ADVERTISEMENT

சென்னையில் பிக்பாக்கெட் தொல்லை குறைஞ்சது எப்படி தெரியுமா? - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 17

11:56 AM Nov 17, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை என்றாலே சினிமாக்களில் பிக்பாக்கெட் அடிப்பதாக காட்டப்படுவதுண்டு; அது இப்போதெல்லாம் சுத்தமாக கிடையாது. அது எப்படி முழுவதுமாக ஒழித்துக் கட்டப்பட்டது என்பதை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார் ‘சொல்ல மறந்த கதை’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

சென்னை எல்லீஸ் ரோட்டில் ஆட்டோக்களுக்கு பைனான்ஸ் பண்ணும் நிறுவனத்திற்கான கிளை ஒன்றிற்கு பணம் நிலுவைத் தொகை கட்ட வரும் ஆட்டோக்காரர்கள் அடிக்கடி பணம் தொலைந்து விட்டதாகவே கூறி வந்தார்கள். ஆரம்பத்தில் எங்கேயோ தொலைத்து விட்டார்களோ என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டோம். ஆனால் தொடர்ச்சியாக இப்படி சொல்லப்படுவதால் என்னவென்று விசாரித்தபோது பணத்தை தொலைத்த எல்லோருடைய பை, பேண்ட், சட்டை ஆகியவற்றில் பிளேடு கொண்டு கிழிக்கப்பட்டிருக்கிறது. அப்போது ஒரு முடிவெடுத்தோம் தொடர்ச்சியாக பிக்பாக்கெட் அடிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து விசாரித்து இதை தடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷ்னராக அப்போது இருந்த விஜயகுமார் அவர்களிடம் பேசினேன். அவரும் செல்வமணி என்ற காவல்துறை அதிகாரியின் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து எங்களுடைய இன்சூரன்ஸ் குழுவும் இணைந்து ஏதேதோ முயற்சிகள் செய்து தேடினோம். ஒரு துப்பும் கிடைக்கவில்லை. அப்போது ஏட்டையா ஒருவர் சொன்னார். இதெல்லாம் வேலைக்கு ஆகாது. அப்போதைய சென்ட்ரல் ஜெயிலில் பிக்பாக்கெட் வழக்கில் சிக்கியிருக்கிறவங்க கிட்ட கேட்டால் ஏதாச்சும் ஐடியா கிடைக்கும் என்றார்.

காவலர் ஒருவரையே கைதி போல சிறைக்குள் அனுப்பி பிக்பாக்கெட் கேசில் சிக்கியவர்களோடு பழக வைத்தோம். மகேஷ் என்றவர் அறிமுகமானார். அடிக்கடி பிக்பாக்கெட் வழக்கில் சிக்கி சிறை செல்பவர். அவரை நீதிபதி அனுமதியோடு மருத்துவ காரணங்களை சொல்லி சிறையிலிருந்து வெளியே எடுத்து அவரைக் கொண்டு அவருடைய பிக்பாக்கெட் அடிக்கும் கூட்டாளிகளைத் தேடினோம். சென்னையில் பிரபலமாக இருக்கும் அனைத்து பஸ் ஸ்டாண்டுகளிலிலிருந்தும் பிக்பாக்கெட் அடிக்கும் அவனின் கூட்டாளிகள் சிக்கினர்.

அதில் ஒருவன்தான் சொன்னான். எங்களை ஏன் சார் பிடிச்சு வச்சிருக்கீங்க... எங்க டிரைனர் இருக்காரு சார், அவரை போயி பாருங்க என்றான். வியாசர்பாடி நாகராஜன் என்பவரை தேடிப் போனபோது அவரோ வீட்டின் பின்புறம் பெரிய பயிற்சி பட்டறை வைத்திருந்திருக்கிறார்.

பஸ் ஸ்டாண்டில் எப்படி திருடனும், கோவிலில் எப்படி திருடனும், பையிலிருந்து எப்படி எடுக்க வேண்டும் போன்ற எல்லாவற்றிற்கும் செய்முறை பயிற்சி எடுப்பதற்காகவே மாதிரிகளை உருவாக்கி ஒரு பட்டறையே வைத்திருந்திருக்கிறார். தினமும் சென்னை மண்ட்ரோ சிலை அருகே கூடி நின்று எந்த பஸ்சில் யார் போக வேண்டும். பிக்பாக்கெட் அடிக்கும் பணத்தை எங்கே கொண்டு வந்து பிரித்துக் கொள்ள வேண்டும் என்று திட்டம் தீட்டி வேலை செய்திருக்கிறார்கள். அந்த குழுவையே ஒட்டுமொத்தமாக பிடித்து குண்டர் சட்டத்தில் சிறைக்கு அனுப்பினோம். அதன் பிறகு சென்னையில் பிக்பாக்கெட் ஒட்டுமொத்தமாக அடியோடு அழித்து ஒழிக்கப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT