Skip to main content

தோல்வி எப்படி வந்தது? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 33

Published on 20/02/2019 | Edited on 13/03/2019

தமிழ்மொழிக்கு அழகிய இயற்கை ஒன்று இருக்கிறது. ஆயிரம் பெயர்ச் சொற்களைப் புதிது புதிதாக உருவாக்கலாம். ஆனால், ஒரேயொரு வினைச்சொல்லைக்கூட நம் மொழியில் புதிதாய் உருவாக்கிவிட இயலாது. தொன்மைச் சிறப்பு மிக்க செம்மொழிகள் பலவற்றுக்கும் இவ்வியல்பு இருக்கக்கூடும். 

 

soller uzhavu

 

ஒரு மொழியின் தனித்தியங்கும் ஆற்றல் அதன் உயிர்போன்ற வினைச்சொற்களில்தான் பொதிந்திருக்கிறது. தமிழ் மொழியானது வினைச்சொற்களால் ஆகிய மொழி என்று நான் முன்பே கூறியது நினைவிருக்கலாம். நம்முடைய பெயர்ச்சொற்கள் பலவும் வினைச்சொல் வேர்களிலிருந்து தோன்றியவையே.

 

நில், நட, எழு, பார், உண், உறங்கு போன்றவை வினைச்சொற்கள். அச்சொற்கள் ஏற்கெனவே நம்மொழியில் பயில்பவை. நில் என்னும் பொருள்தரும் புதிய வினைச்சொல் ஒன்றை உருவாக்கிவிட முடியுமா ? நட என்னும் பொருள்தரும் புதிய வினைச்சொல் ஒன்றை உருவாக்கிவிட முடியுமா ? ஒவ்வொரு வினைச்சொல்லுக்கும் நேரான புதிய வினைச்சொல்லை ஆக்க முடியுமா ? முடியவே முடியாது. வினைச்சொல் ஏற்பு நம்மொழிக்கு இல்லை. 
 

நீக்கு என்னும் பொருளில் ஓர் ஆங்கிலச் சொல் வந்தால் அதனை நாம் ஆங்கிலத்தில் அப்படியே சொல்வதில்லை. Delete என்று சொல்வதில்லை. Delete என்பதைப் பெயராகக்கொண்டு முன்னொட்டாக்கி “டெலிட்பண்ணு, டெலிட்செய்” என்றுதான் சொல்கிறோம். இங்கே பண்ணு என்பதும் செய் என்பதும் நம் மொழி வினைச்சொற்கள். வெறுமனே ‘டெலிட்” என்று கட்டளையிட்டால் அங்கே நாம் ஆங்கிலம் பேசுகிறோம். தமிழைப் பேசவில்லை. ஆங்கிலச் சொல்லைத் தமிழுக்குள் கலக்கப் பார்த்தால் டெலிட்பண்ணு, டெலிட்செய் என்று உரிய வினைச்சொற்களை உடன் சேர்க்கிறோம். வாக்பண்ணு, குக்பண்ணு, டர்ன்பண்ணு, திங்க்பண்ணு, ஸ்டார்ட்பண்ணு, பாஸ்பண்ணு,  பெயிலாகாதே... என்று பயன்படுத்தப்படும் எல்லாச் சொற்களும் வினைவேராக ஒரு தமிழ்ச்சொல்லைக் கொண்டே முடிவது இதனால்தான்.  தமிழ் மொழியானது பிறமொழிச் சொல்லைப் பெயராகத்தான் ஏற்குமேயன்றி வினையாக ஏற்பதில்லை என்று அடித்துச் சொல்லலாம். இந்தத் தன்மைதான் நம் மொழியைப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ வைத்தது, வாழ வைக்கிறது. இனியும் வாழும். 

 

soller uzhavu


 

வினைச்சொற்களில் இருந்துதான் பெயர்ச்சொற்களும் உருவாகின்றன. நில் என்ற வினைச்சொல்லிலிருந்து நிற்றல் என்ற பெயர்ச்சொல் உருவாகிறது. நிற்கை, நிற்பு, நில்லல் என்று மேலும் மேலும் பெயர்ச்சொற்களை உருவாக்கிச் செல்லலாம். இவ்வாறு ஒரு வினைவேரோடு ஒரு பெயர்ச்சொல் விகுதியைச் சேர்த்து உருவாக்கும் பெயர்களுக்குத் தொழிற்பெயர்கள் என்று பெயர். முயற்சி, பயிற்சி என்பன பெயர்ச்சொற்கள். இவை முயல், பயில் ஆகிய வினைவேர்களோடு சி என்னும் தொழிற்பெயர் விகுதி சேர்வதால் உருவாகின்றன. 
 

முயல் + சி = முயற்சி, 

பயில் + சி = பயிற்சி.


முயல் என்ற வினைவேரிலிருந்து முயற்சி என்ற பெயர்ச்சொல் தோன்றிய பிறகு அதனை வினைச்சொல்லாக்க முடியுமா ? சிலர் முயற்சித்தான் என்று எழுதுகிறார்கள். அது பெரும்பிழை. வேண்டுமானால் ‘முயற்சி செய்தான்’ என்று எழுதலாம். பயில் என்ற வினைவேரிலிருந்து பயிற்சி என்ற தொழிற்பெயர் தோன்றிய பிறகு பயிற்சித்தான் என்று எழுத இயலுமா ? இயலாது. நமக்கு முயல், பயில் என்னும் வினைவேர்கள் இருக்கின்றன. அவை முயன்றான், பயின்றான் என்று தெள்ளத் தெளிவான வினைமுற்றுகளாகும். மொழியின் இவ்வியற்கை தெரியாதவர்கள்தாம் முயற்சித்தான் என்று எழுதுவார்கள்.


நம் மொழியில் மறைந்து போனவை ஆயிரக்கணக்கான சொற்கள் இருக்கக்கூடும். அவற்றில் ஒரேயொரு வினைச்சொல்லைக் கண்டுபிடித்துவிட்டோம் என்றால் அவ்வினைவேர் வழியே அதனோடு தொடர்புடைய எண்ணற்ற பிற சொற்களைக் கண்டுபிடித்துவிடலாம். 


வெல் என்று சொல்வது மிகப்பெரிய வாழ்த்து. வெல்க வெல்க என்கிறோம். இங்கே வெல் என்பது வினைவேர். அதுதான் ‘வென்றான், வென்றது, வென்றோம்’ என வினைமுற்றாகிறது. வெல்+தி = வெற்றி என்ற தொழிற்பெயராவதற்கும் வெல் என்ற சொல்லே வேர். வெற்றி என்பதன் எதிர்ச்சொல்லான ‘தோல்வி’ என்பதனை எடுத்துக்கொள்ளுங்கள். இதுவும் பெயர்ச்சொல்தான். தொழிற்பெயர்தான். அப்படியானால் தோல்வி என்ற தொழிற்பெயரின் வேராக விளங்கும் வினைச்சொல் எது ? கல் + வி = கல்வி, கேள் + வி = கேள்வி என்றாகின்றன. அவ்வாறே தோல் + வி = தோல்வி என்று ஆகியிருக்கிறது. இங்கே தோல் என்பது வினைவேர். தோற்பாயாக என்று ஏவுகிறது. கட்டளையிடுகிறது. 


வெல் என்பதை அடிக்கடி பயன்படுத்தியதைப்போல தோல் என்பதனை எங்கேனும் ஏவற்பொருளில் பயன்படுத்தியிருக்கிறோமா ? இல்லை. தோல் என்னும் வினைவேரின் வழியாகத்தான் தோற்றான், தோற்கிறான், தோற்பான் போன்ற வினைமுற்றுகள் தோன்றுகின்றன. தோல் என்று சொல்லுவது கெடுசொல் என்று நம் பண்பாடு விலக்கியிருக்கலாம். அதனாற்றான் தோல் என்று நாம் சொன்னதேயில்லை. கேள் என்று அடிக்கடி சொல்லப் பழகிய நாம் தோல் என்று யாரையும் சொன்னதில்லை. பேச்சிலேயே அருகிப்போன அந்த வினைவேர் வினைமுற்றுகளில் இடம்பெறுவதோடு அடங்கிவிட்டது. வெல், கேள் என்று யாரிடம் கூறினாலும் உடனே விளங்கிக்கொள்வார். தோல் என்று கூறினால் ‘உடலை மூடியிருக்கும் தோல்’ என்றே பொருள்கொள்வார். இப்படி அருகிப்போன ஒரு சொல் அருஞ்சொல்லாகி நம்மருகிலேயே கேட்பாரற்றுக் கிடக்கிறது. இதனைப்போல் ஆயிரமாயிரம் வினைவேர்கள் கண்டெடுக்கப்படாமல் கிடக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்துவிட்டாலே போதும். நம்மொழிச் சொற்களின் கணக்கு இன்னொரு மடங்கு கூடிவிடும்.

 

முந்தைய பகுதி:

கடலைக் குறிக்கும் சொற்கள் இத்தனையா ? - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 32

 

 

அடுத்த பகுதி:


ஆகாவும் ஓகோவும் உடம்படுமெய்யால் தோன்றுகிறதா? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 33

 

 

 

 

Next Story

ஒரு வினைவேரிலிருந்து தோன்றும் எண்ணற்ற தொழிற்பெயர்கள் -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 41

Published on 10/07/2019 | Edited on 17/07/2019

கட்டளைப் பொருள் தருகின்ற வினைவேர் தன்னோடு வெவ்வேறு விகுதிகளைச் சேர்த்துக்கொண்டு புதிய புதிய தொழிற்பெயர்களை உருவாக்கும். நில், செல், வா, போ, செய், காட்டு, ஆடு, பாடு என்று கட்டளையிடுகின்ற எல்லாமே வினைவேர்கள் ஆகும். வினைச்சொற்களாகிய அவற்றிலிருந்தே வினைமுற்றுகளும் எச்சவினைகளும் தோன்றுவதால் வினைவேர் என்கிறோம். பெயர்ச்சொற்களை உருவாக்குவதற்கு வினைச்சொற்கள் இங்கே உதவி செய்கின்றன. 
 

soller uzhavu


ஒரு வினைச்சொல்லை அப்படியே தொழிற்பெயராக்கி விடுவதன் வழியாக அத்தொழிலின் வழியே நிகழ்த்தப்படும் அனைத்துக்கும் பெயர்ச்சொற்களை அடையலாம். அவ்வாறுதான் நம்முடைய புதிய பெயர்ச்சொற்கள் பலவும் உருவாகியிருக்கின்றன. பழங்காலத்திலும் அவ்வாறே பல சொற்கள் ஆக்கப்பட்டன.

வினைவேர்கள் என்பவை கட்டளைப் பொருள் தருபவை. இங்கே விகுதிகள் எனப்படுபவை எவை? தொழிற்பெயர்களை உருவாக்குவதற்காக ஒரு வினைவேரில் இறுதி நிலையாய்ச் சேர்ந்து கொள்பவையே தொழிற்பெயர் விகுதிகள் எனப்படும். நேரடியாக எடுத்துக்காட்டுகட்குச் செல்வோம்.

செய் என்னும் ஒரு வினைவேரினை எடுத்துகொள்வோம். அதனோடு தல் என்ற விகுதி சேர்ந்தால் செய்தல் (செய் + தல்) என்ற தொழிற்பெயர் கிடைக்கும். எதனைச் செய்தாலும் அதனைச் செய்தல் என்னும் பெயராகக் கூறலாம். 

அல் என்ற விகுதியினைச் சேர்த்தால் செய்+அல் = செயல் என்னும் தொழிற்பெயர் கிடைக்கும். செய்வதன் வழியாக நடக்கும் வினையைச் செயல் என்கிறோம். 

செயல் என்பதனை முன்னொட்டாகக்கொண்டு இன்னொரு கட்டளைப் பொருள் தரும் வினைவேரினைச் சேர்த்தால் மற்றொரு வினைச்சொல் கிடைக்கும். படு என்ற வினைவேரைச் சேர்த்துப் பார்ப்போம். செயல்படு என்ற வினைச்சொல் கிடைக்கிறது. படு என்ற வினைவேர் முன்னிலை (வினைச்சொல் பகுதி) திரிந்தால் பாடு என்றாகும். செயல்படு என்ற கட்டளைப் பொருள் தரும் வினைச்சொல் அவ்வாறு திரிந்து செயல்பாடு என்ற பெயர்ச்சொல் கிடைக்கிறது. 

செய் என்ற வினையோடு கை என்ற விகுதி சேர்த்தால் செய்கை (செய்+கை) என்ற இன்னொரு தொழிற்பெயர் கிடைக்கிறது. 

தி என்றொரு தொழிற்பெயர் விகுதியும் இருக்கிறது. அதனோடு செய் என்னும் வினையைச் சேர்த்தால் செய்தி என்ற அருமையான தொழிற்பெயர் கிடைக்கிறது. வு என்ற தொழிற்பெயர் விகுதி சேர்த்தால் செய்வு என்ற தொழிற்பெயரை உருவாக்கலாம்.

ஒரே வினைவேர்தான். அவ்வினையாற் பெறப்படும் விளைவு சார்ந்த எவ்வொன்றுக்கும் வெவ்வேறு விகுதிகளைச் சேர்த்து பலப்பல தொழிற்பெயர்களை உருவாக்கிவிட்டோம்.


செய்தல் – நலம் செய்தல், பணி செய்தல், நடவு செய்தல், முடிவு செய்தல், ஆவன செய்தல்

செயல் – கொடுஞ்செயல், நற்செயல், அனிச்சைச் செயல், இழிசெயல்.

செயல்பாடு – சமூகச் செயல்பாடு, அரசின் செயல்பாடு. 

செய்கை – தவறான செய்கை, எச்சரிக்கை செய்கை, பயிர்செய்கை,    

செய்தி – இன்றைய செய்தி, முக்கியச் செய்தி, செய்தித்தாள், செய்தித் தொலைக்காட்சி.

ஒரேயொரு வினைவேர்தான். அது செய் என்பது. அதனோடு சில விகுதிகளைச் சேர்த்ததும் வெவ்வேறு தொழிற்பெயர்கள் கிடைத்தன. அவை ஒவ்வொன்றையும் ஒவ்வோர் இடத்திற்கேற்பப் பயன்படுத்திக் கொண்டோம். பயன்படுத்தப்பட்ட ஒவ்வோர் இடத்தில் அந்தச் செயல், செயல் விளைவு, செயல் சார்ந்த அனைத்துக்கும் அதனையே பெயராக்கிவிட்டோம். அதனோடு தொடர்புடைய மேலும் சில சொற்களைச் சேர்த்துக்கொண்டால் புதிய புதிய சொற்றொடர்கள் புதிய புதிய பொருளோடு நம்முடைய பயன்பாட்டுக்குக் கிடைக்கின்றன. 

ஒரேயொரு வினைவேர் அதனுடைய வினைப்பொருளோடு தொடர்புடைய எவ்வொன்றுக்கும் தொழிற்பெயராகி நிற்கும். அத்தொழிற்பெயர்களைப் பயன்படுத்தி மேலும் பல சொற்களோடு சேர்த்து புதிய சொல்லாட்சியைக் கண்டடையலாம். அவ்வாறு பயன்பாட்டில் நிலைத்தவுடன் அச்சொல் அதே வினைவேரினால் பெறப்பட்ட இன்னொரு தொழிற்பெயரை இடையூறு செய்வதில்லை. 

எடுத்துக்காட்டாக இதனைப் பாருங்கள், செய்தி என்ற சொல் ‘நிகழ்ந்தவொன்றின்’ அறிவிப்பாக நிற்கின்றது. அது எப்போது செயல் என்ற சொல்வழியே நாம் பெற்றுக்கொண்ட பொருளுக்குக் குறுக்கே செல்வதில்லை. ஏனென்றால் செய்தி, செயல், செய்கை, செயல்பாடு போன்ற சொற்கள் அவற்றுக்குரிய பயன்பாடுகளில் நிலைத்துவிட்டன. இப்படித்தான் ஒரு புதிய சொல் உருவாக்கப்படுகிறது. பயன்பாட்டில் நிலைக்கிறது. இதன் ஆணிவேர் தொழிற்பெயர் உருவாக்கம் என்னும் இலக்கணத் தன்மைக்குள் ஒளிந்திருக்கிறது.


முந்தைய பகுதி: 

 கொடுப்பினையா, கொடுப்பனையா ? தொழிற்பெயர் விகுதியில் இருக்கிறது விடை - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 40

 

 

Next Story

கொடுப்பினையா, கொடுப்பனையா ? தொழிற்பெயர் விகுதியில் இருக்கிறது விடை - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 40

Published on 26/06/2019 | Edited on 17/07/2019

தொழிற்பெயர்களைப் பற்றிய இலக்கணப் பகுதிகளாகட்டும், நம் பாடத்திட்டங்களாகட்டும், போகிற போக்கில் ஒரு விளக்கத்தைக் கொடுத்துவிட்டு எளிமையாகக் கடந்துவிடுகின்றன. நம் மாணாக்கர்களும் அதனை ஒரு பத்தியளவில் படித்து முடித்துவிட்டுச் செல்கின்றனர். ஆனால், நம் பெயர்ச்சொற்களின் அடிப்படைகள் பலவும் அங்கேதான் பொதிந்திருக்கின்றன. புதிதாய் ஒரு பெயர்ச்சொல்லை ஆக்கும் வாய்ப்பும் தொழிற்பெயரில்தான் அமைந்திருக்கின்றது. அதன் இன்றியமையாமையை உணர்ந்திருந்தால் தொழிற்பெயர் குறித்து ஆழ்ந்து கற்பித்திருப்பர். ஒவ்வொருவரும் பெயர்ச்சொல் ஆக்கும் திறனை வளர்த்துக்கொண்டிருப்பர்.
 

soller uzhavu


முதலில் தொழிற்பெயர் என்றால் என்ன என்று பார்க்கலாம். தொழிற்பெயர் என்பது வேறொன்றுமில்லை. ஒரு வினையைக் குறிக்கின்ற பெயர்தான் தொழிற்பெயர் எனப்படும். ஒரு வினை என்பது ஏவல் பொருள் தரும் தன்மையோடு இருக்கும். வா, வருகிறான், வந்தது, வந்து ஆகிய அனைத்துமே வினைச்சொல் வடிவங்கள்தாம் என்றாலும் அச்சொற்கள் அனைத்திற்கும் வா என்பதே வேர். அதனை வினைவேர் என்றும் சொல்வார்கள். வினைவேர்கள் இடுகுறித்தன்மையோடு தானாகத் தோன்றியவை. நம் மொழியின் ஆணிவேர்கள் என்று கருதத்தக்க சொற்கள். அவை ஏவல் பொருள் தரும். வா என்ற ஒரு வினைவேரிலிருந்து வந்தான், வந்தாள், வந்தார்கள், வந்தது என பல வினைமுற்றுகள் பிறக்கின்றன. வந்து, வந்த,  வர, வருகின்ற போன்ற எச்சவினைகள் பிறக்கின்றன. வருகை, வரவு, வருமானம், வருதல், வரும்படி போன்ற தொழிற்பெயர்களும் பிறக்கின்றன. இந்தத் தொழிற்பெயர்கள்தாம் புதுப்பெயர்ச்சொற்களை ஆக்கிக் கொள்வதற்கான அகன்ற வாயில்கள்.  

ஏவல் பொருள் தரும் வினைவேர்ச்சொல் தானாகவே ஒரு பெயர்ச்சொல்லாகப் பயிலும். அடி, உதை, குத்து, இடி, கொதி முதலான வினைச்சொற்கள் கட்டளைப்பொருளும் தந்து வினைவேராகப் பயில்கின்றன. அந்தந்த வினைகளைக் குறிக்கும் பெயர்களாகவும் பயன்படுகின்றன. ஓர் அடி அடி, ஒரு குத்து குத்து… இத்தொடர்களைப் பாருங்கள். இவற்றில் அடி என்று பெயராகவும் வருகிறது. அடி என்று வினையாகவும் ஏவுகிறது. இத்தகைய பெயர்களை முதனிலைத் தொழிற்பெயர்கள் என்பார்கள். முதனிலை என்பது வினைவேரைத்தான் குறிக்கிறது. வினைவேர்ச் சொல்லே பெயர்ச்சொல்லுமாகி அந்த வினையை, தொழிலைக் குறிப்பதால் முதனிலைத் தொழிற்பெயர் என்று பெயர் பெற்றது.

கெடு, பெறு, விடு, படு, அறு போன்ற வினைவேர்ச்சொற்களின் முதலெழுத்து நெடிலாகத் திரிந்தால் போதும். கேடு, பேறு, வீடு, பாடு, ஆறு என்னும் பெயர்ச்சொற்கள் ஆகிவிடும். வினைவேராகிய முதனிலையே இவ்வாறு நெடிலாகத் திரிந்து பெயர்ச்சொல்லாவதால் இவை முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள் எனப்படும். கெடுவதன் வழியே அடையப்படுவது கேடு. பெறுவதன் வழியே கிட்டுவது பேறு. விடுவதால் கிடைப்பது வீடு (வீடுபேறு). நிலத்தை அறுத்துச் செல்லும் தன்மையால் அது ஆறு.

மேற்சொன்ன வினைவேர்கள் அவ்வகையால் மட்டுமே பெயராகின்றனவா ? வேறு வகையில் பெயராவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா ? ஆம். இருக்கின்றன. முதனிலைத் தொழிற்பெயர்களும், முதனிலை திரிந்த தொழிற்பெயர்களும் மட்டுமின்றி இன்னொரு வகையும் இருக்கின்றது. அதற்கு விகுதி பெற்ற தொழிற்பெயர் என்று பெயர்.

மேற்சொன்ன வினைகளோடு தல் என்ற ஒரெயொரு விகுதியைச் சேர்த்துக்கொள்வோம். என்னென்ன தொழிற்பெயர்கள் கிடைக்கின்றன ? விகுதி என்பது வேறொன்றுமில்லை. ஒன்றோ சிலவோ எழுத்துகளால் ஆகி ஒரு சொல்லின் கடைசியில் ஒட்டிக்கொள்ளும் சொல்லுருபுதான் விகுதி எனப்படும். இங்கே தல் என்பது தொழிற்பெயர் விகுதிகளில் ஒன்று.

தல் என்பதனை மேற்சொன்ன வினைவேர்களின் விகுதிகளாக்கிப் பார்ப்போம். என்னென்ன தொழிற்பெயர்ச்சொற்கள் கிடைக்கின்றன ? அடித்தல், உதைத்தல், குத்துதல், இடித்தல், கொதித்தல் என்று ஆகிவிட்டன. அடி என்ற ஒரு வினைவேர் அடி என்ற முதனிலைத் தொழிற்பெயருமாயிற்று. அடித்தல் என்ற தல் விகுதி பெற்ற தொழிற்பெயருமாயிற்று. அடி என்ற வினைவேரைக்கொண்டு வேறு என்னென்ன தொழிற்பெயர்களை ஆக்கலாம் ? அடித்தல் எனலாம். அடிப்பு எனலாம். இப்படி வெவ்வேறு விகுதிகளைச் சேர்ப்பதன் வழியாகப் பலப்பல தொழிற்பெயர்களை ஆக்கிக்கொள்ளலாம். அந்தத் தொழில்வழியாக நிகழ்கின்ற எவ்வொரு செயலுக்கும் செயற்கருவிக்கும் அதனையே பெயராக்கலாம்.

தொழிற்பெயர் விகுதிகளாகத் தக்கன என்று இருபத்திரண்டுக்கும் மேற்பட்ட விகுதிகளைச் சொல்கிறார்கள். ஒரு வினைவேரோடு அவ்விகுதிகளில் பலவற்றையும் சேர்த்து வெவ்வேறு தொழிற்பெயர்களாக்கலாம். தொழிற்பெயர் விகுதிகளாவன எவை ? தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரபு, ஆனை, மை, து போன்றவை தொழிற்பெயர் விகுதிகள்.

அடக்கு என்று ஒரு வினைவேர் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனோடு மேற்சொன்ன தொழிற்பெயர் விகுதிகளைச் சேர்த்து வெவ்வேறு தொழிற்பெயர்களை உருவாக்கலாம்.


தல் விகுதி சேர்த்தால் அடக்குதல்

அல் விகுதி சேர்த்தால் அடக்கல்

அம் விகுதி சேர்த்தால் அடக்கம்

கை விகுதி சேர்த்தால் அடக்குகை

ஒரு வினைவேரினைக் கொண்டு இங்கே நான்கு தொழிற்பெயர்களை உருவாக்கிவிட்டோம்.

இவை மட்டுமின்றி இன்னும் என்னென்னவோ தொழிற்பெயர் விகுதிகள் நூல்களிலும் பேச்சு வழக்குகளிலும் மறைந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் தேடிக் கண்டடைந்தால் தமிழின் ஒரு வினைவேரை வைத்துக்கொண்டு எண்ணற்ற சொற்களை ஆக்கலாம். எடுத்துக்காட்டாக, பனை என்பதும் தொழிற்பெயர் விகுதிதான். அதன் வழியேதான் கற்பனை, விற்பனை, கொடுப்பனை, படிப்பனை போன்ற தொழிற்பெயர்கள் உருவாகின்றன. பனை என்பதே தொழிற்பெயர் விகுதி என்பதால் கொடுப்பனை, படிப்பனை என்பதுதான் சரி. கொடுப்பினை, படிப்பினை என்பது தவறு.   

இப்போது நமக்குத் தொழிற்பெயர்களைப் பற்றித் தெரியும். தொழிற்பெயர் விகுதிகளும் தெரியும். அவற்றிலிருந்து தொழிற்பெயர்களை எவ்வாறெல்லாம் உருவாக்கலாம் ? அவற்றை எத்தகைய பொருள்களில் பயன்படுத்தலாம் ? அடுத்து பார்ப்போம்.

 

முந்தைய பகுதி:

 

புதிதாய் ஒரு சொல்லை ஆக்குவது எப்படி ?  கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி39
 

அடுத்த பகுதி:

ஒரு வினைவேரிலிருந்து தோன்றும் எண்ணற்ற தொழிற்பெயர்கள் -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 41