Skip to main content

புரட்சிகர சிந்தனைக்குள் மாவோ! ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #5

Published on 18/10/2019 | Edited on 18/10/2019


இரவு நேரத்தில் நகரம் கருமை படர்ந்திருந்தது. ஆளுநரின் மாளிகை, நதியின் தீவுத்திட்டு உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே மின்சாரம் இருந்தது. மற்ற வீடுகளில் எண்ணெய் விளக்குகள் மங்கலான வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருந்தன. அந்த நகரத்தின் ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதியிலிருந்து தனிமைப்பட்டு இருந்தது. சாங்ஷா நகரின் இந்த பிரமாண்டமான தோற்றம் மாவோவை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியது. நகருக்குள் தன்னை அனுமதிப்பார்களா என்ற பயம் ஏற்பட்டது. மாபெரும் பள்ளி ஒன்றில் தன்னை அனுமதிப்பார்களா என்ற சந்தேகமும் எழுந்தது.

 

ghj



ஆனால், அவருக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. மிக எளிதாக பள்ளியில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அடுத்த ஆறு மாதங்கள் அவருடைய கல்வியைக் காட்டிலும் அரசியல் கல்விக்கு துணையாக இருந்தது. சாங்ஷா நகரம் முழுவதும் சீனப் பேரரசை ஆண்ட மஞ்சு இனத்தவரை எதிர்த்து புரட்சி வளர்ந்து கொண்டிருந்தது. பேரரசுக்கு எதிராக ரகசியமான இயக்கங்கள் உருவாகி இருந்தன. ஹான் மக்கள் எழுச்சி அடைய வேண்டும் என்று அந்த இயக்கங்கள் போராடின.

"எல்லோரும் தலைகளில் வெள்ளை துணிகளை கட்டுங்கள். வாள்களை ஏந்துங்கள் ஷெங் நுங்கின் வாரிசுகளிடம் சீனாவின் பதினெட்டு மாகாணங்களையும் ஒப்படைப்போம். "கலகம் செய்வோம், மஞ்சுகளை விரட்டுவோம்." என்ற முழக்கங்கள் சுவர்களில் எழுதப்பட்டு இருந்தன. ஒரு வசந்த காலத்தில் மாவோ சாங்ஷா நகரில் தனது இருப்பை பதிவு செய்தார். அந்த சமயத்தில் கேன்டன் நகரில் மஞ்சு எதிர்ப்பு கிளர்ச்சி நடைபெறுவதாக கேள்விப்பட்டார். ஹுவாங் ஸிங் என்பவர் தலைமையில் அந்த கிளர்ச்சி நடைபெற்றதாகவும் அதில் எழுபத்திரண்டு பேர் கொல்லப்பட்டார்கள் என்றும் மின்லி பௌ என்ற செய்தித்தாளில் ஒரு செய்தியை மாவோ வாசித்தார். இந்த ஹுவாங் ஸிங் சன்யாட் சென்னின் தளபதியாக செயல்பட்டார். ஹூனான் மாகாணத்தில் உள்ள காவேடாங் என்ற ஊரில் பிறந்தவர். (இப்போது அந்த ஊர் சாங்ஷா நகருடன் இணைக்கப்பட்டுவிட்டது)
 

h



அதுதான் அவர் வாசித்த அல்லது பார்த்த முதல் செய்தித்தாள். அந்த செய்தித்தாளில்தான்  சன்யாட் சென் என்ற பெயரை முதன்முதலாக மாவோ கேள்விப்பட்டார். அவர் ஜப்பானில் இருந்தபடி டோங்மெங்குய் அல்லது ஐக்கிய லீக் என்ற அமைப்பை செயல்படுத்தி வந்தார். இந்த இடத்தில் சன்யாட் சென் ஐப் பற்றி தெரிந்துகொள்வது நல்லது. குய்ங் முடியாட்சியை ஒழித்து சீனாவில் குடியாட்சியை உருவாக்க வேண்டும் என்று விரும்பியவர் சன்யாட் சென். 1866 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி பிறந்தவர். பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இவர், 1892 ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றார். மேற்கத்திய தொடர்பு இவரை சீனாவின் மீது அக்கறை செலுத்தத் தூண்டியது. குவாண்டங் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பம் இவருடையது. இவருடைய அண்ணன் பெரிய வர்த்தகராக இருந்தார். தனது தம்பி சன்யாட் சென் நல்ல கல்வி பெறுவதற்கு இவர் உதவி செய்தார். ஹவாய்த் தீவிலுள்ள ஹானலூலுவில்தான் இவர் ஆங்கில வழிக் கல்வி கற்றார். பிறகு ஹாங்காங்கில் மருத்துவப் படிப்பை முடித்தார்.

டாக்டராக பட்டம் பெற்றாலும் மருத்துவத் தொழிலில் ஈடுபடவில்லை. சீனாவின் ஊழல் மலிந்த மஞ்சு முடியாட்சியை துரத்த வேண்டும் என்று விரும்பினார். எனவே, முழுநேர புரட்சியாளராக மாறினார். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சீனாவைக் காப்பாற்றுவோம் என்ற அமைப்புக்கு நிதி திரட்டினார். ஆபத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சீனா திரும்பிய சென், மஞ்சு ஆட்சிக்கு எதிராக புரட்சியைத் தொடங்கினார். ஆனால், அந்தப் புரட்சி தோற்றது. உடனே அவர் பத்திரமாக லண்டனுக்கு ஓடிவிட்டார். இருந்தாலும் அங்கே இருந்த சீனத் தூதரக அதிகாரிகளால் அவர் கடத்தப்பட்டார். அவரை விடுவிப்பதில் பிரிட்டிஷ் அரசு முக்கிய பங்கு வகித்தது. பின்னர், சில நிபந்தனைகளுடன் அவர் விடுவிக்கப்பட்டார்.

 

jh



பிறகு ஜப்பானுக்குச் சென்றார். அங்கிருந்தபடியே சீனாவின் புரட்சிகர இயக்கத்தை இயக்கி வந்தார். இத்தகைய காலகட்டத்தில், அதாவது 1911 ஏப்ரல் 27 ஆம் தேதிதான் ஹுவாங்குவாகேங் புரட்சி என்ற பெயரில் ஹுவாங் சிங் தனது முதல் புரட்சியை தொடங்கினார். அந்த புரட்சி தோற்றதைத் தொடர்ந்துதான் 72 பேர் வைசிராயால் கொல்லப்பட்டனர். இந்தச் செய்தியைத்தான் மாவோ முதன்முதலாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இந்தச் செய்தி அவருக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் தனது முதல் சுவரொட்டியைத் தயாரித்தார். அதை தனது பள்ளியின் சுவரில் ஒட்டினார்.

"சன்யாட் சென்னை குடியரசுத் தலைவராகவும், கேங் யோவேய் ஐப் பிரதமராகவும் லியேங் சிச்சவ் ஐ வெளியுறவுத்துறை அமைச்சராகவும் கொண்ட புதிய அரசை அமைக்க உதவுங்கள்" என்று அந்தச் சுவரொட்டி அறைகூவல் விடுத்தது. ஆனால், அப்போது அவர் குழப்பமான அரசியல் சிந்தனையில் இருந்தார். அந்தச் சிந்தனையையும் சில வாரங்களில் ஏற்பட்ட நிகழ்வுகள் மாற்றிவிட்டன. சீனாவில் ஆண்கள் அனைவரும் தலைமுடியை சடைப் பின்னிக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் இருந்தது. அப்படி சடை பின்னாத ஆண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மஞ்சு இனத்தவர்களின் இந்தப் பழக்கத்தை ஹேன் வம்சத்தைச் சேர்ந்தவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. சாங்ஷாவில், இதை எதிர்த்து ஒரு புரட்சி நடைபெற்றது. ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று படித்தவர்கள் தங்கள் நீண்ட சடைகளை வெட்டிக் கொண்டார்கள். ஆனால், அவர்கள் சீனாவுக்கு திரும்பியவுடன் போலியாக ஒரு சடையை தயாரித்து, தலைப்பாகையுடன் இணைத்து அணிய வேண்டிய நிலை இருந்தது.

 

j



பிஸியாங் பிஸியாங் நகரில் படிக்கும்போது மாவோ இதைக் கண்டிருந்தார். அவருக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் ஒருவர் இப்படி போலியான சடையை அணிந்திருந்தார். அவரை மாவோவும் அவருடைய நண்பர்களும் போலி அன்னியப் பிசாசு என்று அழைத்தனர். இப்போது மாவோ அந்தச் சடையை ஹேன் வம்சத்தினரின் அடிமைச் சின்னமாக கருதத் தொடங்கினார். சாங்ஷா பள்ளியில் அவரும் அவருடைய நண்பர் ஒருவரும் தங்கள் சடையை வெட்டிக் கொண்டனர். தாங்களும் வெட்டிக் கொள்வதாக சில நண்பர்கள் அவரிடம் வாக்களித்தனர். ஆனால், அவர்கள் தங்கள் வாக்கை காப்பற்றத் தவறினார்கள். அவர்களை மாவோவும் அவருடைய நண்பர்களும் தாக்கினர். பத்துக்கு மேற்பட்டோரின் சடைகளை வெட்டினார்கள்.

சமீபகாலமாகவே சாங்ஷாவிலும், வூச்சாங்கிலும் உள்ள பள்ளிகளில் இதுபோன்ற சடைவெட்டும் நிகழ்ச்சிகள் அதிகரித்தன. இது மஞ்சு ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. தங்களுடைய ஆளுமையின் அடையாளம் அழிக்கப்படுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. ஹுவாங் ஸிங் தலைமையேற்ற முதல் புரட்சி தோற்றாலும், புரட்சியாளர்களுக்கு நிலப்பிரபுக்கள் ஆதரவளிக்க முன்வந்தனர். கல்வி கற்ற அந்த மேட்டுக் குடியினர், புதிய அரசு அமைந்தால் அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டும் என்று விரும்பினர். அதன்படி மஞ்சு ஆட்சியாளர்கள் புதிய அமைச்சரவையை அமைத்தார்கள். ஆனால், அந்த அமைச்சரவையில் மஞ்சு இன இளவரசர்களே அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதனால் வெறுப்படைந்த மேட்டுக் குடியினர் புரட்சியாளர்களுக்கு ஆதரவாக திரும்பினர். 1911 மே மாதம் வெளிநாட்டிலிருந்த சீனா பெருமளவு கடன் பெற்றது. இது சீனாவை அடிமைப்படுத்தும் முயற்சி என்று மக்கள் மத்தியில் கொந்தளிப்பு உருவானது. சாங்ஷாவில் மாணவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்த நேரத்தில் நகரத்தின் எல்லைச் சுவர்களுக்கு வெளியே மாணவர்கள் நடத்திய கூட்டங்களில் மாவோ தனது நண்பர்களுடன் சென்றார். அங்கு மூத்த மாணவர்கள் உணர்ச்சிகரமான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள். கூட்டத்தில் பேசிய ஒரு மாணவர், "ராணுவப் பயிற்சி பெறுவோம். போர் புரிய தயாராக இருப்போம்" என்று ஆவேசமாக அறைகூவல் விடுத்தார்.


 

Next Story

மாபெரும் அரசியல் குழப்பத்தில் சீனா! ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #9

Published on 10/12/2019 | Edited on 06/01/2020


சிலமாதங்களுக்கு முன்புதான் ஒரு வம்சாவளி அரசு தகர்க்கப்படுவதை மாவோ கண்கூடாக பார்த்தார். ஆனால் இப்போது மேட்டுக்குடியினரின் சூழ்ச்சிகள் மீண்டும் ஒரு ஆட்சிமாற்றத்தை கொண்டுவந்தன. புரட்சியின் பயன்கள் சாதாரண மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்த ஆட்சி மாற்றம் நடைபெற்றது. ஹூனான் ஆளுநர் டான் யாங்கெய் விரட்டப்பட்டது மாவோவுக்கு பிடிக்கவில்லை. அவர் நல்ல மாற்றங்களை கொண்டுவந்ததாக மாவோ நினைத்தார். கோமின்டாங் கட்சிக்கு எதிரான சண்டையில் சாங்ஷா நகரில்  இருந்த பெரிய வெடிமருந்து கிடங்கு பயங்கரமாக வெடித்து  சிதறியது. ஹூனானில் உள்ளவர்களுக்கு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக குடியரசுத் தலைவரின் ஆதரவாளர்களில் இருவர் கிடங்கிற்கு தீ வைத்தார்கள். கோமின்டாங் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி, மாவோவின் மனதுக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
 

n



ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்த ஆண்டுகளில் மாவோ சிறந்த எழுத்தாளராகவும் உருவாகி கொண்டிருந்தார். சாங்ஷாவில் ஜியாங் நதி என்ற நாளிதழைப் படித்து வந்தார். அதில்தான் முதன்முறையாக அவர் சோசலிசம் என்ற வார்த்தையைப் பார்த்தார். சன்யாட் சென் தலைமையில் நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு சில நாட்கள் கழித்து சீன சோசலிஸ்ட் கட்சியை ஜியாங் காங்கூ என்பவர் நிறுவினார். அந்தக் கட்சியின் கொள்கைகள் மாவோவை கவர்ந்தன. "அரசாங்கம் இல்லை; குடும்பம் இல்லை; மதம் இல்லை; தகுதிக்கேற்ற உழைப்பு; தேவைக்கேற்ற ஊதியம்." இது ஆற்றல் மிகுந்த கருத்து என்று தனது தோழர்களுக்கு மாவோ எழுதினார். அவருடைய கடிதங்களுக்கு சில நண்பர்கள் பதில் எழுதினார்கள்.ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஐந்து ஆண்டுகள் மாவோ படித்தார். இந்த ஐந்து ஆண்டுகளில் தனது கவனம் வேறு பக்கம் திரும்பாமல் பார்த்துக் கொண்டார். அங்கு அவருக்கு யுவான் ஜிலியூ, யேங் சாங்ஜி என்ற  இரண்டு பேராசிரியர்கள் உதவி செய்தார்கள். அவர்களில் யுவான், மாவோவின் எழுத்துக்களை கேலி செய்வார். ஒரு பத்திரிக்கையாளனின் எழுத்துக்களைப் போல இருப்பதாக அவர் கிண்டல் செய்வார். இவர், பெர்லின், டோக்கியோ போன்ற வெளிநாட்டு நகரங்களில் படித்து திரும்பியவர். இவருடைய கிண்டல் காரணமாக செவ்வியல் மொழி நடையை மாவோ கற்றுக்கொண்டார்.

யேங் சாங்ஜி மாவோ மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவர் கருத்துமுதல்வாதி. உயர்வான ஒழுக்க நெறிகளை பின்பற்றியவர். நீதிதவறாத, வலிமையுள்ள, நேர்மையான, சமூகத்திற்கு பயன்படக்கூடிய மனிதர்களாக மாணவர்கள் மாறவேண்டும் என்று போதனை செய்வார். 1915 -ஆம் ஆண்டு சீனா மீது ஏகாதிபத்திய அரசுகள் கடுமையான நெருக்கடியை திணித்தன. அந்த நெருக்கடிகளுக்கு சீனா இழிவான விதத்தில் அடிபணிந்து வந்தது. மாவோவின் மனதில் அவநம்பிக்கை தீவிரமடைந்தது. அந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி, யுவான் ஷிகெய்யிடம் ஜப்பானின் இறுதி எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டது. 21 கோரிக்கைகள் என்று அது அழைக்கப்பட்டது.

 

 

jhk



ஜப்பானின் மிகாடோ தலைமையிலான அரசு, சீனாவை முழுவதும் ஜப்பானின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக தெரிவித்தது. அத்துடன் ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த ஷான்டுங் மாகாணத்தில் ஜப்பானுக்கு தனிப்பட்ட உரிமைகள் இருப்பதாக வலியுறுத்தியது. வேறு வழியில்லாமல் சீன குடியரசுத்தலைவர் இதை ஏற்றுக் கொண்டார். இது ஒரு மிகவும் வெட்ககரமான நாள் என்று மாவோ எழுதினார். சீன அரசாங்கத்தை கண்டனம் செய்யுமாறு தனது சக மாணவர்களை கேட்டுக் கொண்டார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் யுவான் ஷிகெய் சீனாவின் பேரரசராக தன்னை அறிவித்துக் கொண்டார். தனது அரசுக்கு ஹூங்க்ஸியான் என்று பெயர் வைத்து கொண்டார்.

இதையடுத்து சீனாவின் பல மாகாணங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அவர்களுடைய எதிர்ப்பு காரணமாக புதிய பேரரசர் தனது முடிவை மறு பரிசீலனை செய்யத் தொடங்கினார். மீண்டும் குடியரசுத் தலைவராக மாற முன்வந்தார். ஆனால் அதற்குள் காலம் கடந்து  விட்டது. 1916 ஆம் ஆண்டு மே மாதம் தெற்கில் இருந்து வந்த படைகள் தலைநகரை நெருங்கின. இதையறிந்த ஹூனான் மாநிலத்தின் ஆளுநரான டாங் ஸியாங்மிங் பேரரசரின் ஆதரவாளர் என்ற நிலைப்பாட்டிலிருந்து விலக முடிவு செய்தார். அதற்கும் அவகாசம் இல்லை. அடுத்த மாதமே அதாவது, ஜூன் மாதம் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக பேரரசர் யுவான் ஷிகெய் திடீரென்று மரணம் அடைந்தார். ஹூனானில் நிலைமை மோசமடைந்தது. அங்கு பேரரசர் யுவான் ஷிகெய்யின் ஆதரவாளரான டாங் ஸியாங்மிங் விரட்டப்பட்டார். தனது அரண்மையிலிருந்து விவசாயி வேடத்தில் அவர் பின் வாசல் வழியாக தப்பிச் சென்றார். அவர் போகும்போது அரசாங்க கருவூலத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டார்.
 

Next Story

எதிர்காலம் குறித்த குழப்பங்களின் முடிவில்… ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #8

Published on 07/12/2019 | Edited on 06/01/2020

புரட்சிக்குப் பிறகு ஹூனான் மாநிலம் வேகமாக மாறிவந்தது. சீனாவில் வம்சாவளி ஆட்சி திடீரென்று தூக்கியெறியப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய நம்பிக்கை பிறந்தது. சீனாவில் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற யுவான் ஷிகெய் கொஞ்ச நாட்கள் வரை நல்ல பிள்ளையாக இருந்தார். தலைநகரில் நடப்பவை இன்னமும் மற்ற பகுதிகளுக்கு சென்று சேருவதில் தாமதம் நிலவியது. ஹூனானில் எழுத்து சுதந்திரம் இருந்தது. அந்த மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்த டான் யாங்கெய் ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தார். அபின் பயிரிடுவதை தடை செய்தார். போதை மருந்து இறக்குமதி நிறுத்தப்பட்டது. எழுத்து சுதந்திரத்தை பயன்படுத்தி பத்திரிகைகள் அமெரிக்காவையும் பிரிட்டனையும் கடுமையாக விமர்சனம் செய்தன. கல்விக்கு நிதி ஒதுக்கீடு மூன்று மடங்காக அதிகரிக்கப் பட்டது.  நவீனப் பள்ளிகள் ஏராளமாக உருவாகின. இளம் பெண்களும் இளைஞர்களும் தங்கள் முடிகளை வெட்டிக் கொண்டார்கள். பெண்கள் முக்காடில்லாமல் வெளியிடங்களில் நடமாடினர்.

 

k



ராணுவத்திலிருந்து மாவோ விலகியபோது அவருக்கு 18 வயது ஆகியிருந்தது. அவரளவில் இந்த காலக் கட்டம் குழப்பம் மிகுந்ததாக இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று அவருக்கு தெரியவில்லை. ஒரே நேரத்தில் பலவிதமான விளம்பரங்கள் அவரைக் கவர்ந்தன. காவல்துறை பயிற்சிப்பள்ளியில் சேருவதற்கு அழைப்பு விடுக்கும் ஒரு விளம்பரத்தைப் பார்த்தார். அதில் சேருவதற்கு பெயரை பதிவு செய்தார். ஆனால் அதற்காக அவரை பரிசோதிப்பதற்கு முன், சோப்புத் தயாரிக்கும் பள்ளியைப் பற்றிய விளம்பரத்தைப் பார்த்தார். அந்தப் பள்ளியில் கல்விப் பயிற்சி எதுவும் அளிக்கப்படவில்லை. ஆனால் உணவுக்கு உத்தரவாதமும் சிறிதளவு சம்பளமும் வழங்கப்படும் என்று அந்த விளம்பரத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

அது ஒரு கவர்ச்சியான விளம்பரம். சோப் தயாரிப்பதால் ஏற்படும் சமூக நன்மைகளை அந்த விளம்பரம் விரிவாக விளக்கியிருந்தது. காவல்துறை பயிற்சி பள்ளியில் சேரும் முடிவை மாவோ கைவிட்டார். அதற்கு பதிலாக சோப் தயாரிப்பாளராக மாறுவது என்று முடிவு செய்தார். ஒரு டாலர் பணம் கட்டி தனது பெயரை பதிவு செய்து கொண்டார். இந்த சமயத்தில் மாவோவின் நண்பன் ஒருவன் சட்டப்பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினான். அந்தப் பள்ளியில் சேரும்படி மாவோவை வற்புறுத்தினான். மூன்று ஆண்டுகளில் எல்லாவிதமான சட்ட நுணுக்கங்களையும் கற்றுத்தருகிறோம். படிப்பு முடிந்தவுடன் மாணவர்கள் வழக்குரைஞர்களாக மாறிவிடலாம் என்று ஒரு விளம்பரம் உறுதி அளித்தது. இந்த விளம்பர விவரங்களை விரிவாக குறிப்பிட்டு தனது செலவுக்கு பணம் அனுப்பும்படி மாவோ கடிதம் எழுதினார். இந்நிலையில் சீனா இப்போது பொருளாதார யுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியமைக்க பொருளாதார நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள் என்று மாவோவின் மற்றொரு நண்பர் யோசனை கூறினார்.

 

i



அதை தொடர்ந்து ஒரு வணிகவியல் நடுநிலைப்பள்ளியில் இன்னொரு டாலர் செலவு செய்து தனது பெயரை பதிவு செய்தார். அங்கு அவர் ஒரு மாணவனாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். ஆனால் இன்னொரு விளம்பரம் மறுபடியும் அவரை குழப்பியது. உண்மையில் உயர்நிலை வணிகவியல் பொதுப் பள்ளியில் படிப்பதுதான் நல்லது என்று அந்த விளம்பரம் தெரிவித்தது. இதையடுத்து அங்கும் ஒரு டாலர் கொடுத்து தனது பெயரை பதிவு செய்தார். தனது மகன் லாபகரமான தொழிலில் ஈடுபடப் போவதாக நம்பிய மாவோவின் தந்தை கல்விக் கட்டணத்துக்கான தொகையை அனுப்பி வைத்தார். உயர்நிலை வணிகவியல் பள்ளியில் மாணவனாக சேர்ந்து படிக்கத் தொடங்கினார் மாவோ. ஆனால் அங்கு பெரும்பாலான வகுப்புகள் ஆங்கில மொழிகளில் நடைபெற்றன. அரிச்சுவடியைக் காட்டிலும் சற்று கூடுதலாக மட்டுமே மாவோவுக்கு ஆங்கிலம் தெரியும். எனவே வெறுப்படைந்து அந்தப் பள்ளியிலிருந்து விலகினார்.

அதன்பிறகு மாவோவின் அடுத்தக் கட்ட சாகசம் தொடங்கியது. சாங்ஷா நகரில் இருந்த முதல் மாகாண நடுநிலைப்பள்ளியில் சேர்ந்தார். மிகவும் மதிப்பு வாய்ந்த அந்தப் பள்ளியில் சீன இலக்கியத்திற்கு வரலாற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்தப் பள்ளியின் நுழைவுத் தேர்வில் மாவோ முதல் மாணவனாக தேறினார். தான் தேடியது கிடைத்து விட்டது என்று நினைத்தார். சில மாதங்கள் மட்டுமே அங்கும் அவரால் தாக்கு பிடிக்க முடிந்தது. சில வரம்புகளுக்கு உட்பட்டு அங்கு பாடம் நடத்தப்பட்டது. பள்ளியின் விதிமுறைகளும் மாவோவால் ஏற்க முடியாதவையாக இருந்தன. எனவே அங்கிருந்தும் அவர் வெளியேறினார். அதன்பிறகு சாங்ஷாவில் புதிதாக திறக்கப்பட்ட பொது நூலகம் அவரை கவர்ந்து இழுத்தது. அங்கேயே தனது நேரத்தின் பெரும்பகுதியை செலவிடத் தொடங்கினார்.

 

i



நூலகம் திறந்தவுடன் உள்ளே நுழையும் முதல் வாசகராக மாறினார். எடுக்கும் நூல்களை மிக கவனமாக வாசிப்பார். மதிய உணவை வாங்குவதில் கூட காலம் தாழ்த்துவார். நூலகம் மூடப்படும் வரை அங்கேயே இருப்பார். இந்த நாட்கள் மாவோவின் வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாக இருந்தன. ஆனால் தனது மகன் வீணாக நாட்களை கழிப்பதாக மாவோவின் தந்தை கருதினார். எனவே அவருடைய மாதாந்திர செலவுகளுக்கு பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். பணம் இல்லாதபோது நமது மனம் ஒருமுகப்படுகிறது. மாவோவுக்கும் அதுமாதிரியான சந்தர்ப்பம் வாய்த்தது. எல்லா இளைஞர்களையும் போல தனது வாழ்க்கைக்கு உதவும் தொழில் குறித்து அவர் சிந்தித்தார்.

ஆசிரியராக மாறுவது என்று முடிவு செய்தார். 1913-ஆம் ஆண்டு ஹூனான் மாகாண நான்காவது ஆசிரியர் பயிற்சிப் பள்ளி வெளியிட்ட விளம்பரத்தைப் பார்த்தார். அங்கு சேருவதற்கு கல்விக் கட்டணம் தேவையில்லை என்ற விஷயம் மாவோவுக்கு ஆறுதலாக இருந்தது. நண்பர்களும் அங்கு சேரும்படி மாவோவை வற்புறுத்தினார்கள். தங்கும் இடத்திற்கும் உணவுக்கும் சிறு தொகை இருந்தால் போதும் என்பதால் மாவோ அங்கு சேரத் தயாரானார். தனது விருப்பத்தை தந்தைக்கும் குடும்பத்தினருக்கும் தெரிவித்து கடிதம் எழுதினார். அவர்களும் ஒப்புதல் அளித்தார்கள். பள்ளியில் சேருவதற்காக மாவோ ஒரு கட்டுரையை தயாரித்தார். அவருடைய நண்பர்கள் இருவரும் தங்களுக்கும் சேர்த்து கட்டுரைகள் தயாரிக்கும்படி மாவோவை கெஞ்சினார்கள்.

 

lk



மொத்தம் மூன்று கட்டுரைகளை மாவோ தயாரித்தார். அந்த மூன்று கட்டுரைகளும் பள்ளியில் ஏற்கப்பட்டன. மூவருக்கும் இடம் கிடைத்தது. உண்மையில் மாவோ மூன்று முறை அங்கு சேர தகுதி பெற்றார். இந்தப் பள்ளியில் சேர்ந்த சமயம் சீனாவின் அரசியல் திசை மாறிக்கொண்டிருந்தது. சன்யாட் சென் தலைமையில் நடைபெற்ற புரட்சி பெரிய மாற்றங்களை கொண்டு வர தவறிவிட்டது. மஞ்சுக்களின் ஆட்சி ஒழிக்கப்பட்டது தவிர வேறு எதுவும் புதிதாக உருவாகவில்லை. சீனாவின் குடியரசுத்தலைவராக பொறுப்பு வகித்த யுவான் ஷிகெய் பழைய சர்வாதிகார அரசில் பணியாற்றியவர். அந்த அரசாங்கத்தைப் போலத்தான் அவருடைய அரசாங்கமும் செயல்பட்டது.

1912 -ஆம் ஆண்டு சன்யாட் சென் கோமின்டாங் என்று அழைக்கப்பட்ட தேசிய கட்சியை தொடங்கினார். அந்தக் கட்சியை ஹூனான் மாகாண அரசு ஆதரித்தது. புரட்சி முடிந்து இரண்டு ஆண்டுகள் வரை யுவான் ஷிகெய் எந்தவிதமான கொள்கையும் இல்லாமல் ஆட்சி நடத்தினார். அவருடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சன்யாட் சென் போர்ப் பயணத்தை தொடங்கினார். இந்தப் போர்ப் பயணத்திற்கு சீனாவின் தெற்குப் பகுதியில் இருந்த ஐந்து மாகாணங்களும் ஜியெங்ஸீ மாகாணமும் தங்களுடைய ஆதரவை தெரிவித்தன. ஆனால் இந்த இரண்டாவது புரட்சி பெரிய அளவில் தீவிரமாக நடைபெறவில்லை. தெற்கு நோக்கி சென்ற புரட்சி படைகள் 1913-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படுதோல்வி அடைந்தன. மாவோ வசித்த ஹூனான் மாநிலத்தின் ஆளுநர் டான் யாங்கெய் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். அங்கு டாங் ஸியாங்மிங்  என்பவர் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  இந்தப் புரட்சி தோல்வி அடைந்த சில நாட்களில் கோமின்டாங் கட்சிக்கு சீனா முழுவதும் தடை விதிக்கப் பட்டது.