Skip to main content

அம்மாதான் எனக்கு வில்லி; பாசத்திற்கு ஏங்கிய மகள் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :17

Published on 02/03/2024 | Edited on 02/03/2024

parenting-counselor-asha-bhagyaraj-advice-16

குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் கொடுக்கப்படும் கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் நம்மிடையே பகிர்கிறார்.

இதுவரை அம்மா, அப்பா என்று கவுன்சிலிங் கூட்டி வந்தது போன்றல்லாமல், நேரடியாக என்னிடம் ஒரு மாணவியே ஆலோசனை கேட்டு தொடர்பு கொண்டார். நன்கு படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருக்கும் பெண். என்னிடம் கவுன்சிலிங் கூட்டி வந்ததே அவரின் சித்தப்பா என்பதே ஆச்சரியம். பெற்றோர் வரவில்லையா என்று நான் கேட்ட முதல் கேள்விக்கே அவள் சொன்ன பதில், என் பிரச்சனையே பெற்றோர் தான் என்று ஆரம்பிக்கிறாள். 

நல்ல செல்வாக்கான குடும்பம் என்றாலும், ஒரு பக்கம் அப்பா உடல் தேக்கம் இன்றி வீட்டிலேயே இருக்க, அம்மா இன்னொரு பக்கம் மிகவும் கண்டிப்புடன் வேலைக்குச் செல்லும் பெண்மணி. எனவே பேசவே ஆள் இல்லை. அண்ணன் ஒருவர் இருந்தும் அவருக்கும் இந்த மாணவிக்கும் இருக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால், எந்த விஷயமும் பகிர அந்த மாணவியால் முடியவில்லை.

கதவை சாத்திக் கொண்டு அறையில் தனித்தே அந்த பெண் குழந்தையிலிருந்து இருந்திருக்கிறாள். எந்த அக்கறை, கவனம் இன்றி அந்த பெண் சாப்பிட்டாலா இல்லையா, வெளியில் எதுவும் தொந்தரவு இருக்கிறதா என்று எதுவுமே அவளது பெற்றோர் கேட்டறிந்தது இல்லை. அம்மா என்றாலே பயம் கொள்ளும் வில்லி என்று தான் அவர் அந்த மகளுக்கு பதிந்து வைத்திருக்கிறார். பத்தாம் வகுப்பு வரைக்கும் நன்றாக படித்து வந்த பெண், தனக்கென்று யாராவது வேண்டும் என்று சினிமாவில் வருவது போல நன்றாக படிக்காத ஒரு பையனோடு காதல் கொண்டு, கடைசியில் அந்த பையன் நன்றாக படிக்க, இப்பெண்ணின் மதிப்பெண் குறைகிறது. என்னதான் பன்னிரெண்டாம் வகுப்பில் குறைந்த மார்க் என்றாலும், நன்றாக படிக்க வேண்டும், இன்ஜினியரிங் படிக்க வேண்டும், நீட் படிக்க வேண்டும் என்றெல்லாம் அவளுக்கு ஆசை இருந்திருக்கிறது. ஆனால் பெற்றோர் இவளின் குறைவான மார்க்கை சுட்டிக்காட்டி மேலும் ஆசைப்பட்டதை படிக்க அனுமதிக்கவில்லை.

இவள் என்னதான் பேச முயற்சித்தாலும் அவர்கள் கேட்க தயாராக இல்லை. இப்பொழுது பிடிக்காமல் அவர்கள் படிக்க வைத்த கோர்ஸை படித்து முடித்து வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்றாலும், வெளிநாடு சென்று மேலே படிக்க வேண்டும், வேலை அங்கே தேட வேண்டும் என்றுதான் ஆசை. இதை அண்ணாவிடம் எப்படி சொல்வது, அவர் அதை எப்படி எடுத்து கொள்வார் என்று தயக்கம். எனவேதான் அவள் சித்தப்பாவிடம் கூறி இருக்கிறாள். ஆனால் அவர் வீட்டில் எடுத்து சொன்னாலும் பெற்றோர் கேட்கவில்லை.

நான் நியாயமாக அந்த பெற்றோருக்கு தான் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். ஆனால் அது முடியாத காரியம். எனவே அந்த பெண்ணுக்கு தான் என்னால் கவுன்சிலிங் கொடுக்க முடியும். அவளோ, "என்னால் அடுத்து என்ன என்றே யோசிக்க முடியவில்லை, எனக்கு ஒருத்தரும் இல்லை. சித்தப்பா எனக்கு எது செய்யதாலும் வீட்டில் திட்டுகிறார்கள்"  என்று அந்த பெண் கூறியபோது, அவளின் கல்லூரி படிப்பு எவ்வாறு இருக்கும் என்று கேட்டறிந்தேன். தான் நன்றாக படித்தால் மட்டுமே பெற்றோர் பணம் கொடுப்பார்கள் என்பதால் வேறு வழி இல்லாமல் பிடிக்காமல் படித்ததாகவும், எங்கேயாவது ஓடிப் போய்விடலாம் என்று தோன்றுவதாக கூறினார். எனவே அந்த பெண்ணிடம், "என்ன இருந்தாலும் இந்தளவு படித்து வந்ததே பெரிய விஷயம் அதற்கு அவர்களும் ஆதரவு தந்திருக்கிறார்கள். ஆனால் உன் கனவினை சாதிப்பது முக்கியம் என்றால், நீ நிதி ரீதியாக வலிமையாக வேண்டும்." என்றேன். 

வெளிநாட்டுக்கு சென்று படிக்க வேண்டும் என்று ஆசைபட்டாலும், கனவு கண்டாலும், நம் பெற்றோர் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். படிப்பதற்கு இந்த காலத்தில் வயது வரம்பே இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் படித்து கொள்ளலாம். இந்த பெண்ணும் அந்த வழியில் தான் போயாக வேண்டும் என்றும், தன் பெற்றோர் இப்படித்தான் என்பதையும் அந்த பெண் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர், "எனக்கு பணம் கேட்டால் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் என் கனவினை மட்டும் நிறைவேற்றி கொள்ள அவர்கள் வாய்ப்பு கொடுப்பதில்லை. அவர்கள் கனவையே என்னிடம் திணிக்கிறார்கள். நாளைக்கு திருமணம் என்று வந்தால் கூட என்னிடம் கேட்க மாட்டார்கள். நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும், கடிதம் எழுதிவிட்டு ஓடிப்போய் விடவா?" என்று கேட்கிறாள் அந்த பெண். 

அவளிடம் நான் கூறியது, "நாளைக்கு வேறொரு பையனோடு சென்றாலும் கூட அவன் நல்லவனா என்று கூட உன்னால் சொல்ல முடியாது. எனவே நீ நன்றாக படிக்க வேண்டும். முதலில் உன் அண்ணனிடம் திட்டினாலும் போய் பேச வேண்டும். அவரிடம் வெளிநாடு அனுப்ப வேண்டும் என்று எதுவும் கோரிக்கை இன்றி, நான் பேசுவதை கேட்க ஒரு ஆள் வேண்டும் என்று கூறி மனசு விட்டு பேசு. குறைந்தது அண்ணனிடம் சொல்லாமல் தவிர்த்த அந்த மன அழுத்தமாவது இப்படி பதிவு செய்யும் பொழுது கண்டிப்பாக குறையும். மேலும் நீ என்னவெல்லாம் படிக்க ஆசைப்பட்டாயோ அதையெல்லாம் ஆன்லைன் கோர்ஸ் மூலமாக படித்து சர்டிபிகேட் வாங்கி வை. பெற்றோர் உனக்கு பணம் கொடுக்க தயாராக தானே இருக்கிறார்கள். அந்த பணத்தை எல்லாம் சேமித்து வை. நாளை நீ சொந்த காலில் நின்ற பிறகே உனக்கு பிடித்த கனவுகளை நிறைவேற்றி கொள்ளலாம். பெற்றோரை என்னால் சந்திக்க முடியவில்லை என்னால் அவர்களை மாற்ற முடியாது. ஆனால் நீ உன் பெற்றோரை ஏற்றுக் கொண்டு, நீ மன அழுத்தம் இல்லாமல், உனக்கு பிடித்த விஷயங்களை செய்து உன் மனதினை பிசியாக வைத்துக்கொள்" என்று கூறினேன். 

இதுபோல நிறைய மாணவர்கள் என்னிடம் வருகிறார்கள். இதை பெற்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும். இது வெறும் கனவுகள் பற்றி மட்டுமின்றி குழந்தைகள் அவர்களிடம் மனம் விட்டு பேச வரும்போது கேட்க வேண்டும். பணம் சம்பாதிக்கத்தான் எல்லாரும் ஓடுகிறோம். ஆனால் குழந்தைகளிடமும் நேரம் செலவழிக்க வேண்டும். என்ன செய்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும். நாளை தனக்கு ஒரு பிரச்சனை என்றால் அம்மா அப்பா இருக்கிறார்கள் என்று அந்த குழந்தைக்கு ஒரு மன தைரியம் வரவேண்டும்.

Next Story

குழந்தைக்குக் கொடுத்த பிரஸர்; டிப்ரசனுக்கு போன தாய் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :24

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
parenting counselor asha bhagyaraj advice 24

குழந்தைகள் பற்றியே யோசித்து தன் நிலையை இழந்திருக்கும் பெண்மணிக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி  நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் பகிர்ந்து கொள்கிறார்.

என்னிடம் கவுன்சிலிங் வரும் குழந்தைகளுக்கு எவ்வளவு மெண்டல் ஹெல்த் முக்கியமோ அந்த அளவு அவர்களுடைய பெற்றோர்களுடைய மெண்டல் ஹெல்த்தும் முக்கியம். ஏனென்றால், அவர்களது மனவலிமையே குழந்தைகளுக்கு சென்றடையும். என்னிடம் வந்திருந்த அந்த பெற்றோர்க்கு குழந்தையின் படிப்பு, அவர்களது உலகத்தைச் சுற்றியே முழுமையாக இருபத்தி நான்கு மணிநேரமும் யோசித்து யோசித்து இப்போது அவர்களுக்கு தங்கள் குழந்தையைக் கண்டாலே பிடிப்பதில்லை. அவர்கள் அம்மா என்று அழைத்தாலே கோவம் வருகிறது என்றார். நான் இப்படி இருந்ததே இல்லை. அவர்களும் இப்போது என்னிடம் நெருக்கம் முன்பு போல காட்டுவதில்லை. நான் என்ன செய்ய வேண்டும் மேடம் என்று கவலையுடன் என்னைப் பார்க்க வந்திருந்தார்.

குழந்தைகளை இயல்பாக விட்டிருந்தாலே அவர்கள் நன்றாக தான் படிப்பில் நாட்டம் காட்டுகின்றனர். ஆனால், இப்போதுள்ள பெற்றோர்கள் அவர்கள் படிப்பில் சிறக்க ஒவ்வொரு பாடத்திலும் இன்னும் சிறப்பாக பயில நிறைய வகுப்புகளில் சேர்த்து விடுகின்றனர். அது குழந்தைகள் மட்டுமில்லாமல் பெற்றோர்களும் அவர்களது ஸ்ட்ரெஸ்ஸில் பங்கெடுத்து மிகவும் பாதிக்கப்பட்டு விடுகின்றனர். இந்தப் பெற்றோர்க்கு இரண்டுமே பெண் குழந்தைகள் வேறு. அவர்கள் பதின் வயதை அடைவதால் கண்டிப்பாக தன்னுடைய அரவணைப்பு அவர்களுக்கு வேண்டும் என்பது தெரிந்தாலும் தன்னால் முடியவில்லை என்றார். அவர்கள் பள்ளியில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வாரம் முழுவதும் தினசரி ஸ்பெஷல் வகுப்புகள் சேர்த்து அதைப் பற்றியே நினைத்து, அவரை பற்றி நினைக்காமல் உடல்நிலையே பாதிக்குமளவிற்குச் சென்றிருக்கிறார்.

அவரது உடல்நிலை கேடே அவரது உள்ளத்தையும் பெரிதளவு பாதித்து இருக்கிறது. சரியாக சாப்பிடுவது, தூங்குவது எல்லாமே மறந்து போய் பிடிக்காமல் இருந்தார். அவர் தன் குழந்தைகள் ஒன்றாவது வகுப்பு படிக்கும்போதே அவர்கள் பத்தாவதில் என்னவெல்லாம் செய்யவேண்டும், தான் வெளிநாட்டில் படிக்க இருந்து ஆனால் முடியாமல் போன இடத்தில் இவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று ஒரு நோட்டில் குறித்து வைத்திருந்திருக்கிறார். பின்னாடி மேலும் பேசியதில் தெரிந்தது, இவரது தந்தையும் இதே போலதான் தன்னைப் படிக்க வைக்கும் நடவடிக்கை இருந்ததாக குறிப்பிட்டார். இதுதான் அவரை அறியாமல் இவருக்கும் வந்திருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது.

ஏதாவது ஆயுதம் பார்த்தால் தற்கொலை செய்து கொள்ளலாமா என்றெல்லாம் யோசித்திருந்திருக்கிறார். செல்ப் கேர் செய்திருந்தாலே அவர்கள் மனநிலை நன்றாக மாறும். ரொம்ப டிப்ரஷனாக இருந்தார். என்னுடைய காணொளியை மூன்று மாதமாக பார்த்து வந்தாலும், இதனை எப்படி போய் பேசுவது என்று காலம் தள்ளியதாகவும், ஆனால், இனிமேல் தாமதிக்க கூடாது என்று தான் வந்ததாக சொன்னார். அவருமே தன் பள்ளி, கல்லூரி படிப்பிலும், அரசு தேர்விலும் கூட சிறந்து விளங்கி இருந்திருக்கிறார். அதனால்தான் தன்னைப் போலவே தன் பிள்ளைகளும் இருக்க வேண்டும் என்று இப்படி செய்து வந்திருக்கிறார் என்று புரிந்தது. நான் முதலில் அவர் கணவனை அழைத்து பேசினேன். இவர் தற்கொலை எண்ணம் எல்லாம் தன் மனைவிக்கு வந்திருந்தது என்பதை அறியாமல் இருந்திருக்கிறார்.

பொதுவாகப் பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனில் நிறைய மாற்றங்கள் உடலில் ஏற்படும். அதைக் குடும்பத்தில் நிறையப் பேர் புரிந்து கொள்கின்றனர். சில நேரங்களில் உதவி தேவை என்றால் நமது கணவனிடம் நாம்தான் எடுத்து சொல்லவேண்டும். அப்படி சில வருடங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதே இது ஒரு வகை விளைவு என்று சொல்லலாம். இதை உணராத அந்தக் கணவரிடம் அவருடைய மனைவிக்கு என்று ஏதும் செய்து கொடுக்குமாறும், கூட சிறிய நடைப்பயிற்சி, அவருக்கு போக நினைத்த வேலைக்கென்று அனுப்பி வைக்குமாறு சொன்னேன். ஆரம்ப காலங்களில் வேலைக்கு செல்லவேண்டாம் என்று கூறியிருந்த அவர், இப்போது தன் மனைவியின் நிலை அறிந்து வேலைக்கு அனுப்ப ஒத்துக்கொண்டார். அந்தப் பெண்மணிக்கு கல்லூரியில் பேராசரியாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. எனவே அதற்கு ஆதரிப்பதாக சொன்னார்.

இவருக்கு மூன்று செஷனுடன் முடிந்தது. வாரம் ஒருமுறை பாலோ அப் மட்டும் செய்து வருகிறேன். குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கவேண்டும்தான். ஆனால், குழந்தைகளிடம் மட்டுமே நேரம் ஒதுக்க வேண்டும் என்பது தான் தவறு. தன்னால் முடியாத போது அதைக் குழந்தைகளுக்கும் கணவருக்கும் எடுத்து சொல்லலாம். அவர்கள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள். குழந்தைகள் உலகத்தில் தங்கள் உலகத்தை இழந்து விடாமல் தனக்கென்று சிறிது மீ டைம் எடுத்துக்கொள்ளுதல் பெற்றோர்களுக்கு அவசியம்.

Next Story

பொறாமையால் நண்பன் செய்த செயல்; மன உளைச்சலான மாணவன் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :23

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
parenting counselor asha bhagtaeraj advice 23

கூடா நட்பினால் மனமுடைந்திருக்கும் மகனுக்கும், பெற்றோருக்கும் கொடுக்கப்பட்ட கவுன்சிலிங் பற்றி நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் பகிர்ந்து கொள்கிறார்.

என்னை ஒரு பெற்றோர் சந்திக்க வந்திருந்தனர். அவர்களது பதினோராம் வகுப்பு படிக்கும் மகன் ரொம்ப சாதாரணமாக தான் பழகி வந்ததாகவும், கொஞ்ச நாட்கள் முன்பிலிருந்து தனித்து வித்தியாசமான நடவடிக்கை கொண்டு இருப்பதை கவனித்து கவலையுடன் என்னிடம் சொன்னார்கள். மேலும் அவர்களது மகன் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழிப்பதாகவும், அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதாகவும், ஒருநாள் எதார்த்தமாக பார்த்தபோது அதில் வயதுக்கு மீறின பேச்சும், ஆபாச வார்த்தைகளுமான பேச்சுவார்த்தை (சேட்டிங்) இருந்ததை பார்த்ததும் அதிர்ந்து, அவனிடம் கடிந்து கேட்டிருக்கின்றனர்.

கேட்டதற்கு அதுபோல தான் பேசவில்லை. அது தன் நண்பன் என சொல்லியிருக்கிறான். அந்த இன்னொரு பையனை பெற்றோர்க்கு நன்கு தெரியும் என்பதால் அவர்களால் நம்பமுடியவில்லை. தன்னுடைய அக்கவுண்ட் தகவல் நண்பனுக்கு தெரியும் என்பதால் தன்னுடைய பெயரை இப்படி தவறாக உபயோகித்து உள்ளான் என்று சொல்ல, அதை அந்த பையனின் பெற்றோரிடம் சொல்லிவிட்டனர். பிறகு தான், இவன் மீது இருக்கும் பொறாமையால் அப்படி செய்திருக்கிறான் என்று தெரியவந்தது. அதை இந்த பையனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மிக நெருங்கிய நண்பனே இப்படி செய்ததால் அவனால் சரியாக தூங்க முடியாமல், படிப்பும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கவலைப்பட்டு அழைத்து வந்திருந்தனர். அவன், அடுத்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு கூடவே நீட் தேர்வு எழுத இருப்பதாலும் மிகவும் வருத்தப்பட்டனர்.

நான் அவனிடம் முதல்படியாக அவனது சமூக வலைத்தள முகவரியை மூடச் சொல்லி அவனது நண்பனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், நினைவுகள் அனைத்தையும் அழித்து விட சொன்னேன். பிடிக்காத விஷயத்திலிருந்து முதலில் வெளி வருமாறு சொல்லி, பிடித்த ஐந்து விஷயங்களை பற்றியும், கனவுகள் பற்றியும் எழுதச் சொன்னேன். அதிலும் தன் நண்பனை சேர்த்து தான் குறிப்பிட்டிருந்தான். எல்லா நினைவுகளும் விளையாட்டு முதல் சேர்ந்து சென்ற இடங்கள் வரை தன் நண்பனை சேர்த்து தான் பேசினான். அந்த அளவு பாதித்திருக்கிறான் என்று புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் இனிமேல் தான் எப்படி நல்ல நண்பனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டான். இப்போது அவனை பற்றி மட்டும் குறித்து யோசிக்க வேண்டும் என்றும் செல்ப் லவ் பற்றி எடுத்து சொன்னேன். இப்போது அவன் பள்ளியையும் மாற்றி விட்டார்கள்.

எனினும் கடந்த காலம் மொத்தமாக அவனிடமிருந்து அழிக்க வேண்டும் என்பதால் சிறிது காலம் எடுக்கத் தான் செய்யும். ஆனால் படிப்பை பொறுத்தவரை அவன் சீக்கிரமாக எல்லாமே கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கட்டாய நிலையில் இருக்கிறான். பொதுவாக கவுன்சிலிங் வரும் குழந்தைகளை நான் பார்த்தவரை, குறிப்பாக பத்து, பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, அவர்களது பெற்றோர்கள் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டியை முழுமையாக நிறுத்தி விடுகின்றனர். அதற்கேற்றாற் போல அவர்களது படிப்பின் நேரமுறைகளும் அப்படிதான் இருக்கிறது. எனவே ஹாப்பி ஹார்மோன்ஸ் சுரக்கவே வாய்ப்பில்லை. அந்த பெற்றோரிடம் பையனுக்கு பிடித்த ஸ்போர்ட்ஸில் சேர்த்து விடுமாறு சொல்லி அனுப்பினேன். அதுவே அவனை கண்டிப்பாக பழைய இயல்பான நிலைக்கு மாற்றி, ஸ்ட்ரெஸ் பிரீயாக கொண்டுவர முடியும். பெற்றோர்கள் கண்டிப்பாக தங்கள் பிள்ளைகளின் நண்பர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல் அவசியம். அந்த வயதில் அவர்களுக்கு தப்பான நட்பு கண்டுபிடிக்க தெரியாமல் போனாலும், பெற்றோர்களால் கண்டிப்பாக அதை கண்டுபிடித்து தவறான பாதையிலிருந்து காப்பாற்ற முடியும்.