Skip to main content

பாஜகவின் தேர்தல் யுத்திகள் - 1 பொக்ரான் அணுகுண்டு சோதனை!

Published on 02/03/2019 | Edited on 02/03/2019


 

pokhran



பாஜக ஆட்சிக் காலத்தில் எத்தனையோ பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மட்டுமே பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றதைப் போல ஒரு தோற்றத்தை பிரதமர் மோடி தொடர்ந்து உருவாக்கி வருகிறார்.

 
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்குள் நடைபெற்ற பல பயங்கரவாத தாக்குல்கல்களுக்கு இந்துப் பயங்கரவாதமே பின்னணியில் இருந்திருப்பதை தேசிய புலனாய்வு நிறுவனம் ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கிறது. இந்தத் தாக்குதல்களுக்கு பாஜகவைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா உள்ளிட்ட பல முக்கிய சாமியார்களுக்கு தொடர்பு இருப்பதும் அம்பலமாகி இருக்கிறது.
 

அதுபோல, பாகிஸ்தானுடனான பதற்றத்தை அதிகரித்து அதை அப்படியே தேர்தலுக்கு பயன்படுத்தியதும், இந்திய வீரர்களின் உயிர்த் தியாகத்தை தனது அரசியல் லாபத்துக்கு பயன்படுத்தியதும் பாஜகதான் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
 

இந்திய ராணுவத்தை தனது நலனுக்காக பாஜக அரசு எப்போது பயன்படுத்து தொடங்கியது என்றால், 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் முதன்முறையாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்தவுடனேயே தொடங்கிவிட்டது.
 

பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு!

 
1974 ஆம் ஆண்டு மே மாதத்திலேயே இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் இந்தியா பொக்ரானில் முதல் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது. அன்றே இந்தியா அணு ஆயுத நாடு என்ற பெருமையை பெற்றுவிட்டது. அதன்பிறகு, அணு ஆயுதங்கள் தயாரிப்புக்கு இந்தியா தகுதிபெற்றுவிட்டது.


 

pokhran


 

இரண்டாம் உலகப்போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்ட சமயத்திலேயே இந்தியாவில் அணு ஆயுத திட்டம் குறித்து 1944 ஆம் ஆண்டு அணு இயற்பியலாளர் ஹோமி பாபா முயற்சியை தொடங்கிவிட்டார். அதற்காக டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் என்ற நிறுவனத்தை அவர் தொடங்கினார்.

 
1950களில் தொடக்கநிலை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. புளூடோனியம் தயாரிப்பு அணுகுண்டுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பாக திட்டமிடப்பட்டன. 1962 ஆம் ஆண்டு சீனாவுக்கும், இந்தியாவுக்கும் போர் நடந்தது. அதைத் தொடர்ந்து 1964 ஆம் ஆண்டு சீனா அணுகுண்டு வெடித்து இந்தியாவை அச்சுறுத்தியது. லால்பகதூர் சாஸ்திரி பிரதமரான பிறகு விக்ரம் சாராபாய் இந்தத் திட்டத்துக்கு தலைமை ஏற்றார். சாஸ்திரி அணு ஆயுத தயாரிப்பை ஊக்குவிக்கவில்லை.
 

இந்நிலையில்தான் 1966ல் இந்திய பிரதமராக பொறுப்பேற்ற இந்திரா இந்தியாவின் அணு ஆயுதத் திட்டத்தை தீவிரப்படுத்தினார். இந்தத் திட்டத்துக்கு ராஜா ராமண்ணாவை தலைவராக்கினார். அணு ஆயுதங்களைத் தயாரிப்பதிலும் ஆர்வமாக இருந்தார். இதன் விளைவாகவே, 1974 ஆம் ஆண்டு பொக்ரானில் இந்தியாவின் முதல் அணுகுண்டை வெடித்தது இந்தியா.
 

இதையடுத்து உலகின் வல்லரசுகள் பதற்றம் அடைந்தன. இந்தியா அணு ஆயுத நாடாக மாறுவதை அவை ஏற்கவில்லை. இந்தியா மீது அணு தொழில்நுட்பத் தடைகளை உலகின் பல நாடுகள் விதித்தன.
 

தொடர்ந்து இந்தியாவில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ததால் இந்திரா ஆட்சியை இழக்க நேரிட்டது. அதன்பிறகு வந்த ஜனதா ஆட்சியில் அணு ஆயுதத்திட்டம் பின்னுக்கு தள்ளப்பட்டது. 1980ல் மீண்டும் இந்திரா பிரதமரானதும் அணு ஆயுதத் திட்டத்துக்கு ராஜா ராமன்னாவை தலைவராக்கி வேகம் கொடுத்தார். பாகிஸ்தான் அந்த நேரத்திலேயே ஏராளமான நிதியை ஒதுக்கி அணு ஆயுதத் திட்டத்தை விரைவுபடுத்தியதை அறிந்ததால் இந்திராவும் விரைவுபடுத்தினார். 1984ல் இந்திரா கொல்லப்பட்டதும் பிரதமரான ராஜிவ் காந்தியும் இந்தத் திட்டத்துக்கு போதுமான நிதியை ஒதுக்கினார்.


 

pokhran


 

அணுகுண்டு, ஏவுகணைகள் தயாரிப்பிலும் சோதனையிலும் இந்தியா முன்னேற்றம் கண்டது. ஆனால், 1989ல் தேசியமுன்னணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றதும் சற்று சுணக்கம் ஏற்பட்டது. ஆனால், 1991ல் ஆட்சிப் பொறுப்பேற்ற நரசிம்மராவ் காலத்தில் அணுகுண்டு தயாரித்து முடிக்கப்பட்டது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த அப்துல்கலாம் உள்ளிட்டோர் அந்த அணுகுண்டை சோதனை செய்ய விரும்பியும் நரசிம்மராவ் அனுமதிக்கவில்லை. பாகிஸ்தானும் அணுகுண்டு தயாரித்து வைத்திருப்பதை அறிந்ததால், இந்தியா வெடித்தால் அதுவும் வெடித்து அணு ஆயுத நாடு என்ற தகுதியைப் பெற்றுவிடும் என்பதால் அவர் மறுத்தார்.
 

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், 1998 ஆம் ஆண்டு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமரான வாஜ்பாய், அணுகுண்டை வெடிக்கு அனுமதி கொடுத்தார். இந்தியா வெடித்தவுடன், அதுவரை பொறுமையாக இருந்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு நிகராக அடுத்தடுத்து அணுகுண்டுகளை வெடித்தது. இதன்மூலம் பாகிஸ்தானையும் இந்தியாவுக்கு நிகரான நாடாக வெளிப்படுத்தியதே வாஜ்பாய் அரசின் சாதனையாகிவிட்டது.

 

கூட்டணிக் குழப்பத்தால் 13 மாதங்களில் ஆட்சியை இழந்த வாஜ்பாய் தனது அரசுதான் இந்தியாவை அணு ஆயுத நாடாக்கியது போன்ற பிரச்சாரத்தை மேற்கொண்டது. இந்தியாவை ஆண்ட முந்தைய அரசுகளின் சாதனையை தனது சாதனையாக கூச்சமில்லாமல் பிரச்சாரம் செய்தது பாஜக.

 

அடுத்து கார்கில் சண்டையை குறித்து பார்க்கலாம்… 

 

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.