக்கு வேலைப்பளு இன்னும் அதிகமானது.

 

கண்ணுசாமி குடும்பம், இந்த சாக்கில்  மீண்டும் இங்கேயே வந்து தங்கி விட்டது.

"அக்கப்போர் பிடிச்ச நாய், தானும் திங்காம வந்ததையும் திங்கவிடாம, வைக்கப்போரில் படுத்து உருண்டு தாங்குற கதையாக’ தனம்மா பாட்டிக்கு பணிவிடை செய்த  சங்கவியை, தான் வேலை செய்யாவிட்டாலும் குறை சொல்லிக்கொண்டே இருந்தது கண்ணுசாமி குடும்பம்.

 

பெரிய மருமகள் மல்லிகா, கண்ணுசாமி மாமா மகள் புவனாவுடன்  நெருங்கிப் பழக ஆரம்பித்தாள். சங்கவி வேண்டாத மருமகள் என்பதால் அந்த வீட்டைப் பொறுத்தவரை தாலி கட்டி அழைத்து வரப்பட்ட கொத்தடிமையாக இருந்தாள்.

 

இரவு நேரத்தில், வயக்காட்டில் தண்ணீர் இறைப்பதற்காக அசோக்கை  வயலுக்கு அனுப்புவதும் வாடிக்கை ஆனது. சங்கவியோ கூடத்தில் மாமியாருடன் படுத்துக்கொள்வாள். தனம்மா, புவனா, புவனா அம்மா, தங்கம் அனைவரும் நடு இரவு வரை தொண தொணவென்று  பேசியபடியே இருப்பார்கள்.

 

சங்கவி உழைத்த களைப்பில், படுத்தவுடன் தூங்கிவிடுவாள்.  அவள்  நன்றாக உறங்கும் போதுதான், தனம்மா பாட்டி சங்கவியை எழுப்பித் தண்ணீர் கேட்பாள். சங்கவியின் கஷ்டங்களை எல்லாம் பார்க்கும் போது அசோக்கிற்கு மனது  வலிக்கும். ஏன்? சங்கவி இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு இந்த வீட்டில் அடிமையாக இருக்கிறாள். வேறு பெண்ணாக இருந்தால் தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று கொடிபிடித்து இருப்பாள். ஆனால் சங்கவி அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையே என்று நினைப்பான்.

 

தனம்மா பாட்டிக்கு வலது கைதான் கட்டுப்போட்டு இருக்கிறது. ஆனால் சங்கவி, அவளுக்கு அவளது இரண்டு கைகளாகவும் மாறினாள். எல்லா வேலைகளையும் அவளே  செய்து கொடுத்தாள். தலைக்குத் தேய்த்து குளிப்பாட்டுவதில்  இருந்து, சாப்பாடு ஊட்டி விடுவது வரை அனைத்தும் சங்கவி தான் பார்த்து பார்த்து செய்கிறாள். 

 

விளையாட்டுப் போல ஒரு மாதம் ஓடி விட்டது. ஆரம்பத்தில் வெறுப்பு காட்டிய தனம்மாவிற்கு, மெல்ல மெல்ல சங்கவி மீது வெறுப்பு குறைய ஆரம்பித்தது. குத்தல் பேச்சும் நக்கல் பேச்சும் குறைந்தது. தன் சொந்த பேத்தி புவனாவிடம் ஏதாவது உதவி கேட்டால், சிலுசிலுவென்று சலிப்புடன் பேசுவாள். ஆனால் சங்கவியோ புன்னகை மாறாமல் செய்வாள்.

 

வாழ்க்கையில் காலத்தை விடவும் சிறந்த ஆசான் வேறொன்றும் இல்லை. சங்கவியின் அருமை பெருமைகளை தனம்மா பாட்டி உணர ஆரம்பித்தாள். அவள் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது என்கிற நிலைக்கு பாட்டி வந்திருந்தாள். அதனால் அன்பு காட்டிப் பேசவும் ஆரம்பித்திருந்தாள்.

 

சங்கவிக்கு கஷ்டம் கொடுத்துக் கொடுத்து, இறைவனுக்கு போரடித்து விட்டது போல. அதனால்   பரமபத ஏணி மாதிரி சின்னதாக ஒரு சம்பவத்தை நிகழ்த்துவதற்கு அவன் தயாராகிவிட்டான் போலிருக்கிறது. அதற்கு அடையாளமாக அன்று சங்கவி வீட்டிற்கு அவர்கள் வந்தனர்.

 

(சிறகுகள் படபடக்கும்)
 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #34

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

maayapura part 34

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமாவின் வரவிற்கு பிறகு சிறு மாற்றங்களுடன் காலநதி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மல்லிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டுப் போன மல்லிகாவின் அண்ணன்களும் அம்மா அப்பாவுடன் மீண்டும் இப்போது தான் இங்கு வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் காசிக்கு சென்றிருந்த அப்பா அம்மா இப்போதுதான் திரும்பி இருந்தார்கள்.

 

மல்லிகாவின் அம்மா வந்து இறங்கியதுமே புராணத்தை ஆரம்பித்துவிட்டார். 

"மானூத்து தோப்புல பாடித்திரிந்த குயிலு, வண்ணாத்தி பாறையில் ஆடி திரிந்த மயிலு, வாடி வதங்கி கட்டில்ல கிடக்கறா.. அதை பார்க்கையில வடக்கால போன பாவி மக  நான் கங்கையிலேயே போயிருக்கக் கூடாதா" என்று ஒப்பாரி  வைத்துக் கொண்டிருந்தார்.

"என்னங்க பண்றது நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. அதுவரைக்கும் அரும்பாடுபட்டு ரெண்டு உயிரையும் காப்பாற்றி ஆச்சு"ன்னு தங்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்க என்ன பண்ணுவீங்க சொந்தம் ஆச்சே உங்க சின்ன மருமகளை விட்டுக் கொடுப்பீங்களான்னு" குத்தி காட்டினார் மல்லிகாவின் அம்மா ரஞ்சிதம்.

" அம்மா நான் வேணும்னே செய்யலை தெரியாம நடந்திருச்சு மன்னிச்சுடுங்க" என்று சங்கவி கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"உன் பசப்பு வார்த்தை எல்லாம் மத்தவங்க நம்பலாம். நான் நம்ப மாட்டேன் நீ முதல்ல உண்டாகலைன்னு தண்ணி ஊத்தி விழ வச்சிருக்க" என்று கோபமாக பேசினார் ரஞ்சிதம்.

"த.. ஏதோ பொண்ணை பெத்தவளுக்கு ஆதங்கம் இருக்கும்னு சும்மா இருந்தா நீ என்னடான்னா அதிகமா பேசுற. இது உன் வீட்ல நடந்திருந்தா உன் மருமக பொறாமையில் செய்தாள்னு நீ சொல்வாயா. போகாத ஊர் எல்லாம் போயி கண்ணுறக்கம் இல்லாம காலிலெல்லாம் விழுந்து உன் மவளைக் காப்பாற்றினால் வசவு பேசுற இனிமே இப்படி பேசினா அவ்வளவுதான்" என்று கோபமாக கத்தினார் தனம்மா பாட்டி.

"ஏதோ மகளை பெற்றவங்க ஆதங்கத்தில் நாலு வார்த்தை பேசி விட்டேன். அதுக்குப் போயி இப்படி கோபிக்கறீங்க" என்று குழைந்தாள் ரஞ்சிதம்.

" அம்மா புரியாம பேசாத.. சங்கவி இல்லன்னா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். அவளை திட்டாத மா" என்று சங்கவிக்கு பரிந்து பேசினார் மல்லிகா.

 

சங்கவி எதையும் காதில் வாங்காமல் விருந்தாளிக்கு சமைப்பதற்காக கோழி அடித்து குழம்பு வைக்க சென்றாள்.

 

மணியை அழைத்துக்கொண்டு மச்சான்கள் வயக்காட்டு பக்கம் போனார்கள்.

"மாப்ள  எவ்வளவு நாளைக்குதான் வாய்க்கா வரப்புன்னு மல்லுகட்றது உங்களுக்குன்னு தொழில் வேணாமா?எப்ப தான் நீங்க கெத்தா கார்ல வந்து இறங்கறது. நாங்க கார் கதவை திறந்து விடுவது" என்று மணிக்கு புகழ் போதையை கோப்பையில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

"அட போங்க மச்சான் விவசாயத்திற்கு முதல் போட முடியாம மூச்சு முட்டுது. இதுல எங்க இருந்து தொழிலுக்கு முதல் போடறது" என்று ஆதங்கப்பட்டான் மணி.

 

ஒரு மனிதனுக்கு புகழை போல போதை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. அதில் மிதக்கும் வரையில் அவன் வாழ்வு தப்பியது. மூழ்க ஆரம்பித்தால் அவனும் சேர்ந்து மூழ்கி விட வேண்டியதுதான். லேசாக துளிர்விட்டு இருந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் மல்லிகாவின் அண்ணன்கள். "மாப்பிள்ளை எங்க ஊர்ல டூரிங் டாக்கீஸ் லீசுக்கு வருது அதை எடுத்து நடத்துவோம். ஜம்முனு தியேட்டர் ஓனர் மாதிரி காரில் வந்து இறங்கி கல்லாப்பெட்டியில பணத்தை எண்ணிக்கிட்டு இரு. நாங்க உனக்கு உழைச்சி தர்ரோம் மாப்பிள்ளை" என்று ரீல் விட்டுக் கொண்டிருந்தனர் மல்லிகாவின் அண்ணன்கள்.

"அப்படியா சொல்றீங்க கேட்க நல்லாத்தான் இருக்கு பணத்துக்கு எங்கே போறதுன்னு" புலம்பினான் மணி.

"அது உங்க பாடு மாப்பிள்ளை. 2 நாளில் 10 ஆயிரம் ரூபாய் எடுத்துகிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க நாம லீசுக்கு வாங்கி முடிச்சிடலாம் " என்று மணியின்  நாக்கில் தேனை தடவினார்கள். "மல்லிகா இன்னும் எத்தனை நாளைக்கு தான் கூட்டுக்குடும்பத்தில் இருக்க போற? புள்ள பொறக்க போறான். உன் புருஷன் உழைச்சி எல்லாரும் அனுபவிக்கிறார்கள்" என்று நெருப்பில்லாமல் பத்த வைத்துக் கொண்டிருந்தார் ரஞ்சிதம்.

 

ஆண்களுக்கு புகழ் போதை என்றால் பெண்களுக்கு எது சுதந்திரம் என்பது தெரியாத போதை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் அடிமை தனியாக இருந்தால் சுதந்திரம் என்னும் தவறான எண்ணம் பெண்கள் மனதில் வேரூன்றி உள்ளது. தன் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் மருமகள் தனிக்குடித்தனம் போக கூடாது. மகள் மட்டும் தனிக்குடித்தனம் வந்துவிடவேண்டும். இந்த அம்மாக்களின் லாஜிக் என்னவென்று புரியவில்லை. ரஞ்சிதம் தன் மகளுக்கு அப்படித்தான் உரு ஏற்றி கொண்டிருந்தாள். பாவம் மல்லிகா சின்ன பெண் தானே வாழ்வில் நல்லது கெட்டது அறியாதவள். அம்மா சொல்லை வேதவாக்காக நினைத்துக் கொண்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கு மச்சான்கள் வேப்பிலை அடித்தார்கள். மல்லிகாவிற்கு அவள் அம்மா பாடம் படித்தாள். 

"வெடக்கோழி விருந்தை விரலிடுக்கில் கூட விடாமல் வழித்து சாப்பிட்டுவிட்டு மணிக்கும் மல்லிகாவிற்கும் மூளைச்சலவை செய்து விட்டு கிளம்பினார்கள் மல்லிகாவின் குடும்பத்தினர். 

 

சினிமாவில் வில்லன்  பாம் வைப்பதுபோல வைத்து விட்டு சென்றுள்ளனர். எப்போது வெடிக்கும் என்று தான் தெரியவில்லை. மணி ரெண்டு நாளா மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்தது. ரமா அம்மாவை கேட்கலாம் என்று நினைத்தால் அவர்கள் நிச்சயம் வீட்டில் சொல்லி விடுவார் என பயந்து அந்த திட்டத்தை கைவிட்டான். பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த மணி ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டிலிருக்கும் அலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #33

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

maayapura part 33

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

"என் வாழ்க்கைப் பயணத்தில் கடைசி ஸ்டேஷனை எதிர்பார்த்துப் பயணிக்கிறேன். எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை" என்று ரமா சொல்லி விட்டு  வாசலைத் தாண்டும்போது "த..நில்லு" என்று ஒரு குரல் அதட்டலாக வந்தது.

"என்ன தனம்மா" என்று சொல்லிக்கொண்டே அவரைப் பார்த்தார் ரமா,

"எனக்கு மருவாதையா பேசத் தெரியாது மனசில் இருக்குறதை பட்டு பட்டுன்னு கேட்டு விடுவேன். ஆனால் பாசக்காரி பிடிச்சிருந்தா பாசம் காட்டுவேன். வேஷம் போடத் தெரியாது. ரமா எங்க அன்புள்ள என்ன குறையைக் கண்ட இப்படிக் கிளம்பி போற" என்று உரிமையாகக் கேட்டாள் தனம்மா. "என்னால எந்த பயனும் இல்லை நான் அடுத்தவங்களுக்கு ஏன் பாரமா இருக்கணும். அதான் கிளம்பி போறேன்னு" சோகமாகச் சொன்னார் ரமா.

"பொம்பளை சுமக்கிற கருவை பாரமா நினைத்திருந்தால் இந்த உலகம் உருவாகி இருக்குமா? நம்ம கூட வாழ உறவை பாரமா நினைச்சா உறவுகள் எல்லாம் சுமக்க முடியாத சுமையாகத்  தான் இருக்கும். நல்லதோ கெட்டதோ அது தான் நான் வாங்கி வந்த வரம் என்று நினைத்துப் பார்த்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும் இவ்வளவு பேரைச் சுமக்கிற இந்த ஆல மரக் கிளைக்கு ஒரு கிளியைச் சுமப்பதா பாரம்" என்று தத்துவமாகப் பேசினார் தனம்மா. குடும்பத்தினர் அனைவரும் வாயடைத்து நின்றனர். தனம்மா பாட்டிக்கு அன்பாகவும் பேசத் தெரியுமா? என்று மல்லிகாவும் சங்கவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"இல்ல தனம்மா  நீங்க என்னதான் சொன்னாலும் அது சரிவராது. புது கிராமம் பழக்கமில்லாத மக்கள். என் கடைசிக் காலம் வரை இங்கேயே என்பது எனக்குத் தயக்கமாக இருக்கு" என்று சொன்னார் ரமா. "வெள்ளைக்காரன் அடி எடுத்து வைக்கும் போது இப்படி நினைக்கலையே மொழி தெரியாத வேற நாட்டுக்காரன் பல வருஷமா நம்பள அதிகாரம் பண்ணி வந்திருக்கான். அன்பால நம்மாள ஒன்றா வாழ முடியாதா?" என்று தனம்மா உதாரணம் எல்லாம் சொல்லிப் பேசியதைக் கேட்டதும் அனைவரும் எலி ஹெலிகாப்டர் ஓட்டுவதைப் பார்ப்பது போல அதிசயத்து நின்றனர். தனம்மாவின் வேறு பரிமாணங்கள் மின்ன ஆரம்பித்தது. அனைவர் மனதிலும் எண்ணக் குவியல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதைக் கொத்திக் கிளற மனித கோழிகளுக்குத் தான் வாய்ப்பு இல்லை.

"எங்கம்மா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அடம்பிடிக்காம எங்களுடனே தங்கிடுங்க என்று தங்கமும் சொன்னாள்.

"சரி பக்கத்தில் எதற்கு இந்த குடிசையைக்  கட்ட சொன்னே என்று தனம்மா சரியான பாயிண்டை பிடித்தார்கள்.

"என் காலத்துக்குப் பிறகு நான் படித்த புத்தகங்களை எல்லாம் சின்னதா நூலகம் மாதிரி வைக்கலாம்னு சொன்னேன். அசோக் தான் நான் இப்பவே கட்றேன். நீங்க பார்த்து மனம் மகிழ்ச்சியாய் இருங்கள். இங்கு உங்கள் கண்கள் தேடிய உலகம் மக்களின் விடியலாய் இருக்கும் என்ற நினைவோடு இருப்பீங்கன்னு சொல்லிட்டு கட்டினான்" என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் ரமா.  

"அம்மா உயிரற்ற எழுத்துகளுக்கு உணர்வுகளால் உயிர் கொடுப்பதைவிட, உயிரான அறிவு எங்களுக்கு வழிகாட்டுவது எவ்வளவு சிறப்பாக இருக்கும். நீங்கள் இந்த குடிலிலேயே தங்குங்கம்மா" என்று சற்று கெஞ்சலுடன் சொன்னாள் சங்கவி. 

"நீங்க சுதந்திரமா அந்த குடிசையிலே இருங்க. உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம்" என்று மணியும் அவன் பங்குக்கு வாய்திறந்து சொன்னான்.

 

அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் அன்பானவர்கள் தான் பல உணர்வுகளின் கலவை சேரும்போது அன்பு வெளிப்படையாகக் கண்ணில் தெரிவதில்லை. பிறர் காட்டும் அன்பு சில நேரங்களில் நம்மை நாமாக வாழ விடுவதில்லை. பிறரின் முடிவுகளுக்கு நம்மை வாழவைக்கிறது. அதுபோலத்தான் ரமாவும் அந்த குடிசையில் தங்குவது என்று முடிவு செய்தாள்.

"நான் அன்புக்காக ஏங்குகிறவள். உங்க அன்பும் எனக்கு தேவைப்படுகிறது. நான் உங்களுடனேயே தங்கிக் கொள்கிறேன்" என்று ரமா முகத்தில் பொலிவுடன் சொன்னார்.

 

ரமாவின் வாழ்க்கை பயணம் வேறு ஒரு உலகில் தொடங்கியது போலப் புதிதாக மகிழ்வுடன் தொடங்கியது. கும்மட்டி அடுப்பு என்று சொல்லக்கூடிய அடுப்பில் அவளுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டாள். என்ன பெரிய உணவு வெண்கல குண்டில் சிறிது சாப்பாட்டைப் பொங்க வைத்து உண்பாள். ரமாவின் ஆகச்சிறந்த உணவே இதுதான். ஊருக்குத் தகவல் சொல்லி ரமாவின் வக்கீல் வந்தார். அவர் வரும்போது சூட்கேஸ் நிறைய ரமா வாசித்த புத்தகங்களை எடுத்து வந்திருந்தார். அதில் தி.ஜா, ஜெயகாந்தன், அம்பை, கி.ரா.,கண்ணதாசன், பாரதிதாசன், பெரியார், மார்க்ஸ், லெனின் இப்படிப் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பார்க்கும்போது மெலிதாக புன்னகைத்தார்.

"ஏன் சிரிக்கிறீங்க? என்று வக்கீல் புரியாமல் கேட்டார். "இவ்வளவு நாட்கள் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் உடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த கிராமத்திற்கு வந்த பிறகு இவர்களோடு வாழ்வது போன்ற உணர்வு இருக்குங்க சார்" என்று தன் அனுபவத்தைச் சொன்னார். நான் சொன்னது போல உயில் ரெடி பண்ணி விடுங்க அதை ரிஜிஸ்டர் பண்ணி என்னிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொன்னார் ரமா.சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினார் வக்கீல்.

 

ரமாவின் குடிலுக்கு எதிரே மிகப்பெரிய இடம் இருந்தது. அதன் பிறகு ஓணான் கொடியால் வேலி போடப்பட்டது. மாலை நேரங்களில்  ஈசி சேர் போட்டு அங்கே அமர்ந்திருப்பார் வயல் வேலைகளை முடித்துவிட்டுப் போகும் பெண்கள் ஆரம்பத்தில் ரமாவை ஏதோ சந்திரமண்டலத்திலிருந்து வந்த பெண் போல அதிசயமாகப் பார்த்தனர்.

 

ரமாவே அவர்களை அழைத்துப் பேசுவார். பிறகு பெண்கள் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அவர்களின் குடும்ப கஷ்டங்களை எல்லாம் ரமாவிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். ரமாவும் அவர்களுக்கு எழுத்து கற்பித்து தன்னம்பிக்கை எண்ணங்களைத் தூண்டினார். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயம் என்ற ஒன்று ரொம்ப முக்கியம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுடர் விளக்கைத் தூண்டும் போது அந்த தூண்டு குச்சி மீதும் விரல் மீதும் அனல் படத்தான் செய்யும் தூண்டுகோல் அதைப் பொறுத்துக் கொண்டால் தான் விளக்கு பிரகாசமாக எரியும். அது போலப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட ஆண்கள் ரமாவிடம் சண்டைக்கு வந்தார்கள். அப்போதெல்லாம் அசோக் தான் அரணாக இருந்து ரமாவைப் பாதுகாத்தான். தங்கள் பெயரை எழுத  கற்றுக் கொண்ட பெண்கள் வேலி நாச்சியார் மாதிரி இடுப்பில் அரிவாளைச் சொருகிக் கொண்டு களையெடுப்பதற்குக் கம்பீரமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டு அடுக்களை சுவரெல்லாம் கரியால் இவர்கள் பெயர்கள் ஓவியமாக வரையப்பட்டது. பொருளாதார உதவி தேவைப்படும் பெண்களுக்கு இடது கைக்குத் தெரியாமல் உதவி செய்தார் ரமா. தனம்மா பாட்டியின் பாக்கு உரலும் சுண்ணாம்பால் பெயர் பொறிக்கப்பட்டு தனம்மாவின் கல்வெட்டானது.

 

பெண்களிடம் பேசப் பேச இப்படி ஒரு அறிவு உலகம் இருக்கா என்று வியந்தனர். உங்கள் உழைப்பு உங்களுக்கான தேவைகளுக்கு எல்லாம் பிறரிடம் கையேந்தக் கூடாது. கொஞ்சம் சேமிப்பு உங்களிடம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். ரமாவிற்கு அந்த கிராமம் மிகவும் பிடித்துவிட்டது. கிராம மக்கள் ரமாவிடம் மிகவும் அன்பாக இருந்தனர். 

 

காலநதி எந்த சலனமும் இல்லாமல் சென்றால் எப்படி? நதியில் ஒரு முதலை அடித்து வந்தது.

 

( சிறகுகள் படபடக்கும்)