Skip to main content

மரண தருணத்தின் சுவடுகள்! ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 17

Published on 19/06/2019 | Edited on 13/07/2019

சமீபத்தில் எனது நாட்டில் நடைபெற்ற இரண்டு கடுமையான நிகழ்வுகள், ஒவ்வொருவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் மடமடவென சரிந்து விழுவதைப் போல, நடுத்தெருவில் ஒரு மனிதன் ஆடையின்றி அம்மணமாய் நிற்பதுபோல, பூர்ஷ்வா ஒழுக்கத்தின் அடிப்படையையே தகர்க்கும் சம்பங்கள் அவை.
 

paththrikaiyalar pablo neruda


இரண்டு நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் இது நடந்தது. ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொருவர் விடுவிக்கப்பட்டார். இந்த இரண்டு வழக்ககளுமே, நீதியின் குணத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியது! சிலி நாட்டில் மட்டுமல்ல, பல மேற்கத்திய நாடுகளிலும் கூட இதுதான் நீதியின் குணம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

நாகுஎல்டோரோ என்ற கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி விவசாயத் தொழிலாளி ஒருவர், ஒரு கடுமையான குற்றத்தைச் செய்து விட்டார். அடக்க முடியாத கோபத்தின் வெளிப்பாட்டால், இரண்டு குழந்தைகள் உட்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரையும் வெட்டிக் கொன்றார்.

இந்த துயரம் நடந்த கிராமம், மிகவும் தொலைதூரத்தில் உள்ள கிராமம். இந்த சம்பவத்திற்கு முன்னர், சிலி தேசத்தவர் இந்த கிராமத்தின் பெயரைக்கூட கேள்விப்பட்டது இல்லை. சிலியின் வரைபடத்தில் கூட இந்த கிராமம் இடம் பெறவில்லை.

ஆனால், இறைவனால் வஞ்சிக்கப்பட்ட இந்த நாகுஎல்டோரோ கிராமம், மனித துயரம் எனும் வரைபடத்தில் தற்போது ரத்தத்தால் வரையப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கிராம மக்களும், அருகில் உள்ளவர்களும், காலனியாதிக்கக் காலத்தில் இருந்தே வறுமையின் பிடியில் இருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட, அறியாமை நிலையில் இருக்கும் இவர்கள், முற்றிலும் எழுத்தறிவு இல்லாதவர்கள்.  அவர்களது அழுக்குக் குழந்தைகள், வெற்றுக் கால்களுடன் திரிகிறார்கள். அப்பகுதியைச் சேர்ந்த நிலபிரபுக்கள், வெகுதொலைவில், தலைநகரில், தங்களுக்கு சொந்தமான ஆடம்பரம் மிக்க மேன்சன்களில் வாழ்கிறார்கள். கடும் பனி மூட்டத்தில் சிக்கிய இடத்தைப் போல, அந்த கிராமத்தை மவுனம் போர்த்தி மூடியிருக்கிறது.
 

paththrikaiyalar pablo neruda


இங்குதான் ஜோஸ் டெல் கார்மென் வாலென்சுவேலா என்ற இந்த இளம் குற்றவாளி பிறந்து வளர்ந்தான். கொலை செய்துவிட்டு சாலையில் படுத்துக்கிடந்த போது போலீஸார் இவனைக் கண்டுபிடித்தனர். அவனுக்கு அருகில் கொஞ்சம் உணவு மற்றும் ஒயின்தான் அவனுக்கு அருகில் கிடந்தன. அவற்றையும் போலீஸார் கைப்பற்றினர். அவனோ,  தான் செய்த குற்றத்தையே மறந்தவனாய், அமைதியாக தூங்கிகொண்டிருந்தான்.

நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகள் விசாரணை நடந்தது. இந்த இரண்டு ஆண்டு கால இடைவெளியில், வாலென்சுவேலா படிக்கவும், தன்னை மற்றவர்கள் தவிர்க்காத விதத்தில் பேசவும் கற்றுக் கொண்டான். நீதியின் அரண்மனையில், அதிகாரிகள் இவனது வழக்கை ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அவனது மரண தண்டனையை பக்கம் பக்கமாக தயாரித்துக் கொண்டிருந்தனர். இந்தக் காலட்டத்தில் அந்த மனிதன், தனது முகத்தை எப்படிக் கழுவுவது என்று கற்றுக் கொண்டிருந்தான். டேபிளில் உட்கார்ந்து எப்படிச் சாப்பிடுவது, மற்ற பல குற்றங்களுக்காக சிறைக்குள் வந்திருக்கிற சில நல்ல மனிதர்களுக்கு நன்றி சொல்வது எப்படி என்று கற்றுக்கொண்டிருந்தான். சுருங்கச் சொன்னால், அவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கைதாகும்போது அறியப்பட்டதைவிட மிகவும் மாறிப்போனான். அத்தகைய மாற்றத்தின் சாரம் என்ன?

மிகவும் தாமதம் என்ற போதும், அவன் இப்போதுதான் மனிதனாகிக் கொண்டிருந்தான். கடந்த காலத்தில், அவன் ஒரு சபிக்கப்பட்ட வனவிலங்காகவோ, ஒரு தாவரமாகவோ, சிலியின் மலைகளில் வளர்ந்திருக்கும் மரங்களைப் போலவோ வாழ்ந்து கொண்டிருந்தான். சிறையில் இருக்கும் போதுதான், மிகமிகத் தாமதமானாலும் கூட, எப்படிச் சிரிப்பது என்றே கற்றுக்கொண்டான்.

மரணதண்டனை நாள் வந்தது. “நாகுஎல்டோரோ கிராமத்து கொலையாளி”க்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட அந்த ‘ஓநாய்’ தரையில் வீழ்ந்தான் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
 

paththrikaiyalar pablo neruda



அதேநாளில் ஹெர்மன் ரவுச் என்ற மற்றொரு மனிதன் முற்றிலும் விடுதலை செய்யப்பட்டான். வாலென்சுவேலாவைப் போலவே, அவனும் மக்களை கொன்றவன்தான். அதிலும் அப்பாவி யூதர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தவன். ஹிட்லரின் நாஜி அரசாங்கத்தில் நடமாடும் விஷவாயு வாகனங்களைப் பயன்படுத்தி கொலை செய்தவன்.

இரண்டாம் உலகப்போர் முடிவில் இவன் ஜெர்மனியிலிருந்து தப்பி சிலி நாட்டில் வாழ்ந்து வந்தான். பல போர்க் குற்றவாளிகளைப் போலவே இவனும் தனது நாட்டவர்களால் காப்பாற்றப்பட்டான். வேறு பெயரில் பல ஆண்டுகள் சிலியில் வாழ்ந்தான். சிலியிலிருந்து பலமுறை மேற்கு ஜெர்மனிக்கு சென்று திரும்பியிருக்கிறான். ஆனால், திடீரென்று ஒருநாள் சிலியின் சட்ட அமலாக்க அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்டான்.

அவனால் பாதிக்கப்பட்டவர்களில் உயிர் பிழைத்திருந்த ஒருவர், தெருவில் நடமாடிய அவனை  அடையாளம் கண்டு, சட்டத்தின் முன் நிறுத்தினார். சிலி நாட்டின் சட்ட அமலாக்க அமைப்புகள் முன்பு  சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் அடிப்படையில், ஒரு லட்சம் மனிதர்களின் சாவுக்கு காரணமானவன் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவனது “கொலைகள்”, வியன்னாவில் இருந்து சோவியத் உக்ரைன் வரையிலும் மிகப்பெரிய அளவில் நடந்திருப்பது தெரியவந்தது.

வழக்கு விசாரணையில், அவன் விஷவாயு வாகனங்களை சொந்தமாக வைத்திருந்தான் என்பது நிரூபிக்கப்பட்டது. நாஜி தலைமையகத்தின் உத்தரவுக்கு இணங்க, மிக வேகமாகவும், செலவில்லாமலும் ஆயிரக்கணக்கான மக்களை சவக்குழிக்கு அனுப்பிய அவனிடம், நீதிமன்றம் “கருத்து” கேட்டுக் கொண்டிருந்தது.
 

 

paththrikaiyalar pablo neruda


அவனது ஒப்புதல்களில் ஒன்று மிகக்கொடூரமானது. விஷவாயு வாகனத்தில் ஏற்றப்பட்ட கைதிகளில் பலர் மூச்சுத்திணறலில் ஒருவர் மற்றவரை பிய்த்துக்கொண்டு இறந்தனர். அவர்களை மொத்தம் சேர்க்க முடியாத அளவுக்கு அவர்களுடைய உடல்கள் ஆடைகள் இல்லாமல் கிடந்தன என்கிறான்.  இருந்தாலும், இதுபோன்ற கொலைகளுக்காக விஷவாயு வாகனங்களை ஏராளமாக சப்ளை செய்ததாக ஒப்புக்கொள்கிறான். அந்த வாகனங்களால் ஐரோப்பா முழுவதும் குறைந்த செலவில் ஆண்கள், பெண்கள், குழந்கைளை லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர். ரவுச் தனது வயதாலும், படிப்பாலும் மிகவும் முதிர்ச்சி அடைந்தவராக இருந்தார். அத்தகைய நபரை இரண்டு மாதங்களுக்கு முன் குற்றமற்றவர் என்று சிலி நீதிமன்றம் விடுதலை செய்தது.

நீதிபதிகளைப் பொறுத்தவரை, இந்த வழக்கு சிலியின் சட்ட வரம்புக்குள் விசாரிக்க தகுதியானது அல்ல என்று கூறினார்கள். இத்தனைக்கும் ரவுச் சிலி நாட்டின் தொழில் அதிபராக சிலியின் தெற்குப்பகுதியில் உள்ள பணக்கார கிளப்புகளில் தொடர்ந்து பங்கேற்றவர். ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த கொடூரமானவன் ரவுச் என்ற உண்மை தெரியாமலேயே அவனுடன் கைகுலுக்கி காலம் கழித்திருக்கிறார்கள் என்ற உண்மையை நீதிமன்றம் தவிர்த்துவிட்டது. தற்போது அவர்களுக்கு உண்மைகள் தெரியவந்த நிலையில், சிலி நாட்டின் நீதிமன்றம், ரவுச்சை விடுவித்தது. அவனது பாவங்கள், உயர் சமூகத்தால் மன்னிக்கப்பட்டன.

குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த வலேன்சுவேலா சுட்டுக் கொல்லப்பட்ட அதே நாளில்,  கொலைகாரன் ஹெர்மன் ரவுச் சுதந்திரமாக நடமாடினான். எங்களில் பலரும், ஆண்டார்டிகா கண்டத்திற்கு அருகே அடைந்துள்ள இந்த தேசத்தின் குடிமக்கள் பலரும், ஒரு உண்மையான பயங்கரத்தை அனுபவித்தோம்.

ஒரு நாகரிகமற்ற, அறியாமையில் மூழ்கியிருந்த தொழிலாளி, அநீதியின் கொடுங்கரங்களால் அமிழ்த்தப்பட்ட ஒரு அப்பாவி தனது கோப உணர்வால் ஒரு குற்றத்தைச் செய்ய தூண்டப்பட்டான். அதற்கான விலையைக் கொடுத்தான்.
 

paththrikaiyalar pablo neruda


அறிவியல் பட்டம் பெற்ற ஹிட்லரின் தளபதிகளில் ஒருவராக இருந்து, தனது மிகச்சிறந்த அறிவையும், கண்டுபிடிக்கும் திறமையையும், பல்லாண்டு காலமாக, மக்களைச் கொன்று குவிக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்கச் செலவிட்டான், தனது கண்டுபிடிப்பைக் கொண்டு இந்த உலகம் முன்னெப்போதும் கண்டிராத கொடுங் குற்றங்களைச் செய்தான். அவன், விடுதலை செய்யப்பட்டு  இவ்வுலகில் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுகிறான். தான் செய்த கொடுமைகளை நீதிமன்றத்தில் தைரியமாக விளக்கவும் அவனால் முடிகிறது.

இந்த இரண்டு தீர்ப்புகளை அளித்த நீதிபதிகளைப்பற்றி நான் நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள், தங்களது மனைவிமார்களையும், குழந்தைகளையும் எந்தக் கண்களால் பார்ப்பார்கள்?! இத்தகைய அதிர்ச்சியான முடிவுகளை வெளியிட்ட தங்களது தந்தைகளைப் பற்றி அவர்களின் மகன்களும், மகள்களும் என்ன நினைப்பார்கள்?

இந்த நீதிமான்களின் பார்வையில் எது தீமை? எது நன்மை?

ரவுச்சால் கண்டுபிடிக்கப்பட்ட “கொலைகாரப் பேருந்துகளில்” ஒருவரையொருவர் குத்திக் கிழித்துக் கொண்டு செத்துப்போன மக்களைக் காலம் எப்படி நினைவில் வைத்துக்கொள்ளும்?

தலைநகரில் இருந்து, கலோனல் ரவுச்சை பேட்டிகாண ஒரு பத்திரிகையாளர் குழு வந்தது. அவன் தனது வியாபார நடவடிக்கைகளை மீண்டும் துவங்கியது குறித்து மிகவும் சந்தோசமாக இருப்பதாகச் சொன்னான். “மிகச் சிறந்த சட்டங்களுடன் கூடிய மிகச்சிறந்த நாடு” என்று அவன் பத்திரிகையாளர்களிடம் கூறினான்.

நகுஎல்டோரா கிராமத்தின் விவசாயத் தொழிலாளி கொல்லப்படப்போகும் சில்லான் சிறைக்கு அந்தப் பத்திரிகையாளர்கள் சென்றனர். அது ஒரு அந்திப்பொழுது. உயரமான மலைகளில் இருந்து பனி வழிந்து கொண்டிருந்தது. பத்திரிகையாளர்கள், அந்த மனிதனை, அவனது சிறை அறையில் கண்டார்கள்.

“நீங்கள், எங்களிடம் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். சாகப்போகிற ஒரு மனிதனின் கடைசிப்பேட்டி என்று பரபரப்பாக வெளியிடுவதற்காகவே அவர்கள் கேட்டார்கள்.

“எனது காலணிகளைப் பாருங்கள். அவை புதியவை. எனது முதல் காலணிகள் இவை. இதற்கு முன்னால் நான் செருப்பு அணிந்ததே இல்லை. இந்த சிறையில் அவர்கள் என்னை அன்பாக நடத்தினார்கள், இன்றைக்குத்தான் ஒரு ஜோடி செருப்பு வாங்கிக் கொடுங்கள் என்று அவர்களிடம் கேட்டிருந்தேன். நான், இந்த செருப்புகளை பார்த்துக் கொண்டே சாவேன்” என்றான் அவன்.

 

                - ஏபிஎன் இண்டர்ரேசனல்

                நியூஸ் புல்லட்டின்,

                ஜூலை 2, 1963

 

முந்தைய பகுதி:

 

கியூபாவின் உண்மையான கதாநாயகன்! ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா 16
 

அடுத்த பகுதி:

கியூபாவின் பாடல்கள்... ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 18

 

 

Next Story

இரத்தக் கறைகளும், வெறுப்பின் ஜுவாலைகளும்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 20

Published on 10/08/2019 | Edited on 14/08/2019

தென்அமெரிக்காவில் பச்சை பசேலென்று அடர்ந்திருக்கும் மலைக் காடுகளுக்குள் பல நாடுகள் மறைந்திருக்கின்றன. வருத்தம் தோய்ந்த அந்த பச்சை வனங்கள் வெளியாட்களுக்கு நிரந்தரமான புதிராகவே இருக்கும். உயரமாக வளர்ந்திருக்கும் மரங்கள் பள்ளத்தாக்குகளை மறைத்திருக்கும். கண்ணுக்குத் தெரியக்கூடிய எல்லா பொருட்களும் அடர்ந்த இருளில் வேறுபாடே இல்லாமல் மறைக்கப்பட்டிருக்கும். அந்த இருளை கிழிக்கிற வகையில் அவ்வப்போது திடீரென்று பிரகாசமான ஔி வெடித்து சிதறும். கண்ணைக் கூசச்செய்யும் ஒரு வெளிச்சம் ஒரு அற்பன் மீதோ, ஒரு நாயகன் மீதோ விழும். அன்பையும், வெறுப்பையும் வெளிக்காட்டும்.

 

 

paththirikaiyalar pablo neruda part 20

 

1926 முதல் 1929 வரையிலான ஆண்டுகள், அத்தகைய வெளிச்சக் கீற்றுகள் ஸாண்டினோ மீது விழுந்தன. அவர் தலைமையிலான சின்னஞ்சிறிய ராணுவம், தனது பல்வேறு வேடிக்கையான சாகசத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையே பீதியடையச் செய்தது. சாண்டினோ நிச்சயமாக  பிடல் காஸ்ட்ரோவின் நேரடியான முன்னோடி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த நேரத்தில் அவரை மீட்க யாரும் வரவில்லை.  புதிய சோசலிச உலகம், தனது சொந்த, சிக்கல் நிறைந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. லத்தீன் அமெரிக்காவின் மக்கள் திரள், அவரது போராட்டத்தின் முக்கியத்துவத்தை தொடக்கத்தில் இருந்தே புரிந்து கொண்டிருந்தாலும், அந்த கதாநாயகனுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்த இயலாத நிலையில் இருந்தனர். மலைப்பகுதியில் எதிரிகளின் குண்டு பாய்ந்து அவர் கொல்லப்பட்டார்.

 

கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிகரகுவா, நீண்டகாலமாக சமோசா குடும்பத்தால் ஆளப்பட்டது. அவர்கள், அமெரிக்க எஜமானர்களின் நம்பிக்கைக்குரிய வேலையாட்கள். நிகரகுவா மக்கள் படும் துயரங்களையும், அந்த நாட்டில் நடக்கும் கொடுங்கோன்மையையும் இந்த உலகம் அறியும் நாள் வரும். கவிஞர் நிகோ பெரிடோ லோபஸ் பெரெஸின் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு, அந்த அற்பன் சமோசாவின் வாழ்வை முடித்தது.

 

paththirikaiyalar pablo neruda part 20

 

ரத்தவெறியோடு, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிகரகுவாவை ஆட்டிப்படைத்த சமோசாவின் கதை முடிந்தது. லோபஸ் பெரெஸிக்குத் தெரியும் தான் கொல்லப்படுவது உறுதி என்று. தன்னுடைய வெற்றிகரமான நடவடிக்கைக்கு பின்னர் அவர் கொல்லப்பட்டார். அந்தச் சர்வாதிகாரியின் மரணத்திற்குப் பின்னர், மற்றுமொரு சமோசா அதிகாரத்திற்கு வந்தான். இது, அவரது மகன். பின்னர், மீண்டும் ஏற்கனவே இருந்தது போலவே தொடர்ந்தது.

 

நிகரகுவாவில் இன்று, மிகவும் கடுமையான நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என நினைக்கிறேன். நாட்டின், புரட்சிகரமான அந்தக் கவிஞன், இருளை உடைத்தெறிந்தான். நான் தற்போதுதான், தலைமறைவாக உள்ள நிகரகுவா அரசு எதிர்ப்புக்காரர்களின் கவிதைத் தொகுப்பை வாசித்து முடித்தேன்.

 

அந்த சிறிய  நூல் என்னை உலுக்கியது. அந்த நாட்டைச் சூழ்ந்த இருள், ஒரு அதிரடி வெளிச்சத்தால் உடைத்தெறியப்பட்டதை நான் கண்டேன்.

 

 

paththirikaiyalar pablo neruda part 20

 

அந்த நூல் 60 சிறிய கவிதைகளைக் கொண்டது. முகம் தெரியாத கவிஞர்களாலும், புகழ்மிக்க எழுத்தாளர்களான எட்வின் காஸ்ட்ரோ, அல்போன்சா ஜோர்டெஸ், ஜோவாகின் பசோஸ், அசாரியஸ் பாலியன்ஸ், மனோலா குவாத்ரா மற்றும் சாலமோன் டி லா சில்வா ஆகியோராலும் எழுதப்பட்டவை அவை.

 

மெக்ஸிகோவில் புலம் பெயர்ந்தவர்களாக வாழ்ந்த போது, சாலமோன் டி லா சில்வாவுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அறிவிற் சிறந்த அந்த மனிதர், சாகசங்கள், பயணம் மற்றும் பொழுது போக்கு அம்சங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்தார். எங்களது கண்டத்தில் அச்சிடப்பட்ட அற்புதமான நூல்களில் ஒன்று சாலமோன் டி லா சில்வாவினுடையது. முதலாம் உலகப்போருக்குப் பின்னர் அவர் எழுதி வெளியிடப்பட்ட கவிதைத் தொகுப்பான அந்த நூலின் பெயர் “ஒரு அறியப்படாத வீரன்.” அந்த நூல் மிகவும் அற்புதமானது! அதனுள் பொதிந்துள்ள பொருள்களுக்காக! அதன் வரிகள், பழங்காலக் கற்களால் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இதுதான், உலக அமைதி என்ற நோக்கத்திற்காக, உருவாக்கப்பட்ட முதல் பெரிய கவிதாப்பூர்வமான பங்களிப்பு. அறிவுப்பூர்வமான, புத்தம் புதிய, ஆழம் மிகக் கவிதைகள் அதில் இடம்பெற்று இருந்தன.

 

paththirikaiyalar pablo neruda part 20

 

ஆனால் ஆசிரியர் குறிப்பில் மிகவும் முக்கிய கவிஞராக, அறியப்படாத கவிஞரே இடம்பெற்றிருந்தார். 50 சதவீதத்திற்கும் அதிகமான கவிதைகளை அவர்தான் எழுதியிருந்தார்.

 

குறிப்பிட்டுச் சொன்னால் ஒரேயொரு கவிஞர் மட்டுமல்ல, பல இளம் கவிஞர்கள் இருக்கிறார்கள். பேர் தெரியாத அந்தக் கவிஞன் உயிரோடு இருக்கிறார். மற்றவர்கள் இறந்திருக்கக் கூடும். நிகரகுவாவில் பல கவிஞர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அவர்கள் பழங்கால மற்றும் நிகழ்கால கவிதையின் சாரமாக இருக்கிறார்கள்.

 

அவர்களது கவிதைகளில் வார்த்தை ஜாலங்கள் இல்லை. வார்த்தை விளையாட்டுக்கள் இல்லை. ரத்தத்தின் வடுக்களும் புனிதமான உணர்வின் தீயுமே அடங்கியிருந்தது. அவர்கள் சித்ரவதைக் கூடத்தில் நிற்பவர்களைப் போல இருந்தார்கள். பெயர் தெரியாத அந்தக் கவிஞர்களில் ஒருவர் எழுதுகிறார்…

 

சிறை நாய்கள் மீண்டும் ஒரு முறை குரைக்கின்றன

அந்த இரும்புக்கதவு உனக்குப் பின்னால் மூடப்படுகிறது

மீண்டும் ஒரு முறை நீ விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறாய்

சதி செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறாய்.

விரிவான விளக்கங்கள் அளிக்கிறாய்,

அதன் பின்னர் உனது சிறை அறைக்கு அனுப்பப்படுகிறாய்,

உனது மனைவியின் புகைப்படத்தை உற்று நோக்குகிறாய்,

அந்த இரவு துக்கங்களால் நிரப்பப்படுகிறது.

அமைதி நிலவுகிறது,

மயான அமைதி...

 

மற்றொரு  பெயர் குறிப்பிடாத கவிஞரின் வார்த்தைகள் அவர் தனது நாட்டின் மீது வைத்துள்ள நேசத்தை வெளிப்படுத்துகிறது. தனது நாட்டின் மிகப்பெரும் சமவெளிகளை அவர் குறிப்பிடுகிறார்.  தனது நாட்டின் பணக்காரர்கள் அமெரிக்க பெரும் நிறுவனங்களின் அடிமைகளாக இருப்பதை அவர் கோபத்துடன் வெளிப்படுத்துகிறார்…

 

எனது நாடே!

பள்ளத்தாக்குகளின் தேசமே!

நான் உனது பைன்மர வெளிகளை

எவ்வளவு நேசிக்கிறேன்...

ஆனால் அந்த நதி

கருப்பு பட்டைகளை சுமந்து செல்கிறது

நிகரகுவா பைன்மர கம்பெனியின்

லாபத்தை அதிகரிப்பதற்காக செல்கிறது

செத்துப் போன மரத்தின் வேர்களும்

கற்களும் தவிர மிக உயர்ந்து நிற்கும்

பைன்மரத்தின் அடியில் வேறு எதுவுமில்லை

கருவூலத்துறையானது எங்களது தங்கத்தை

வெட்டி எடுக்கிறது, தனது நீண்ட கொடும் கரங்களால்...

 

paththirikaiyalar pablo neruda part 20

 

இது போன்ற கவிதைகளைக் கொடுத்த கவிஞர்களைப் பற்றி நமக்கு சிறிதளவே தெரியும். ஜோவாக்கின் பசோஸ் எழுதிய கவிதைகளின் மூலம் இந்தக் கவிஞர்களின் நம்பிக்கையையும் இலக்கையும் தெரிந்து கொள்ள முடியும். அவரது கவிதை உணர்வுப்பூர்வமானது. மிகவும் விபரங்கள் நிறைந்தது. அதே நேரத்தில் அவரது கவிதைகள் எதிர்த்துப் போராடுகிற ஒரு ஆயுதத்திற்கு இணையான அனைத்து மதிப்பீடுகளையும் பெற்றது. அவரது கவிதைகள் வீரர்களைப் போல அணிவகுக்கிறது…

 

யாங்கீகளே, வெளியேறுங்கள்!

யாங்கீகளே, உங்கள் நாட்டுக்குச் செல்லுங்கள்!

உங்களை இங்கே நாங்கள் விரும்பவில்லை!

வெளியேறுங்கள்...!

எத்தனை நூற்றாண்டுகள் எங்களை

அடிமைப்படுத்துவீர்கள்!

எங்களது தோட்டங்களெல்லாம்

உங்களது கைகளில்...

எனது இதயத்தில்

இது மிகவும் ஆழமாக பதிந்து விட்டது.

பறவைகள் எனக்காக பாடுகின்றன.

இந்த நாடு எனது நேசத்திற்கு மட்டுமே உரியது

எனது மகிழ்ச்சிக்கு மட்டுமே உரியது இல்லையா?

 

இன்னும் சில கவிஞர்கள்,  குறிப்பாக எட்வின் காஸ்ட்ரோ (1960 மே 18-ம்தேதி சிறையில் கொல்லப்பட்டவர்) நம்மிடம் பெரும் போராட்டத்தையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் விட்டுச் சென்றிருக்கிறார். அவற்றை வாசிக்கும் போது, ஒருவர் தனது இதயம் வேகமாக துடிப்பதை உணர முடியும்…

 

நாளை எல்லாமே மாறியிருக்கும், எனது மகனே!

நமது துன்பங்களும் துயரங்களும் மறைந்து விடும்,

நம்பிக்கை புதிய வாய்ப்புகளை அளிக்கும்,

மக்களின் பலத்தை அதிகரிக்கும்

அவர்களுக்குப் பின்னால் கதவு உறுதியாக மூடப்படும்

ஆம்! நாளை எல்லாமே மாறியிருக்கும் எனது மகனே!

நாம் ஏராளமான துப்பாக்கி குண்டுகளையும் கைத்தடிகளையும் சந்தித்து விட்டோம்.

உங்களது குழந்தைகளை கைகளில் தூக்கிச் செல்லுங்கள்.

ஒவ்வொரு நகரத்தின் தெருக்களின் வாயிலாகவும் நடந்து செல்வீர்கள்

நான் உங்களோடு சேர்ந்து நடப்பேன்!

ஒரு மோசமான பாதையில்

எவரும் உங்களது இளமையை தொலைத்து விட முடியாது!

அவர்கள் எனது வழியை தூக்கி எறிந்தார்கள்.

நீங்கள் நாடு கடத்தப்பட்டு உயிரிழக்கமாட்டீர்கள்.

உங்கள் நாட்டுக்கு வெளியே இது நடக்காது

உங்களது தாத்தாவைப் போலவோ அல்லது அப்பாவைப் போலவோ...

ஆம்! நாளை எல்லாமே மாறியிருக்கும் எனது மகனே!

 

இன்னொரு கவிஞரான அல்போன்சா கார்ட்டஸின் கவிதையையும் மறக்க முடியாது…

 

மே மாதத்தில் அவற்றில் மூன்று கவிதைகள் வந்தன

ஆனால், கருப்பு மனிதர்கள் மூச்சுத் திணறி கொல்லப்பட்டார்கள்

ஒவ்வொரு மாதமும் சிலர் இறக்கிறார்கள்.

ஏனென்றால் சிலர், அவனது மரணத்தை விரும்புகிறார்கள்...

அந்த இருவரில் இன்றிரவு சாகப்போவது யார்?

அவனது கண்களில் பைத்தியம் பிடித்து விட்டது,

அல்லது அவனது சக சிறைவாசி கழுத்தில் காயத்துடன் கிடக்கிறான்?

அவர்கள் வலியின் சின்னங்கள், பளுவில்லாத நூல்களால் கட்டப்பட்டிருந்தார்கள்.

ஓ! நிகரகுவா தாய்மார்களே!,

நீங்கள் நசுக்கப்பட்ட காட்டுப்பூக்கள்!

ஓ! எனது நிகரகுவா!

நீ ஒரு ரத்தக் குளத்தில் நீந்துகிற கொடுமையை அனுபவிக்கிறாய்!

 

அல்போன்சா கார்ட்டஸ் சிறைக்குள் பைத்தியமானார். அவரது கவிதை, பைத்திய உணர்வின் வைலட் நிற வெளிச்சத்தால் நிரப்பப்பட்டிருந்தது. அது அமெரிக்க கொள்கையின் கொடூரத்தை பற்றி குற்றம் சாட்டியது. அவரது கவிதை பாதிக்கப்பட்ட நிகரகுவாவின் வேதனையை வெளிப்படுத்தியது. அங்கே நிகழ்ந்த அளவிட முடியாத மனிதத் துயரத்தையும், தனது சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் தீர்மானிக்கப் போராடிய மனிதனின் தாகத்தை வெளிப்படுத்தியது.

 

கம்சமோல்ஸ்கயா பிராவ்தா, ஆகஸ்ட் 25, 1963.

 

 

முந்தைய பகுதி:

அனைத்து நாடுகளின் தோழன்! - ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 19

 

 

 

 

 

Next Story

அனைத்து நாடுகளின் தோழன்! - ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 19

Published on 24/07/2019 | Edited on 10/08/2019

எனது இளமைக்காலத்தில்,  ஆல்பர்ட் வான் சாமிஸ்ஸோவின் தனது நிழலை விற்ற மனிதன் என்ற கதையைப் படித்திருக்கிறேன். அது என்னை பெரிதும் கவர்ந்திருக்கிறது. அந்தக் கதையின் கடைசி அத்தியாயத்தில், தனது நிழலை விற்ற மனிதனின் நிழலை, பிசாசு, குனிந்து கவனமாக சுருட்டிக் கொண்டிருக்கும்.

 

paththirikaiyalar pablo neruda part 19

 

நான் எப்போதும் பார்க்கிறேன், சில பெரிய கவிஞர்கள், தங்களைப் பின்தொடரும் நிழலை விற்கிறார்கள். அந்த நிழல், தரையில் விழும்போது வெட்டுப்படுகிறது, சுருண்டுகொள்கிறது, அதன் சொந்தக்காரரின் பல்வேறு தீய உணர்வுகளில் இருந்து தன்னை பிரித்துக் கொள்கிறது. அந்த தீய ஆன்மாக்களில் கடந்தகால நாகரிகம், சுயமாக அமைந்துள்ள சாதாரண திறமைகள் மற்றும் இலக்கியத்தின் மீதான ஆர்வம் ஆகியவை அடங்கும். அத்துடன், பூர்ஷ்வா முதலாளிகளால் அவ்வப்போது கொடுக்கப்படும் லஞ்சமும் உள்ளடங்கும்.

 

மாயாகோவ்ஸ்கியின் பாரம்பரியமானது, அவரது முடிவற்ற கவிதைகளையும், அவரது மாபெரும் நிழலையும் உள்ளடக்கியது. தனது நிழலை ஒருபோதும் விற்காத கவிஞர் அவர். தனது ஓட்டுமொத்த வாழ்வின் இருப்பிடமாக அவர் அதை பயன்படுத்தினார்.

 

முதல் பார்வையில், அவரது கவிதைகள் முடிக்கப்படாததாக தோன்றும். மரணம், அதை, தனது மிகப்பெரிய கத்தரிகளால் பாதியிலேயே வெட்டியது. இந்த உலகவரலாற்றில் வேறு எந்தப் பெண்ணையும் விட மிகமிக உயரத்தில் பயணம் செய்த முதல் விண்வெளி வீராங்கனை வாலண்டினாவைப் பற்றி, மாயாகோவ்ஸ்கி ஒரு கவிதை எழுதவேண்டும் என்று நாம் எவ்வளவு விரும்புகிறோம். மாயாகோவ்ஸ்கியால் மட்டுமே, இந்த மாபெரும் விண்பயணத்தைப் பற்றி, துப்பாக்கிக் குண்டு போல கச்சிதமான வார்த்தைகளால் வர்ணிக்க முடியும். ஒரு விண்வெளி வீரரின் ஆன்மாவாக பெருமிதத்துடன், நிற்கும் அவர், தனது காதல் மற்றும் போராட்டக் கவிதைகளில் கூட விண்வெளி கற்பனைகளை எழுதிய அவருக்கு, எழுதுவதற்கு நேரம் இல்லாமல் போனால், வேறு யாராலும் அந்த வரிகளை எழுத முடியாது. தனது வாழ்விலும் மரணத்திலும் ஒரு பெரும் சூறாவளிபோல கவிதையால் பல கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், சக கவிஞர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் அவர்.

 

paththirikaiyalar pablo neruda part 19

 

அக்டோபர் புரட்சியின் சக்திமிக்க இதயத்துடிப்பை மாயாகோவ்ஸ்கியின் கவிதையில் உணர முடியும். மறக்க முடியாத நிகழ்வுகளைப் பற்றி அவர் பாடினார். தனது ஒட்டுமொத்த வாழ்வையும்,  ஆன்மாவையும், அவர் புரட்சிக்காகவே அர்ப்பணித்தார்; அவரது கம்பீரமான கவிதைகள், சோசலிசக் கட்டுமானத்திற்கு மிகச்சிறந்த கருவியாக இருக்கிறது.

அதனால்தான், காலம் மாறினாலும், மாயாகோவஸ்கியின் புகழ்மாங்காமல் நிலைக்கிறது, மாறாக, அவர் புகழ் ஓங்குகிறது.

 

அவரது நிழல், சமத்துவத்தின் தூதுவனாக, லத்தீன் அமெரிக்க மாகாணங்களின் தொலைதூரப் பிரதேசங்களில் ஒரு வால்நட்சத்திரத்தைப் போல, இளைய எழுத்தாளர்களின் இதயங்களில் ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. அது, நூலகங்களில் இருந்து, மொந்தை மொந்தையாக இருந்த பிற்போக்குக் குப்பைகளை பெரும் சத்தத்துடன் தூக்கியெறிந்தது. வீதியில் நடக்கும் போராட்டங்களில் பங்கேற்றது; மக்களின் அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சில நேரங்களில் இந்த நிழல் ஒரு கத்தியைப் போன்று இருந்தது; சில நேரங்களில், ஒரு ஆரஞ்சுப்பழத்தைப் போல, அனைத்து கோடை வெப்பத்தையும் உறிஞ்சிக் கொண்டது.

 

paththirikaiyalar pablo neruda part 19

 

எனது தலைமுறையின் சில கவிஞர்கள், மாயாகோவ்ஸ்கியை ஒரு சிறந்த, பழமையான கவிஞராகக் கருதினார்கள். அவரது புத்தகங்கள் புத்தக அலமாரிகளோடு அடங்கிவிட்டதாக கூறுவார்கள். ஆனால், அவருடைய ”கெட்ட பழக்கங்கள்” அவரை அவருடைய கவுரவமான இடத்திலிருந்து தினமும் விலகும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தன. அவரும் அவருடைய இடத்திலிருந்து விலகி எனது தலைமுறையினரின் போராட்டங்களிலும், வெற்றிகளிலும் பங்கேற்கத் தொடங்கினார். மாயாகோவ்ஸ்கி மிகச்சிறந்த முதன்மையான தோழராக கருதப்படுவதற்கு இதுதான் காரணம்.

உலகின் அனைத்து பகுதி மக்களுக்கும், அனைத்து இனங்களுக்கும், அனைத்து நாடுகளுக்கும், அனைத்து கவிஞர்களுக்கும் அவர் சிறந்த தோழர்.

அனைத்து பகுதிகள், இனங்கள், நாடுகளைச் சேர்ந்த கவிஞர்களுக்கும் அவர் ஒரு ஆசிரியரும் கூட!

                                               

(பிராவ்தா, ஜுலை 19, 1963)

 

 

முந்தைய பகுதி:

கியூபாவின் பாடல்கள்... ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 18