Skip to main content

மலைத்தொடர்களின் மீதொரு விடியல்! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 12

Published on 09/04/2019 | Edited on 17/04/2019

ரஷ்யாவில், அக்டோபர் புரட்சி நடந்தபோது எனக்கு 13வயதே ஆகியிருந்தது, நான் எனது குழந்தைப் பருவத்தைக் கழித்த டெமுகோ நகரில் வயது வந்த இளைஞர்கள் அந்த நாட்களில் உலகில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள கஷ்டமாக இருப்பதை உணர்ந்தனர்.
 

pablo neruda

 

 

காலம் செல்லச்செல்ல நான் வளர்ந்தேன். உடல்ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் விவரங்கள் புரிந்தது. இரண்டு வருடங்கள் கழித்து எனது புதிய அறிவை உணரமுடிந்தது. நடப்பு நிகழவுகள் குறித்த செய்திகள் எங்களுக்கு தெரியவர ஆரம்பித்தது. புரட்சி துவங்கிய காலத்தில் எனது உள்ளம் தெளிவான பார்வையை பெறத்துவங்கியது. அராஜகவாதிகளுக்கு எதிரான போராட்டம் பட்டினியாலும் பல்வேறு தடைகளாலும் நசுக்கப்பட்டது. எனினும் அந்தப்போராட்டம் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவது போல மீண்டும் எழுந்தது. அனைத்து நாடுகளையும் அவற்றின் இருளிலிருந்து விடுவிக்கும் ஒளியாகத் தெரிந்தது.
 

1921 ஆம் ஆண்டு நான் பல்கலைக்கழகத்திற்கு சென்றேன். வழக்கமான மாணவப் பருவத்து வாழ்க்கைக்குள் விழுந்தேன். அங்கே உள்ளுர் கிரியோல் பூர்ஷ்வாக்களின் சொந்த மகிழச்சிக்காக உருவாக்கப்பட்ட அரங்கில் ரெக்காபேரன் தலைமையிலான தொழிலாளிவர்க்க இயக்கம் தன் முனைப்பாகவே வந்தது. ஆனால் பூர்ஷ்வாக்கள் இதை விரும்பவில்லை. மாணவர்களாகிய நாங்கள் வீதிகளுக்குச் சென்றோம். முதன்முறையாக தொழிலாளிகளின் போராட்டத்தில் பங்கேற்றோம்.
 

அந்தச்சமயத்தில்தான் எங்களது மனதில் உற்சாக வெள்ளம் பொங்கியது. நம்பிக்கை நிறைந்திருந்தது. பல்கலைக்கழகம் எங்களைப்பற்றி கவலைப்பட்டது. ஆனால், புத்தகங்கள் எங்களை வலுப்படுத்தின. கதையாகச் சொல்லப்போனால் இயந்திரகதியான வாழ்க்கையின் பிரதிநிதிகளுக்கும் மாற்றத்திற்கான அடையாளம் கொண்டவர்களுக்கும் இடையே நடந்த விவாதங்கள் கடைசி கட்டத்தை அடைந்து கொண்டிருந்தது, இயந்திரகதியான வாழ்க்கையின் பிரதிநிதிகள் பொதுமக்களின் அங்கீகாரத்தைப் பெறமுடியவில்லை.
 

மாணவர் சங்கத்தின் புத்தகங்களும் சோவியத் நூல்களும் ஸ்பானிய மொழியில் கிடைக்கத் தொடங்கின. அங்கேதான் நாங்கள் அரசியல், இலக்கிய நூல்களை வாங்கினோம். இவற்றில் சில தடைசெய்யப்பட்டவை. நான் நினைத்துப் பார்க்கிறேன்... நாங்கள் படித்த முதல் புத்தகம். ஆயுத ரயில் எண் 14-69, இதை விசெஓலட் இவானெவ் எழுதியிருந்தார். லியோனிட் லியானோவ் எழுதிய பட்கர்ஸ் என்ற நூலும் லிடியா செய்புலினாவின் கதைகளும் நாங்கள் படித்தவை, ஏற்கனவே நாங்கள் கார்கியின் நூல்களை படித்துள்ளோம்.
 

புரட்சி சாத்தியம் என்பது நிருபிக்கப்பட்டது.
 

மனிதநேயம் என்ற மாபெரும் சிந்தனையை விளைவித்த ஒரு மாபெரும் தலைவரின் பெயர் எங்களை ஆட்கொண்டது. எங்கள் வாழ்வை ஆக்கிரமித்தது. அவரது பெயர் லெனின். இந்தப் பெயர் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்புமிக்க அர்த்தத்தை கொடுத்தது. இந்தப்பெயர் எல்லோரையும் ஈர்த்தது; ஆகர்சித்தது. எங்களது பூங்காக்களிலும் சதுக்கங்களிலும் பழைய காலத்தின் கதாநாயகர்களது சிலைகள் இருக்கின்றன. அந்தச் சிலைகள் குதிரைகள் மீது, கைகளில் வாள் ஏந்தி மிகவும் ஆக்ரோஷமாகவும் அழகாகவும் இருக்கும்.
 

lenin

 

 

புதிய கதாநாயகனோ, சாதாரண தோற்றம் கொண்டவர். இன்னும் சொல்லப்போனால் அவரிடம் எந்த ஆயுதமும் இல்லை. ஆனால் அறிவு நிறைந்த தலை இருக்கிறது. அந்தத் தலை ஒரு சிறிய புவிக்கோளத்தைப் போன்று ஜொலிக்கிறது. மிகவும் பழமைவாதம் பேசும் பத்திரிகைகள் கூட லெனினுக்கு தங்களது மரியாதையை செலுத்தின. அவர் மறைந்தபோது தங்களது இரங்கலை வெளிப்படுத்தின. அந்தக் காலத்தின் மிகப் பிரபலமான பத்திரிகைகளில் லெனினைப்பற்றி ஒரு முழுப்பக்கம் செய்தி வெளியிட்டதை நான் நினைத்துப் பார்க்கிறேன். இன்னும்கூட சிலி நாட்டின் பூர்ஷ்வாக்கள் இந்த புதிய சீத்திருத்தவாதியின் செயல்பாடுகளின் தாக்கத்தை உணரவில்லை. சிலி காத்திருக்கிறது. லெனினின் அனைத்து கண்டுபிடிப்புகளும் அவரது மறைவிற்கு பின்னர் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து நாளேடுகளும் லெனினது வாழ்க்கை குறித்த ஏராளமான விவரங்களோடு விரிவான செய்தி வெளியிட்டன.
 

எனது நாடு மாறிக்கொண்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்காவின் இதர பகுதிகளும் மாறத்துவங்கியுள்ளன. நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம் செல்வாக்கு பெற துவங்கியுள்ளது. இந்த கண்டத்தின் அனைத்து தலைநகரங்களிலும் துப்பாக்கிச் சத்தம் கேட்கத் துவங்கிவிட்டது. கடந்த பல ஆண்டுகளாக இவை அமைதியாகவே இருந்தன. இத்தகைய எழுச்சிகளும் அடக்குமுறைகளும் இதற்கு முன்பு நாங்கள் அறிந்திராதவை.
 

தொழிற்சாலைகளில், சுரங்கங்களில் இன்னும் பல்வேறு இடங்களில் ஒருவரிடமிருந்து ஒருவர் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மக்கள் கற்றுக்கொண்டு விட்டனர். பல்வேறு ஒடுக்குமுறைகளால் ஆளப்பட்டுவந்த ஒரு தேசம் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்துவிட்டு மனிதனை மனிதன் சுரண்டுகிற கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதை அவர்கள் அறிந்து கொண்டனர். இது புதிய போராட்டங்களை புதிய மனிதவள கோரிக்கைகளை உருவாக்கியது. மனித உறவுகளிலும். மனங்களிலும், உணர்வுகளிலும் ஏராளமான மாற்றத்தைக் கொண்டுவந்தது. அனைத்தும் மாறிக்கொண்டிருக்கிறது.
 

சிலி தேசத்து மக்கள் பிற நாடுகளின் மக்களது வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மிக விரைவிலேயே சிலியின் தெருக்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் சோவியத் கொடிகள் ஆங்காங்கே தென்படத் துவங்கின. நான் எனது கண்களால் தொழிலாளர்களின் வீட்டுச் சுவர்களில், சுரங்கத் தொழிலாளர்களின் குடிசைப் பகுதிகளில், தொழிற்சங்க அலுவலகங்களில், பொது நூலகங்களில் லெனின் படங்களை பார்த்தேன். மனிதநேயத்தின் இந்த மகத்தான வெளிச்சம் எங்களுக்கு வழிகாட்டியது.
 

புரட்சி மக்களின் உடல்களிலும் ஆன்மாவிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. எங்களது லத்தீன் அமெரிக்க மனிதநேயவாதிகள் இத்தகைய மாற்றங்களை உடனடியாக புரிந்து கொண்டார்கள், ஏற்றுக் கொண்டார்கள். அர்ஜென்டினாவைச் சேர்ந்த அன்னி பெல்போன்ஸ், பெருவைச் சேர்ந்த ஜோஸ் கர்லோஸ் மரியாடேகு மற்றும் சீசர் வலேஜா, கியூபாவைச் சேர்ந்த ஜான்மரிநெல்லோ போன்றவர்களைச் சொல்லலாம்.
 

1920க்கு சற்று முன்னர் இவர்கள் லத்தீன் அமெரிக்காவின் தத்துவகர்த்தர்களாக, மனித வாழ்வின் புதிய மாண்புகளை உருவாக்குபவர்களாக, இளைய தலைமுறையினரை விழிப்புணர்வு கொள்ளச் செய்தவர்களாக விளங்கினர். அக்டோபர் புரட்சியை முழுமையாக புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்ட இவர்கள் வரலாற்றில் முதல்முறையாக எங்களது கண்டத்தின் கலாச்சார வளர்ச்சியை மகத்தான தொழிலாளி வர்க்கப் போராட்டத்துடனும் வெகுமக்களின் விழிப்புணர்வுடனும் இணைத்தனர். எமது நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் பாரம்பரியமாகவே தனிமைப் படுத்தப்பட்டவர்கள். காயப்படுத்தப்பட்டவர்கள். அவர்கள் சக்திமிக்க நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கும், நிலமற்ற, பசிமிகுந்த, எழுத்தறிவற்ற, ஏழை விவசாயிகளின் பெருந்திரளுக்கும் இடையே நடந்த மோதல்களை அறிந்தனர். இந்த இரண்டு எதிர் துருவங்களுக்கு இடையே இடைவெளியை நிரப்புவது கடினம் என்பதை உணர்ந்தார்கள்.
 

கவிஞர்களால் இந்த இடைவெளி நிரப்பப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அடக்குமுறைகள், உடல்நலக்குறைவுகள் போன்ற காரணங்களால் இவர்களில் சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள். மக்களால் மறக்கப்பட்ட இவர்கள் தங்களது கடைசி நேரத்தை மருத்துவமனைகளில் செலவழித்தார்கள். அங்கேயே நோய் முற்றி இறந்து போனார்கள் இவர்கள் எல்லோருமே தங்களது கலை குறித்து பெருமிதம் கொண்டவர்கள். நிலப்பிரபுக்களின் வன்முறைக்கு ஆட்பட்டும் நலமாக வாழ்ந்ததுபோல நடித்தவர்கள். இவர்கள் அநீதிக்கு எதிராக சிந்தித்திருக்க வேண்டும். அவர்களது கலை யதார்த்தவாதத்திலிருந்து தனிமைப்பட்டு நின்றது. இவர்களது படைப்புத்திறனை மலடு தட்டச் செய்த, அவர்களது வறுமையின் முலம் பெரும் அழுத்தத்தை ஏற்படச்செய்த பூர்ஷ்வா அமைப்பு, சுத்தமான கலையை அதாவது, மனிதனின் வாழ்வுக்கும் போராட்டங்களுக்கும் எவ்வித தொடர்புமின்றி ஒன்றை உருவாக்குமாறு நிர்பந்தித்தது.
 

அக்டோபர் புரட்சி மனிதநேயத்தை மட்டும் விழிப்படையச்செய்யவில்லை, ஒரு புதிய அரசை உருவாக்கியது. ஊழலும் சுரண்டலும்மிக்க ஒரு சமுக அமைப்பிற்கு முடிவுகட்டியது, கலாச்சார வளர்ச்சிக்கு ஒரு தீர்மானகரமான உதவிக்கரமாக செயல்பட்டது. லத்தீன் அமெரிக்காவின் கலைஞர்கள் புரட்சியின் மனிதநேயத்தை உணர்ந்தார்கள். அனைத்து விதமான இருள் சக்திகளின் அச்சுறுத்தலையும் மீறி வளர்ந்தோங்குகிற புரட்சி நீடித்து நிலைப்பதற்கான உரிமையை பெற்றிருக்கிறது, ஏனென்றால் அது நிலைத்திருப்பதற்கான நியாயத்தை தன் உள்ளே வைத்திருக்கிறது என்பதை அறிந்தார்கள். எப்போதும், சோவியத்யூனியன் அனைத்து தரப்பு மக்களின் நேசத்திற்குரிய நாடாக இருக்கிறது.
 

அதன் கஷ்டங்கள், தோல்விகள் நம்மை கடுமையாக பாதிக்கின்றன. அதன் வெற்றிகளும் சாதனைகளும் நம்மை ஆகர்சிக்கின்றன. பெரும்பாலான மனிதர்களின் நம்பிக்கைகள், முற்றிலும் சோவியத்தின் இறுத்தலையே சார்ந்திருக்கிறது என்பதை நாம் உணர்ந்தோம். அதன் எந்த ஒரு தோல்வியும் வரலாற்று சுழற்சியில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தும்.
 

துரதிருஷ்டவசமாக இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஹிட்லரின் நாசகர கொள்கைகளை பெரும் நிறுவன ஏகாதிபத்தியம் தனது கையில் எடுத்துக் கொண்டது. இதுதான் பனிப்போரின் துவக்கம்.
 

ஏகாதிபத்தியவாதிகள் துப்பாக்கிகளை மட்டும் கொண்டிருக்கவில்லை; அவர்கள் உலக நிலைமையை மாற்ற டாலர்களை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஏகாதிபத்தியத்தை புகழ்ந்துரைப்பவர்களை எதிர்நோக்குகிறார்கள். ஆனால் அதன் வேலையாட்களை மட்டுமே அவர்களால் பார்க்கமுடிகிறது. ஊழல் மிகுந்த அரசுகளின் ஆதரவில் அவர்கள் பெரும்பொருட்செலவு செய்து பத்திரிகைகளை நிறுவியுள்ளார்கள். ரியோ கிராண்டே நகருக்கு தெற்கே வசிக்கும் அனைத்து மக்களிடையேயும் பத்திரிகைகளை விநியோகிக்கிறார்கள். முதலாளித்துவ தத்துவத்தின் தீவிர ஆதரவாளர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். பெரும் நிறுவனங்களையும், சூதாட்ட வர்த்தகத்தையும் போற்றிப்புகழும் கவிதைகளைப் படைக்கும் கவிஞர்களை விரும்புகிறார்கள். எனினும் அப்படிப்பட்டவர்கள் குறைவே.
 

19ம் நூற்றாண்டில் லத்தீன் அமெரிக்காவின்  மரியாதையை அமெரிக்கா அனுபவித்தது. வால்ட் விட்மனின் கவிதைகளிலும், ரால்ப் டபிள்யூ எமர்சனின் சிறந்த பேச்சுக்களிலும் இது கிடைத்தது, ஆனால் அமெரிக்கா அப்போதிருந்து மாறத்துவங்கிவிட்டது.
 

மத்திய அமெரிக்காவின் கொடுரமான சர்வாதிகாரிகளை அது ஆதரித்தது. நாடுகளின் எல்லைகளை மீறி தேசிய கொடிகளை அவமதித்தது. எங்களது சிறிய நாடுகளின் நிலங்களை பறித்தது. இந்த இரண்டு அமெரிக்காக்களும் ஒன்றுபடுவது எப்படி முடியும்? சில பிரபலமான வட அமெரிக்க தத்துவகர்த்தாக்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவர்களுக்கு பல்கலைக்கழகங்களிலிருந்து லட்சக்கணக்கில் மானியம் கிடைத்தபோதிலும் கூட அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இது பெரும் நிறுவனங்களுக்கு உதவியாக இல்லை. இந்த ஒடுக்கப்பட்ட கண்டத்தின் மக்களது அன்பை அவர்களால் சம்பாதிக்கமுடியவில்லை. ஒரு கையில் உணவுப்பொருளும் மற்றொரு கையில் அடிப்பதற்கு குச்சியும் வைத்திருப்பவர்களின் வருகையை ஏற்கமுடியவில்லை. அக்டோபர் புரட்சி வார்த்தைகளால் வடிக்கமுடியாத பல்வேறு ரசாயண மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன் சக்தியையும் ஈர்ப்பையும் அளவிடுவது இயலாதது. அக்டோபர் புரட்சி தத்துவார்த்த ரீதியாக மட்டும் வெளிச்சத்தை பாய்ச்சவில்லை, பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக மனிதனின் கணவுகளை உண்மையாக்கிக் காட்டியது. எங்களது நாடுகள் அதை உணர்கின்றன. சோவியத் யூனியனிலிருந்து மிகப்பெரும் தூரத்தில் பிரித்துவைக்கப் பட்டிருந்தாலும் கூட அது உணரப்படுகிறது.
 

லத்தீன் அமெரிக்கா எப்போதும் பெரும் நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் நிறைந்த பூமி. இந்த கண்டத்தின் இதயத்தில்தான் அளவிடமுடியாத கற்பனைகள் பிறந்தன. இதன் பெரும் நதிகளுக்கு அருகிலும், பிரம்மாண்டமான சமவெளியிலும் புதுமைகள் பிறந்தன. லத்தீன் அமெரிக்காவிடமிருந்து கவிதையும் இசையும் பிரிக்கமுடியாதவை. எங்களை உலகம் முழுவதும் கொண்டுசெல்கிற குதிரைகள் அவை.
 

அக்டோபர் புரட்சி வெற்றிபெற்ற நிலையில் அது வளர்ந்துவரும் நிலையில் எங்களது கண்டத்தின் மக்களும் கவிஞர்களும் தங்களது புதிய கனவை பாடுகிறார்கள். நீதி, சகோதரத்துவம் மற்றும் பொது அறிவு போன்ற எங்கள் கனவு உண்மையாகிவருகிறது. சமத்துவம் என்கிற பழம்பெரும் கனவு உண்மையாகிறது. எங்களது நாடுகளும் கவிஞர்களும் அதை உணர்கிறார்கள். அவர்கள் தங்களது இதயங்களை இந்தப் பாடல்களோடு, அக்டோபர் புரட்சியின் உண்மையை உரத்துக்கூறும் தங்களது போராட்டங்களோடு இணைத்துக்கொள்கிறார்கள்.
 

எனது கண்டத்தின் இதயத்திலிருந்து பொங்கி பிரவாகம் எடுக்கும் இந்தப்பாடலை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது.

 

இழ்வெஸ்தியா, நவ,5,1962.
 

 

முந்தைய பகுதி: 


சிலி தேசம் வாழ்க! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி - 11

 

 

அடுத்த பகுதி:


கியூபாவின் வெளிச்சம்! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 13

 

 

 

 

 

 

 

Next Story

இருளின் ராஜ்ஜியத்தில் ஒரு சூரிய ஒளிக்கீற்று!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 26.

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

குவாயாக்குய்ல் மிகவும் புகழ்பெற்ற இடம் அல்ல. கொளுத்தும் சூரியனுக்குக் கீழே கருப்புக்குடைகளைப் போல, அந்த விரிகுடாவில் மிகப்பெரும் பறவைகள் சுற்றித் திரிகின்றன. துரைமுகத் தொழிலாளர்கள் வேக வேகமாக நடக்கிறார்கள். மிகப்பெரும் வாழைப்பழ லோடுகளுக்கு அடியில் அவர்களது உருவம் தெரிகிறது. குவாயாக்குய்ல், ஈகுவடாரின் மிக முக்கிய செல்வமான வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான முக்கியமான துறைமுகம் ஆகும்.

pablo thodarkal


|இந்த வாழைப்பழ நகரத்தில் இரண்டு விஷயங்கள் எனது கண்களில் பட்டன. இரண்டுமே அடிப்படையில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் அல்ல. ஒன்று, சாவைப் பற்றியது. குவாயாக்குய்ல் நகரின் கல்லறை உயரமான வளர்ந்த மரங்களுக்கும் மலர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் காட்சியளிக்கும். உண்மையில் ஈகுவடாரின் இதர பிரதேசங்களை ஒப்பிடும் போது குவாயாக்குய்ல் நகரத்தில் வாழ்வதை விட சாவதே நல்ல விஷயம்.


மற்றொன்று என்னை ஈர்த்தது, எனது நண்பரின் சிரிப்பு. வாழ்க்கையின் அற்புதமான அறிவிப்பு சிரிப்பு. அவரது பெயர் என்ட்ரிக் கில் கில்பர்ட். எவ்வளவு சத்தமாகவும், ஈர்ப்புமிக்கதாகவும் அவர் சிரிக்கிறார்! தெருவில், வாழை மரங்களின் அடியில், தூய்மையான வானத்தின் அடியில் நின்று கொண்டு மிகப்பெரும் கருப்பு பறவைகள் சூழ்ந்து நிற்க அவரது அட்டகாசமான சிரிப்பு ஒரு புயலைப் போன்றது அல்லது வீடுகள் கட்ட பயன்படுத்தப்படும் கிரானைட் கற்களைப் போல பளபளப்பானது. குவாயாக்குய்ல் நகர மக்கள் கில் கில்பர்ட்டின் சிரிப்பை நல்லதை அறிவிக்கும் ஓசையாக கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

pablo neruda

ஆனால் அவர்கள் இப்போது அந்த சிரிப்பை அடிக்கடி கேட்க முடிவதில்லை. எனது நண்பர் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டிருக்கிறார். லத்தீன் அமெரிக்காவின் பல மகன்கள், பெட்ரோசாட், லூயிஸ் வால்டிவிசோ மோரன், ஜீசஸ் பரியா மற்றும் இதர பலரும் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறார்கள். அல்லது மரண தண்டனை கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பிரேசிலியர்கள் தொலைதூரங்களில் உள்ள தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டு விட்டார்கள். அல்லது சிறைக் கொட்டடிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.


லத்தீன் அமெரிக்காவின் பிற்போக்கு சக்திகள் ஜீசஸ் பரியாவின் உன்னதத்தை, பெட்ரோசாட் மற்றும் லூயிஸ் மோரனின் உறுதியை, கில் கில்பர்ட்டின் நம்பிக்கைமிக்க கதைகளை பார்த்து பயந்து போயிருக்கின்றன. எங்களது மாபெரும் கண்டத்தின் மக்களது நினைவுகளும் உணர்வுகளும் இந்த அமைதியான நண்பர்களுடனே இருக்கின்றன. அவர்கள் இருளின் ராஜ்ஜியத்தில் சூரிய ஒளிக்கீற்றைப் போல அறியாமையும் வன்முறையும் நிறைந்த இடத்தில் ஒரு வெளிச்சக் கீற்றைப் போல இருக்கிறார்கள்.


|இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் இறுதியில் இருள் தோற்கடிக்கப்படும் என்பது தெளிவு. இது மரணத்தின் போராட்டம். இது இருட்டுச் சக்திகளின் கடைசி போராட்டம். அவற்றின் கடைசி ஆயுதம் வன்முறையும் சித்ரவதையும்தான்.
 

pablo neruda


வன்முறை சற்று குறைவாக இருந்த நாடான சிலியில் இந்தப் போராட்டத்தின் உத்தி வேறுவிதமாக இருந்தது. இந்த நாட்களில் தீவிர வலதுசாரி மதகுருமார்களும், தொழிலதிபர்களும் கைகோர்த்துக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை ஆதரித்தார்கள். அவர்கள் தங்களது நம்பிக்கையை கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் மீது வைத்தார்கள். அவர்களது வேட்பாளர் பிரெய், இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் வெற்றி பெறுவதற்காக புரட்சிகர பாதையிலிருந்து தன்னைத்தானே விலக்கிக் கொண்டவர். இரண்டு நாட்களுக்கு முன்பு பழைய கட்சிகள், நில உடமையாளர்கள் மற்றும் வட்டிக்கு கொடுத்து வாங்கும் நிதியாளர்கள் ஆகியோரின் கட்சிகளும் அவரை ஆதரித்தன. தற்போது அவரை வானத்திற்கும் மேலாக புகழ்ந்து பேசுகிறார்கள். சாத்தியமான அனைத்து வழிகளிலும் அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்கள்.
 

இதர லத்தீன் அமெரிக்க நாடுகளை விட இங்குள்ள நிலைமை சற்று பரவாயில்லை. எனினும் இதுவும் மோசமே. அமெரிக்க ஐக்கிய நாடு, இங்கு தாமிரச் சுரங்கங்களை தேசவுடைமையாக்குவதை தடுக்க முயற்சிக்கிறது. ஒரு விவசாய சீர்திருத்தம் நடப்பதை தவிர்க்க பணக்கார நிலவுடமையாளர்கள் முயற்சிக்கிறார்கள். அரசியலில் இருந்து மக்களை ஒதுக்கியே வைத்திருக்க ஆளும் வர்க்கம் அனைத்துக் காரியங்களையும் செய்கிறது. ராணுவக் கலகம் எதையும் நடத்தாமலே இதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.
 

இந்த தருணத்தில் மக்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் தருகின்றன. மூன்று நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி பதவிக்கான மக்கள் வேட்பாளர் டாக்டர் சால்வடார் அலண்டேயை சந்திக்க மிகப்பெரும் கூட்டம் கூடியது. அந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் நானும்கூட பேசினேன். சில நகைச்சுவை மிக்க கவிதைகளையும் வாசித்தேன். அந்த மாபெரும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து இவர்கள் மொத்தம் எத்தனை பேர் என்று வியந்து போனேன். இன்னும் கூட நாங்கள் மிகச் சரியான எண்ணிக்கையை கணிக்க முடியவில்லை. ஆனால், அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இருக்கக் கூடும். இன்னும் 3 லட்சத்து 50 ஆயிரம் பேராகக் கூட இருக்கக் கூடும் என்று தகவல்கள் வந்துள்ளன. இந்த மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதிநிதிகள் மட்டுமின்றி எல்லோரும் பங்கேற்றார்கள். முன்னெப்போதும் எனது நாடு இத்தகைய மிகப்பெரும் பொதுக்கூட்டத்தை பார்த்ததில்லை. சிலி தேசத்தின் மக்கள் இன்றைக்கு தங்களது விடுதலையையும் அனைத்து லத்தீன் அமெரிக்க மக்களின் கவுரவத்தையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள்.
 

இது போன்ற ஒரு உணர்ச்சிமிக்க தருணத்தில் நான் இத்தகைய சில வரிகளை எழுத சில நிமிட நேரங்கள் கிடைத்தது. பல நிர்ப்பந்தங்கள் இருந்தாலும், ஷேக்ஸ்பியரின் தினத்தையொட்டி ரோமியோ - ஜூலியட்டை மொழி பெயர்க்க நியமிக்கப்பட்டேன். இந்த அற்புதமான கவிதையை வாசிக்கும் போது நான் ஏராளமாக கற்றுக் கொண்டேன். அது மிகவும் அன்பைப் பொழிந்த, அதை எழுதிய ஆசிரியரின் இதயத்தை உணர்த்துகிற, நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்து மண்ணோடு மண்ணாகிப் போன அந்த கவிஞனின் ஆர்வத்தை வெளிப்படுத்துகிற காவியம். ஒரு துயர காதல் கதையான ரோமியோ - ஜூலியட் மக்களிடையே அமைதியை வலியுறுத்துகிற ஒரு மாபெரும் இலக்கியம். வன்முறைக்கும் போருக்கும் எதிராக மிகக் கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்துகிற படைப்பாகவே அதை நான் கருதுகிறேன்.
 

எனது உணர்வுகள் கொந்தளிக்கின்றன. நான் எனது கண்களை ஜூலியட் நடைபயின்ற தோட்டத்திற்குள் செலுத்துகிறேன். ரோமியோவுக்கு எனது இறுதி அஞ்சலியை செலுத்துகிறேன். எனது சொந்த நாட்டின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடச் செல்வதற்கு முன்னர் வீதிகளிலும் வயல்வெளிகளிலும் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்கு முன்னர் இதெல்லாம் நடக்கிறது. நாளை டாக்டர் அலண்டேயும் நானும் சிலி தேசத்தின் தெற்குப் பகுதிக்கு பயணிக்கிறோம். அது ஒரு மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கப் பகுதி. தலைநகரிலிருந்து தொலைதூரத்தில் இருக்கிறது.
 

மத்தியப் பள்ளத்தாக்கில் வருவதற்கு முன்பாகவே அங்கு குளிர் வந்து விடும். அத்துடன் இதமான தட்பவெப்ப நிலையும், திராட்சை தோட்டங்களின் மணமும் வீசும்.
 

எனது குழந்தை பருத்தின் மழைத்துளிகள் தெற்கில்தான் நனைத்திருக்கின்றன. மழையின் வெள்ளிக் கம்பிகள் தரையை தொடும் போது எங்களது போராட்டத்தையும் முன்னேற்றத்தையும் பற்றி நான் உங்களுக்குச் சொல்லுவேன். அங்கே என்ன பார்த்தேன் என்பதைப் பற்றி அடுத்த முறை உங்களுக்கு எழுதுகிறேன்.
 

-ஏபிஎன் இண்டர்நேஷனல் நியூஸ் புல்லட்டின்,  மே 26, 1964.

முந்தைய பகுதி:

எதிர்பாராத கண்ணீர்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 25.



 

Next Story

எதிர்பாராத கண்ணீர்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 25.

Published on 27/09/2019 | Edited on 27/09/2019

எனது நூல்கள், கவிதைகள் மற்றும் தொகுப்புகளிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு விமானத்திலும், காரிலும், நடந்தும் சிலி முழுவதையும் சுற்றி பிரச்சாரம் செய்து வந்தேன். செப்டம்பரில் நாங்கள் ஒரு புதிய ஜனாதிபதியை பெறப் போகிறோம். அத்துடன் பல மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
 

தெருவில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு மிகப்பெரிய முரசொலி எங்களை அழைக்கிறது. உண்மையில் அங்கே முரசுகள் இல்லை. எனினும் ஒவ்வொருவரும் அதைக் கேட்டோம். ஒருவேளை அது முன்பொரு காலத்தில் அரவ்க்கா இன மக்கள் தங்கள் மீது படையெடுத்து வந்தவர்களுக்கு எதிராக ஒலித்த முரசின் ஓசையாக இருக்கலாம். எங்களை போர்க்களத்திற்கு அழைத்தது அவர்களது குரலாக இருக்கலாம்.
 

இன்றைக்கு அந்தப் போராட்டமானது நில உடமையாளர்களுக்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இதர அனைத்து பிற்போக்கு சக்திகளுக்கும் எதிராக தொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எனது தேசத்தின் அரசியல் வாழ்வை சூறையாடி அடிமைப்படுத்தியிருப்பது இவர்கள்தானே?

paththirikaiyalar pablo neruda part 25

நான் எமது வேட்பாளர் டாக்டர் அலண்டேவுடன், மெகல்லன் ஜலசந்தியை நோக்கி பரந்து கொண்டிருக்கிறேன். விமானத்திற்கு கீழே, மிக வேகமாக ஓடி மறையும் பள்ளத்தாக்குகள், அற்புதமாக வளர்ந்து கிடக்கும் கோதுமை வயல்கள், கொத்து கொத்தாய் காய்த்துத் தொங்கும் திராட்சைத் தோட்டங்கள்.  நாங்கள் மிகவும் கடினமான சமவெளிப் பகுதியை, தலை சுற்றும் உயரத்தில் அமர்ந்து கொண்டு கடந்து சென்றோம். வழியில் சக்திமிக்க எரிமலைகளான லைமா, வில்லாரிகா, ஷில்லான் ஆகியவை அகன்ற வாயுடன் உயர்ந்து நின்று புன்னகைத்தன. திடீரென்று பனிமூடிய மலைச்சிகரங்களை கண்ணுற்றோம். ஓசோர்னோ, பண்டியாகுடோ மற்றும் கார்கோவடோ ஆகிய பனிச்சிகரங்களையும்,  கடல் போல விரிந்து கிடக்கும் மலைத்தொடரின் எழிலையும் கண்டோம். தனித்தன்மை வாய்ந்த இந்த இடங்களையெல்லாம் எங்கள் விமானம் கண்மூடித் திறப்பதற்குள் கடந்து சென்றது. கீழே தெரிந்த நூற்றுக்கணக்கான பனிச்சிகரங்கள் வெள்ளி ரிப்பன்களைப் போல காட்சியளித்தன. அமெரிக்கக் கண்டத்தின் தென்கோடி பிரதேசம் மாபெரும் அழகும் வனப்பும் நிறைந்த, அழகின் மர்மங்கள் நிறைந்த பிரதேசமாக காட்சியளிக்கிறது!
 

புத்தம் புதிய நீல வண்ண மலைகளின் மீது வெள்ளை நிற பதாகையாக பனி போர்த்தியிருக்கிறது. எண்ணற்ற தீவுக் கூட்டத்தின் கரைகளில் படிந்துள்ள கடல் நுரைகளில் பட்டு சூரிய ஒளி மின்னுகிறது. மலைகளின் இதய பகுதிகளில் ஆழமாக வெட்டி விட்டது போன்ற கடற்கால்கள்...
 

விரைவிலேயே எங்களது கவனம் படகோனியாவின் கடினமான எதார்த்தத்தை நோக்கித் திரும்பியது. மக்கள் எங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். மாபெரும் மக்கள் கூட்டம் எங்களை வரவேற்ற விமான நிலையத்தில் துவங்கி, எல்லா இடங்களிலும் நாங்கள் பேசினோம். உலகின் தொலைதூர நகரங்களின் இருப்பிடமான மெகல்லன் ஜலசந்தி முழுவதும் வீதிகளில் நடந்தோம். பிறகு நாங்கள் மிகப்பெரும் எஸ்டேட்டுகளுக்கு சென்றோம். இந்த எஸ்ட்டேட்டுகளில் மிகச் சிறியதே சுமார் 3 அல்லது 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு கொண்டது என்றால் மற்றவற்றின் பரப்பை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இங்கு ஆயிரக்கணக்கில் ஏன் லட்சக்கணக்கில் கூட செம்மறி ஆடுகள் மேய்கின்றன. அவை எப்போதும் எண்ணப்படுவது இல்லை. ஒரு எஸ்டேட்டில் முழு வீச்சில் ஆடு வெட்டும் பணி நடந்து கொண்டிருந்த போது நாங்கள் அங்கு சென்றோம். 140 ஆயிரம் ஆடுகள் ஏற்கெனவே வெட்டப்பட்டிருந்தன. ஆனால் அந்த கம்பெனியின் லாபத்தோடு ஒப்பிடும் போது, இந்த எண்ணிக்கை குறைவானதே.

paththirikaiyalar pablo neruda part 25

இந்த நிறுவனம் மெகல்லன் ஜலசந்தி சுரண்டல் கழகம் என்றே பெயர் கொண்டது. இப்பிராந்தியத்தில் பிரபலமானது. கடந்த 50 ஆண்டுகளாக மெகல்லன் ஜலசந்தி மக்களையும், அவர்களுடைய ஆடுகளையும் ஒட்டச் சுரண்டிய இந்த கம்பெனி, தனது பெயரில் இருக்கும் சுரண்டல் என்ற வார்த்தையை திடீரென்று நீக்கிக் கொண்டது. வார்த்தை மட்டும்தான் நீங்கியது. சுரண்டல் அப்படியே தொடர்கிறது.
 

பெரும் அளவிலான பேல்கள் ஆட்டுத்தோல் லண்டனில் மார்க்கெட் செய்யப்பட்டது. இறைச்சி பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு கப்பலில் ஏற்றப்பட்டது.  பன்டா அரினாஸ் பகுதியில் செம்மறி ஆட்டுக் குட்டிகளே இல்லாமல் செய்தது இந்தக் கம்பெனி. உள்ளூர் சந்தையிலிருந்து செம்மறி ஆட்டு இறைச்சி முற்றிலும் மறைந்து விட்டது. அப்படியே கிடைத்தாலும் ஏழைகள் வாங்க முடியாத அளவிற்கு இருந்தது.
 

அலெண்டே தனது பிரச்சாரத்தில், இந்த அமைப்பு முறையை மாற்றுவது என்று தீர்க்கமாக உறுதியேற்றார்.
 

நாங்கள் வென்றால் அதன் பின்னர் அமையப் போகும் மக்களின் அரசாங்கம் சிலி தேசத்தின் மக்களுக்கு நிலங்களை விநியோகிக்கும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அங்கே கூடியிருந்த ஒட்டுமொத்த மக்களிடையேயும், மேற்படி பிரிட்டிஷ் கம்பெனியின் மேலாளர் முன்பும் வெளியிட்டோம். அப்போது அந்த மக்களின் சோகமான கண்களில் ஒரு நம்பிக்கை ஒளி பிறந்ததை உணர்ந்தோம். சிலியின் இந்த மாபெரும் மாகாணத்தின் மக்கள் (இம்மாகாணம் சில ஐரோப்பிய நாடுகளை விட பெரியது) நீண்ட காலமாக ஒடுக்குமுறையின் கீழ் வாழ்கிறார்கள்.

paththirikaiyalar pablo neruda part 25


எங்களது பயணத்தோடு, பெரும்பான்மை மக்கள் செல்வாக்குடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சோசலி்ஸ்டான பன்டா அரினாஸ் மாநகர மேயரும் வந்தார். சாலைகளில் ஆடு மேய்ப்பர்கள் எங்களை கடந்து சென்றார்கள். ஒவ்வொருவரும் ஒரு குதிரையில் சென்றார்கள். கையில் மற்றொரு குதிரையை கட்டி இழுத்துச் சென்றார்கள். இரண்டாவது சென்ற குதிரையில் அந்தத் தொழிலாளர்களின் கருவிகள், பூட்ஸ் செருப்புகள், சமையல் பொருட்கள் போன்றவற்றை கட்டியிருந்தார்கள்.
 

 இந்த பரந்து விரிந்த பள்ளத்தாக்குகளில் நீண்ட காலமாகவே ஆடு மேய்ப்பர்கள் வாழ்கிறார்கள். அவர்களைச் சுற்றி அவர்கள் வளர்க்கும் செம்மறி ஆடுகள் மட்டுமே தெரிகின்றன.
 

மிக நீண்ட குளிர்காலத்தின் போது (உலகிலேயே நீண்ட குளிர் காலம் நிலவும் பகுதி இதுதான்) அவர்கள் அடிக்கடி வெளியே சென்று விடுவது உண்டு. தானும் நீண்ட ஆண்டுகளாக ஒரு ஆடு மேய்ப்பராக இருந்ததாக மேயர் கூறினார். அவர் வேலை செய்த இடத்தில் அவரது மேலதிகாரிகள் இவரை எப்போதும் கடுமையான பணிகளுக்கு உட்படுத்த முயற்சித்தார்கள். ஏனென்றால், இவரது கலக குணத்தை பார்த்து அவர்கள் அஞ்சினார்கள். அவர் தனது செம்மறி ஆடுகளோடு வெளிப்பகுதிகளில் படுத்துத் தூங்குவார். வெப்பநிலை மைனஸ் 30 டிகிரிக்கும் கீழே செல்லும்போது கூட இது போன்று நடக்கும். பல தருணங்களில் அவரது கண் இமைகளில் பனி மூடியிருக்கும். மிகக் கடுமையான சூழல்களில் வாழ்ந்த அவர் முடிவற்ற தனிமையிலும் வாடியவர்.
 

ஆனால் இப்போது ஆடு வெட்டும் காலம் உச்சத்தில் இருக்கிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை சந்திக்க நாங்கள் விரும்பினோம். அமைதியான புரட்சிக்கு ஆதரவு அளிக்கும் வேட்பாளரை அவர்களுக்கு அறிமுகப்படுத்த விழைந்தோம். அலெண்டேவுக்கு வாக்களிப்பதன் மூலம் அவர்களது வாழ்வில் மாற்றம் வரும் என்பதை விளக்க நாங்கள் முயற்சிப்போம். அதன் பின்னர் நான் எனது கவிதைகளைப் பாடுவேன்.
 

நாங்கள் அந்தப் பெரிய கூடாரத்திற்குள் நுழைந்தோம். அங்கே நூற்றுக்கணக்கான ஆடு வெட்டும் தொழிலாளர்கள் இருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு செம்மறி ஆட்டை வைத்திருந்தார்கள். புராணங்களில் வரும் கதாநாயகர்களைப் போல அவர்கள் காணப்பட்டார்கள். செம்மறி ஆட்டின் கழுத்தைச் சுற்றி இடது கையை வைத்துக் கொண்டும், வலது கையால் அந்த ஆட்டின் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி அதன் பின்னர் உயிரிழந்த ஆட்டின் உடலை கீழே போட்டு தோலை உரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கடைசியில் ஆட்டுக்குட்டி தனது முழுத்தோலையும் இழந்தது. தோல் இல்லாத நிர்வாண உடலாக காட்சியளித்தது.

paththirikaiyalar pablo neruda part 25

இதைப் பார்ப்பது மிகவும் கடினமானது. இந்த வேலை மிக வேகமாகவும் விரைவாகவும் நடக்கும். அந்தத் தொழிலாளரின் வியர்வை துளிகள் தனது கையில் ஏந்தியுள்ள ஆட்டுக்குட்டியின் மீது விழும். என்னுடன் வந்தவர்கள் இமை மூடாமல் அந்தக் காட்சிகளை கண்டார்கள். அவர்களது கண்கள் குளமாயின. முகங்களில் தூசி படிந்தது. ஆடு வெட்டும் அந்தக் கூடத்திற்குள் வீசும் காற்றின் வாடை மிக மோசமானது. ஆட்டுக் குட்டியின் தோலில் இருந்து எழும் நாற்றமும் வியர்வையின் நாற்றமும் அங்கே வியாபித்திருந்தது.

 

அந்தக் கம்பெனி தொழிலாளர்களுக்கு அவர்களது வியர்வை முழுவதும் ஆவியாகும் வரை வேலைவாங்கிக் கொண்டு மிகச் சிறிய அளவு கூலி கொடுத்தது. கடைசியில் அவர்களுக்கு சற்று ஓய்வு கிடைத்தது. அந்தக் கூடத்தின் நடுவில் எங்களைச் சுற்றி நின்றார்கள். இந்த தருணம் என்னைப் பொறுத்தவரை மிகவும் பொறுப்புமிக்க தருணம். இந்த தொலைதூர இடத்தில், ஆட்டுத் தோலின் நாற்றத்திற்குள்ளும் தூசி படிந்த கூடாரத்திற்குள்ளும் வேலை செய்கிற அந்த மக்களுக்காக எனது கவிதையை வாசிக்கும் தருணம். ஒரு வேளை அவர்கள் காட்டுத்தனமானவர்களாக நாகரீகமற்றவர்களாக இருந்தால் என்ன செய்வது? அமைதியாக கூடியிருந்த அந்தக் கூட்டத்தினிடையே கவிதை வாசிப்பது, அவர்களுக்கு என்னை புரிந்து கொள்ள வைக்குமா? எனது எண்ணங்கள் மோதிக் கொண்டிருந்தன.

 

கடைசியில் நான் வாசிக்க ஆரம்பித்தேன். கியூபாவைப் பற்றிய, செவ்விந்தியர்களைப் பற்றிய, உண்மையைப் பற்றிய, மகிழ்ச்சியைப் பற்றிய, காற்றைப் பற்றிய, துயரத்தைப் பற்றிய கவிதைகளை நான் வாசித்தேன். கடினமான உழைப்பால் களைத்துப் போயிருந்த அந்த மக்கள் முன்பு இது நடந்தது.

 

கடைசியில் எனது கவிதைகள் சொந்த தேசத்தைப் பற்றி கூறியது. அப்போது எதிர்பாராத கண்ணீர் துளிகள், ஒட்டிப் போயிருந்த அவர்களது கன்னங்களில் வழிந்ததைக் கண்டேன். படகோனிய பிரதேசத்தின் குளிர் காற்றில் அந்தக் கண்ணீர் பளிச்சென்று தெரிந்தது. சோக கீதங்களோ, கடும் புயலோ கூட இப்படிப்பட்ட கண்ணீரை அந்த மக்களிடமிருந்து வெளிக்கொண்டு வந்திருக்கும் என்று நான் கருதவில்லை. அவர்கள் என்னைப் பாராட்டி கை தட்டினார்கள். என்னை வாரி அணைத்துக் கொண்டார்கள். ஒரு கடினமான தேர்வில் நான் வெற்றி பெற்றதை அப்போதுதான் உணர்ந்தேன்.

 

மீண்டும் சாலைக்கு வந்தோம். எல்லையற்ற நிலப்பகுதியை பார்த்தோம். உலகின் முடிவில் இருக்கின்ற சமவெளிப் பகுதியை, பனி மூடிய மலைகளை தாண்டி திரும்பினோம். மிக மிக நீண்ட கண்ணுக்குத் தெரியாத கம்பிவேலி இருந்தது. அது என்ன? அது எதைப் பாதுகாக்கிறது? விண்வெளியையா? உலகின் செல்வத்தையா?

paththirikaiyalar pablo neruda part 25


 

இந்தப் பிராந்தியத்தில் முதன்முதலில் நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் வேலி போட்டிருந்தார்கள். படகோனியாவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களே அவர்கள். பல லட்சக்கணக்கான மக்கள் வாழ போதுமான இந்தப் பிரதேசத்திற்கு அவர்களே இந்தப் பெயரை இட்டார்கள். ஆனால் முதலாளித்துவ சமூகத்தின் கொடூர மனிதர்களால் ஊடுருவப்பட்ட எந்த இடமும் உருப்பட்டதாக சரித்திரமில்லை. அவர்கள் இங்கே புதிய ரகமான வேட்டையை துவக்கினார்கள். வன்முறையும் கொலை பாதகங்களும் தெரியாத இந்த மக்களிடையே, கெய்ன் என்னும் மனிதன் பிறக்காத இந்த பூமியில் அந்த வேட்டை நடந்தது. படகோனிய இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட வேட்டை மிக விரைவிலேயே அந்த இனத்தை துண்டாடியது.
 

இந்த வேட்டையில் அவர்கள் தங்களது காதுகளை இழந்தார்கள். பின்னர் அவர்களது தலைகளை குறி வைத்து ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டது.
 

இன்றைய நிலைமையில் எந்தவொரு படகோனியனும் இங்கே உயிரோடு இருப்பார்கள் என்று நான் கருதவில்லை. காற்று மட்டும் அதன் துருவப் பாடலை இசைத்துக் கொண்டிருக்கிறது. மரங்களை வளையச் செய்தும் ஒடித்தும் விளையாடுகிறது. செம்மறி ஆட்டு குட்டிகளின் தோலும் இறைச்சியும் வெளிநாடுகளுக்கு கப்பலேற்றப்படுவதை வரலாற்றின் இந்த இருட்டுப் பிரதேசத்திலிருந்து எந்தக் கண்களும் பார்க்க முடியாது.
 

எவராலும் கவனிக்கப்படாத இந்த மக்களுக்காக ஒரு புதிய உணர்வை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அதில் உறுதியாக வெல்வோம்.

-இழ்வெஸ்தியா, பிப்ரவரி 20, 1964.



முந்தைய பகுதி:
இப்போது இங்கே கோடைக்காலம்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 24.