Skip to main content

சென்னையில் பிக்பாக்கெட் தொல்லை குறைஞ்சது எப்படி தெரியுமா? - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 17

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

rajkumar-solla-marantha-kathai-17

 

சென்னை என்றாலே சினிமாக்களில் பிக்பாக்கெட் அடிப்பதாக காட்டப்படுவதுண்டு; அது இப்போதெல்லாம் சுத்தமாக கிடையாது. அது எப்படி முழுவதுமாக ஒழித்துக் கட்டப்பட்டது என்பதை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார் ‘சொல்ல மறந்த கதை’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

சென்னை எல்லீஸ் ரோட்டில் ஆட்டோக்களுக்கு பைனான்ஸ் பண்ணும் நிறுவனத்திற்கான கிளை ஒன்றிற்கு பணம் நிலுவைத் தொகை கட்ட வரும் ஆட்டோக்காரர்கள் அடிக்கடி பணம் தொலைந்து விட்டதாகவே கூறி வந்தார்கள். ஆரம்பத்தில் எங்கேயோ தொலைத்து விட்டார்களோ என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டோம். ஆனால் தொடர்ச்சியாக இப்படி சொல்லப்படுவதால் என்னவென்று விசாரித்தபோது பணத்தை தொலைத்த எல்லோருடைய பை, பேண்ட், சட்டை ஆகியவற்றில் பிளேடு கொண்டு கிழிக்கப்பட்டிருக்கிறது. அப்போது ஒரு முடிவெடுத்தோம் தொடர்ச்சியாக பிக்பாக்கெட் அடிக்கப்பட்டு இருக்கிறது.

 

இது குறித்து விசாரித்து இதை தடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷ்னராக அப்போது இருந்த விஜயகுமார் அவர்களிடம் பேசினேன். அவரும் செல்வமணி என்ற காவல்துறை அதிகாரியின் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து எங்களுடைய இன்சூரன்ஸ் குழுவும் இணைந்து ஏதேதோ முயற்சிகள் செய்து தேடினோம். ஒரு துப்பும் கிடைக்கவில்லை. அப்போது ஏட்டையா ஒருவர் சொன்னார். இதெல்லாம் வேலைக்கு ஆகாது. அப்போதைய சென்ட்ரல் ஜெயிலில் பிக்பாக்கெட் வழக்கில் சிக்கியிருக்கிறவங்க கிட்ட கேட்டால் ஏதாச்சும் ஐடியா கிடைக்கும் என்றார்.

 

காவலர் ஒருவரையே கைதி போல சிறைக்குள் அனுப்பி பிக்பாக்கெட் கேசில் சிக்கியவர்களோடு பழக வைத்தோம். மகேஷ் என்றவர் அறிமுகமானார். அடிக்கடி பிக்பாக்கெட் வழக்கில் சிக்கி சிறை செல்பவர். அவரை நீதிபதி அனுமதியோடு மருத்துவ காரணங்களை சொல்லி சிறையிலிருந்து வெளியே எடுத்து அவரைக் கொண்டு அவருடைய பிக்பாக்கெட் அடிக்கும் கூட்டாளிகளைத் தேடினோம். சென்னையில் பிரபலமாக இருக்கும் அனைத்து பஸ் ஸ்டாண்டுகளிலிலிருந்தும் பிக்பாக்கெட் அடிக்கும் அவனின் கூட்டாளிகள் சிக்கினர்.

 

அதில் ஒருவன்தான் சொன்னான். எங்களை ஏன் சார் பிடிச்சு வச்சிருக்கீங்க... எங்க டிரைனர் இருக்காரு சார், அவரை போயி பாருங்க என்றான். வியாசர்பாடி நாகராஜன் என்பவரை தேடிப் போனபோது அவரோ வீட்டின் பின்புறம் பெரிய பயிற்சி பட்டறை வைத்திருந்திருக்கிறார். 

 

பஸ் ஸ்டாண்டில் எப்படி திருடனும், கோவிலில் எப்படி திருடனும், பையிலிருந்து எப்படி எடுக்க வேண்டும் போன்ற எல்லாவற்றிற்கும் செய்முறை பயிற்சி எடுப்பதற்காகவே மாதிரிகளை உருவாக்கி ஒரு பட்டறையே வைத்திருந்திருக்கிறார். தினமும் சென்னை மண்ட்ரோ சிலை அருகே கூடி நின்று எந்த பஸ்சில் யார் போக வேண்டும். பிக்பாக்கெட் அடிக்கும் பணத்தை எங்கே கொண்டு வந்து பிரித்துக் கொள்ள வேண்டும் என்று திட்டம் தீட்டி வேலை செய்திருக்கிறார்கள். அந்த குழுவையே ஒட்டுமொத்தமாக பிடித்து குண்டர் சட்டத்தில் சிறைக்கு அனுப்பினோம். அதன் பிறகு சென்னையில் பிக்பாக்கெட் ஒட்டுமொத்தமாக அடியோடு அழித்து ஒழிக்கப்பட்டது. 

 

 

Next Story

ஆறு கோடி இன்சூரன்ஸ்; அதிகாரிகளை ஏமாற்ற நடந்த நாடகம் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 28

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
rajkumar-solla-marantha-kathai-28

நண்பர்கள் மூவர் இணைந்து போலி லைப் இன்சூரன்ஸ் வாங்கி மாட்டிக்கொண்ட சம்பவம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் விவரிக்கிறார் 

கடந்த வருடம் பேப்பரில் வந்த பிரபலமான வழக்கு இது. அந்த நபர் அமெரிக்காவில் நல்ல பெரிய பதவியில் வேலை செய்து கொண்டிருந்தவர். கொரோனா காலத்தில் வேலை இழந்து ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்தும் தோல்வி அடைந்து ஊருக்கு திரும்புகிறார்.

வந்தவர் ஆறு  கோடி ரூபாய்க்கு லைஃப் இன்சூரன்ஸ் வாங்குகிறார். மூன்று நண்பர்களுடன்  சேர்ந்து திட்டம் செய்கின்றனர். அதாவது அவரைப் போலவே உள்ள போலி நபர் ஒருவரை கொலை செய்து இறந்ததாக லைஃப் இன்சூரன்ஸ் வாங்க திட்டமிடுகின்றனர். அதற்காகவே போலி நபரை கிராமத்திற்கு அழைத்துச் சென்று பாம்பாட்டியை வைத்து பாம்பை கடிக்க வைத்து அந்த நபரை கொன்று விடுகின்றனர்.  

இன்னொரு கூடுதல் போலி நபர் இறந்த உடலை வாங்குகிறார். இறந்த நபரை வைத்து இன்சூரன்ஸ் க்ளைம் வாங்க வருகிறார்கள்.  எங்கள் கம்பெனி இன்வெஸ்டிகேசனை ஆரம்பிக்கிறது. எதற்காக அமெரிக்காவிலிருந்து இங்கே வந்தார், ஏன் பாலிசி எடுத்த மூன்று மாதத்தில் இறந்தார் என்று விசாரித்தோம். பாலிசி எடுத்த உண்மையான அமெரிக்கா நபர் காணவும் இல்லை. அந்த உடலை வாங்கியவர் தன்னை நாமினியில் போட்டிருக்கிறார். 

ஆனால் எல்லாமே முரண்பாடாக இருந்ததில் எங்களுக்கு சந்தேகம் வந்தது. பின்னர் விசாரித்ததில் இறந்தது நிஜ நபரும் இல்லை, பாடியை வாங்கியவரும் போலி. உண்மையான நபர் ஏற்கெனவே இறந்தும் வேறு இருக்கிறார் என்று தெரியவந்தது. மூன்று போலிகள் சேர்ந்து இந்த போலி இன்சூரன்ஸ் நாடகத்தை நடத்தி இருக்கின்றனர். உண்மையைக் கண்டுபிடித்த போலீஸ், விசாரணைக்கு உட்படுத்தி எல்லாரையும் கைது செய்து ரிமாண்டும் செய்து விட்டனர். இந்த வழக்கு இன்னும் ட்ரயலில் தான் இருக்கிறது. 

Next Story

கொள்ளை அடித்து உதவி; மும்பையை கலக்கிய பெண் தாதா - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 27

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
rajkumar-solla-marantha-kathai-27

இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கொள்ளை அடித்து உதவும் ஒரு சம்பவம் குறித்து விவரிக்கிறார்.

மும்பையில் (money in Transit) என்று சொல்லப்படும் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட வழக்கு இது.  75 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு நிறுவனம் சம்பளம் கொடுக்க எடுத்து செல்கிறது. அந்த வண்டியை மறித்து ஒரு மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து மும்பை மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருந்தும், யார் குற்றவாளிகள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரதீப் என்ற நபர் மீது சந்தேகம் எழுந்து விசாரிக்கின்றனர். விசாரணையில், கிரிஷ்மா என்ற பெண்ணின் அறிவுரையின் பேரில் இந்த கொள்ளைகள் நடந்ததாக தெரியவந்தது. கிரிஷ்மா காட்கோபரில் வசித்து வந்தார். அவருக்கு பல வாகனங்கள் மற்றும் பங்களாக்கள் இருந்தன. அந்த பகுதியில் பெரிய ஆளாக மக்கள் பலருக்கு உதவி செய்பவராக இருக்கிறார். இதனால் மும்பை போலீசார் கிரிஷ்மாவாக இருக்கும் என்று ஆரம்பத்தில் நம்பவில்லை. ஆனால், விசாரணையில், மர்ம கும்பல் நடத்திய அனைத்து கொள்ளைகளுக்கும் கிரிஷ்மாதான் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இவர், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 50 சதவீதத்தை உதவி செய்வதற்கு பயன்படுத்தினார். யாரை வைத்து கொள்ளையடித்தார்களோ அந்த கும்பலை 40 நாட்கள் கிரிஷ்மா வெளியில் விடாமல் தன் உடனேயே வைத்திருப்பார். இப்படி வித்தியாசமான முறையில் வழிப்பறி செய்து வந்திருக்கிறார். இந்த வழக்கு 'மனி இன் டிரான்சிட்' என்ற இன்சூரன்ஸ் பெயரில் மும்பையில் இருந்து எங்களுக்கு வந்தது.

இதே போல மும்பையில் 54 வயதான பேபி என்பவர் போதைப்பொருள் கடத்தலில் சிறந்து விளங்கினார். காவல்துறை அதிகாரியை திருமணம் செய்து கொண்டிருந்ததால் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் அவருக்கு சில சலுகைகள் கிடைத்தது. இவர் குறிப்பாக மெட்ரோபில் என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பிரபலமானவர். நார்கோட்டிக் சட்டம் வந்த பிறகு, போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபடுவது கடினம் ஆகி இவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு, மும்பை, காஜா, தூத்துக்குடி, தேனி, கம்பம், வடசென்னை போன்ற இடங்களில் அதிகமாக போதைப்பொருள் விற்பனை நடக்கின்றன. 

போதைப்பொருள் தொழில் எளிமையாக பணம் வந்து சேரக்கூடியது. எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டியதில்லை என்று தாதாக்கள், ரவுடிகள் இதை செய்கிறார்கள். ஆனால் இதை செய்து மாட்டிக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.