Skip to main content

பெண்ணின் கூந்தலை அள்ளி முடிக்க ஐந்து வகைகள் உள்ளன - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 37

Published on 07/05/2019 | Edited on 22/05/2019

எண்களோடு தொடர்புடைய சொற்கள் பல நம் மொழியில் இருக்கின்றன. ஒரு வழியில் போவதோ வருவதோ மட்டும்தான் முடியும் என்றால் அதனை ‘ஒருவழி’ என்போம். ஒருவழிப் பாதை. போகவும் முடியும் வரவும் முடியும் என்றால் அதனை ‘இருவழி’ என்போம்.
 

soller uzhavu


‘ஒருசுடர்’ என்றால் அது கதிரவனைக் குறிக்கும். ‘இருசுடர்’ என்றால் அது கதிரையும் நிலவையும் குறிக்கும். ‘இருபாலரும் வரலாம்’ என்றால் ஆண்பால், பெண்பால் என இருவரும் வரலாம் என்று பொருள். அவர் எழுதிய நூல்களைப் பிறவற்றோடு ஒப்பிடுகையில் ‘ஒருபடி’ மேலே இருக்கிறது என்கிறார்கள். உயர்வான இடத்தில் இருப்பது ‘ஒருபடி’ உயர்வாகக் கூறப்படுகிறது. ‘ஒருகை பார்த்துவிடுகிறேன்’ என்கிறோம்.

ஏதேனும் ‘ஒருகை’ ஓங்கி நிற்குமாறு மோதி நிலை நிறுத்துவேன் என்று கூறுவதாகக் கருதலாம். இவ்வாறு ஒவ்வோர் எண்ணோடும் தொடர்புடைய சொற்கள், சொற்றொடர்கள் பல இருக்கின்றன. ஒன்றினைத் தனியே கூறுவதற்கு மாற்றாக அவ்வெண்ணைப் பயன்படுத்தி ஒரே சொல்லில் தொகுத்துக் கூறிவிடலாம். எண்ணுப் பெயர்களால் ஒரு மொழிக்குக் கிடைக்கும் சொல்வளம் என்பது இதுதான்.

மூன்று என்ற எண்ணைச் சுற்றி அமைந்த சொற்களுக்கு அளவில்லை. இயல், இசை, நாடகத்தமிழ் என்று விரித்துச் சொல்லாமல் ‘முத்தமிழ்’ என்றால் போதும். அங்கே மூன்றின் குறிப்பு இயலும் இசையும் நாடகமுமாம். முக்கனி என்றால் மா, பலா, வாழை. சேரர் சோழர் பாண்டியர் என்று விரித்துக் கூற வேண்டியதில்லை. மூவேந்தர் என்றாலே போதும்.

மூன்று ஆறுகள் கூடும் ஊர்கள் முக்கூடல் என்றே அழைக்கப்படும். மூன்று தெருக்கள் ஒன்றோடொன்று கலக்குமிடம் முச்சந்தி. வயிற்றுத் தீ என்று பசியைச் சொல்கிறோம். முத்தீ என்று மூவகைத் தீயினைப் பற்றிக் கூறுகிறார்கள். வயிற்றுத் தீ, காமத் தீ, சினத் தீ ஆகியனவே அம்மூன்று. முப்பாட்டன் என்றால் பாட்டனின் தந்தை. தந்தை, பாட்டன், முப்பாட்டன் என்று பின்னோக்கிச் சென்றால் மூன்றாம் தலைமுறை. அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றினையும் முப்பால் என்கிறோம்.
 

soller uzhavu


‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ என்று ஒரு திரைப்படம்கூட வந்தது. அதில் இடம்பெற்ற முப்பொழுது என்பது என்ன? மூன்று பொழுதுகளைக் குறிப்பதுதான் முப்பொழுது. காலை, நண்பகல், மாலை என்னும் மூன்று பகல் பொழுதுகளே முப்பொழுது. ஒரு திங்களில் மூன்று மழை பெய்வது மும்மாரி. இப்படி மூன்றினைக் குறித்து ஆகிய சொற்றொடர்கள் அந்தந்தப் பொருளைச் சுட்டும்படி பரவியிருக்கின்றன.

நான்கு என்ற எண்ணில் உள்ள சொற்களை நினைவுபடுத்திப் பாருங்கள். கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என்பதற்கு மாற்றாக ‘நாற்றிசை’ என்றாலே போதும். நான்மறைகள் என்று வடவர் வேதங்கள் அறியப்படுகின்றன. பாலை தவிர்த்த குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் நானிலம் எனப்படும். அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகிய நான்கும் பெண்களுக்குக் கற்பிக்கப்பட்ட நாற்குணம். யானை, குதிரை, தேர், காலாட்படைகளைக் கொண்ட அரசன் நாற்படைகளைக் கொண்டவனாவான். நான்முகன் ஆவான் அருகன்.

ஐந்து என்ற எண்ணால் ஆகிய சொற்கள் பற்பல. ஐம்பொறி என்றால் கண் காது மூக்க நாக்கு தோல். ஐம்பேரியற்கை (பஞ்ச பூதங்கள்) என்பது நீர் நிலம் காற்று தீ விசும்பு. பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் கலந்தது ஐம்பொன். ஐம்பால் என்பது ஆண்பால் பெண்பால் பலர்பால் ஒன்றன்பால் பலவின்பால் ஆகிய ஐவகைப் பால்பகுப்புகளைக் குறிப்பதுதான். ஐம்பால் என்பதற்கு இன்னோர் அழகிய பொருளும் உள்ளது.   

பெண்கள் தங்கள் கூந்தலை ஐந்து வகைகளாக முடிப்பதற்கும் ஐம்பால் என்று பெயர். இது சங்க காலக் குறிப்பு. ஒரு பெண் தன் கூந்தலை ஐந்து வகைகளாக முடியிடுகிறாள். முடி, கொண்டை, குழல், சுருள், பனிச்சை என்பனவே அவ்வைந்து வகைகளாம்.

முடி என்பது என்ன ? மலையின் உச்சிப் பகுதியை முடி என்கிறோம். அதுபோல ஒரு பெண் தன் கூந்தலை மலையின் முடியைப்போலத் தன் தலையுச்சியில் வைத்து முடிவது முடி எனப்படும். கொண்டை என்பது நமக்குத் தெரியும். கூந்தலைச் சுருட்டி இடப்பக்கமோ வலப்பக்கமோ திரளாகத் தொகுத்துக்கொள்வது. கூந்தலை மலர்ச்சரங்களோடு வைத்துப் பின்னிச் செருகினால் அதற்குச் சுருள் என்று பெயர். கூந்தலை அள்ளி முடிந்தால் அதற்குக் குழல் என்று பெயர். கூந்தலைச் சடையாகப் பின்னிக்கொண்டால் அதற்குப் பெயர் பனிச்சை. இத்தகைய ஐவகைக் கூந்தல் முடிமுறைகளையும் ஐம்பால் என்கின்றனர். 

 

முந்தைய பகுதி:

எரி என்னும் சிறுசொல்லுக்குப் பற்பல பயன்பாடுகளா ? - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 36
 

அடுத்த பகுதி:

துப்பில்லாதவன் என்றால் என்ன தெரியுமா ? - சொல்லேர் உழவு பகுதி 38

 

 

 

Next Story

“தமிழில் பேச முயற்சிக்கிறேன்” - வேலூரில் பிரதமர் மோடி பேச்சு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (10.04.2024) வேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, அரக்கோணம், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “எனது அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே, வணக்கம். தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நமது புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்குகிறது. உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன்.

தமிழகத்தின் பூமியான வேலூர் புதிய சரித்திரம் படைக்கப் போகிறது என்பது டெல்லியில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். தமிழகத்தில் பாஜக, பாமகவுக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு கிடைத்து வருகிறது. இந்தியா இன்று உலகில் வல்லரசாக வளர்ந்து வருகிறது, இதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளித் துறையில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது. உற்பத்தியில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகத்தின் கடின உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் பாதுகாப்பு வழித்தடம், இந்த மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்.

"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

தமிழகத்தை பழைய சிந்தனையில் சிக்க வைக்க நினைக்கும் திமுக, பழைய அரசியலில், ஒட்டுமொத்த திமுகவும் ஒரு குடும்பத்தின் நிறுவனமாகிவிட்டது. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை. திமுகவில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும், திமுகவில் முன்னேறுவதற்கும் மூன்று முக்கிய அளவுகோல்கள் உள்ளன. அந்த மூன்று முக்கிய அளவுகோல்கள், குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தமிழர் எதிர்ப்பு ஆகும். போதை மருந்து மாஃபியாக்கள் யாருடைய பாதுகாப்பில் உள்ளனர். என்சிபியால் கைது செய்யப்பட்ட போதை மருந்து மாபியா கும்பல் தலைவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்.

திமுக மாநிலம், மதம், சாதியின் பெயரால் மக்களைச் சண்டையிட வைக்கிறது. பிரித்து ஆட்சி செய்யும் அரசியலை மக்கள் புரிந்து கொள்ளும் போது திமுகவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்பது திமுகவினருக்கு தெரியும். அதனால்தான் வாக்குக்காக மக்களைத் தங்களுக்குள் சண்டையிட வைக்கிறார்கள், திமுகவின் பல தசாப்த கால ஆபத்தான அரசியலை நான் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளேன். ஐக்கிய நாடுகள் சபையில், நமது தமிழ் உலகின் பழமையான மொழி என்பதை உலகம் முழுவதும் அறியும் வகையில் தமிழில் பேச முயற்சிக்கிறேன். காசியின் எம்.பி.யாக, காசி தமிழ்ச் சங்கத்தை மேலும் பெருமைப்படுத்த உங்களை அழைக்க வந்துள்ளேன். இரண்டாவதாக, நான் குஜராத்தில் பிறந்தேன், குஜராத்தைச் சேர்ந்த பல குடும்பங்களும் இங்கு வாழ்கின்றன. குஜராத்தியாக, உங்களை சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கத்திற்கு அழைக்கிறேன்.

"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

இன்று நாடு முழுவதும் காங்கிரஸும், திமுகவும் செய்யும் இன்னொரு போலித்தனத்தைப் பற்றி மக்கள் விவாதிக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கினர். எந்த அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு யாருடைய நலனுக்காக எடுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் மௌனம் காக்கிறது. அந்தத் தீவின் அருகே சென்று மீன் பிடிக்கும்போது தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட மீனவர்களைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து விடுவித்து அழைத்து வருகிறது. இதுமட்டுமின்றி, ஐந்து மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நான் அவர்களை உயிருடன் மீட்டேன். திமுகவும், காங்கிரசும் மீனவர்களுக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல, தேசத்தின் குற்றவாளிகள்” எனப் பேசினார். 

Next Story

'சீரோடும் சிறப்போடும் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு' - தமிழக அரசு அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'Second World Tamil Classical Conference with Uniformity and Excellence'-Tamil Government Announcement

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் முதலாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றிருந்த நிலையில், சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 'இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் கணித்தமிழும் இணைந்து நற்றமிழாகச் சிறப்புடன் திகழ்கிறது. திமுக பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தனிப்பெரும் நிலையில் தகுதி வாய்ந்த தமிழர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்குவதோடு, தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவது, பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்கால தமிழர்களின் எழுத்தறிவு, வாழ்வியல் முறைகளைப் பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்தது.

அதன் தொடர்ச்சியாக 'பொருநை' அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளும் நமது பண்பாட்டின் மணிமகுடங்களாகும். வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 5 நாட்கள் சீரோடும் சிறப்போடும் நடைபெறும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டைத் தொடர்ந்து இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.