ADVERTISEMENT

இப்போது இங்கே கோடைக்காலம்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 24.

02:41 AM Sep 17, 2019 | santhoshb@nakk…

நான் இன்னும் கடலோரத்தில் வசித்து வருகிறேன். ஆனால், நான் தனிமையில் இல்லை. எனது ஜன்னலுக்கு அருகே, கடற்கரையில் இளைஞர்களும் இளம்பெண்களும் திடீரென வந்து குவிந்து விடுவார்கள். அவர்களது நீச்சல் உடைகள் பல வண்ணங்களில் ஜொலிக்கும்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டைப் போலவே நான் தொடர்ந்து கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். என்னால் எப்போதும் செய்ய முடிகிற பணி அது. இந்தப் புத்தாண்டில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.

ADVERTISEMENT

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான் எனது புதிய நூலான பறவைகளின் சங்கீதம் என்ற நூலை முடித்திருக்கிறேன். இந்த நூலின் முதல் பகுதி சிலி தேசத்தின் பறவைகளைப் பற்றிக் கூறுகிறது. அந்த பறவைகளைப் பற்றி எனக்கு மிக அதிகமாகவே பரிச்சயம் உண்டு. எனது தாய்நாடு ஆச்சரியங்கள் நிரம்பியது. பறவைகளின் சாம்ராஜ்யம் மட்டுமல்ல, உலகின் மிக மிகச்சிறிய பாடும் பறவை முதல் மிகப்பெரிய கடல்வாழ் பறவை வரை எண்ணற்ற உயிரினங்களை உள்ளடக்கியது.

இந்த நூலை எழுதும்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். நூல் முழுவதும் பறவைகளின் கீச்சொலிகள், அற்புதமாக இறக்கை விரித்து பறக்கும் காட்சிகள், அவை பாடும் பாடல்கள், அவற்றின் வண்ணங்கள் என சந்தோஷித்திருந்தேன். எனது பைனாகுலரை கழுத்தில் மாட்டிக் கொண்டு பல கடற்கரைகளில் அலைந்து திரிந்தேன். பல காடுகளுக்குள் பறவைகளைத் தேடி அலைந்தேன். பருந்துகள், கடல் பறவைகள், மரங்கொத்தி பறவைகள் என ஒவ்வொன்றையும் பார்ப்பதற்காக காத்திருந்தேன்.


சிலி, கொந்தளிப்பு நிறைந்த கடல்களின் தேசம். கடினமான தரைப்பகுதியும் வனப்பு மிகுந்த வனங்களும், நீர்நிலைகளும், எல்லையற்ற கடல் வழியும் கொண்ட தேசம். ஆழமான பள்ளத்தாக்குகள் மூலம் மலைப்பகுதிகள் கடலில் இருந்து பிரிக்கப்பட்டிருக்கும். பூமியில் இடைவெளி விட்டு ஏற்பட்டுள்ள நிலப்பகுதிகள் போல அவை தோற்றமளிக்கும். இவை, பழங்காலத்து ஆறுகளின் தடங்கள். மிக நீண்ட காலத்திற்கு முன்பே இந்த ஆறுகள் வற்றி விட்டன. பள்ளத்தாக்குகள் இந்த கண்டத்தின் விவசாய வாழ்வையும் வனவிலங்குகளின் வாழ்வையும் முன்பிருந்ததைப் போலவே பாதுகாத்து வைத்திருக்கிறது. சிறுத்தைப்புலிகள், அடர்த்தியான காடுகள், காட்டுப்பூக்கள் இன்னும் பறவைகளும் கூட இங்கே சுதந்திரமாக திரிகின்றன.

பறவைகள் பலவிதமானவை. ஒவ்வொன்றும் ஆச்சரியம் அளிப்பவை. அவற்றை கவனிக்க, நாம் அவற்றின் முற்றங்களுக்கு முன்னால் அமர்ந்து கொள்ள வேண்டும். அவை தங்களது மொழியை பரிமாறத் துவங்கும் வரை காத்திருக்க வேண்டும். அவை பேச ஆரம்பித்தால், அந்த உரையாடல் எப்படிப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பேசிக் கொண்டேயிருக்கும். சில பறவைகளின் குரல் ஒலி, வயலின் இசையைப் போல இருக்கும். சில பறவைகள் கூச்சல் போடுவதைப் போல பாடும். சில பறவைகள் ஒரே குரலில் மீண்டும் மீண்டும் கத்தும். இவற்றையெல்லாம் பார்க்கும் போது, அடர்ந்த வனத்தின் இதயத்திலிருந்து இந்தக் குரல்கள் எழுந்து வருவதைப் போல இருக்கும். இன்னும் சில பறவைகள் இடைவிடாமல் கீச்சிட்டுக் கொண்டே இருக்கும். அவற்றின் கீச்சுக் குரல்கள் நமது இதயத்தை வருடும்...



தற்போது இங்கே கோடைக்காலம். இப்போது இடைவிடாத, சமரசமில்லாத போராட்டம் தொடங்குவதை நான் காண்கிறேன். செப்டம்பரில் நாங்கள் ஒரு புதிய ஜனாதிபதியைப் பெற்றிருப்போம். யாரைத் தேர்வு செய்வது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ஒரு நிலப்பிரபுவா, ஒரு சோசலிஸ்டா அல்லது ஒரு கிறிஸ்தவ ஜனநாயகவாதியா?

கடைசியாக குறிப்பிடப்பட்டவர் ஆளும் வர்க்கங்களுடன் மிகுந்த பரிச்சயம் கொண்டவர். கிறிஸ்தவ மதகுரு மற்றும் டாலர்கள் ஆகியவற்றால் நிதியுதவி செய்யப்பட்ட ஒரு `புரட்சியை’ இவர் பரிந்துரை செய்தார். நிலப்பிரபுத்துவ வேட்பாளரும் நிறைய ஆதரவாளர்களை கொண்டவர். ஏராளமான பணமும் உடையவர். வளர்ச்சி பெறாத முதலாளித்துவ நாடுகளில் இதைப் பற்றி பேசுவதே ஒரு மோசமான வாதமாக கருதப்படும். முற்போக்கு சக்திகள் மிகவும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒரு வேட்பாளரை களத்தில் நிறுத்தியிருக்கின்றன. அவரது பெயர் டாக்டர் சால்வடார் அலெண்டே.

ஏற்கெனவே நடந்த தேர்தல்களை ஒப்பிடும் போது, தற்போதைய தேர்தலில் இவர் வெற்றி பெற 30 ஆயிரம் வாக்குகள் அதிகம் தேவை. அந்த 30 ஆயிரம் மக்களை நமது பக்கம் வென்றெடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன? அவர்களிடம் நேரடியாக பேசுவோம், எங்களுக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விடுப்போம். இந்தப் பணிக்காக சிலி தேசத்தின் கலைஞர்களும் கவிஞர்களும் பறவைகளை கவனிப்பதை கொஞ்ச காலம் விட்டு விட்டனர். பள்ளத்தாக்குகளுக்கும் சந்தன மரங்களுக்கும் விடை கொடுத்து விட்டு தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வீதிகளுக்கு நடந்தார்கள்.


நான் எனது நகரத்தில் இருந்து வெகுதூரத்தில் உள்ள பண்டா அரினாஸ் என்னுமிடத்தில் வாக்குகளை சேகரிக்க மக்களிடம் பேசப் போகிறேன். இந்த இடம் மெகல்லன் கடற்கரையில் உள்ள ஜலசந்தியில் அமைந்திருக்கிறது. புவிக்கோளத்தின் தென்துருவத்திற்கு அருகே இந்த இடம் இருக்கிறது. இந்த நகரில் பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. லெனின் கிராடு நகரைப் போல வெள்ளை இரவுகள் கொண்டது.

எனது மனைவி மடில்டா, தனது கிடார் எடுத்து கொள்வாள். எனது பாடல்களை பாடுவாள். காதல், மகிழ்ச்சி, சோகம், நம்பிக்கை தருகிற பாடல்கள் அவை.

அங்கிருந்து நான் எனது சோவியத் வாசகர்களுக்கு கடிதம் எழுதினேன். அங்கே பார்க்கிற, கேட்கிற அனைத்தைப் பற்றியும் அவர்களுக்குச் சொல்வேன்.

நான் எப்போதுமே ஆச்சரியப்படுவதுண்டு, சோவியத் மக்கள் நான் எழுதுவதை உண்மையிலேயே ரசிக்கிறார்களா? எங்களது தொலைதூர சின்னஞ்சிறிய உலகத்தைப் பற்றி அறிந்து கொள்ள அவர்கள் விரும்புகிறார்களா? இந்த மழைத்துளியிலிருந்து அவர்கள் புதிதாக எதையேனும் கண்டு வியக்கிறார்களா? அல்லது எனது தேசத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் நான் எழுதியவை. அவர்களுக்கு தொடர்பில்லாத ஒரு உலகத்தைப் பற்றியதாக இருந்ததா?



இருக்கட்டும்! நமது புவிக்கோளம் மழைத்துளிகளால் ஆனது, சின்னஞ்சிறிய மற்றும் மிகப்பெரிய உலகங்கள் கொண்டது. பெரும் நீர்ப்பரப்பாலும், கடும் வெயிலால் உருவான கானல் நீர்களாலும் நிரம்பிய மிக நீண்ட தூரங்களை கொண்டது.

விடை பெறுகிறேன்! மெகலன் கடற்கரை ஜலசந்தியில் அமைந்துள்ள பன்டா அரினாஸில் பல்லாயிரக்கணக்கான மக்கள் எனக்காக காத்திருக்கிறார்கள்.

-இழ்வெஸ்தியா, ஜனவரி 29, 1964.


முந்தைய பகுதி:
ஒரு நண்பனின் வாழ்த்துக்கள்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 23.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT