Skip to main content

கியூபாவின் பாடல்கள்... ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 18

Published on 13/07/2019 | Edited on 24/07/2019

“பாரீஸ், ஜீன்-13. இளங்கவிஞன் மனுவேல் மோரெனோ பாரன்கோ பாசிச கொலைவெறியர்களால் கொல்லப்பட்ட கொடூரமான செய்தியை பாரீஸ் பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன.
 

pablo neruda


“இந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்ட மனுவேல், மருத்துவமனையில் பத்து நாட்கள் இருந்த பின்னர் இறந்தார். இந்த மரணத்திற்கு விளக்கம் அளித்த அதிகாரிகள், இந்த மரணத்துக்கு விளக்கம் அளிக்க அவருடைய குடும்பத்தினரை அழைத்தார்கள். ஜூலியன் கிரிமாவின் கொலையை முடிமறைக்க அதிகாரிகள் என்ன கதையை சொன்னார்களோ, அதையே மனுவேலின் குடும்பத்தினரிடமும் தெரிவித்தனர். அவர் சிறையின் ஜன்னல் மீது ஏறி, குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்றார்கள். ஆனால், இறந்துபோன தனது மகனின் உடலைப்பார்க்க, அந்த இளங்கவிஞனின் அம்மாவுக்கு கொலையாளிகள் அனுமதி மறுத்தனர். சிறைச் சித்திரவதையால் அந்த கவிஞனின் உடலில் ஏற்பட்ட காயங்களை, அவனது தாயார் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் தடுத்தனர்.”

இந்தச் செய்தி வெளியான 1963 ஜூன் 14 ஆம் தேதி நான் உடல் சுகவீனமான உணர்வுடன் கண் விழித்தேன். இன்றைக்கு கியூபாவைப் பற்றிய ஸ்பானியக் கவிதைத் தொகுப்பிற்கு ஒரு முன்னுரை எழுலாம் என்று முடிவு செய்தேன். எனது படுக்கையிலிருந்தே, வால்பரைசோ துறைமுகத்தில் உலவும் கப்பல்களைப் பார்க்க முடியும். அந்தப் கப்பல்களில் சில, குளிர்கால கடலின் அலைகளை எதிர்த்து நின்றன, அவை ஸ்பெயினில் இருந்து வந்திருக்கக் கூடும் அல்லது மீண்டும் தங்கள் நாட்டுக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கக்கூடும். அந்தக் கப்பல்களில் இருந்து எனது எண்ணங்கள், கடல் துறைமுகங்களுக்குத் தாவியது, பின்னர், கியூபாவைப் பற்றிய புதிய கவிதைகளுக்குத் தாவியது. செய்தித்தாள்களை கவனித்தேன், மேலே குறிப்பிட்ட செய்தியைப் படித்தேன்.

 

pablo neruda


ஆக, அனைத்தும் ஒரே மாதிரியாகவா உள்ளன..?

அப்படித் தெரிகிறது... ஆனால், அது அப்படி இல்லை!

விலங்குகள் மட்டும்தான் பழைய வழியில் செல்லும்,

ஆனால், கவிஞர்களின் பாடல்கள் புதியவை.


இந்த நூல், சிறைக்கொட்டடியின் சுவர்களில் தங்கள் கவிதைகளை மோதவிட்டவர்களுக்காக, பெருங்கடல்களையும் தாண்டி குரல் எழுப்புபவர்களுக்காக. ஸ்பானிய நிலத்தில் எழும் முணுமுணுப்புகள் அல்ல, பெருங்குரலுக்காக எழுதப்பட்டது.

உலகம் முழுவதிலும் இருந்து கவிஞர்கள் நாங்கள், எங்கள் கவிதைகளை ஸ்பெயினுக்கு அர்ப்பணிக்கிறோம். அமெரிக்க கண்டத்தின் மீதான எனது நண்பர்கள் மற்றும் சக தோழர்களின் சிந்தனை, துயரத்தையும், ஸ்பெயினின் சாகசத்தையும் உணர்ந்தது, அதற்கு ஏற்றாற்போல் பிரதிபலித்தது. நாங்கள், மலைத் தொடர்களாலும், எல்லையற்ற சமவெளிகளாலும், பிரிக்கப்பட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வந்தோம், ஆனால், இந்த பெரும் துயரங்கள், எங்களது ஒற்றுமையை குலைத்துவிட முடியாது. நாங்கள் ஒருவரையொருவர் அறிந்தது இல்லை, ஆனால் நாங்கள் ஒரே குரலில் பாடினோம்.

நாங்கள் ஸ்பெயினையும், அதன் மக்களையும் நேசித்தோம். எங்கள் கவிதைகள், அவர்கள் தங்களது எதிரிகளுடனான போராட்டத்தில் வென்று, மீள வேண்டும் என்று வாழ்த்தினோம். அந்த நம்பிக்கை எங்கள் ஒற்றுமையை வலுப்படுத்தியது.
 

pablo neruda



இப்போது, ஸ்பானியக் கவிஞர்கள் எங்களுக்காக பாடுகிறார்கள். அவர்கள் ஒரு புதிய வாழ்வை, ஒரு புதிய அர்த்தத்தை, ஒரு புதிய இலக்கைச் சுட்டிப்பாடுகிறார்கள்.

வலி மிகுந்ததாக இருந்ததாலும், அவர்களது கவிதை வரிகளை வாசிக்கும் போது, ஒருவரின் அச்சங்கள் காணாமல் போகும். இந்தப்பாடல்கள், உறுதிமிக்க செயல்பாடுகளுடன் மிகுந்த நெருக்கம் கொண்டவை, அத்தகைய செயல்பாடுகளுடன் இணைந்து கொள்பவை. அவை, ஸ்பானிய மக்கள் இயக்கத்தின் அடி ஆழத்தில் இருந்து முளைத்தவை. கியூபாவை மனதில் நிறுத்தி, இந்தக் கவிஞர்கள் தங்கள் சொந்த மக்களின் விடுதலைக்காக போராடினார்கள்.

கவிஞர் கொன்சாலோ அபாட், இப்படி எழுதினார்...


....நான் எனது வாழ்வை புதிதாய்த் துவக்க விரும்புகிறேன்...

ஹவானாவில் ஒளிரும் சூரியனுக்குக் கீழே..!



கவிஞர் ஏஞ்சல் சாண்டியாகோவின் வரிகள்...


ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் பெருங்கடலை நான் வற்றச் செய்வேன்...

ஏனெனில் அந்தப் பெருங்கடல் எனது வழியில் குறுக்கிடுகிறது...

நான் அதைக் கடக்க விரும்புகிறேன்... எனது ராணுவ பூட்ஸ்கள் நனையாமல்..!



கவிஞர் சர்லோஸ் ஆல்வாரெஸ்...


...நான் நம்பிக்கையைத் தழுவுவேன்...

கியூபா எனக்கு அதை அளித்திருக்கிறது...

ஸ்பெயினின் காயங்களை ஆற்றுவதற்காக,

நம்பிக்கையை என் இதயத்தில் அழுத்தியிருக்கிறது...

 

pablo neruda


கவிஞர் ஆண்டானியோ ரோட்ரிக்ஸ்...


...இல்லை, நான் உன்னை கண்டுபிடிக்கவில்லை...

ஓ, கியூபா... நீ இங்கே இருக்கிறாய்...

நான் உனது கரும்புகளை உன்னுடன் சேர்ந்து வெட்டுகிறேன்...

சுவர்களிலும், கதவுகளிலும் உனது போஸ்டர்களை ஓட்டுகிறேன்...

அந்தி நேரத்தில் உனது கடற்கரை மீது நின்று இந்தக் கவிதையை எழுதுகிறேன்...



கவிஞர் ஏஞ்சல் கன்காலஸ்...

ஒரு குருட்டுபுயல் இந்த நிலத்தை விழுங்கட்டும்...

அல்லது, இந்தச் சமவெளியில் சொர்க்கம் சரிந்து விழட்டும்...

எனது கண்களில் கியூபா மின்னுகிறது. ஒரு பெருந்தீயைப் போல...

எப்போதும் அணையாத ஒளியைப் போல!


கவிஞர் ஏஞ்சலா பிகுவேரா…

ஓ, கியூபா... உனது மக்கள் விடுதலை அடைத்து விட்டார்கள்...

அவர்கள், தங்கள் விலங்குகளை உடைத்து எறிந்துவிட்டார்கள்...

நேர்கொண்ட நம்பிக்கையின் வழியில் ஊழிக்காற்றுக்கு எதிராக நடைபோடுகிறார்கள்...

இதனிடையே, ஸ்பானிய மக்கள்,

துரோகிகளால் விற்கப்பட்டு, ஓடுக்கப்பட்டு விட்டார்கள்...

அவர்கள் தங்கள் கண்ணீரை விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்...

அவர்களது நூற்றுக் கணக்கான காயங்களில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது..!


இன்னும், தங்களது கவிதைகளை எழுத முடியாத அல்லது கொலை செய்யப்பட்டு விட்ட பிராஸ் டி ஒட்டேரோ, ரபேல் ஆல்பெர்ட்டி மற்றும் பல கவிஞர்கள் - இந்தத் தொகுப்பில் இடம்பெறாத அந்த கவிஞர்களின் பாடல்கள் மட்டுமல்ல, இப்போதுதான் விழிப்புணர்வு பெற்று, ஒரே குரலில் தங்களது கவிதை வரிகளையும் இணைத்துக்கொண்ட கவிஞர்களின் பாடல்களும் ஒலிக்கின்றன. நம்மோடு இணைந்து, ஸ்பானிய கவிஞர்களும், கியூபாவை ஆதரிக்கின்றனர். அவர்களின் ஆதரவுக் குரல், நமக்கு புதிய பலத்தைக் கொடுக்கிறது. நமது வேகத்தைக் கூட்டுகிறது.
 

 

ஏபிஎன் இன்டர்ரோனால்

நியூஸ் புல்லட்டின், ஜீலை 5, 1963.

 

 

முந்தைய பகுதி:


மரண தருணத்தின் சுவடுகள்! ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 17

 

 

Next Story

எதிர்பாராத கண்ணீர்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 25.

Published on 27/09/2019 | Edited on 27/09/2019

எனது நூல்கள், கவிதைகள் மற்றும் தொகுப்புகளிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு விமானத்திலும், காரிலும், நடந்தும் சிலி முழுவதையும் சுற்றி பிரச்சாரம் செய்து வந்தேன். செப்டம்பரில் நாங்கள் ஒரு புதிய ஜனாதிபதியை பெறப் போகிறோம். அத்துடன் பல மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
 

தெருவில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு மிகப்பெரிய முரசொலி எங்களை அழைக்கிறது. உண்மையில் அங்கே முரசுகள் இல்லை. எனினும் ஒவ்வொருவரும் அதைக் கேட்டோம். ஒருவேளை அது முன்பொரு காலத்தில் அரவ்க்கா இன மக்கள் தங்கள் மீது படையெடுத்து வந்தவர்களுக்கு எதிராக ஒலித்த முரசின் ஓசையாக இருக்கலாம். எங்களை போர்க்களத்திற்கு அழைத்தது அவர்களது குரலாக இருக்கலாம்.
 

இன்றைக்கு அந்தப் போராட்டமானது நில உடமையாளர்களுக்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இதர அனைத்து பிற்போக்கு சக்திகளுக்கும் எதிராக தொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எனது தேசத்தின் அரசியல் வாழ்வை சூறையாடி அடிமைப்படுத்தியிருப்பது இவர்கள்தானே?

paththirikaiyalar pablo neruda part 25

நான் எமது வேட்பாளர் டாக்டர் அலண்டேவுடன், மெகல்லன் ஜலசந்தியை நோக்கி பரந்து கொண்டிருக்கிறேன். விமானத்திற்கு கீழே, மிக வேகமாக ஓடி மறையும் பள்ளத்தாக்குகள், அற்புதமாக வளர்ந்து கிடக்கும் கோதுமை வயல்கள், கொத்து கொத்தாய் காய்த்துத் தொங்கும் திராட்சைத் தோட்டங்கள்.  நாங்கள் மிகவும் கடினமான சமவெளிப் பகுதியை, தலை சுற்றும் உயரத்தில் அமர்ந்து கொண்டு கடந்து சென்றோம். வழியில் சக்திமிக்க எரிமலைகளான லைமா, வில்லாரிகா, ஷில்லான் ஆகியவை அகன்ற வாயுடன் உயர்ந்து நின்று புன்னகைத்தன. திடீரென்று பனிமூடிய மலைச்சிகரங்களை கண்ணுற்றோம். ஓசோர்னோ, பண்டியாகுடோ மற்றும் கார்கோவடோ ஆகிய பனிச்சிகரங்களையும்,  கடல் போல விரிந்து கிடக்கும் மலைத்தொடரின் எழிலையும் கண்டோம். தனித்தன்மை வாய்ந்த இந்த இடங்களையெல்லாம் எங்கள் விமானம் கண்மூடித் திறப்பதற்குள் கடந்து சென்றது. கீழே தெரிந்த நூற்றுக்கணக்கான பனிச்சிகரங்கள் வெள்ளி ரிப்பன்களைப் போல காட்சியளித்தன. அமெரிக்கக் கண்டத்தின் தென்கோடி பிரதேசம் மாபெரும் அழகும் வனப்பும் நிறைந்த, அழகின் மர்மங்கள் நிறைந்த பிரதேசமாக காட்சியளிக்கிறது!
 

புத்தம் புதிய நீல வண்ண மலைகளின் மீது வெள்ளை நிற பதாகையாக பனி போர்த்தியிருக்கிறது. எண்ணற்ற தீவுக் கூட்டத்தின் கரைகளில் படிந்துள்ள கடல் நுரைகளில் பட்டு சூரிய ஒளி மின்னுகிறது. மலைகளின் இதய பகுதிகளில் ஆழமாக வெட்டி விட்டது போன்ற கடற்கால்கள்...
 

விரைவிலேயே எங்களது கவனம் படகோனியாவின் கடினமான எதார்த்தத்தை நோக்கித் திரும்பியது. மக்கள் எங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். மாபெரும் மக்கள் கூட்டம் எங்களை வரவேற்ற விமான நிலையத்தில் துவங்கி, எல்லா இடங்களிலும் நாங்கள் பேசினோம். உலகின் தொலைதூர நகரங்களின் இருப்பிடமான மெகல்லன் ஜலசந்தி முழுவதும் வீதிகளில் நடந்தோம். பிறகு நாங்கள் மிகப்பெரும் எஸ்டேட்டுகளுக்கு சென்றோம். இந்த எஸ்ட்டேட்டுகளில் மிகச் சிறியதே சுமார் 3 அல்லது 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு கொண்டது என்றால் மற்றவற்றின் பரப்பை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இங்கு ஆயிரக்கணக்கில் ஏன் லட்சக்கணக்கில் கூட செம்மறி ஆடுகள் மேய்கின்றன. அவை எப்போதும் எண்ணப்படுவது இல்லை. ஒரு எஸ்டேட்டில் முழு வீச்சில் ஆடு வெட்டும் பணி நடந்து கொண்டிருந்த போது நாங்கள் அங்கு சென்றோம். 140 ஆயிரம் ஆடுகள் ஏற்கெனவே வெட்டப்பட்டிருந்தன. ஆனால் அந்த கம்பெனியின் லாபத்தோடு ஒப்பிடும் போது, இந்த எண்ணிக்கை குறைவானதே.

paththirikaiyalar pablo neruda part 25

இந்த நிறுவனம் மெகல்லன் ஜலசந்தி சுரண்டல் கழகம் என்றே பெயர் கொண்டது. இப்பிராந்தியத்தில் பிரபலமானது. கடந்த 50 ஆண்டுகளாக மெகல்லன் ஜலசந்தி மக்களையும், அவர்களுடைய ஆடுகளையும் ஒட்டச் சுரண்டிய இந்த கம்பெனி, தனது பெயரில் இருக்கும் சுரண்டல் என்ற வார்த்தையை திடீரென்று நீக்கிக் கொண்டது. வார்த்தை மட்டும்தான் நீங்கியது. சுரண்டல் அப்படியே தொடர்கிறது.
 

பெரும் அளவிலான பேல்கள் ஆட்டுத்தோல் லண்டனில் மார்க்கெட் செய்யப்பட்டது. இறைச்சி பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு கப்பலில் ஏற்றப்பட்டது.  பன்டா அரினாஸ் பகுதியில் செம்மறி ஆட்டுக் குட்டிகளே இல்லாமல் செய்தது இந்தக் கம்பெனி. உள்ளூர் சந்தையிலிருந்து செம்மறி ஆட்டு இறைச்சி முற்றிலும் மறைந்து விட்டது. அப்படியே கிடைத்தாலும் ஏழைகள் வாங்க முடியாத அளவிற்கு இருந்தது.
 

அலெண்டே தனது பிரச்சாரத்தில், இந்த அமைப்பு முறையை மாற்றுவது என்று தீர்க்கமாக உறுதியேற்றார்.
 

நாங்கள் வென்றால் அதன் பின்னர் அமையப் போகும் மக்களின் அரசாங்கம் சிலி தேசத்தின் மக்களுக்கு நிலங்களை விநியோகிக்கும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அங்கே கூடியிருந்த ஒட்டுமொத்த மக்களிடையேயும், மேற்படி பிரிட்டிஷ் கம்பெனியின் மேலாளர் முன்பும் வெளியிட்டோம். அப்போது அந்த மக்களின் சோகமான கண்களில் ஒரு நம்பிக்கை ஒளி பிறந்ததை உணர்ந்தோம். சிலியின் இந்த மாபெரும் மாகாணத்தின் மக்கள் (இம்மாகாணம் சில ஐரோப்பிய நாடுகளை விட பெரியது) நீண்ட காலமாக ஒடுக்குமுறையின் கீழ் வாழ்கிறார்கள்.

paththirikaiyalar pablo neruda part 25


எங்களது பயணத்தோடு, பெரும்பான்மை மக்கள் செல்வாக்குடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சோசலி்ஸ்டான பன்டா அரினாஸ் மாநகர மேயரும் வந்தார். சாலைகளில் ஆடு மேய்ப்பர்கள் எங்களை கடந்து சென்றார்கள். ஒவ்வொருவரும் ஒரு குதிரையில் சென்றார்கள். கையில் மற்றொரு குதிரையை கட்டி இழுத்துச் சென்றார்கள். இரண்டாவது சென்ற குதிரையில் அந்தத் தொழிலாளர்களின் கருவிகள், பூட்ஸ் செருப்புகள், சமையல் பொருட்கள் போன்றவற்றை கட்டியிருந்தார்கள்.
 

 இந்த பரந்து விரிந்த பள்ளத்தாக்குகளில் நீண்ட காலமாகவே ஆடு மேய்ப்பர்கள் வாழ்கிறார்கள். அவர்களைச் சுற்றி அவர்கள் வளர்க்கும் செம்மறி ஆடுகள் மட்டுமே தெரிகின்றன.
 

மிக நீண்ட குளிர்காலத்தின் போது (உலகிலேயே நீண்ட குளிர் காலம் நிலவும் பகுதி இதுதான்) அவர்கள் அடிக்கடி வெளியே சென்று விடுவது உண்டு. தானும் நீண்ட ஆண்டுகளாக ஒரு ஆடு மேய்ப்பராக இருந்ததாக மேயர் கூறினார். அவர் வேலை செய்த இடத்தில் அவரது மேலதிகாரிகள் இவரை எப்போதும் கடுமையான பணிகளுக்கு உட்படுத்த முயற்சித்தார்கள். ஏனென்றால், இவரது கலக குணத்தை பார்த்து அவர்கள் அஞ்சினார்கள். அவர் தனது செம்மறி ஆடுகளோடு வெளிப்பகுதிகளில் படுத்துத் தூங்குவார். வெப்பநிலை மைனஸ் 30 டிகிரிக்கும் கீழே செல்லும்போது கூட இது போன்று நடக்கும். பல தருணங்களில் அவரது கண் இமைகளில் பனி மூடியிருக்கும். மிகக் கடுமையான சூழல்களில் வாழ்ந்த அவர் முடிவற்ற தனிமையிலும் வாடியவர்.
 

ஆனால் இப்போது ஆடு வெட்டும் காலம் உச்சத்தில் இருக்கிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை சந்திக்க நாங்கள் விரும்பினோம். அமைதியான புரட்சிக்கு ஆதரவு அளிக்கும் வேட்பாளரை அவர்களுக்கு அறிமுகப்படுத்த விழைந்தோம். அலெண்டேவுக்கு வாக்களிப்பதன் மூலம் அவர்களது வாழ்வில் மாற்றம் வரும் என்பதை விளக்க நாங்கள் முயற்சிப்போம். அதன் பின்னர் நான் எனது கவிதைகளைப் பாடுவேன்.
 

நாங்கள் அந்தப் பெரிய கூடாரத்திற்குள் நுழைந்தோம். அங்கே நூற்றுக்கணக்கான ஆடு வெட்டும் தொழிலாளர்கள் இருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு செம்மறி ஆட்டை வைத்திருந்தார்கள். புராணங்களில் வரும் கதாநாயகர்களைப் போல அவர்கள் காணப்பட்டார்கள். செம்மறி ஆட்டின் கழுத்தைச் சுற்றி இடது கையை வைத்துக் கொண்டும், வலது கையால் அந்த ஆட்டின் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி அதன் பின்னர் உயிரிழந்த ஆட்டின் உடலை கீழே போட்டு தோலை உரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கடைசியில் ஆட்டுக்குட்டி தனது முழுத்தோலையும் இழந்தது. தோல் இல்லாத நிர்வாண உடலாக காட்சியளித்தது.

paththirikaiyalar pablo neruda part 25

இதைப் பார்ப்பது மிகவும் கடினமானது. இந்த வேலை மிக வேகமாகவும் விரைவாகவும் நடக்கும். அந்தத் தொழிலாளரின் வியர்வை துளிகள் தனது கையில் ஏந்தியுள்ள ஆட்டுக்குட்டியின் மீது விழும். என்னுடன் வந்தவர்கள் இமை மூடாமல் அந்தக் காட்சிகளை கண்டார்கள். அவர்களது கண்கள் குளமாயின. முகங்களில் தூசி படிந்தது. ஆடு வெட்டும் அந்தக் கூடத்திற்குள் வீசும் காற்றின் வாடை மிக மோசமானது. ஆட்டுக் குட்டியின் தோலில் இருந்து எழும் நாற்றமும் வியர்வையின் நாற்றமும் அங்கே வியாபித்திருந்தது.

 

அந்தக் கம்பெனி தொழிலாளர்களுக்கு அவர்களது வியர்வை முழுவதும் ஆவியாகும் வரை வேலைவாங்கிக் கொண்டு மிகச் சிறிய அளவு கூலி கொடுத்தது. கடைசியில் அவர்களுக்கு சற்று ஓய்வு கிடைத்தது. அந்தக் கூடத்தின் நடுவில் எங்களைச் சுற்றி நின்றார்கள். இந்த தருணம் என்னைப் பொறுத்தவரை மிகவும் பொறுப்புமிக்க தருணம். இந்த தொலைதூர இடத்தில், ஆட்டுத் தோலின் நாற்றத்திற்குள்ளும் தூசி படிந்த கூடாரத்திற்குள்ளும் வேலை செய்கிற அந்த மக்களுக்காக எனது கவிதையை வாசிக்கும் தருணம். ஒரு வேளை அவர்கள் காட்டுத்தனமானவர்களாக நாகரீகமற்றவர்களாக இருந்தால் என்ன செய்வது? அமைதியாக கூடியிருந்த அந்தக் கூட்டத்தினிடையே கவிதை வாசிப்பது, அவர்களுக்கு என்னை புரிந்து கொள்ள வைக்குமா? எனது எண்ணங்கள் மோதிக் கொண்டிருந்தன.

 

கடைசியில் நான் வாசிக்க ஆரம்பித்தேன். கியூபாவைப் பற்றிய, செவ்விந்தியர்களைப் பற்றிய, உண்மையைப் பற்றிய, மகிழ்ச்சியைப் பற்றிய, காற்றைப் பற்றிய, துயரத்தைப் பற்றிய கவிதைகளை நான் வாசித்தேன். கடினமான உழைப்பால் களைத்துப் போயிருந்த அந்த மக்கள் முன்பு இது நடந்தது.

 

கடைசியில் எனது கவிதைகள் சொந்த தேசத்தைப் பற்றி கூறியது. அப்போது எதிர்பாராத கண்ணீர் துளிகள், ஒட்டிப் போயிருந்த அவர்களது கன்னங்களில் வழிந்ததைக் கண்டேன். படகோனிய பிரதேசத்தின் குளிர் காற்றில் அந்தக் கண்ணீர் பளிச்சென்று தெரிந்தது. சோக கீதங்களோ, கடும் புயலோ கூட இப்படிப்பட்ட கண்ணீரை அந்த மக்களிடமிருந்து வெளிக்கொண்டு வந்திருக்கும் என்று நான் கருதவில்லை. அவர்கள் என்னைப் பாராட்டி கை தட்டினார்கள். என்னை வாரி அணைத்துக் கொண்டார்கள். ஒரு கடினமான தேர்வில் நான் வெற்றி பெற்றதை அப்போதுதான் உணர்ந்தேன்.

 

மீண்டும் சாலைக்கு வந்தோம். எல்லையற்ற நிலப்பகுதியை பார்த்தோம். உலகின் முடிவில் இருக்கின்ற சமவெளிப் பகுதியை, பனி மூடிய மலைகளை தாண்டி திரும்பினோம். மிக மிக நீண்ட கண்ணுக்குத் தெரியாத கம்பிவேலி இருந்தது. அது என்ன? அது எதைப் பாதுகாக்கிறது? விண்வெளியையா? உலகின் செல்வத்தையா?

paththirikaiyalar pablo neruda part 25


 

இந்தப் பிராந்தியத்தில் முதன்முதலில் நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் வேலி போட்டிருந்தார்கள். படகோனியாவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களே அவர்கள். பல லட்சக்கணக்கான மக்கள் வாழ போதுமான இந்தப் பிரதேசத்திற்கு அவர்களே இந்தப் பெயரை இட்டார்கள். ஆனால் முதலாளித்துவ சமூகத்தின் கொடூர மனிதர்களால் ஊடுருவப்பட்ட எந்த இடமும் உருப்பட்டதாக சரித்திரமில்லை. அவர்கள் இங்கே புதிய ரகமான வேட்டையை துவக்கினார்கள். வன்முறையும் கொலை பாதகங்களும் தெரியாத இந்த மக்களிடையே, கெய்ன் என்னும் மனிதன் பிறக்காத இந்த பூமியில் அந்த வேட்டை நடந்தது. படகோனிய இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட வேட்டை மிக விரைவிலேயே அந்த இனத்தை துண்டாடியது.
 

இந்த வேட்டையில் அவர்கள் தங்களது காதுகளை இழந்தார்கள். பின்னர் அவர்களது தலைகளை குறி வைத்து ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டது.
 

இன்றைய நிலைமையில் எந்தவொரு படகோனியனும் இங்கே உயிரோடு இருப்பார்கள் என்று நான் கருதவில்லை. காற்று மட்டும் அதன் துருவப் பாடலை இசைத்துக் கொண்டிருக்கிறது. மரங்களை வளையச் செய்தும் ஒடித்தும் விளையாடுகிறது. செம்மறி ஆட்டு குட்டிகளின் தோலும் இறைச்சியும் வெளிநாடுகளுக்கு கப்பலேற்றப்படுவதை வரலாற்றின் இந்த இருட்டுப் பிரதேசத்திலிருந்து எந்தக் கண்களும் பார்க்க முடியாது.
 

எவராலும் கவனிக்கப்படாத இந்த மக்களுக்காக ஒரு புதிய உணர்வை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அதில் உறுதியாக வெல்வோம்.

-இழ்வெஸ்தியா, பிப்ரவரி 20, 1964.



முந்தைய பகுதி:
இப்போது இங்கே கோடைக்காலம்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 24.
 

Next Story

சோவியத் யூனியனின் ஞானம்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 21.

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

சிலி பல்கலைக்கழகத்தின் கவுரவமிக்க அந்த ஹாலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று நான் பேசிக் கொண்டிருந்தேன். சிலி தேசத்தின் முற்காலத்து அறிவியல் மற்றும் கலாச்சார வளர்ச்சியின் பாரம்பரியமான மையத்தில் நான் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால், சில ஆச்சரியமான முகங்களை அப்போது நான் பார்த்தேன்.

 

 

thodargal paththirikaiyalar pablo neruda part 21

 

 

ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. அங்கே கூடியிருந்த மக்கள் அனைவரும் நிக்கோலஸ் கில்லனை வாழ்த்துவதற்காக காத்திருந்தார்கள். கியூபா நாட்டைச் கவிஞன் எங்களது நாட்டிற்கு மீண்டும் வந்திருந்தார். இந்த முறை ஜூலை 26-ம் தேதி கியூபா புரட்சியை கொண்டாடுவதற்காக அவர் வந்திருந்தார்.

 

எப்போதும் போல பொதுமக்கள் நிக்கோலஸ் கில்லனின் ஒவ்வொரு வார்த்தையையும், அவரது கவிதையின் வாசிப்பையும் கேட்டு உற்சாகமாக கைதட்டிய வண்ணம் இருந்தனர். கியூபாவையும் அவரையும் அவர்கள் வாழ்த்தினர். கில்லன் தனது கவிதைகளை எவரோடும் ஒப்பிட முடியாத அளவிற்கு கம்பீரத்துடன் பாடிக் கொண்டிருந்தார். சிலி கலாச்சார மையத்தில் இதுவரை கேட்டிராத அளவிற்கு கைதட்டல் மழையில் அவர் நனைந்து கொண்டிருந்தார். கில்லன், மார்ட்டி மற்றும் பிடல் காஸ்ட்ரோ ஆகியோரின் அந்த சொந்தத் தீவில் இந்த கைதட்டல் எதிரொலித்திருக்கும்.

 

எதிர்பாராத விதமாக அந்த உற்சாக மழையில் நானும் வரவேற்கப்பட்டேன். பார்வையாளர்கள் எழுந்து நின்று தங்களது கைகளை தட்டினர். என்னை புகழ்ந்தனர். அவர்களது கண்களில் கண்ணீரோடும் இதயங்கள் முழுவதும் நம்பிக்கையோடும் என்னை வாழ்த்தினார்கள்.

 

 

thodargal paththirikaiyalar pablo neruda part 21

 

உண்மையில் கியூப கவிஞருக்கே அந்த புகழுரைகள் சொந்தம். அன்றைய தினத்தின் கடைசிச் செய்தியை நான் உருவாக்கினேன். மாஸ்கோ பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்கள் அணுசக்தி சோதனைகளை தடை செய்வதற்கான இறுதித் தீர்மானத்தை நிறைவேற்றியது தொடர்பாக மூன்று மீடியாக்களில் செய்திகள் வெளியாகின.

 

அது ஒரு செய்தி துணுக்கு, அந்த செய்தியே எனக்கு அந்த உற்சாக வரவேற்பை அளிக்க காரணமாக அமைந்தது. அந்த வரவேற்பு அமைதிக்காக மக்கள் உணர்வுப்பூர்வமாக தயாராக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்த நிகழ்ச்சி மிகத் தொலைவில் இருக்கிற மாஸ்கோவுடன் எங்களது உற்சாகத்தை இணைத்த ஒரு மந்திரக் கவிதையாக இருந்தது.

 

பின்னர், அமெரிக்க அணுசக்தி சோதனைகள் தென் அமெரிக்க கடற்கரைகளில் நடத்தப்பட்டது. எப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் ஆபத்து வளர்ந்தது. பலரும், அந்த பிரமாண்டமான பெருங்கடலில் ஒரு சிறிய தீவில்தானே நடக்கிறது என்று கருதினார்கள். ஆனால் நான் லட்சக்கணக்கான லத்தீன் அமெரிக்க மக்களைப் போல பசிபிக் கடலோரத்தில் வசித்துக் கொண்டிருந்தேன். எனது நாட்டின் கப்பல்கள் அந்தப் பெருங்கடலை தாண்டி செல்பவை. சிலி தேசத்து மீனவர்கள் அந்தக் கடலில்தான் தங்களது உணவுப் பொருளை பெருமளவில் பிடிக்கிறார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் நான் அந்த எல்லையற்ற பெருங்கடலை பார்க்கிறேன். இந்தப் புவிக்கோளத்தில் மிக நீளமான கடல் வழியைக் கொண்டிருக்கிற பெருங்கடல் அது. ஏற்கெனவே ஒருவரையொருவர் சந்தித்திராத, நாடுகளை இணைக்கிற வழியாக, புரிந்துணர்வையும், வளர்ச்சியையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள உதவுகிற வழியாக நான் கருதுகிறேன்.

 

அணுகுண்டு வெடிப்பு சோதனைகள் என்ற நாசகர காளான்கள், பாதுகாப்பற்ற தீவுகளில் வளர்ந்துள்ளன. நீரை விஷமாக்குகின்றன. தட்பவெப்ப நிலையை மாற்றுகின்றன. கடற்கரைகளை மரணப் படுக்கைகளாக்குகின்றன.

 

நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஒரு அணுசக்தி பேரழிவை ஏற்படுத்துவதற்கான தயாரிப்புகள் குறித்து மனித குலம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்… அது விஷத்தன்மையையோ கதிர்வீச்சையோ ஏற்படுத்தாது என்றாலும் கூட. ஏனென்றால் மிக நீண்ட கால காத்திருப்புக்குப் பின்னர் நமது நம்பிக்கை என்பது ஒரு காலியான வீட்டிற்குள் கிடக்கும் பழைய நாற்காலியைப் போல மாறி விடக்கூடாது. மாஸ்கோ ஒப்பந்தம் பொதுப்புத்தியுடன் மிகுந்த விருப்பத்துடன், பரஸ்பரம் புரிந்துணர்வுடன் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

 

அதனால்தான் அத்தகைய புகழுரையும் கைதட்டலும் அந்த அரங்கத்தை நிரப்பியது. அரங்கத்திற்கு வெளியேயும் கூட ஏராளமான மக்களின் தலைகள் தெரிந்தன. கில்லனின் ஈர்ப்புமிக்க கவிதைகள் அறிவு, அமைதியான வாழ்க்கை, முழு அமைதி ஆகிய மதிப்புமிக்க மனித குல மாண்புகளுக்கு மரியாதை செய்து கொண்டிருந்தது.

 

வீதிகளில் பெரும் மக்கள் கூட்டத்தின் ஆர்ப்பாட்டங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், சுரங்கத் தொழிலாளர்கள், படித்துக் கொண்டிருக்கிற இளைய தலைமுறையினர் ஆகியோரால் விடப்பட்ட ஏராளமான அறிக்கைகள் அவர்களது நம்பிக்கைகளை ஒரு போதும் சீர்குலைக்காது. இவை அனைத்தும் மாஸ்கோ ஒப்பந்தத்திற்கு எனது தேசத்தின் ஒப்புதலை காட்டின. இது எதிர்மனோபாவத்திற்கு எதிரான முதல் அடி ஆகும். அங்கே கூடியிருந்த பொதுமக்களின், பெரும் மரியாதைக்குரிய அந்த இடத்தில் ஒவ்வொருவரும் காட்டிய உணர்வு என்பது என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

 

பனிப்போர் நமது ஆன்மாக்களை உறையச் செய்தது. மீண்டும் மகிழ்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையை நாம் இழந்திருந்தோம். ஆனால் தற்போது அந்த பயங்கர நினைவுகளை வெற்றி கொள்ளும் அளவிற்கு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது, மீண்டும் அது சாத்தியம் என்பதைக் காட்டுகிறது. பரஸ்பரம் நம்பிக்கையையும் புரிதலையும் உருவாக்கியிருக்கிறது.

அந்த உணர்வுகள் முற்றிலும் தனிப்பட்ட முறையிலானவை என்ற போதிலும் கூட, இப்போதே எனது எண்ணங்களை வெளிப்படுத்த விரும்புகிறேன். தொலைதூரத்தில் மாஸ்கோவில் வாழும் மக்களுக்கு எனது உற்சாகத்தை தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால், சோவியத் யூனியனின் மனிதநேயத்தை உலகுக்கு உணர்த்திய வரலாற்றுப்பூர்வமான இந்த உடன்பாட்டிற்கு இன்னும் பெரிய அளவில் மதிப்பளிக்க சித்தமாய் இருக்கிறேன்.

 

-பிராவ்தா, செப்டம்பர் 5, 1963.



முந்தைய பகுதி:

இரத்தக் கறைகளும், வெறுப்பின் ஜுவாலைகளும்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 20