Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #48

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

marana muhurtham part 48

 

"பறவையை பிரிந்த வலி ,
தரையில் புரண்டு அழுகிறது ,
ஒற்றை  இறகு.

"வெட்டப்படும்  மரம் 
குயில் பாடுகிறது 
இரங்கல் பாட்டு." -படைப்புக்குழுமம் வெளியிட்ட ’சாம்பல் மேட்டில் அமரும் வண்ணத்துப் பூச்சி’ என்னும் ஹைக்கூ தொகுப்பில் இருந்து, இப்படிப்பட்ட மென்மையாக கவிதைகளையும் அதில் பொத்தி வைக்கப்பட்டிருக்கும் வலிகளையும் தேடிப்பிடித்து ரசித்து ’உச்’ கொட்டிய மென்மையான ரசனை கொண்ட ராம்,  வதம் செய்யப் போகிறேன் என்று சொன்னதைக் கேட்டு கவியும், திலகாவும் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனார்கள்.

"டேய் ...ராம். என்னடா இது? இப்படி எல்லாம் பேசுற?" என்று அதிர்ச்சி விலகாத குரலில் கேட்டார் திலகா. " ஏன் சித்தி, நான் பேசுவதில் என்ன தப்பு இருக்கு?  ரோட்டில் போகும்  ஒரு நாயைக் கல்லால் அடித்தால், அது கூடத் திருப்பிக் குரைக்கிறது.  கடிக்க வருகிறது. பெண்கள் மட்டும் எல்லா தவறுகளையும் பொறுத்துக் கொண்டு போகணுமா?ஆசிரியர்கள் என்பதன் அர்த்தம் தெரியுமா? "ஆசு " என்றால் குற்றம். குற்றங்களை நீக்கறவங்க தான் ஆசிரியர்கள். அவர்களே குற்றவாளிகளாய் ஆனால் , சட்டத்தை மக்கள் கையில் எடுக்க வேண்டியது நிலை வரத்தான் செய்யும்." என்று பொங்கினான் ராம்.

 

இரு கனம் தீர்க்கமாக அம்மாவையும் ராமையும் கூர்ந்து பார்த்த கவி, அழுத்தமான குரலில் பேச ஆரம்பித்தாள். 

"ராம், நீ சொல்றது கரெக்ட். உனக்கே இப்படியொரு தார்மீகக் கோபம் வருதுன்னா, உன் தங்கையான எனக்கு எப்படி வரும். அதிலும் பக்கத்தில் இருந்து கொடுமைகளைப் பார்க்க நேரும் போது என் மனநிலை எப்படி இருக்கும்?” என்று கேட்ட கவி... தொடர்ந்தாள்.

”பெத்து வளர்த்து ஆளாக்கும் அம்மாவிடமே ஒரு பெண் தன் அந்தரங்க விசயங்களை சொல்ல வெட்கப்படும் சமுதாயத்தில், பெண்மையை கேவலப்படுத்துவதும், பெண்களுக்கு அசிங்கமாக மெசேஜ் அனுப்புவதும், அசிங்கமான செய்திகளை அனுப்புவதும், அவர்களை அதற்கு உடன்பட வைக்க நிர்பந்தம் கொடுப்பதுமாக ஒரு பெண்ணே இருந்தால், அதுவும் ஒரு ஆசிரியையே அப்படி இருந்தால், பாதிக்கப்பட்ட மாணவி என்ன செய்வாள்? யாரிடம் போய் சொல்வாள்? பிள்ளைகள் தவறு செய்யும் போது  அந்தக் காலத்தில், "கண்ணை மட்டும் விட்டுவிட்டு  உடம்பை உரிச்சிடுங்க. என் பிள்ளை  திருந்தனும்" -னு ஆசிரியர்களிடம் அம்மாக்கள் முறையிடுவாங்க.  இப்ப ஆசிரியர்களே  தவறு செய்தால் யார் தண்டிப்பது? அதான்  நாங்களே சட்டத்தை கையில் எடுக்க நினைக்கிறோம்”. என்று  கம்பீரமாக  சொன்னாள் கவி.

 

கவியும், ராமும் பேசுவதைக்கேட்டு ஜவுளிக்கடை பொம்மை மாதிரி வாயடைத்து நின்றாள் திலகா.

 

திடீரென்று  ராம்... "சித்தி. இதுக்கே இப்படி மைதாமாவில் கிண்டிய அல்வாவை சாப்பிட்ட  மாதிரி வாய் அடைத்தால் எப்படி? கவி ஒரு கொலையே செய்திருக்கிறாள் தெரியுமா?”என்று சொல்ல, அதைக் கேட்டதும் திலகாவிற்கு இதயம் படபடவென்று அடித்து, கண்கள் இருண்டு, வயிறு அமிலம் சுரந்து,  ஒரே நொடியில் நிற்க முடியாமல் தரையில் தள்ளாடி உட்கார்ந்தாள். 

 

அம்மாவின் நிலை கண்டு பதறிய கவி, அம்மா என்றபடி ஓடிப்போய் தண்ணீரை எடுத்து வந்து, குடிக்கக் கொடுத்து ஆசுவாசப் படுத்தினாள். 

 

ராமை முறைத்துப் பார்த்த கவி... "டேய் ராம் திரும்ப திரும்ப என் மீது உனக்கு சந்தேகமா? கொலை செய்கிற அளவுக்கு எல்லாம் நான் துணிச்சல்காரி இல்லைடா" என்று முயலுக்கு மூன்று கால்தான் என்பது போல சாதித்தாள். 

"கவி.. நீ நேரடியாக கொலை செய்யலை ஆனால் திட்டம் போட்டு கொடுத்தது உன்னுடைய இந்த மூளைதான்"

"நானா.. திட்டம் போட்டேனா"? என்று சிவாஜி அளவுக்கு நடிக்க முயற்சி பண்ணி பவர் ஸ்டார் மாதிரி சொதப்பினாள்.

"ஆமாம்.. லில்லி மிஸ்ஸை கொன்றது கவி அண்ட் கோ தான். எனக்கு தெரியும்"

"சும்மா ..உளறாதே ராம்"- என்று கடுப்பானாள்  கவி.

" நான் ஆதாரம் இல்லாமல் சொல்ல மாட்டேன். பி.டி.மிஸ் சாதனா, மாணவி தாரணி. நீ.   மூன்று பேரும் சேர்ந்துதான் லில்லி மிஸ்ஸை  கொலை பண்ணீங்க. எனக்கு எல்லா விஷயமும் தெரியும் கவி" என்று உண்மையை அழுத்தமாக சொன்னான் ராம்.

 

இவ்வளவு நேரம் உறுமிக் கொண்டிருந்த கவி உண்மையை ராம் கண்டுபிடித்து விட்டான் என்று அறிந்ததும் மயக்க ஊசி போட்ட சிங்கமென மதிமயங்கி நின்றாள்.

"கவி லில்லி மிஸ் விஷயத்தில் என்ன நடந்ததுன்னு நான் சொல்றதை விட, உன் திருவாய் மலர்ந்தால் ஆண்டாளின் திருப்பாவை மாதிரி இதமா இருக்கும்"  என்று கிண்டல் செய்தான்.

" ராம் .. எப்படிடா ? இந்த மனநிலையிலும் இப்படி கிண்டலா பேசுற" என்று திலகா வியந்தாள்.

" சித்தி.. மனசுக்கு ரொம்ப அழுத்தம் கொடுத்தால் பலூன் மாதிரி வெடித்துவிடும். சில நேரங்களில் எண்ணங்களை பலூனில் இருக்கும் காற்று மாதிரி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்" என்று தத்துவம் பேசி விட்டு, "கவி ..லில்லி மிஸ் விஷயத்தில் என்ன நடந்ததுன்னு சொல்லு" என்று ஆணியை திரும்ப திரும்ப அடித்தான்.

"லில்லி.. டீச்சர் மாணவிகளை தகாத பாதைக்கு தூண்டினார். தாரணி சொன்ன அத்தனை செயல்களும்  தியாவுக்கும் நடந்தது. ஃபோனில் பேச சொல்றது, பிரின்ஸிபல் செய்யும் லீலைகளுக்கு ஒத்துப் போக சொல்றதுன்னு ஏகப்பட்ட டார்ச்சர் கொடுக்க, வேற வழி இல்லாம இவங்களை எல்லாம் சமாளிக்க வழி தெரியாம, தியா  இறந்தாள். ஆனால்  தாரணி எல்லா உண்மைகளையும் சாதனாவிடம் சொன்னாள். சாதனாவும்   நானும் லில்லியை லேபில் விபத்து ஏற்பட வைத்து அதன் மூலம் கொலை செய்வது என்று முடிவு பண்ணினோம்.  லில்லி டீச்சர் பிராக்டிகல் தேர்வு வருவதால் அதிக நேரம் லேபில் தான் இருப்பார் என்ற செய்தியை தாரணி சொல்லிவிட்டு, லேபில் இருக்கக் கூடிய வேதிப் பொருள்கள் பெயர்களை எல்லாம் லிஸ்ட் எடுத்து கொடுத்தாள்...:

”ம்... சொல்லு சொல்லு...”-ராம் அவசரப்படுத்தினான்.

”அந்த கெமிக்கல் லிஸ்டை வைத்து கூகுளில் தேடினேன் எந்த அமிலத்தை வைத்து எப்படி விபத்து ஏற்படுத்த முடியும்? என்று அதில் கிடைத்ததுதான் பிக்ரிக் அமிலம் பத்தின டீட்டெய்ல். இதை வெப்பப்படுத்தும் போது வெடிக்கும் தன்மை கொண்டது. ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை விட இது அடர்த்தியானது என்று தெரிந்தவுடன், அதற்கான சூழ்நிலையை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்” என்று சொல்லிக்கொண்டே  வந்த கவி சற்று நிறுத்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். 

 

இந்த சிறிது இடைவெளியைக் கூட திலகாவால் பொறுக்க முடியாமல் "அடுத்து என்ன ஆயிற்று?" என்று ஆர்வமும் திகிலும் கலந்து கேட்டாள். 

“ஒருநாள் லில்லி டீச்சர் லேபில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருப்பதை எதிர் வகுப்பில் இருந்து பார்த்த தாரணி சாதனாவிடம்  சென்று சொன்னாள். உடனே சாதனா பிரின்சிபாலிடம் எதையோ சொல்லி, லில்லி டீச்சரை லேபில்  இருந்து வெளியே அனுப்பினாள்.  தாரணி இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, லேபுக்குள்  நுழைந்தாள். தாரணி  தான் அமிலங்கள் எல்லாத்தையும் அடுக்கி வைப்பதால் அவளுக்கு பிக்ரிக் அமிலம் எந்த இடத்தில் இருக்கும் என்று தெரியும். சூடு செய்வதற்காக பிக்கரில் தண்ணீர் இருந்தது. அதை கொட்டிவிட்டு, அதற்கு பதில் பிக்ரிக் அமிலத்தை மாற்றினாள் தாரணி. பிரின்சிபல் திட்டிய குழப்பத்தில் இருந்த லில்லி டீச்சர், பீக்கரில் இருந்தது தண்ணீர் என நினைத்து அதை வெப்பப்படுத்தும் போது  வெடித்து விட்டது.  நாங்க எதிர் பார்த்த மாதிரியே மரணக் காயம்” என்று கவி சொல்லி முடிக்க.... 

"சரியான தண்டனை கவி. இதுமாதிரி பெண் இனத்திற்கு கேடு நினைக்கும் பெண்கள் எல்லாம் உயிரோடவே இருக்க கூடாது" என்று திடீரென வீரத்துடன் பேசினார் திலகா.

"இதுல ஹைலைட் என்னென்னா இன்ஸ்பெக்டர் இதை கண்டுபிடித்து விட்டார். இப்படித்தான் நடந்திருக்கும் என்று தெளிவாக ஸ்கெட்ச் போட்டு விட்டார். நல்ல வேளை  அவரின் மகளும் தியாவும் டியூஷன் தோழிகள் என்பதால் இன்ஸ்பெக்டரை கேசை முடிக்க வைத்தாள் அவர் மகள்" என்று ராம் சொன்னான்.

"இந்த விசயம் உனக்கெப்படி தெரியும்"?  என்று கேட்ட கவிக்கு "இன்ஸ்பெக்டர்  என்னிடம் உங்க பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, நிலைமை மோசமாவதற்குள் சரிசெய்து கொள்னு அட்வைஸ் பண்ணார்"என்றான் ராம்.

"நியாயக்காரன் படகில் போனால் படகு ஒன்பது ஓட்டை என்றாலும் பத்திரமாக கரை சேர இறைவன் அருள் புரிவான்" என்ற கண்ணதாசனின்  வரிகள் திலகாவிற்கு நினைவுக்கு வந்தது.

" கவி உன்னை மகளாக பெற்றதற்கு நான் ரொம்ப பெருமை படறேன் மா.  வேலு நாச்சியார் போல அநீதிக்கு எதிராக போராடுகிறாய்"  என்று உச்சி முகர்ந்தாள் திலகா. "அம்மா எல்லாரும் வேலுநாச்சியார் பற்றியே பேசறோமே தவிர  அவர் வெற்றி பெறுவதற்காக மனித வெடிகுண்டாக மாறி எதிரியின் வெடிமருந்து குடோனை அழித்த குயிலியை யாரும் நினைவில் வைப்பது இல்லை" என்று ஆதங்கமாக சொன்னாள்.

"சித்தி.. போதும்  நீங்க உங்க பெண்ணின் பெருமை பாடியது." என்று இடைமறித்தான் ராம். 

"அம்மா நீயும் ஜான்சி ராணி ஆக மாற சந்தர்ப்பம் இருக்கும்மா:, என்று கவி சந்தடி சாக்கில் நண்டுபிடித்தாள்.

”சொல்லு கவி, நான் யாரை என்ன செய்யணும்? சொல்லு கவி .இந்த சமுதாயத்தில் பாலியல் வன்கொடுமையை இல்லாமல் ஆக்க என்ன பண்ணனும்னு சொல்லு "ஆவேசமாக பேசினார்.

"அம்மா.. சமுதாயத்தை திருத்த வேண்டாம். முதலில் வீட்டை திருத்துங்கள். உங்கள் கணவர் பிரின்ஸிபால் செய்த கேடுகெட்ட செயலுக்கு என்ன தண்டனை என்று நீங்களே தீர்மானிங்க. மகளின் தோழி என்றும் பார்க்காமல் மேலே கை வைத்த அந்த மிருகத்திற்கு என்ன தண்டனை"?” என்று கொதித்துக் கொண்டிருந்த கவியின் கன்னத்தில் இடியென பளார் என்று ஒரு அறை விழுந்தது.

 

(திக் திக்  தொடரும்)

 

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #47

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #50. நிறைவுப் பகுதி!

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

Marana Muhurtham - The End 

 

'கால் நனையாமல் கூட கடலைக் கடக்கலாம். ஆனால் கண் நனையாமல் வாழ்க்கையை கடக்க முடியாது.’ பித்தனாக இருந்தாலும் சித்தனாக இருந்தாலும் ஏதோ ஒன்று நினைவில் அகலாமல்  இருந்து விழிகளை ஈரம் செய்துவிடும். கவியின் நினைவில், தியாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் அனைவரும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே கடிவாளம் போட்ட குதிரை மாதிரி கனைத்தபடி ஓடிக் கொண்டிருந்தது.


 
கோபமோ, சோகமோ எந்த உணர்வாக இருந்தாலும் உறக்கம் என்பது அந்த உணர்விற்கு இடையே கிடைக்கும் சிறிய வலி நிவாரணி ஆகும். உறக்கம் சில நேரங்களில் அந்த உணர்வின் தீவிரத்தையும் வலியையும் தடுக்கும். ஏன் சில நேரங்களில் அந்த உணர்வையே இல்லாமல் செய்யும்.


 
உறங்கி எழுந்த பிறகுதான் தெரியும் திலகாவின் மனநிலை. அதனால்தான் கவி, சரியாக உறங்கவில்லை போல. அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் கவிக்கு மீண்டும் விழிப்பு வந்து விட்டது.  முதலில் சிந்தனைதான் விழித்தது.  அம்மாவின் முடிவு என்னவாக இருக்கும்? உறங்கி எழுந்ததும் கணவன் மீதான சென்டிமென்ட் விழித்துக் கொள்ளுமா? அம்மாவைப் பற்றி நினைக்கிறோமே, ‘எனக்கும் அப்பான்னா  ரொம்ப பிடிக்குமே, டாடி என் மீது அதிக பாசம் வைத்திருக்கிறாரே. ஒரு நல்ல அப்பாவாக இருக்கும் அவரால்  ஒரு நல்ல மனிதராக நடந்து கொள்ள முடியவில்லையே?"- என்று அப்பாவின் மீது வருத்தப்பட்டாள்.


 
'இதுவரைக்கும் நான் பார்த்த அப்பா எனக்கு ஹீரோவாக தானே தெரிந்தார். காற்று கூட புகமுடியாத கண்ணாடிக் கதவில், கண்ணுக்கு தெரியாத மெல்லிய கீறல் எப்படி டாடி வந்தது?’ கவியின் கண்முன் எஸ்.கே.எஸ்.ன் உருவமும் அவர் அம்மாவையும்  தன்னையும் தவிர  பிற பெண்களிடம் நடந்து கொள்ளும் விதமும் நினைவில் வந்தது. அதுபோல், வீட்டு வேலைக்காரி முதல் ஷாப்பிங் மால், பள்ளி என்று அனைத்து இடங்களிலும் அவர் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதங்களை மனத்திரையில் 70 எம்.எம்.-ல் ஓட்டி பார்த்தாள்.  அது, ஐந்து நிமிட டாக்குமென்டரி படம் மாதிரி இருந்தாலும் விருது பெறும் படமாக இருந்தது. அந்த அளவுக்கு அப்பா, இத்தனை வருட வாழ்வில் கண்ணியமாக நடந்து கொண்டிருக்கிறார். பிறகு ஏன் தியா, அடிக்கடி "நிர்வாகியும் தப்பு பண்றாரு, அவர் நல்லவர் இல்லை. அவரை எல்லாம் சும்மா விட்டு விடக் கூடாது" என்று சொன்னாள். கவி குழம்பி கொண்டிருக்கும் நேரத்தில் போன் அலறியது.

 

நேரம் கடந்து இரவு 11 மணிக்கு மேல், விடியும் வரை இந்த ரிங் டோன்களைக் கேட்டாலே, ஏதோ சாத்தானின் குறுஞ்ச்செய்தி போல எண்ணிவிடுகிறது மனம். அப்போது உடல் எல்லாம் வியர்த்து விறுவிறுத்துவிடும். இதயத்தின் "லப் டப்" ஓசையும், கடிகாரத்தின்" டிக் டிக்" ஓசையும் போட்டி போட்டுக்கொண்டு இதயத்திற்குள் மாயக்கால்களாய் ஓடும். அப்படிதான் கவியைப் பொறுத்தவரை இப்போதும்...

 

அதிகாலை நேரத்தில் போன் அலறியதும் பதட்டத்தோடு பார்த்தாள். யார் அழைத்து இருப்பார்கள்? போன் என்ன காரா?  நாம சென்று ஏறும் வரை காத்திருந்து அழைத்து செல்வதற்கு. கவி ஆன் செய்வதற்குள் நின்றுவிட்டது. யாராக இருக்கும் என பார்ப்பதற்குள் மீண்டும் அலறியது. இந்த முறை யார் என்று பார்க்காமல் போனை ஆன் பண்ணி விட்டாள்.


 
"கவி ..கவி .."என்று எதிர்முனையில் பதட்டமான ஆண் குரல் கேட்டது. அந்தக் குரல், சில மணி நேரங்களுக்கு முன் கேட்ட ராமின் குரல். ராம் தான் அழைத்தான்.

 

"என்னாச்சு ராம்? இந்த நேரத்தில். ஏன் பதட்டமா இருக்க?” 

 

"கவி... .அப்பா... அப்பாவுக்கு... ஹார்ட் அட்டாக்" என்று அவன் தேம்பலுடன் சொல்லி முடிப்பதற்குள்... 

 

"என்னடா சொல்ற? இப்ப நீ எங்க இருக்க? இங்கதான் இருக்கியா? -என்று போனில் அதிர்ச்சியும் அழுகையுமாகக் கேட்டுக்கொண்டே, அவசரமாக கவி அப்பா எஸ்.கே.எஸ்.ன் அறைக்கு ஓடினாள்.  அங்கே அப்பா நிம்மதியாக மெல்லிய குறட்டையுடன் உறங்கிக் கொண்டிருந்தார்.

 

கவியின் நினைவு முழுவதும் அப்பாவை சுற்றியே இருந்தது. கெட்டவர். அவருக்கு தண்டனை தர வேண்டும் என்று நினைத்த இந்த அப்பாவுக்கு, ஏதோ ஆகி விட்டதோ என்று ஏன் இப்படி பதறவேண்டும்? குற்றவாளியாகவே இருந்தாலும் அவர்களிடமும் பாசத்தைத் தேடுவதுதான் மகள்களின் மனநிலை. பெண்களின் இந்த பலவீனம் தான் ஆண்களின் தவறுக்கு அனுசரணையாக  அமைந்து விடுகிறது. இந்த ஒரு நொடியில் ஓராயிரம் எண்ணங்கள் கவிக்கு வந்துவிட்டன. 


 
சுதாரிப்பு வந்து போனை மீண்டும் காதருகே வைத்து, ”ராம் என்னடா?” என்றாள்... அதே பதட்டத்துடன். 

 

"கவி, நான் இங்க எங்க வீட்லதான் இருக்கேன். உன் பெரியப்பாவுக்கு தான் ஹார்ட் அட்டாக்.” 

 

“டேய் என்னடா சொல்ற? பெரியப்பாவுக்கா? ஆஸ்பிடல்....?”

 

“அதுக்கு தேவையில்லாத படி  அவர், நம்மளை எல்லாம் விட்டுட்டுப் போயிட்டார் கவி" என்று தழுதழுத்த குரலில் சொன்னான்.

 

"ராம்.... என்னடா சொல்ற? ஐயோ, இதை என்னாலயே தாங்கமுடியலையே... அப்பா எப்படி தாங்குவார்? சரி, அழாதே... இதோ இப்பவே அங்க வர்றோம்” என்ற கவியிடம் அடக்க முடியாமல் அழுகை வெடித்தது.

 

பேச்சு சத்தத்தில் விழித்துக்கொண்டார் எஸ்.கே.எஸ். அழுகையுடன் கவி நிற்பதைப் பார்த்துப் பதறியவர்...

 

“என்னம்மா கவி? யாருக்கு என்ன?” -அவரிடமும் பதட்டம் தொற்றிக்கொண்டது.

 

"அப்பா,  பெரியப்பா.. பெரியப்பா நம்மளை விட்டுட்டுப் போயிட்டாராம்  பா" என்று கதறினாள் கவி.

 

பதறி எழுந்து உட்கார்ந்த எஸ்.கே.எஸ். “அட ஈஸ்வரா...” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டார். “அண்ணா... அண்ணா... ”என்று தேம்ப ஆரம்பித்தார். 


 
அந்த வீடு ஒரே நிமிடத்த்தில் தீப்பிடித்த மாதிரி ஆனது. அவசரமாக சட்டையை மாட்டிக்கொண்டு எஸ்.கே.எஸ். முதல் ஆளாக கண்ணீருடன் கிளம்பிவிட்டார். கலங்கிய விழிகளுடன்  திலகா, அறைகளையெல்லாம் பூட்டிக்கொண்டு, கவியுடன் ராம் வீட்டுக்குக் கிளம்பினார்.

  

ராம் வீடு துக்கத்தில் மூழ்க ஆரம்பித்திருந்தது. விடிந்தால் பெருங்கூட்டம் கூடிவிடும். செய்தி இன்னும் வெளியே போகாததால் குடும்ப உறுப்பினர்களும் வேலையாட்களும் மட்டுமே அங்கே கண்ணீருடன் இருந்தனர்.

 

“ஏங்க.. என்னங்க.. இப்படி எல்லோரையும் விட்டுட்டுப் போயிட்டீங்களே....” -ராமின் அம்மா அழுது புரண்டுகொண்டிருந்தார்.  ராம் அப்பாவின் பக்கத்தில் நின்று கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தான்.

 

சென்ற வேகத்தில் அவன் தோளில் சாய்ந்துகொண்ட கவி அழுது கொண்டே "என்னாச்சு  ராம்"என்று கேட்டாள். 

 

"நல்லாதான் தூங்கினார். திடீட்ன்னு அப்பாவின் அறையில் சத்தம். என்னன்னு போய்ப் பார்த்தால் ஹார்ட் அட்டாக். நெஞ்சை பிடித்துக் கொண்டு வலியில் துடித்துக்கொண்டிருந்தார். நானும் பர்ஸ்ட் எய்டு மூலம் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்தேன்... ”என்று கலங்கினான்.

 
 
ராம் சொல்லச்  சொல்ல  ராமின் கண்களையே கூர்ந்து பார்த்தாள். அவன் விழிகள் அவளிடம் ஏதோ ஒன்றைச் சொன்னது. நடக்க வேண்டிய காரியம் எல்லாம் நடந்து முடிந்தது.

 
 
ஒரு சோகத்திற்கு இன்னொரு சோகம் தீர்வா? இல்லை தள்ளிவைப்பா? என்பது கவிக்கு புரியவில்லை. தியாவின் மரண நினைவுகளுக்கு சிலமணி நேரம் திரையிட்டிருந்தது பெரியப்பாவின் மரணம்.

 

ராம் தனியாக இருந்த சந்தர்ப்பத்தில்... 

 

"ராம்,  என் கண்ணைப் பார்த்துச் சொல்லு. பெரியப்பாவுக்கு உண்மையில் ஹார்ட் அட்டாக் தானா? என்று கேட்டாள். 

 

" ஒரு டாக்டர் எனக்கு தெரியாதா கவி?” 

 

"அதை ஒத்துக்கிறேன். அட்டாக் இயற்கையா? செயற்கையா??” என்று நேரடியாக கேட்டதும்... ராம் மௌனமாக வேறெங்கோ பார்த்தான். 

 

"உண்மையை சொல்லு  ராம்" -என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.  மெதுவாக சட்டையில் இருந்து அவள் கை விரல்களை விடுவித்தவன்... 


 
"கவி ஒன்னைப் புரிஞ்சிக்க, செத்துப்போன தியா... தனக்கு தொல்லை கொடுத்த நிர்வாகின்னு சொன்னது நம்ம சித்தப்பாவை இல்லை. என் அப்பாவை.  அப்பாவையும் நிர்வாகின்னுதானே, எல்லாரும் சொல்றாங்க. யார் குற்றவாளின்னு தியா தெளிவுபடுத்தாததால்தான், நீ இவ்வளவு மன உளைச்சலுக்கும் எதையும் செய்யும் மன நிலைக்கும் ஆளாகி இருக்கே. அந்த ஸ்கூலைப் பொறுத்தவரை, ஆவணங்கள்ல கையெழுத்துப் போடும் அதிகாரம் உன் அப்பாவிடம் இருந்தது. அதேபோல் என் அப்பா, பள்ளியை நிர்வாகம் செய்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் என் அப்பாவையும் நிர்வாகின்னுதானே அழைப்பார்கள். என் அப்பாவின் அனைத்து அயோக்கியத்தனமும் எனக்கு தெரியும். அவர் ஆரம்பத்தில் இருந்தே சபலவாதிதான். மாணவிகளின் உயிர் போகும் அளவிற்கு அவர் காரணமாக ஆவார்ன்னு  எனக்குத் தெரியாது. தியா இறந்த பிறகுதான் அவர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிஞ்சிக்கிட்டேன். தியாவின் மரணத்துக்காக அவர் கொஞ்சம் கூட வருந்தாமல், குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவர் இருந்ததை பார்த்தப்பதான் எனக்கு, அவர் மேல் கோபம் அதிகமாச்சு. எப்படியாவது போலீஸ் அவரைக் கண்டுபிடிச்சி தண்டனை கொடுக்குன்னு நினைச்சேன். ஆனால் போலீஸும் உங்க அப்பாவை மட்டும்தான் சந்தேகப்பட்டுச்சு. பிறகு அவர் நிரபராதின்னு தெரிஞ்சி, அவரை விட்டுடுச்சி. 

 

போலீஸ் மட்டும் உடனடியா எங்க அப்பாவைக் கைது செய்திருந்தா, ஒரு சில மரணமும் இல்லாமப் போயிருக்கும். எல்லாரும் கைதாகி இருப்பாங்க. நீயும் உன் வேலையைப் பார்த்துக்கிட்டு இருந்திருப்ப.  ஆனா, வழக்கு வேறுவேறு பக்கம் திசை திரும்பியதால்தான், நீ களமிறங்கு படியா ஆச்சு. இதுக்கப்புறமும் எங்க அப்பாவை விட்டுவச்சிருந்தா, நீ அநியாயமா... பண்புமிக்க மனிதரான எங்க சித்தப்பாவை, அதான் உங்க அப்பாவின் கதையும் முடிய நீ காரணமா இருந்திருப்ப. அதனால்தான், இனியும் சும்மா இருக்கக் கூடாதுன்னுதான், இப்படியொரு முடிவை நான் எடுத்தேன்” என்று விரிவாக அவன் பேசப் பேசத் திகைத்து நின்றாள் கவி.

 

“கவி, உன் நியாய உணர்ச்சியை மதிக்கிறேன். வியக்கிறேன். பாராட்டறேன். அதே சமயம், நீ உயிருக்கு உயிரா நேசிக்கும் உன் அப்பாவையே, அவர் குற்றவாளியான்னு உறுதிப்படுத்திக்காமலே, அவரை அதிகபட்சமா தண்டிக்கனும்ன்னு நினைச்சது தப்புதான்.” என்றான் அழுத்தமாக.

 

கண்ணீர்ப் பெருக்கோடு அவனைக் கைகூப்பிக் கும்பிட்ட கவி.. “நான் அப்பாவை தவறா எடைப்போட்டுட்டேன். என் கண்ணை, தவறான மதிப்பீடு மறைச்சிடுச்சி. அதே சமயம் பெரியப்பா இப்படிப்பட்டவர்ன்னு நான் நினைச்சிக்கூட பார்க்கலை. அதுக்காக நீ ஏன்டா அவரை இப்படி செஞ்சே?” என்றாள்...  

 

“நான் அதை செய்யலைன்னா, எங்க சித்தப்பாவை நான் இழந்திருப்பேன். அதுக்குதான் எங்க அப்பாவை வாழ்விலிருந்து ஓய்வு பெறவச்சேன். அதன் மூலம் அவரால் இனியும் அத்துமீறல்கள் அரங்கேறுவதைத் தடுத்திட்டேன். மனசு கேட்கலைதான். என்னை மார்பிலும் தோளிலும் வைத்து தாலாட்டியவர்தான். ஆனால் அந்த மார்பும் தோளும் சுத்தமானதில்லைங்கிற போது, என் அத்தனைப் பெருமையும், அவர் மீதான அத்தனை மதிப்பும் கரைஞ்சி போயிடிச்சி. அதனால் அவர் தூங்கிக்க்கிட்டு இருக்கும் போது, வெறும் சிரஞ்சில்  காற்றை நிரப்பி அவர் நரம்புகள்ல செலுத்தினேன். அதனால் ஹார்ட் அட்டாக் வந்து அவர் போய்ட்டார். அது இயற்கை மரணம் என்றாகிவிட்டது. அப்பாவின் பாசம் ஒருபுறம் இருந்தாலும் தியாவின் அண்ணனாக மனதிற்கு ஒரு நிறைவு ஏற்பட்டிருக்கு கவி” என்று ராம் சொன்னதும் அழுது கொண்டே அவன் காலடியில் சரிந்தாள்.   நடந்தவற்றை திலகாவிடம் சொன்னாள் கவி.

 

*ஒரு மாதம் கழித்த நிலையில், அன்று காலை 8 மணிக்கு கவிநிலா மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன் ஒரு கார் வந்து நின்றது. சினிமாவில் காட்டுவது போல கார், கதவைத் திறந்து கொண்டு ஒரு கால் தரையைத் தொட்டது. கேமராவை முழு ஆங்கிளில் வைக்கும்போது காட்டன் சாரி, கொண்டை, கூலிங்கிளாஸ் சகிதம் கெத்தாக மரண மாஸாக திலகா அதிலிருந்து இறங்கினார். பள்ளி நேரத்தில் மைதானத்தில் ஒரு மாணவன் கூட விளையாடவில்லை. மதில் சுவர் ஓரங்களில் மூலிகை தோட்டம் அமைத்துக் கொண்டிருந்தனர்.  ஆசிரியர்கள் அதற்கு உதவி செய்து கொண்டிருந்தனர். கழிவறைகளில் சில ஆசிரியர்கள் கழிவறை சுத்தமாக இருக்கிறதா? என மேற்பார்வை இட்டனர். மாணவர்களுக்கு குடிநீர் சுத்தமாக கிடைக்கிறதா என சில ஆசிரியர்கள் குடிநீர் தொட்டியை பராமரித்து கொண்டிருந்தனர்.  திலகா இதையெல்லாம் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.  திலகாவின் மனம் மட்டும் ராமிற்கு  நன்றி சொல்லியது. ராம்  தான் எஸ்.கே.எஸ்.சிடம் ராம்தான் சண்டை போட்டு பள்ளி நிர்வாகத்தை திலகா பெயரில் மாற்றினான். திலகாவிற்கும் பள்ளியைத் திறம்பட நிர்வாகம் செய்வதில் பெருமிதமாக இருந்தது. 

 

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஆசிரியர்களைச் சந்திப்பதற்காக ஒரு தனி அறை ஒதுக்கப் பட்டிருந்தது. தினமும் காலை 8 மணிக்கும், மாலை 4 மணிக்கு மேலும் அந்த அறையில் வந்து ஆசிரியர்களை சந்திக்கலாம் என்று பெற்றோர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது. திலகாவின் அறை வாசலில் "மாணவர் மனசு" என்ற பெட்டி இருந்தது. அதில் மாணவர்கள் தங்கள் குறைகளை எழுதிப் போடலாம். அந்தப் பெட்டி வாரத்திற்கு ஒரு முறை "பெற்றோர் ஆசிரியர் குழு"வின் முன்னிலையில் திறக்கப்பட்டு மாணவர்களின் குறைகள் பரிசீலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பெற்றோர்களின் வருமான சான்றிதழின் அடிப்படையில் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.


 
ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சம்பளம் வழங்கப்பட்டது. அதனால் ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு பணிபுரிந்தனர். மாணவிகள் நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில், பள்ளியே பாதுகாப்பான சோலைவனமாக மாறியிருந்தது. கவி பள்ளி பேருந்தில்  வந்து இறங்கினாள். பேருந்தையும்  மாணவர்களையும் கையில் விசிலுடன் ஒழுங்கப்படுத்திக் கொண்டிருந்தார் பி.இ.டி.டீச்சர் சாதனா. அவர் அருகில் சென்ற கவி" டீச்சர் இன்று நாம் முதல் முதல் சந்தித்த ஹோட்டலில் சந்திக்கலாமா?" என் தோழிகளுக்கு உங்களை அறிமுகப்படுத்துகிறேன். அப்பறம் நீங்க பர்தா போட்டுகிட்டு வர வேண்டிய அவசியம் இல்லீங்க, நாம  தான் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்துவிட்டோமே"?என்று கவி சொன்னதும், சிரித்து விட்டு  மாணவர்களை ஒழுங்குபடுத்துவதில் கவனத்துடன் இருந்தார் சாதனா. 

 

கவியின் நீட் தேர்வு லட்சியம் பல டாக்டர்களை  உருவாக்க வேண்டும் என்று மாறி இருந்தது. அதனால் அந்த பள்ளியிலேயே மீண்டும் மாணவியாக பள்ளிக்கு வந்தாள். நகரத்தில் மிகப்பெரிய கல்லூரியைக் கட்டவேண்டும். தான் ஒரு சிறந்த கல்வியாளராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டாள். பள்ளியில் கவி ஏற்படுத்திய இந்த மாற்றங்கள் கல்லூரியிலும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. 


 
அன்று மாலை, பள்ளியின் ஆண்டுவிழா கொரோனா நெருக்கடி காரணமாக, அதிக ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடந்தது. பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு என பலவும் முடிந்த நிலையில், நிறைவாகப் பேச எழுந்தார் பள்ளியின் புதிய தாளாளரான திலகா. பார்வையாளர் வரிசையில் கவியின் அருகே அமர்ந்திருந்தார் எஸ்.கே.எஸ். கவியின் தோழி ஷாலு உள்ளிட்டவர்களும் தியாவின் பெற்றோரும் கூட அந்த  நிகழ்ச்சிக்கு  சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி பளீரிட்டது. தன் கணவரை, மெல்லிய புன்னகையோடு பார்த்துவிட்டு பேசத் தொடங்கிய  திலகா, 

 

"அனைவருக்கும் என் புன்னகை வணக்கம். நான் அதிகம் பேச விரும்பவில்லை. சிறந்த பேச்சு என்பது, உயர்ந்த செயல் என்பது என் எண்ணம். விவசாயிகளுக்குத் தெரிஞ்சிருக்கலாம். சைனீஸ் மூங்கில்ன்னு ஒரு வகை மூங்கில் இருக்கு. அது  விதை போட்டவுடன் அது முளை விடாது. வளர்வதற்கு நாட்கள் எடுத்துக்கொள்ளும். அதுவும் மாதக்கணக்கில் அல்ல; ஆண்டுக் கணக்கில். அது தளிர் விட்டு பூமிக்கு மேல் எட்டிப் பார்க்கவே 5 ஆண்டுகள் வரை ஆகும். அதுவரையிலும் பொறுமையாக விவசாயி, நிலத்தில் நீர் தெளிக்கவேண்டும். ஐந்து ஆண்டுகள் கழித்து அது பசுமையாக வளர ஆரம்பிக்கும். ஆறு வாரங்களில் அது 60 அடிவரை வளர்ந்துவிடும். ஐந்து ஆண்டுகள் அந்த விதையானது தனது வேரை பூமிக்கடியில் நன்றாக திடமாக வளர்த்துக்கொள்ளும். அந்த வேர்கள்தான் அதன் பலம். அது தாங்கிப் பிடிப்பதில் தான், அது குறுகிய காலத்தில் வேகமாக வளர்கிறது. அது போலத்தான் மாணவப் பருவம். 15 வயதிலிருந்து 20 வயது வரை அவர்கள் எதிர்காலத்திற்கான வேர்களை நன்றாக பரவலாக ஊன்றவேண்டும். அதற்கு உறுதுணையாக இருக்கவேண்டிய கடமை ஆசிரியர்களுக்கானது." என்று திலகா பேசப் பேச, அனைவரும் கைதட்டினர்.  

 

அம்மாவா? இப்படி எல்லாம் கம்பீரமாகப் பேசுகிறாள்? கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய, கவி தன் அம்மாவைப் பெருமிதத்துடன் பார்த்தாள். அருகிலிருந்த எஸ்.கே.எஸ்., அதே பெருமிதத்துடன் தன் தோளில் சாய்ந்திருந்த கவியின் தலையை வாஞ்சையுடன் வருடிக்கொடுத்தார்.  

 

(நிறைவு) 

 

முந்தைய பகுதி : சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #49

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #49

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

marana muhurtham part 49

 

கன்னத்தில் விழுந்த அறை, ஆவேசம் கொண்ட புலி ஒன்றின் அறைபோல் இருந்தது கவிக்கு.

 

கவியின் அம்மா அப்படி ஒன்றும் பெரிய பலசாலி அல்ல. மென்மையானவர் தான். அவர்களிடம் எப்படி இப்படி ஒரு வலிமை? கோபம்  அப்படி ஒரு வலிமையைக் கொடுத்ததா..? 

 

சில நிமிடங்கள் அந்த இடத்தில் காற்றில்லா ஏதோ ஒரு கிரகத்திற்குச் சென்றது போன்ற உணர்வுடன் ஒருவித மௌனம் நிலவியது. கவி கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கண்கள் சிவக்க கண்ணீருடன் செய்வதறியாது தவித்த மனநிலையில் நிலைதடுமாறி நின்றுகொண்டிருந்தாள். மதுரையை எரித்தும்,  ஆவேசம் அடங்காத கண்ணகி மாதிரி காட்சி தந்தார் அம்மா திலகா.

 

ராம், கவியின் அருகில் சென்று அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டான். அவ்வளவுதான் திறந்துவிட்ட வீராணம் ஏரி போல, அழுகை வெள்ளமாய்ப் பொங்கியது. "விடு கவி,  யார் அம்மா தானே அடிச்சாங்க" என்று ஆறுதலாகத் தலை கோதினான்.

"அளவுக்கு அதிகமான நம்பிக்கையாலும் அளவுக்கு அதிகமான நம்பிக்கையின்மையாலும், தான் சில தவறுகள் நடைபெறுகின்றன" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ராம். 

 

பொங்கி அடங்கிய பாலென திலகா மகளின் அருகில் சென்று அணைத்துக் கொண்டு "சாரிடா என் செல்லம்" என்று கொஞ்சினார். விடுபட்ட கம்பிச்சுருள் போல விருட்டென்று விலகினாள் கவி.

"அம்மா... உனக்கு வேண்டுமானால் அப்பா நல்லவராக இருக்கலாம். ஆனால் பள்ளி மாணவிகளிடம் கொடூரனாக நடந்து கொண்டிருக்கிறார்". 

 

அவர் வாயிலிருந்து கூரிய அம்பாய் சொற்கள் வெளியேறின. " வாயை மூடு. என் புருசனைப் பற்றி எனக்குத் தெரியும்.   நிலவுக்குக் கூட வளர்பிறை தேய்பிறைன்னு இருக்கு. உங்க அப்பாவைப் பொறுத்தவரை அவர் கருணை மனதுக்கு கொஞ்சமும் தேய்மானம் இருக்காது. அவர் நம் குடும்பத்தின் மீது வைத்துள்ள அன்பை, திருமணம் ஆன முதல் நாள் எப்படி காட்டினாரோ, அப்படிதான் இந்த நிமிடம் வரை காட்டிக்கிட்டு இருக்கார். பெண் குழந்தைகளுக்கு நடக்குற கொடுமைகள் பத்திக் கேள்விப்படும் போதெல்லாம், அவர் தனிமையில் கவலைப்பட்டு கண்ணீர் சிந்துறது எனக்குத் தான் தெரியும். ஏன் தியாவுக்காக அவர் எத்தனை வேளை சாப்பிடாமல் இருந்தாருன்னு உனக்குத் தெரியுமா? " என்று கணவரின்  அன்பில் உருகினார்.

"பெண்களின் மிகப் பெரிய பலவீனமே தன் கணவன் ராமன் என்று நம்புவதுதான்" என்று மனதிற்குள் ஆதங்கப்பட்டாள் கவி. 

"அப்பா.. தவறானவர் என்ற உறுதியில் இருக்கிறாயா கவி?”. "அம்மா, அப்பா தவறு செய்யமாட்டார் என்ற உறுதியில் நீங்க இருக்கிறீர்கள் தானே...?" 

"அப்பாவே வந்து  நான் தவறானவன்" என்று சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்” என்று அழுத்தமாகச் சொன்னார்  திலகா.

"அம்மா ஒரு பொண்ணு இந்த விசயத்தில் பொய் சொல்வாளா..?"

" சரி.. உன் வாதப்படி அப்பா தான் தவறு செய்தவர்ன்னா, அதற்கு என்ன ஆதாரம்?"
 

"தியா.. மனநல மருத்துவரிடம் பேசி இருக்காளே..மா.  பள்ளியின் நிர்வாகியும் தவறாக நடக்கிறார்ன்னு தெளிவாகச் சொல்லி இருக்காளே... தியாவுக்கு அம்மா ஸ்தானத்தில் இருக்கிற நீ, கொஞ்சம் யோசித்துப் பாரும் மா.  உன் கையால உணவு ஊட்டிய மகளான நான் பொய் சொல்வேனா.?” கவி பேசப் பேச அம்மா அமைதியானார்.  

"அம்மா என்னிடம் ஒருவன் தவறாக நடந்து கொண்டால் சும்மா இருப்பியா..? மனசாட்சியுடன் பதில் சொல்லுங்க" என்று மகள் பாசத்தைக் கையில் எடுத்தாள் கவி.

"வெட்டி வகுந்திடுவேன். அவன் எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை" என்றார் ஆவேசமாக திலகா.

“வாய்நிறைய உன்னை அம்மா என்றுதானே மா தியா கூப்பிடுவா. வாழ வேண்டிய அந்த ஜீவன் அஸ்தியா கரையும் போது உன் மனசு கரையலையா” என்று ஆலம் விழுதெனப் பெண்மையின் தாய்மையை பிடித்துக் உலுக்கிக்கொண்டாள்  கவி.

"மனசு ரொம்ப வலிக்குதுதாம்மா. இருந்தாலும் அப்பாவை என்ன பண்றது?

"பெண்களின் இந்த குணம்தான் ஆண்களை தப்பு பண்ண வைக்கிது. எத்தனையோ பாலியல் வன்கொடுமைகளை மீடியாக்களில் பாக்கறோம். ஒரு இடத்தில் கூட அந்த தப்பான ஆண் மீது அவன் குடும்பத்தில் உள்ள பெண்கள் யாரும் கோபப்பட்டதாகவும், எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரியலையே.?  ஒரு பெண் தெருவில் இறங்கி அந்த ஆணை தண்டித்திருந்தால் மற்ற ஆண்களுக்கும் பயம் இருக்கும் இல்லையா?" என்று ஆவேசமாகப் பேசினாள் கவி. 

 

கவி சொன்னதும் திலகாவின் மனதிற்குள் இருந்த பெண்மையின் வீரம் விழித்தெழுந்தது. 

“என்ன பண்ணலாம்னு சொல்லு கவி, நீ என்ன சொன்னாலும் செய்றேன்." பொறுப்பை கவியிடமே ஒப்படைத்தாள். 

"அம்மா.. தியா மரணத்தில் மற்ற இருவருக்கும் என்ன தண்டனை கிடைத்ததோ, அதே தண்டனை தான் அப்பாவிற்கும் கிடைக்கணும்" என்று கவி மனதைக் கல்லாக்கிக் கொண்டு சொன்னாள்.

 

இதைக் கேட்டதும் ஐயோ என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார் திலகா.

" என்னால் இந்த கொடுமையெல்லாம் பார்க்க முடியலை. உங்களுக்கு இடையில் நடக்கும் இந்தப் போராட்டம் என் மனதில் சம்மட்டியால் அடிக்கிது.  நான் கிளம்புறேன்" என்று சொன்னபடி, வேகமாக அங்கிருந்து வெளியேறினான் ராம்.

 

திலகாவும் கவியும் அழுது கொண்டே இருந்தனர். 'பெண்மை வரமா..? சாபமா..? கருவறையில் கடவுளாக வணங்கும் பெண்மைதான், கயவர்களால் சூறையாடப்பட்டு மரணம் வரை கொண்டுசெல்கிறது’ என்று மனதிற்குள் கலங்கினாள் கவி.

 

இந்த உணர்வுப் போராட்டங்களுக்கு இடையில், ரெண்டு நாளில் இது பற்றி முடிவெடுக்கலாம் என்ற தீர்மானத்துடன், படுக்கைக்குச் சென்றார்கள் கவியும் திலகாவும். 

 

இதையெல்லாம் அறியாத  கவியின் அப்பா எஸ்.கே.எஸ்., ரெண்டு பெக் ஒயின் சாப்பிட்டுவிட்டு, இளையராஜாவின் ரிதத்தை மெலிதாக ஓடவிட்டுக்கொண்டு, படுக்கையில் சாய்ந்துகொண்டு, லெபனான் கவிஞன் கிப்ரானின் ‘கண்ணீரும் புன்னகையும்’ நூலை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தார்.
ஒரு பெரிய மரணச் செய்தியுடன் மறுநாள் விடியப்போகிறது என்பதை, மகள் அறையிலேயே உறங்கத் தொடங்கிய திலகா அப்போது அறிந்திருக்கவில்லை.

 

( அடுத்த பகுதியுடன் நிறைவுறும் )

 

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #48