Skip to main content

டீக்கடையில் வேலை பார்த்தாலும் டிஃபரன்ஸ் காட்டணும்! - மும்பையை வென்ற 'தோசை' தமிழர் பிரேம் கணபதி | வென்றோர் சொல் #13

Published on 24/08/2020 | Edited on 24/08/2020

 

Pream ganapathy

 

 

"என் பயணம் எங்கும் நிறைவடைந்ததாக எனக்கு தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நிறைவடைதல் என்பது மரணம்தான்..." -வறுமை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தில் இருந்து பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் சென்னை ஓடி வந்து, பின் அங்கிருந்து மும்பை சென்று, இன்று உலக உணவு சந்தையில் தனக்கான முக்கிய இடத்தை பிடித்துள்ள 'தோசா பிளாசா' பிரேம் கணபதி கூறிய வார்த்தைகள் இவை. ஆதிகாலந்தொட்டே தமிழர்களின் வாழ்வியலில் தனித்த உணவாக இடம் பிடித்திருந்த தோசையின் சுவையை இன்று உலக மக்களின் நாக்குகளும் அறிய செய்தவர். 90களின் மத்தியில் நீங்கள் மும்பைக்கு பயணம் செய்து அங்குள்ள ஏதேனும் ஒரு கையேந்தி பவனில் சுவையான தோசை சாப்பிட்டிருந்தீர்கள் என்றால் அது ஒரு வேளை நம் பிரேம் கணபதியின் கடையாகக்கூட இருந்திருக்கலாம். ஆம் இந்த பயணத்தின் மையப்புள்ளி அங்கிருந்துதான் தொடங்குகிறது. அப்படியென்றால் தொடக்கப்புள்ளி??? அது வலிகளும், ஏமாற்றங்களும் நிரம்பிய சராசரி சாதனையாளரின் கதைதான்.

 

பத்தாம் வகுப்பு முடியப்போகிறது. மாணவர்களின் அடுத்த கட்ட திட்டம் என்ன என்பதை அறிய ஆசிரியர் ஒவ்வொருவரிடமாக ஆர்வமாக கேட்கிறார். அனைவரும் வழக்கமான பதில்களைச் சொல்லும்போது, ஒரு மாணவன் "நான் எங்க அண்ணாச்சியின் காப்பித்தூள் கடைக்கு வேலைக்கு போகிறேன்" என்றார். உங்கள் யோசனை சரிதான். அவர் பிரேம் கணபதியேதான்!!! சென்னையில் அண்ணாச்சி கடையில் நூறு ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்கிறார். இந்த பணம் இவர் கடையின் இன்றைய தோசை விலையை விடக் குறைவு. ஒரு வருடம் கழித்து, அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஒருவரின் பேச்சை நம்பி மும்பை செல்ல அவர் பாதியில் கைவிட்டுப் போகிறார். கையில் பெரிய அளவில் பணம் இல்லை... மொழி தெரியாது.. ஆனாலும் திரும்பி செல்ல வேண்டும் என்ற மனம் இல்லை. தமிழர்கள் என்றாலே 'மதராசி' என்று ஏளனமாக பார்க்கும், அழைக்கும் போக்கு இருந்த காலகட்டம் அது. பேக்கரியில் தட்டுகளைத் துடைப்பது, ஓட்டல்களில் பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகள் மும்பையில் ஆரம்பக்கட்டங்களில் அவர் வயிற்றை கழுவ உதவின. ஊருக்கு திரும்பி சென்றால் அவமானப்படுத்துவார்கள் என்ற பயம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் அவரை ஈடுபட வைத்தது. அந்த முழு ஈடுபாடு இன்று இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட கிளைகள், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல வெளிநாடுகளிலும் கிளைகள் திறக்கும் அளவிற்கு வெற்றியாளராக பிரேம் கணபதியை மாற்றியிருக்கிறது.

 

நன்கு புளித்த ஒரு கரண்டி மாவை வைத்து கோடிக்கணக்காக சம்பாதித்து விட முடியுமா என்ற சந்தேகத்திற்கு, 'மாற்றி யோசித்தல்' என்பதுதான் என்னுடைய தொழில் ரகசியம் எனப் பதிலளிக்கிறார் பிரேம் கணபதி. நாமெல்லாம் அதிக பட்சமாக ஸ்பெஷல் தோசை, ஆனியன் தோசை, முட்டை தோசை, மசால் தோசை சாப்பிட்டிருப்போம். ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட தோசை வகைகளை இவர் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். குழந்தைகளுக்கு ஒரு சுவை பிடிக்கலாம், வயதானவர்களுக்கு ஒரு சுவை பிடிக்கலாம், வெள்ளைக்காரர்களுக்கு ஒரு சுவை பிடிக்கலாம். இதையெல்லாம் நிவர்த்தி செய்யும் பட்சத்தில் மட்டுமே உலக சந்தையில் கொடி கட்டிப் பறக்க முடியும். இதற்கான ஆற்றலையும், திறமையையும் பிரேம் கணபதி காலம் அவரைக் கசக்கி பிழிந்த போதே பெற்றுவிட்டார்.

 

இளம் வயதில் மும்பையில் ஒரு டீக்கடையில் சிறிது காலம் வேலை பார்த்திருக்கிறார். அவரது வேலை அருகில் உள்ள கடைகளுக்கும், மார்க்கெட்டுகளுக்கும் டீ கொண்டு சென்று கொடுப்பது. சம்பளம் எல்லாம் கிடையாது, கமிஷன் மட்டும் உண்டு. அந்த கடையில் வேலை பார்த்தவர்களை விட இவர்தான் அதிகம் சம்பாதித்திருக்கிறார். "ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் டீ குடிப்பதற்கு பிடிக்கும்... சர்க்கரை குறைவு, அதிகம்... டீத்தூள் குறைவு, அதிகம் என அவர்கள் கோரிக்கை வைப்பார்கள். பல கடைகளுக்கு ஓடிஓடிச் சென்று கொடுப்பதால் இதை மற்றவர்கள் மறந்துவிடுவார்கள். நான் மனதுக்குள் குறிப்பெடுத்து நியாபகம் வைத்துக்கொள்வேன். அதனால் சிறிது காலத்திலேயே பெரும்பாலான கடைக்காரர்கள் என்னிடம்தான் டீ கொடுத்து விட வேண்டும் என என் முதலாளியிடம் கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அங்கு அதிக டீ விநியோகம் செய்பவனாக ஆகிப்போனேன்...". வாழ்க்கை நமக்கான பாடத்தை ஒவ்வொரு நொடியும் கற்றுக்கொடுத்து கொண்டேதான் இருக்கிறது. அதில் நாம் எதை கவனிக்கிறோமோ அதில் நாம் சிறந்தவராகிறோம் என்பதற்கு பிரேம் கணபதியின் வாழ்க்கையே நம் கண்முன் நிற்கும் ஒரு ஆகப்பெரும் தமிழ்சாட்சி.  

 

"நாங்கள் தள்ளுவண்டியில் கடை போட்டிருக்கும்போது இரவு நீண்ட நேரம் திறந்திருந்த காரணத்திற்காக அதிகாரிகள் வந்து எங்கள் கடையை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். நாலு பலகை இருந்தாலும் அதை வைத்து மறுநாள் கடை போட்டுவிடுவோம். பின்பு ஒரு உணவகம் ஆரம்பித்தோம். நம்மை மற்றவர்கள் நினைவு வைத்திருக்க வேண்டும் என்றால் நமக்கான ஒரு தனித்த அடையாளம் வேண்டும் என்பது புரிந்தது. பீட்சா ஹட் போன்ற நிறுவனங்கள் அவர்கள் தயாரிப்பு பொருட்களின் பெயரிலேயே நிறுவனத்தின் பெயரை வைத்திருந்தன. அதன்படியே என் கடைக்கு 'தோசா பிளாசா' எனப் பெயர் வைக்க தீர்மானித்தேன்...". பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவருக்கு எவ்வளவு தீர்க்கமான பார்வை என்று பாருங்கள்!!!

 

வாழ்க்கை தினசரி கற்றுக்கொடுக்கும் பாடத்தை சரியாக உள்வாங்கி காலம் எனும் பயண ஓட்டத்தில் சரியான கனவினை நோக்கி ஓடுவோம்.... வெற்றி எனும் கோடு நம் பாதத்தை முத்தமிட்டு வரவேற்க காத்திருக்கின்றது.

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.