Skip to main content

கொடுப்பினையா, கொடுப்பனையா ? தொழிற்பெயர் விகுதியில் இருக்கிறது விடை - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 40

Published on 26/06/2019 | Edited on 17/07/2019

தொழிற்பெயர்களைப் பற்றிய இலக்கணப் பகுதிகளாகட்டும், நம் பாடத்திட்டங்களாகட்டும், போகிற போக்கில் ஒரு விளக்கத்தைக் கொடுத்துவிட்டு எளிமையாகக் கடந்துவிடுகின்றன. நம் மாணாக்கர்களும் அதனை ஒரு பத்தியளவில் படித்து முடித்துவிட்டுச் செல்கின்றனர். ஆனால், நம் பெயர்ச்சொற்களின் அடிப்படைகள் பலவும் அங்கேதான் பொதிந்திருக்கின்றன. புதிதாய் ஒரு பெயர்ச்சொல்லை ஆக்கும் வாய்ப்பும் தொழிற்பெயரில்தான் அமைந்திருக்கின்றது. அதன் இன்றியமையாமையை உணர்ந்திருந்தால் தொழிற்பெயர் குறித்து ஆழ்ந்து கற்பித்திருப்பர். ஒவ்வொருவரும் பெயர்ச்சொல் ஆக்கும் திறனை வளர்த்துக்கொண்டிருப்பர்.
 

soller uzhavu


முதலில் தொழிற்பெயர் என்றால் என்ன என்று பார்க்கலாம். தொழிற்பெயர் என்பது வேறொன்றுமில்லை. ஒரு வினையைக் குறிக்கின்ற பெயர்தான் தொழிற்பெயர் எனப்படும். ஒரு வினை என்பது ஏவல் பொருள் தரும் தன்மையோடு இருக்கும். வா, வருகிறான், வந்தது, வந்து ஆகிய அனைத்துமே வினைச்சொல் வடிவங்கள்தாம் என்றாலும் அச்சொற்கள் அனைத்திற்கும் வா என்பதே வேர். அதனை வினைவேர் என்றும் சொல்வார்கள். வினைவேர்கள் இடுகுறித்தன்மையோடு தானாகத் தோன்றியவை. நம் மொழியின் ஆணிவேர்கள் என்று கருதத்தக்க சொற்கள். அவை ஏவல் பொருள் தரும். வா என்ற ஒரு வினைவேரிலிருந்து வந்தான், வந்தாள், வந்தார்கள், வந்தது என பல வினைமுற்றுகள் பிறக்கின்றன. வந்து, வந்த,  வர, வருகின்ற போன்ற எச்சவினைகள் பிறக்கின்றன. வருகை, வரவு, வருமானம், வருதல், வரும்படி போன்ற தொழிற்பெயர்களும் பிறக்கின்றன. இந்தத் தொழிற்பெயர்கள்தாம் புதுப்பெயர்ச்சொற்களை ஆக்கிக் கொள்வதற்கான அகன்ற வாயில்கள்.  

ஏவல் பொருள் தரும் வினைவேர்ச்சொல் தானாகவே ஒரு பெயர்ச்சொல்லாகப் பயிலும். அடி, உதை, குத்து, இடி, கொதி முதலான வினைச்சொற்கள் கட்டளைப்பொருளும் தந்து வினைவேராகப் பயில்கின்றன. அந்தந்த வினைகளைக் குறிக்கும் பெயர்களாகவும் பயன்படுகின்றன. ஓர் அடி அடி, ஒரு குத்து குத்து… இத்தொடர்களைப் பாருங்கள். இவற்றில் அடி என்று பெயராகவும் வருகிறது. அடி என்று வினையாகவும் ஏவுகிறது. இத்தகைய பெயர்களை முதனிலைத் தொழிற்பெயர்கள் என்பார்கள். முதனிலை என்பது வினைவேரைத்தான் குறிக்கிறது. வினைவேர்ச் சொல்லே பெயர்ச்சொல்லுமாகி அந்த வினையை, தொழிலைக் குறிப்பதால் முதனிலைத் தொழிற்பெயர் என்று பெயர் பெற்றது.

கெடு, பெறு, விடு, படு, அறு போன்ற வினைவேர்ச்சொற்களின் முதலெழுத்து நெடிலாகத் திரிந்தால் போதும். கேடு, பேறு, வீடு, பாடு, ஆறு என்னும் பெயர்ச்சொற்கள் ஆகிவிடும். வினைவேராகிய முதனிலையே இவ்வாறு நெடிலாகத் திரிந்து பெயர்ச்சொல்லாவதால் இவை முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள் எனப்படும். கெடுவதன் வழியே அடையப்படுவது கேடு. பெறுவதன் வழியே கிட்டுவது பேறு. விடுவதால் கிடைப்பது வீடு (வீடுபேறு). நிலத்தை அறுத்துச் செல்லும் தன்மையால் அது ஆறு.

மேற்சொன்ன வினைவேர்கள் அவ்வகையால் மட்டுமே பெயராகின்றனவா ? வேறு வகையில் பெயராவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா ? ஆம். இருக்கின்றன. முதனிலைத் தொழிற்பெயர்களும், முதனிலை திரிந்த தொழிற்பெயர்களும் மட்டுமின்றி இன்னொரு வகையும் இருக்கின்றது. அதற்கு விகுதி பெற்ற தொழிற்பெயர் என்று பெயர்.

மேற்சொன்ன வினைகளோடு தல் என்ற ஒரெயொரு விகுதியைச் சேர்த்துக்கொள்வோம். என்னென்ன தொழிற்பெயர்கள் கிடைக்கின்றன ? விகுதி என்பது வேறொன்றுமில்லை. ஒன்றோ சிலவோ எழுத்துகளால் ஆகி ஒரு சொல்லின் கடைசியில் ஒட்டிக்கொள்ளும் சொல்லுருபுதான் விகுதி எனப்படும். இங்கே தல் என்பது தொழிற்பெயர் விகுதிகளில் ஒன்று.

தல் என்பதனை மேற்சொன்ன வினைவேர்களின் விகுதிகளாக்கிப் பார்ப்போம். என்னென்ன தொழிற்பெயர்ச்சொற்கள் கிடைக்கின்றன ? அடித்தல், உதைத்தல், குத்துதல், இடித்தல், கொதித்தல் என்று ஆகிவிட்டன. அடி என்ற ஒரு வினைவேர் அடி என்ற முதனிலைத் தொழிற்பெயருமாயிற்று. அடித்தல் என்ற தல் விகுதி பெற்ற தொழிற்பெயருமாயிற்று. அடி என்ற வினைவேரைக்கொண்டு வேறு என்னென்ன தொழிற்பெயர்களை ஆக்கலாம் ? அடித்தல் எனலாம். அடிப்பு எனலாம். இப்படி வெவ்வேறு விகுதிகளைச் சேர்ப்பதன் வழியாகப் பலப்பல தொழிற்பெயர்களை ஆக்கிக்கொள்ளலாம். அந்தத் தொழில்வழியாக நிகழ்கின்ற எவ்வொரு செயலுக்கும் செயற்கருவிக்கும் அதனையே பெயராக்கலாம்.

தொழிற்பெயர் விகுதிகளாகத் தக்கன என்று இருபத்திரண்டுக்கும் மேற்பட்ட விகுதிகளைச் சொல்கிறார்கள். ஒரு வினைவேரோடு அவ்விகுதிகளில் பலவற்றையும் சேர்த்து வெவ்வேறு தொழிற்பெயர்களாக்கலாம். தொழிற்பெயர் விகுதிகளாவன எவை ? தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரபு, ஆனை, மை, து போன்றவை தொழிற்பெயர் விகுதிகள்.

அடக்கு என்று ஒரு வினைவேர் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனோடு மேற்சொன்ன தொழிற்பெயர் விகுதிகளைச் சேர்த்து வெவ்வேறு தொழிற்பெயர்களை உருவாக்கலாம்.


தல் விகுதி சேர்த்தால் அடக்குதல்

அல் விகுதி சேர்த்தால் அடக்கல்

அம் விகுதி சேர்த்தால் அடக்கம்

கை விகுதி சேர்த்தால் அடக்குகை

ஒரு வினைவேரினைக் கொண்டு இங்கே நான்கு தொழிற்பெயர்களை உருவாக்கிவிட்டோம்.

இவை மட்டுமின்றி இன்னும் என்னென்னவோ தொழிற்பெயர் விகுதிகள் நூல்களிலும் பேச்சு வழக்குகளிலும் மறைந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் தேடிக் கண்டடைந்தால் தமிழின் ஒரு வினைவேரை வைத்துக்கொண்டு எண்ணற்ற சொற்களை ஆக்கலாம். எடுத்துக்காட்டாக, பனை என்பதும் தொழிற்பெயர் விகுதிதான். அதன் வழியேதான் கற்பனை, விற்பனை, கொடுப்பனை, படிப்பனை போன்ற தொழிற்பெயர்கள் உருவாகின்றன. பனை என்பதே தொழிற்பெயர் விகுதி என்பதால் கொடுப்பனை, படிப்பனை என்பதுதான் சரி. கொடுப்பினை, படிப்பினை என்பது தவறு.   

இப்போது நமக்குத் தொழிற்பெயர்களைப் பற்றித் தெரியும். தொழிற்பெயர் விகுதிகளும் தெரியும். அவற்றிலிருந்து தொழிற்பெயர்களை எவ்வாறெல்லாம் உருவாக்கலாம் ? அவற்றை எத்தகைய பொருள்களில் பயன்படுத்தலாம் ? அடுத்து பார்ப்போம்.

 

முந்தைய பகுதி:

 

புதிதாய் ஒரு சொல்லை ஆக்குவது எப்படி ?  கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி39
 

அடுத்த பகுதி:

ஒரு வினைவேரிலிருந்து தோன்றும் எண்ணற்ற தொழிற்பெயர்கள் -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 41
 

 

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.

Next Story

'சீரோடும் சிறப்போடும் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு' - தமிழக அரசு அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'Second World Tamil Classical Conference with Uniformity and Excellence'-Tamil Government Announcement

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் முதலாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றிருந்த நிலையில், சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 'இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் கணித்தமிழும் இணைந்து நற்றமிழாகச் சிறப்புடன் திகழ்கிறது. திமுக பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தனிப்பெரும் நிலையில் தகுதி வாய்ந்த தமிழர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்குவதோடு, தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவது, பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்கால தமிழர்களின் எழுத்தறிவு, வாழ்வியல் முறைகளைப் பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்தது.

அதன் தொடர்ச்சியாக 'பொருநை' அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளும் நமது பண்பாட்டின் மணிமகுடங்களாகும். வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 5 நாட்கள் சீரோடும் சிறப்போடும் நடைபெறும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டைத் தொடர்ந்து இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.