Skip to main content

பள்ளிக்கு போகமாட்டேன்; அடம் பிடித்து அழுத மாணவர்கள் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :18

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
parenting-counselor-asha-bhagyaraj-advice-18

ஒரு குழந்தைக்கு அடித்தளமாக இருந்து வழிகாட்டியாக இருக்க வேண்டிய பெற்றோரும், ஆசிரியருமே குழந்தைக்கு சரியான பாதையை அமைத்து கொடுக்க தவற, அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கு ஆட்பட்ட ஒரு குழந்தைக்கும், பெற்றோருக்கும் கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடையே விவரிக்கிறார். 

பள்ளியில் படிக்கும் 6 மாணவர்கள் பள்ளிக்கு மாதக்கணக்காக செல்லப் பிடிக்காமல் இருப்பதாக அவர்களது பெற்றோர்கள் என்னிடம் கவுன்சிலிங்கிற்கு கூட்டி வந்தார்கள். அவர்கள் நன்றாக பள்ளிக்குச் சென்று வந்தவர்கள் தான். திடீரென பள்ளிக்குப் போக பிடிக்காமல் ஏதாவது உடல்நிலை சரியில்லை என்று காரணம் சொல்லி கடந்த இரு மாதமாக பள்ளிக்கு போகாமல் இருக்க,  அவர்களது பெற்றோர் மூன்றாவது மாதம் தான் என்னிடம் கூட்டி வருகிறார்கள். நான் அந்த குழந்தைகளிடம் பேசினேன். எல்லா குழந்தைகளிடம் பேசியதிலிருந்து ஒரு குழந்தையை ஹைலைட் பண்ணி சொல்றேன். அதில் ஒரு குழந்தை என்னிடம், "எல்லாம் ஓக்கே தான் ஆண்ட்டி நான் போகிறேன்" என்று  கூறினாலும், மறுபடியும் பெற்றோரிடம் அதே காரணங்கள் சொல்லி பள்ளிக்கு செல்வதை தவிர்த்திருக்கிறது. மேலும், விலை மதிப்பான பொருட்களைக் கேட்டு வாங்கி  கொடுத்தால் மட்டுமே, பள்ளிக்கு போவதாக சொல்லி வாங்கி கொள்ளுதல் போன்று தொடர்கிறது. பெற்றோரும் வேறு வழி இல்லாமல், எப்படியாவது பள்ளிக்கு அனுப்பி விடவேண்டும் என்று வாங்கி கொடுத்திருக்கிறார்கள். 

அந்த குழந்தை என்னிடம் இரண்டு மூன்று செஷன் வந்தபோது, என்னிடமே இதை வாங்கி கொடுக்கச் சொல்லுங்கள் ஆண்ட்டி, நான் போகிறேன் என்று கூறுகிறது. அதுவே அந்த குழந்தையின் டிமாண்டாகவே இருக்கிறது. பொதுவாக பெற்றோருமே அவர்களது குழந்தை மூன்று நான்கு மாதங்களாக பள்ளிக்கு செல்லவில்லை என்றால் விட்டு விடுகிறார்கள், கடைசியாக திடீரென்று தான் என்னிடம் கூட்டி வருகிறார்கள். அதன்பிறகு இவர்களை நம் வழிக்கு கொண்டு வருவதே பெரும்பாடாக இருக்கிறது. இந்த ஏழு கவுன்சிலிங்கில், அந்த குழந்தை பள்ளிக்குச் செல்லாத காரணம் நான் தெரிந்து கொண்டது இதுதான். "என் டீச்சர் என்னை படிக்காத பசங்களோடு சேர்த்து வைத்து பேசுகிறார்கள். வகுப்பில், முதல் இரண்டு பெஞ்ச்சில் படித்த பசங்கள் இருக்க, நான் நண்பர்களோடு அதிகமாக பேசுகிறேன் என்று சராசரியாக படிக்கும் மாணவர்களோடு என்னை கடைசி பெஞ்ச்சில், அவர்களோடு அமரவைத்து விட்டார்கள். அது எனக்கு பிடிக்கவில்லை. மேலும் என்னை ஏதாவது புகார் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அதே பள்ளியில் படிக்கும் என் அக்காவோடும் என்னை கம்பேர் பண்ணுகிறார்கள். என் நண்பர்கள் சேர்க்கை சரி இல்லை, என் நடவடிக்கை சரி இல்லை என்றும் பேசுகிறார்கள்", என்று அந்த பிள்ளை இதனால் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என்று கூறுகிறார். 

அந்த குழந்தையின் பெற்றோரும் பள்ளிக்கு சென்று பேசி இருக்கிறார்கள். ஆசிரியரும் சரியாக பதிலளித்தும், பெற்றோர் சென்ற பிறகு அந்த குழந்தையை அழைத்து தான் என்ன செய்தாலும் போய் சொல்லி விடுவாயா என்று மேலும் கார்னர் பண்ணி இருக்கிறார்கள். இதையெல்லாம் அந்த குழந்தை என்னிடம் சொன்னபோது, இதெல்லாம் சேர்ந்து தான் அவன் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதன் காரணம் என்று தெரிந்தது. பெற்றோரும் அந்த குழந்தையை நன்றாக படித்து காட்டினால், ஆசிரியர் இப்படி செய்ய மாட்டார் என்று, படிப்பின் மூலமாகத்தான் ஒருவனின் நல்ல குணம் நிரூபிக்க முடியும் என்றும் கூறி இருக்கிறார்கள். இதனால் அக்குழந்தை என்னிடம் கவுன்சிலிங்கில், நான் நன்றாக படித்தால் நல்ல பையனா என்று கேட்டு அறிகிறான். மேலும் தான், தன் அம்மாவிற்கு தன் அக்கா கூட அவ்வளவு வேலை செய்ததில்லை என்றும்,  தான்தான்  பாத்திரம் கழுவி கொடுப்பதிலிருந்து, படுக்கை சரி செய்வது முதல் எல்லா உதவியும் செய்து கொடுத்தாலும், என்னை அவர்கள் ஒன்றும் பெரியதாக சொன்னதே இல்லை என்று கூறுகிறான். தான் இதுவரை இது வேண்டும் அது வேண்டும் என்றும் கேட்டதே இல்லை, இந்த இரண்டு மாதமாக தான் பள்ளிக்கு போகாத போது தான் இதெல்லாம் முதன்முறை கேட்பதாகவும், ஆனால் என்ன வாங்கி கொடுத்தாலும் தான் பள்ளிக்கு செல்லப் போவதில்லை என்றும் தீர்மானமாக கூறுகிறான்.  

எனவே இக்குழந்தைக்கு முதலில் தன்னம்பிக்கை  வரவைக்க வேண்டும். இரண்டாவது படிப்பை தவிர்த்து, அவனின் தனித்துவ திறமையை வெளிக் கொண்டு வரவேண்டும். மூன்றாவது அவனது பெற்றோருமே நிறைய தாழ்வாக பேசி இருக்கிறார்கள், எனவே அவர்களின் மீது அவனுக்கு நம்பிக்கை வரவைக்க வேண்டும். இதற்கடுத்தே, அந்த குழந்தை பள்ளிக்கு அனுப்ப முடியும்.  பள்ளியில் எல்லா ஆசிரியரும் பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை. நாம் தான் நம் பிள்ளையிடம், நீ எங்கே சென்றாலும் யாராவது ஒரு ஆள் உன்னை குறைத்து பேச இருக்கத்தான் செய்வார்கள், அதைத் தாண்டி வரத்தான் வேண்டும் என்று சொல்லி பழக்கப் படுத்த வேண்டும். அந்த குழந்தையிடம் இன்னமும் நான் கவுன்சிலிங் கொடுத்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இப்போது பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து இருக்கிறான். அவ்வப்போது போகாமல் இருப்பது இருக்கிறது தான் என்றாலும், கஷ்டப்பட்டு போய்க்கொண்டுதான் இருக்கிறான். பெற்றோரிடமும் அழுதாலும் மிகவும் பொறுமையாக கையாள வேண்டும்,  எப்படியும் கடைசியாக பள்ளிக்கு போகத்தான் செய்வான்; ஆனால் கேட்பதை வாங்கி கொடுப்பது போன்ற பழக்கத்தை மட்டும் நிறுத்தி விடவேண்டும் என்றும் கூறினேன். 

பொதுவாகவே நான் எல்லா பெற்றோருக்கு சொல்லும் அறிவுரை இதுதான். காலையில் பிஸியான வேலையில், பிள்ளைகள் தானாக அலாரம் சத்தத்திற்கு பெரும்பாலும் எழுவதில்லை. பெற்றோர் தான் எழுப்பவேண்டும் என்று இருக்கிறது. எனவே அவர்களின் நாள் தொடக்கமாக எழுப்பும்போதே அடித்து பதற்றமாக எழுப்பாமல், சிரித்த முகத்தோடு எழுப்பவேண்டும். என்னிடம் கவுன்சிலிங் வந்த குழந்தை பொதுவாகவே தினசரி படுக்க செல்லும்போதே, நாளை பள்ளியில் யாரிடம் திட்டு வாங்க வேண்டி இருக்கும் என்று தான் பயந்து பயந்து அந்த நினைப்போடே தான் தூங்க செல்கிறான், அதனால் அவன் காலையில் அந்த பயத்தோடு தான் எழுவான். எனவே நான் அந்த பெற்றோருக்கு, தூங்க செல்லும்போது நிறைய தன்னம்பிக்கையோடு பேசுங்கள், என்றும் காலையில் எழுந்ததும், நன்றியுணர்ச்சியோடு பேசி, அவனது தனித்துவ திறமையில் சிறந்து இருத்தலை ஆதரிப்பதாக பேசி  மதிப்பெண் குறைவாக எடுத்தாலும்  உங்களுக்கு அவனை பிடிக்கும் என்றே பேசுங்கள் என்று கூறினேன். 

வீட்டிலிருந்து தான் ஒரு குழந்தைக்கு தன்னம்பிக்கை ஆரம்பிக்கிறது. நான் பார்த்த அந்த ஏழு கவுன்சிலிங்கிலும் அந்த ஆறு மாணவர்களும்  வெவ்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்குள் இருக்கும் பொதுவான ஒரே சிக்கல், வீட்டிலும் ஆதரவு கிடைக்கவில்லை என்பது தான். உதாரணத்திற்கு பள்ளியில் தன்னிடம் வம்பு செய்யும் மாணவனை பற்றி வீட்டில் சொன்னாலும், அவர்களுக்கு கிடைக்கும் ஒரே மாதிரி பதில், நீ ஏதாவது செய்திருப்பாய் என்பது தான். இப்படி இருக்க, அந்த குழந்தை யாரிடம் போய் சொல்லமுடியும். எனவேதான் அவர்கள் அடித்தாலும் சரி, திட்டினாலும் சரி, பள்ளிக்கு செல்லாமல் இருப்பதையே ஒரே வாய்ப்பாக எடுத்து கொள்கிறார்கள். ஆகவே, முதலில் அந்த குழந்தையின் காரணத்தை கண்டுபிடித்து விட்டு, அவர்களின் தன்னம்பிக்கை முதல் அவர்களது குடும்பம் வரை இருக்கும் சிக்கல்களை கண்டு பிடித்தால் தான் அவர்கள் பள்ளிக்கு செல்வதை சரி செய்ய முடியும்.

Next Story

குழந்தைக்குக் கொடுத்த பிரஸர்; டிப்ரசனுக்கு போன தாய் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :24

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
parenting counselor asha bhagyaraj advice 24

குழந்தைகள் பற்றியே யோசித்து தன் நிலையை இழந்திருக்கும் பெண்மணிக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி  நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் பகிர்ந்து கொள்கிறார்.

என்னிடம் கவுன்சிலிங் வரும் குழந்தைகளுக்கு எவ்வளவு மெண்டல் ஹெல்த் முக்கியமோ அந்த அளவு அவர்களுடைய பெற்றோர்களுடைய மெண்டல் ஹெல்த்தும் முக்கியம். ஏனென்றால், அவர்களது மனவலிமையே குழந்தைகளுக்கு சென்றடையும். என்னிடம் வந்திருந்த அந்த பெற்றோர்க்கு குழந்தையின் படிப்பு, அவர்களது உலகத்தைச் சுற்றியே முழுமையாக இருபத்தி நான்கு மணிநேரமும் யோசித்து யோசித்து இப்போது அவர்களுக்கு தங்கள் குழந்தையைக் கண்டாலே பிடிப்பதில்லை. அவர்கள் அம்மா என்று அழைத்தாலே கோவம் வருகிறது என்றார். நான் இப்படி இருந்ததே இல்லை. அவர்களும் இப்போது என்னிடம் நெருக்கம் முன்பு போல காட்டுவதில்லை. நான் என்ன செய்ய வேண்டும் மேடம் என்று கவலையுடன் என்னைப் பார்க்க வந்திருந்தார்.

குழந்தைகளை இயல்பாக விட்டிருந்தாலே அவர்கள் நன்றாக தான் படிப்பில் நாட்டம் காட்டுகின்றனர். ஆனால், இப்போதுள்ள பெற்றோர்கள் அவர்கள் படிப்பில் சிறக்க ஒவ்வொரு பாடத்திலும் இன்னும் சிறப்பாக பயில நிறைய வகுப்புகளில் சேர்த்து விடுகின்றனர். அது குழந்தைகள் மட்டுமில்லாமல் பெற்றோர்களும் அவர்களது ஸ்ட்ரெஸ்ஸில் பங்கெடுத்து மிகவும் பாதிக்கப்பட்டு விடுகின்றனர். இந்தப் பெற்றோர்க்கு இரண்டுமே பெண் குழந்தைகள் வேறு. அவர்கள் பதின் வயதை அடைவதால் கண்டிப்பாக தன்னுடைய அரவணைப்பு அவர்களுக்கு வேண்டும் என்பது தெரிந்தாலும் தன்னால் முடியவில்லை என்றார். அவர்கள் பள்ளியில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வாரம் முழுவதும் தினசரி ஸ்பெஷல் வகுப்புகள் சேர்த்து அதைப் பற்றியே நினைத்து, அவரை பற்றி நினைக்காமல் உடல்நிலையே பாதிக்குமளவிற்குச் சென்றிருக்கிறார்.

அவரது உடல்நிலை கேடே அவரது உள்ளத்தையும் பெரிதளவு பாதித்து இருக்கிறது. சரியாக சாப்பிடுவது, தூங்குவது எல்லாமே மறந்து போய் பிடிக்காமல் இருந்தார். அவர் தன் குழந்தைகள் ஒன்றாவது வகுப்பு படிக்கும்போதே அவர்கள் பத்தாவதில் என்னவெல்லாம் செய்யவேண்டும், தான் வெளிநாட்டில் படிக்க இருந்து ஆனால் முடியாமல் போன இடத்தில் இவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று ஒரு நோட்டில் குறித்து வைத்திருந்திருக்கிறார். பின்னாடி மேலும் பேசியதில் தெரிந்தது, இவரது தந்தையும் இதே போலதான் தன்னைப் படிக்க வைக்கும் நடவடிக்கை இருந்ததாக குறிப்பிட்டார். இதுதான் அவரை அறியாமல் இவருக்கும் வந்திருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது.

ஏதாவது ஆயுதம் பார்த்தால் தற்கொலை செய்து கொள்ளலாமா என்றெல்லாம் யோசித்திருந்திருக்கிறார். செல்ப் கேர் செய்திருந்தாலே அவர்கள் மனநிலை நன்றாக மாறும். ரொம்ப டிப்ரஷனாக இருந்தார். என்னுடைய காணொளியை மூன்று மாதமாக பார்த்து வந்தாலும், இதனை எப்படி போய் பேசுவது என்று காலம் தள்ளியதாகவும், ஆனால், இனிமேல் தாமதிக்க கூடாது என்று தான் வந்ததாக சொன்னார். அவருமே தன் பள்ளி, கல்லூரி படிப்பிலும், அரசு தேர்விலும் கூட சிறந்து விளங்கி இருந்திருக்கிறார். அதனால்தான் தன்னைப் போலவே தன் பிள்ளைகளும் இருக்க வேண்டும் என்று இப்படி செய்து வந்திருக்கிறார் என்று புரிந்தது. நான் முதலில் அவர் கணவனை அழைத்து பேசினேன். இவர் தற்கொலை எண்ணம் எல்லாம் தன் மனைவிக்கு வந்திருந்தது என்பதை அறியாமல் இருந்திருக்கிறார்.

பொதுவாகப் பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனில் நிறைய மாற்றங்கள் உடலில் ஏற்படும். அதைக் குடும்பத்தில் நிறையப் பேர் புரிந்து கொள்கின்றனர். சில நேரங்களில் உதவி தேவை என்றால் நமது கணவனிடம் நாம்தான் எடுத்து சொல்லவேண்டும். அப்படி சில வருடங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதே இது ஒரு வகை விளைவு என்று சொல்லலாம். இதை உணராத அந்தக் கணவரிடம் அவருடைய மனைவிக்கு என்று ஏதும் செய்து கொடுக்குமாறும், கூட சிறிய நடைப்பயிற்சி, அவருக்கு போக நினைத்த வேலைக்கென்று அனுப்பி வைக்குமாறு சொன்னேன். ஆரம்ப காலங்களில் வேலைக்கு செல்லவேண்டாம் என்று கூறியிருந்த அவர், இப்போது தன் மனைவியின் நிலை அறிந்து வேலைக்கு அனுப்ப ஒத்துக்கொண்டார். அந்தப் பெண்மணிக்கு கல்லூரியில் பேராசரியாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. எனவே அதற்கு ஆதரிப்பதாக சொன்னார்.

இவருக்கு மூன்று செஷனுடன் முடிந்தது. வாரம் ஒருமுறை பாலோ அப் மட்டும் செய்து வருகிறேன். குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கவேண்டும்தான். ஆனால், குழந்தைகளிடம் மட்டுமே நேரம் ஒதுக்க வேண்டும் என்பது தான் தவறு. தன்னால் முடியாத போது அதைக் குழந்தைகளுக்கும் கணவருக்கும் எடுத்து சொல்லலாம். அவர்கள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள். குழந்தைகள் உலகத்தில் தங்கள் உலகத்தை இழந்து விடாமல் தனக்கென்று சிறிது மீ டைம் எடுத்துக்கொள்ளுதல் பெற்றோர்களுக்கு அவசியம்.

Next Story

பொறாமையால் நண்பன் செய்த செயல்; மன உளைச்சலான மாணவன் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :23

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
parenting counselor asha bhagtaeraj advice 23

கூடா நட்பினால் மனமுடைந்திருக்கும் மகனுக்கும், பெற்றோருக்கும் கொடுக்கப்பட்ட கவுன்சிலிங் பற்றி நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் பகிர்ந்து கொள்கிறார்.

என்னை ஒரு பெற்றோர் சந்திக்க வந்திருந்தனர். அவர்களது பதினோராம் வகுப்பு படிக்கும் மகன் ரொம்ப சாதாரணமாக தான் பழகி வந்ததாகவும், கொஞ்ச நாட்கள் முன்பிலிருந்து தனித்து வித்தியாசமான நடவடிக்கை கொண்டு இருப்பதை கவனித்து கவலையுடன் என்னிடம் சொன்னார்கள். மேலும் அவர்களது மகன் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழிப்பதாகவும், அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதாகவும், ஒருநாள் எதார்த்தமாக பார்த்தபோது அதில் வயதுக்கு மீறின பேச்சும், ஆபாச வார்த்தைகளுமான பேச்சுவார்த்தை (சேட்டிங்) இருந்ததை பார்த்ததும் அதிர்ந்து, அவனிடம் கடிந்து கேட்டிருக்கின்றனர்.

கேட்டதற்கு அதுபோல தான் பேசவில்லை. அது தன் நண்பன் என சொல்லியிருக்கிறான். அந்த இன்னொரு பையனை பெற்றோர்க்கு நன்கு தெரியும் என்பதால் அவர்களால் நம்பமுடியவில்லை. தன்னுடைய அக்கவுண்ட் தகவல் நண்பனுக்கு தெரியும் என்பதால் தன்னுடைய பெயரை இப்படி தவறாக உபயோகித்து உள்ளான் என்று சொல்ல, அதை அந்த பையனின் பெற்றோரிடம் சொல்லிவிட்டனர். பிறகு தான், இவன் மீது இருக்கும் பொறாமையால் அப்படி செய்திருக்கிறான் என்று தெரியவந்தது. அதை இந்த பையனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மிக நெருங்கிய நண்பனே இப்படி செய்ததால் அவனால் சரியாக தூங்க முடியாமல், படிப்பும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கவலைப்பட்டு அழைத்து வந்திருந்தனர். அவன், அடுத்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு கூடவே நீட் தேர்வு எழுத இருப்பதாலும் மிகவும் வருத்தப்பட்டனர்.

நான் அவனிடம் முதல்படியாக அவனது சமூக வலைத்தள முகவரியை மூடச் சொல்லி அவனது நண்பனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், நினைவுகள் அனைத்தையும் அழித்து விட சொன்னேன். பிடிக்காத விஷயத்திலிருந்து முதலில் வெளி வருமாறு சொல்லி, பிடித்த ஐந்து விஷயங்களை பற்றியும், கனவுகள் பற்றியும் எழுதச் சொன்னேன். அதிலும் தன் நண்பனை சேர்த்து தான் குறிப்பிட்டிருந்தான். எல்லா நினைவுகளும் விளையாட்டு முதல் சேர்ந்து சென்ற இடங்கள் வரை தன் நண்பனை சேர்த்து தான் பேசினான். அந்த அளவு பாதித்திருக்கிறான் என்று புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் இனிமேல் தான் எப்படி நல்ல நண்பனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டான். இப்போது அவனை பற்றி மட்டும் குறித்து யோசிக்க வேண்டும் என்றும் செல்ப் லவ் பற்றி எடுத்து சொன்னேன். இப்போது அவன் பள்ளியையும் மாற்றி விட்டார்கள்.

எனினும் கடந்த காலம் மொத்தமாக அவனிடமிருந்து அழிக்க வேண்டும் என்பதால் சிறிது காலம் எடுக்கத் தான் செய்யும். ஆனால் படிப்பை பொறுத்தவரை அவன் சீக்கிரமாக எல்லாமே கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கட்டாய நிலையில் இருக்கிறான். பொதுவாக கவுன்சிலிங் வரும் குழந்தைகளை நான் பார்த்தவரை, குறிப்பாக பத்து, பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, அவர்களது பெற்றோர்கள் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டியை முழுமையாக நிறுத்தி விடுகின்றனர். அதற்கேற்றாற் போல அவர்களது படிப்பின் நேரமுறைகளும் அப்படிதான் இருக்கிறது. எனவே ஹாப்பி ஹார்மோன்ஸ் சுரக்கவே வாய்ப்பில்லை. அந்த பெற்றோரிடம் பையனுக்கு பிடித்த ஸ்போர்ட்ஸில் சேர்த்து விடுமாறு சொல்லி அனுப்பினேன். அதுவே அவனை கண்டிப்பாக பழைய இயல்பான நிலைக்கு மாற்றி, ஸ்ட்ரெஸ் பிரீயாக கொண்டுவர முடியும். பெற்றோர்கள் கண்டிப்பாக தங்கள் பிள்ளைகளின் நண்பர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல் அவசியம். அந்த வயதில் அவர்களுக்கு தப்பான நட்பு கண்டுபிடிக்க தெரியாமல் போனாலும், பெற்றோர்களால் கண்டிப்பாக அதை கண்டுபிடித்து தவறான பாதையிலிருந்து காப்பாற்ற முடியும்.