Skip to main content

"நீ இனிமே பக்கத்துல வராத. உன்னாலதான் என் மேலயும் நாறுது - இந்தப் படத்தின் கதை #2

Published on 04/10/2019 | Edited on 05/04/2021

நான் அப்போதுதான் கல்லூரியிலிருந்து வந்திருந்தேன். கேமராவைப் பழகிக்கொண்டு சில மாதங்களே ஆகியிருந்தது. தினமும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டிற்குள்ளோ அல்லது சுவாமிமலை கோவில் கடைத்தெருக்கள், வயல்வெளிகள் என சுற்றி ஃபோட்டோ எடுக்கலாம் என்பதே எனது அப்போதைய திட்டமாக இருந்தது. பலநாட்கள் என் வீட்டின் மொட்டைமாடியில் நின்று சூரிய உதயத்தைப் பார்க்கும்போது நிலத்தையும் வானத்தையும் பிரிக்கிற கோட்டின்மேல் சில குடிசைகளின் குவியல் தென்படும். அவற்றின் பின்புறம் படுத்துறங்கிய கதிரவன் சோம்பல் முறித்து எட்டிப்பார்க்கும்போது பரவும் செந்நிறம், அந்த குடிசைகள் பழுக்கவைக்கப்படுகின்றன, உலகை செதுக்கக்கூடிய ஆயுதங்கள் அவற்றிலிருந்து உருவாக்கப்படுகின்றன என்பதுவாய் உணர்த்தும். நேற்று தாராசுரம் சந்தையின் காய்கறி கடலில் நீந்தி தீர்த்தாகிவிட்டது. இன்று அந்த குடிசை பகுதிக்கு சென்றுவரலாமென அம்மாவிடம் கேட்டேன். முதலில் தயங்கியவள்  “சீக்கிரம் வந்துடனும்” என நிபந்தனையுடன் வழிச்சொன்னாள். 

Photo story

மாட்டுவண்டிகளாலும் மனித தடங்களாலும் மட்டுமே உருவான பாதை கருவேல மரங்களுக்கிடையில் சென்று மறைந்தது. ஏதோ திடலில் அமைந்திருக்கும் நான்கைந்து வீடுகளாக இருக்கலாம் என கற்பனைகள் சுருங்கிப்போக எதிர்ப்பார்ப்பு ஏதுமின்றியே முன்னேறி சென்றேன். ஒத்தையடிப் பாதைதான் எனினும் குறுகியும் அகன்றும் சென்ற பாதையில் சில மீட்டர்கள் கடந்தபின் திடீரென முளைத்து நின்றது அந்த விசாலமான வீதி. பெரும்பாலும் குடிசைகளும் குண்டும் குழியுமான சிமெண்ட் ரோடுமாய் விரிந்திருந்தது. அதுவரை கழுத்தில் அமைதியாக தொங்கிய கேமரா கைகளில் ஏறி தயாராக நின்றது. பள்ளி முடிந்து சிறுவர்களெல்லாம் அப்போதுதான் வந்திருக்க வேண்டும். ஒருவர்கூட சீருடையை மாற்றியிருக்கவில்லை. வாசலில் நின்றபடியே சிலேட்டுப்பையை வீட்டிற்குள் வீசிவிட்டு நடுவீதியில் உடைந்த ஓடுகளை அடுக்கி செவன் சார்ட் விளையாடுவதில் மும்முரமாய் இருந்தனர். வறண்ட செம்மண்காட்டில் அரளிப் பூக்களை வட்டமிடும் வண்ணத்துப்பூச்சிகளாய்... என என் கேமரா காட்சிகளை கவிதையாக்க துவங்கியிருந்தது. கனநேரத்தில் அந்த வண்ணத்துப்பூச்சிகள் தேனீக்களாய் மாறி என்னை சூழ்ந்துகொண்டனர். “எங்களயா ஃபோட்டா எடுக்குறீங்க? எதுக்கு? புக்குல போடுவீங்களா? என்னைய புடிங்கக்கா. இருக்கா, நா வேற சட்ட போட்டுட்டு வறேன்.” உயிங்...உயிங்...உயிங்..எதைக்கேட்பது எதற்கு பதில் சொல்வது... திகைத்துப்போனேன். அவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட தெருவில் இருந்த அனைவருமே என்னை கவனித்தனர்.

அருகிலிருந்த வீட்டிலிருந்து நடுத்தர வயதுள்ள பெண் ஒருவர் “அடேய் அந்த அக்காவ வேலபாக்க வுடுங்கடா” என அதட்டியவாறே வெளியே வந்தார். அந்த சிறுவர்களை விலக்கிவிட்டு “கவர்மெண்ட் கக்கூஸ் ஃபோட்டா எடுக்க வந்துருக்கிங்களா? எங்க வூட்ல இன்னும் பேரெழுதலையே...” அவருக்கு பதில் சொல்வதையும் மறந்து எனக்குள் சிரித்துக்கொண்டிருந்தேன். ஒருவழியாக “அதெல்லாம் இல்லங்க. சும்மா காலேஜ் ப்ராஜெக்டுக்காக ஃபோட்டோ எடுக்குற” என்பதாக சொல்லிப் புரிய வைத்தேன். ஒவ்வோரு பத்தடிக்கும் ஒருவர் வெவ்வேறு விதங்களில் இதே கேள்வியைக் கேட்டனர். நான் ஒவ்வொருவருக்கும் ஒரு வார்த்தையைக் குறைத்து கடைசியாக “சும்மா” எனும் பதிலை உறுதிசெய்துகொண்டேன். அதுவே போதுமானதாக இருந்தது. அதற்குமேல் எந்த விசாரணையும் இல்லை. புன்சிரிப்பு, வெட்கம், ஆச்சர்யம், முறைப்பு, பரிவு என வெவ்வேறு விதங்களில் இருந்தாலும் அனைவரிடமும் ஒத்துழைப்புக் கிடைத்தது. சிறுவர்கள் தவிர. ஆரம்பத்தில் என்னை சூழ்ந்துகொண்டவர்கள் இப்போது என்னை வேடிக்கைப் பார்த்தவாறே பின்தொடர்ந்தனர். நானும் சளைக்காமல் அவ்வப்போது அவர்களையும் விதவிதமாக ஃபோட்டோ எடுத்தபடி சுற்றினேன். கட்சி சின்னங்கள் வரையப்பட்ட மண்சுவற்றில் சாய்ந்தபடி கால்களை சுறுக்கி உட்காந்திருந்த பாட்டிகள், தான் சிரிப்பதாக நினைத்துக்கொண்டு முறைத்தபடியே மீசையை முறுக்கிய தாத்தா, இடுப்பின் ஒரு பக்கம் குடத்தையும் மறுப்பக்கம் குழந்தையையும் வைத்துக்கொண்டு வெள்ளந்தியாய் சிரித்த அக்காள் என பல காட்சிகள் கேமராவில் பதிவாவதும் பின் கடந்து செல்வதுமாய் இருக்க அந்த தெருவின் பிற்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் என் கவனம் நிலைகொண்டது. 
 

சுற்றித்திரிந்த கலைப்பில் சூரியன் எல்லையின்றி விரிந்திருந்த பச்சைப் போர்வைக்குள் புகுந்துகொண்டான். அவன் தூங்கினானா இல்லையா என இருள் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த நேரம். கிட்டத்தட்ட அங்கிருந்த எல்லோரது பார்வையும் அவ்வப்போது என் பக்கம் வந்து சென்றது. அதுபோக அங்கிருந்த சிறுவர்களுக்கு நானே பொழுதுபோக்காய் மாறியிருந்தேன். வெளிச்சம் குறைவதால் என் கேமரா தவிப்பதும், அதனால் நான் சோர்ந்துபோவதும் என் முகத்தில் தெரிந்தது. ஃபோட்டோ எடுப்பதை நிறுத்துவதுபோல் கேமராவை விட்டுவிட்டு ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தேன். என்னுடன் வந்த சிறுவர்கள் ஒருவர் இருவராய் கலைந்து சென்றுவிட்டனர். அந்த தெருவின் கடைசிவீடு இதுதான் என நினைக்கிறேன். சிதிலடைந்த கூரையில் ஒட்டு போட்டாற்போல் உரச்சாக்குகளால் மூடப்பட்டிருக்கும் வீடு. அதன் திண்ணையில் அமர்ந்து குனிந்த தலை நிமிராமல் ஒரு சிறுவன் எழுதிக்கொண்டிருந்தான். நான் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதையோ, ஃபோட்டோ எடுப்பதையோ அவன் கண்டுகொள்ளவில்லை. நின்றுகொண்டும் உட்கார்ந்தும் பல கோணங்களில் ஃபோட்டோ எடுத்தபோதும் அவன் நிமிந்து பார்க்கவே இல்லை. அவனது கவனம் முழுவதும் அந்த நோட்டில் க,ங,ச எழுதுவதிலேயே இருந்தது. எழுதி முடித்தபின் பார்ப்பான் என காத்திருந்தேன். அடுத்தப் பக்கத்திலும் அதையே திரும்ப எழுதினான். போக போக வெறிபிடித்தவன் போல் வேகமாக எழுத பென்சிலின் முனை உடைந்தது. அப்போதும் நிமிராமல் சிலை போல் இருந்தான். அவன் யார்மீதோ கோபத்தில் இருப்பதை புரிந்துகொண்டு பேசாமல் நின்றேன். 
 

ஊராட்சி குப்பை வண்டியை தள்ளிக்கொண்டு அவனது அம்மா வந்தாள். வண்டியை வீட்டின் பக்கவாட்டு சுவற்றையொட்டி நிறுத்திவிட்டு நேராக தெருவின் மூலையிலுள்ள அடிபம்பிற்குச் சென்று சாம்பலையும் சவுக்காரத்தையும் குழைத்தெடுத்து கை கால்களில் தேய்த்து கழுவினாள். மார்பை மறைக்கவே போதாமல் நைந்திருந்த அவள் புடவையின் முந்தானையில் கையை துடைத்தவாறே வந்து குப்பை வண்டியில் மாட்டியிருந்த ஜவுதால் பையை பிரித்தாள். “ராசு, இந்தாடா... பக்கடா வாங்கியாந்தன்...” எதுவும் கேட்காததுபோல் அந்த சிறுவன் அமைதியாக இருக்க, அம்மா அவன் அருகில் சென்று தலையைக் கோதியவாறே “என்னாச்சு ராசு” எனக் கேட்டாள். அவன் கூறப்போகும் பதில் அவளுக்கு முன்பே தெரிந்திருக்கவேண்டும். வலியும் பயமும் கலந்தே அந்த வார்த்தைகள் வந்திருந்தன. அதுவரை குனிந்தே இருந்தவன் அவள் கையை வெடுக்கென தட்டிவிட்டு “தொடாதம்மா, நாறுது” என சிணுங்கியபடியே உள்ளே சென்று குப்புறப் படுத்துக்கொண்டான். “நீ இனிமே பக்கத்துல வராத. உன்னாலதான் என் மேலயும் நாறுது. பள்ளியோடத்துல என்னைய தனியாவே உட்கார சொல்றானுவோ” சிறுவனின் புலம்பலை தவிர்த்துவிட்டு அவள் என்னிடம் “யாரு ஆயி?”என்றாள். அவள் கண்களில் கண்ணீர் கட்டியிருந்தும் உதட்டில் புன்சிரிப்பு மாறாமல் இருந்தது. “கணபதி நகர் அக்கா. சும்மா காலேஜ்க்காக ஃபோட்டோ எடுக்க வந்த” என்னும்போதே என் பார்வை சிறுவன் மீது சென்றது. அதை கவனித்த அவள் “அவன் கெடக்குறா ஆயி. இப்டிதான் மொரண்டு புடிப்பான். பசிச்சா என்டதானே வரணும்” என சிரிப்பை கொஞ்சம் கூட்டினாள். குரலில் தழுதழுப்பும், கண்ணில் கண்ணீரும் கூடவே கூடியிருந்தது. “நீ யேன் என்ன பெத்த. வுட்ருந்தா நா ஆகாஷ் அம்மாவுக்கோ பிரவின் அம்மாவுக்கோ பொறந்துருப்பன்ல” அவன் நினைத்து நினைத்து முனங்கும் சத்தம் கேட்க அவளுக்கு கண்ணில் கட்டியிருந்த நீர், கனம் தாங்க முடியாமல் சரிந்து விழுந்து அவளின் சிரித்த உதட்டை நனைத்தது. கண்ணீரைத் துடைக்கவும் அவள் மனத்திலோ கையிலோ பலமின்றி உறைந்துபோய் நின்றாள். நான் எதுவும் பேசாமல் நகர்ந்துவிட்டேன். அவர்களை நசுக்குகிற பாறைமீது நானும் நிற்பதாய் தோன்றியது. அந்த பாறையிலிருந்து குதிப்பதெப்படி என யோசித்தவாறே வந்தபாதையில் திரும்பி வீடு வந்து சேர்ந்தேன். 

 

முந்தைய பகுதி
 

Photographer: Alar 
E-mail: alarmelvalliarunagiri@gmail.com

Next Story

ஃப்ரீலான்ஸ் போட்டோகிராஃபர் கொலை; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Freelance photographer incident; Shocked by the police investigation

வீட்டில் நடைபெறும் சுபநிகழ்ச்சிக்கு போட்டோ எடுக்க வேண்டும் என போட்டோகிராபரை ஆர்டர் செய்த இளைஞர்கள், போட்டோ எடுக்க வந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்து அவரிடமிருந்து கேமரா உள்ளிட்ட உபகரணங்களை திருடிச் சென்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய்குமார் (23). புகைப்படக் கலைஞராக இருக்கும் சாய்குமார் திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு போட்டோகிராபி செய்து கொடுக்கும் ஃப்ரீலான்சராக பணியாற்றி வந்தார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தான் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றி வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தார்.

Freelance photographer incident; Shocked by the police investigation

இந்தநிலையில், சாய்குமாரை தொடர்பு கொண்ட இளைஞர்கள் சிலர் தங்கள் வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிக்கு போட்டோ எடுத்து தர வேண்டும் என அழைத்துள்ளனர். கோணசீமா மாவட்டம் ரவுலாபாலம் பகுதியில் நிகழ்ச்சி நடைபெறுவதாக சாய்குமாரிடம் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி சாய்குமார் விலையுயர்ந்த கேமரா, புகைப்பட உபகரணங்களை எடுத்துக்கொண்டு அந்த ஊருக்கு சென்றுள்ளார். ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் சாய்குமார் வீடு திரும்பாததால் சாய்குமார் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சாய்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து விலையுயர்ந்த கேமராக்களை பறித்த கும்பல் அவரை மணல் பரப்பில் கொலை செய்து புதைத்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“கல்விக்காக சரஸ்வதி எதையும் செய்யவில்லை” - புகைப்படம் வைக்க மறுத்த ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Action taken against teacher who refused to post photo god Saraswati

ராஜஸ்தான் மாநிலம், பாரான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேம்லதா பைர்வா. இவர் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள லக்டாய் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதியான குடியரசு தின நாளில், பள்ளியில் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் உள்ளூர் மக்களும் பங்குபெற்றனர்.

அப்போது, விழா மேடையில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் புகைப்படங்களுக்கு அருகே கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் அந்த ஆசிரியரிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் வைத்த கோரிக்கையை, ஆசிரியர் ஹேம்லதா பைர்வா ஏற்க மறுத்துள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் எழுந்தது. அந்த சமயத்தில், ‘கல்விக்காக சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பும் செய்யவில்லை’ என்று ஆசிரியர் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி, ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், கிஷன்கஞ்ச் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அதில் அவர், “சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன? என்று கேட்கிறார்கள். சொல்லி இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவரை நான் சஸ்பெண்ட் செய்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். 

கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின், மாவட்டக் கல்வி அதிகாரி பியூஷ் குமார் சர்மா, ஆசிரியர் ஹேம்லதா பைர்வாவை பணி இடைநீக்கம் செய்து அதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார்.