Skip to main content

கலகத்திற்கு கிடைத்த வெற்றி! ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #2

Published on 27/09/2019 | Edited on 27/09/2019


தனது 10 ஆவது வயதில் சேதுங் பள்ளியிலிருந்து வெளியேறி எங்காவது ஓடிவிட வேண்டும் என்று நினைத்தான். கால்போன போக்கில் நடந்தான். தொலைதூரத்தில் புதிய நகரம் இருப்பதாகவும், அதை நோக்கி பயணிப்பதாகவும் நினைத்துக் கொண்டான். எங்கெங்கோ சுற்றினான். மூன்று நாட்கள் சுற்றிய பிறகு மகனைக் காணவில்லை என்று தேடிய பெற்றோர் அவனைக் கண்டுபிடித்துவிட்டனர்.

ஆக, அவன் தனது ஊரையே சுற்றிச் சுற்றி வந்திருக்கிறான் என்பது அப்போதுதான் புரிந்தது. மொத்தத்தில் அவனுடைய மூன்று நாள் பயணம் வெறும் 3 கிலோமீட்டருக்கு உள்ளாகவே இருந்திருக்கிறது. வீட்டுக்கு திரும்பியபிறகு நிலைமையில் மாற்றம் இருந்தது. பெற்றோர் அணுசரணையாக இருந்தனர். ஆசிரியரும் அவனிடம் மென்மையாக நடந்துகொண்டார். தனது எதிர்ப்பு நடவடிக்கைக்கு பலன் கிடைத்ததை உணர்ந்தான். அதை ஒரு வெற்றிகரமான வேலை நிறுத்தமாக கருதினான். மீண்டும் பள்ளிக்குச் சென்றான். முந்தைய இரண்டு ஆண்டுகள் மனப்பாடம் செய்த வரிகளுக்கு ஆசிரியர்கள் பொருள் சொல்லத் தொடங்கினார். கன்பூஷிய சிந்தனைகளை கற்றிருப்பது சீன அறிவுத் துறையில் மிக முக்கியமான விஷயமாக கருதப்பட்டது. அந்த இலக்கியத்தில் மாவோவின் மனதில் பதிந்த ஊக்கமளிக்கும் பகுதிகள் ஏராளமாக இருந்தன.

 

fdj



"மனிதர்கள் தங்கள் சொந்த முயற்சிகளையே சார்ந்திருக்க வேண்டும்....உலகம் முழுவதிலும் சாத்தியமற்றது எதுவுமில்லை, துணிவுடன் செயல்பட விரும்புவது மனிதனின் உள்ளம் மட்டும்தான்" என்ற கருத்துகள் 12 வயதுச் சிறுவனான மனதிலேயே ஆழமாக பதிந்துவிட்டன. அதுபோலவே, கடந்த காலத்தை அறிந்து கொள்வதின் முக்கியத்துவத்தையும் இந்த இலக்கியங்கள் அவனுக்கு புரியவைத்தன.

ஆட்சி, மோசமான ஆட்சி, வம்சங்களின் எழுச்சி, வீழ்ச்சி, பழங்கால நிகழ்வுகளையும் நவீனக்கால நிகழ்வுகளையும் நேரில் காண்பதுபோல புரிந்துகொள்ளும்வரை இந்த நம்பகமான வரலாற்றுப் பதிவுகளை வரலாற்று மாணவன் ஆராய வேண்டும் என்று அந்த நூல் அறிவுறுத்தியது. தனது பள்ளியில் படிக்கும் நேரத்திலேயே தங்களுடைய நிலத்தில் சிறு சிறு வேலைகளைச் செய்யத் தொடங்கினான். தந்தை வற்புறுத்தியதால் மணிச் சட்டத்தைப் பயன்படுத்தி கணக்குப் போடுவதற்கு கற்றுக் கொண்டான். பள்ளிக்குச் சென்று வீட்டுக்கு வந்தவுடன் மாலைப் பொழுதுகளில் குடும்பத்தின் அன்றாட வரவு செலவுகளைப் பார்க்க முடிந்தது.

மாவோவின் தந்தை கோபக்காரராக இருந்தார். கருமியாக இருந்தார். பல சமயங்களில் மாவோவையும் அவருடைய சகோதரர்களையும் அடிப்பவராக இருந்தார். எப்போதும் மாவோவை குறைகூறுவார். அவன் எதைச் செய்தாலும் அதில் ஒரு குறையைக் கண்டுபிடிப்பார். மாவோவின் வீட்டில் இரண்டு கட்சிகள் இருந்தன. அவனுடைய தந்தைதான் ஆளுங்கட்சி. மாவோவின் தாய், அவனுடைய தம்பி, சில நேரங்களில் அவர்களுடைய வேலையாட்கள் எல்லாம் சேர்ந்து எதிர்க்கட்சியாகி விடுவார்கள்.

தந்தையிடம் நேரடியாக எதிர்த்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடாது என்பது தாயின் நிலைப்பாடு. ஆனால், மாவோ தனது தந்தையிடம் நேருக்கு நேர் எதிர்த்து பேசுவான். தான் படித்த இலக்கிய நூல்களில் இருந்து அழகான் மேற்கோள்கைக் காட்டுவான்.
 

 

hg



"என்னை சோம்பேறி என்கிறீர்களே, கன்பூஷிய இலக்கியங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா? இளையோரிடம் மூத்தவர்கள் கருணையுடனும் அன்புடனும் நடந்துகொள்ள வேண்டும். இளையவர்களைவிட பெரியவர்கள் மேலும் அதிகமாக வேலை செய்ய வேண்டும். உங்கள் வயதுக்கு நான் வரும்போது நானும் உற்சாகமாகவும் ஊக்கத்தோடும் இருப்பேன்"

இப்படி மாவோ தனது தந்தையை மடக்குவான்.

ஒருமுறை அவனுடைய வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தார்கள். அவர்கள் முன்னிலையில் மாவோவை சோம்பேறி என்றும் எதற்கும் லாயக்கில்லாதவன் என்றும் திட்டினார். உடனே, மாவோ தனது தந்தையை திட்டிவிட்டு கோபமாக வீட்டைவிட்டு வெளியேறினான். உடனே, தனது மகனை சமாதானப் படுத்துவதற்காக தாயும் அவனுக்குப் பின்னால் ஓடினார். அவருக்குப் பின்னால் கோபமாக கத்தியபடியே மாவோவின் தந்தையும் சென்றார். மாவோ ஒரு குளத்தின் கரையில் போய் நின்று கொண்டான்.

"அவரைப் போகச் சொல். அவர் வந்தால் நான் குளத்தில் குதித்துவிடுவேன்"

என்று தனது தாயை நோக்கி கத்தினான் மாவோ. அப்போது மாவோவுக்கு வயது 13. மாவோவை வீட்டுக்குத் திரும்பும்படி ரென்ஷெங் உத்தரவிட்டார். அவன் படியவில்லை. வீட்டுக்கு திரும்பினால் அவர் அடிக்கக் கூடும் என்று நினைத்தான். "இரண்டு கால்களாலும் மண்டியிட்டு தலையை நிலத்தில் தொட்டு வணங்கு" என்றார் ரென்ஷெங். "முடியாது. நீங்கள் என்னை அடிப்பதில்லை என்று உறுதியளித்தால், ஒரு காலில் மண்டியிடுகிறேன்" என்றான் மாவோ.

ஒருவழியாக அந்தச் சண்டை முடிவுக்கு வந்தது. இந்தச் சம்பவத்துக்கு பிறகு, இருவருக்கும் இடையிலான உறவில் மாற்றம் ஏற்பட்டது. கலகம் செய்து வெளிப்படையாக உரிமையைக் கோரினால் தனது தந்தை மடங்குவார் என்று புரிந்து கொண்டான். தனக்கு பிடிக்காததை எதிர்க்கும் குணம் வளர்ந்தது. அதேசமயம், மாவோ தனது வேலைகளை முறையாக கவனிக்கவும் இந்த சண்டைகள் உதவின. தனது வேலைகளில் முறையாக இருந்தால்தான் தனது வார்த்தைகளுக்கு மதிப்பிருக்கும் என்று மாவோ நினைத்தான்.

13 வயதில் பள்ளி வாழ்க்கை முடிந்து முற்றிலும் வெளியே வந்தான் மாவோ. பள்ளியில் படித்த சமயத்திலேயே, சீனாவின் பழங்கால இலக்கியங்கள் அவனைக் கவரவில்லை. சீனாவின் காதல் கதைகள், கலகங்களைப் பற்றிய கதைகளை அவன் விரும்பிப் படித்தான். இந்த நூல்களை அவன் படிக்கக் கூடாது என்று தந்தையும், ஆசிரியர்களும் தடுத்தனர். இந்த நூல்கள் சூழ்ச்சி நிரம்பியவை என்று மாவோவின் ஆசிரியர் கூறுவார். இருந்தாலும் வகுப்பில் மற்ற புத்தகங்களுக்குள் இவற்றை மறைத்து வைத்து படிப்பான்.

 

vghj



இந்தியாவுக்கு பயணம் செய்த யுவான் சுவாங் எழுதிய மேற்கில் மேற்கொண்ட பயணங்கள் என்ற நூலையும், யோஃபெங் வரலாற்றுச் சித்திரங்கள், நீரின் ஓரம், டாங்கிற்கு எதிரான எழுச்சி, மூன்று அரசுகள் உள்ளிட்ட நூல்களையும் அவன் படித்து முடித்திருந்தான். இந்தக் கதைகளைப் பற்றி கிராமத்துப் பெரியவர்களைக் காட்டிலும் மாவோவும் அவனுடைய நண்பர்களும் கூடுதலாகவே அறிந்திருந்தனர். தங்களுக்குத் தெரியாத பல கதைகளை பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

இந்தக் காலகட்டத்தில் வயலில் கூடுதல் நேரம் வேலை செய்தான். இரவு நேரத்தில் தந்தையின் கணக்கு வழக்குகளை எழுதினான். கிடைக்கிற எல்லா நூல்களையும் படித்தான். இதை அவனுடைய தந்தை விரும்பவில்லை. தனது அறையில் வெளிச்சம் வெளியே தெரியாமல் மறைத்து படித்தான். மாவோவுக்கு 14 வயது ஆனது. அந்தச் சமயத்தில் அவனைவிட 4 வயது மூத்த உறவுக்காரப் பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்துவைத்தார்கள். அந்தப் பெண்ணின் பெயர் லா. இந்தத் திருமணத்தை மாவோ விரும்பவில்லை. அந்தப் பெண்ணுடன் மாவோ சேர்ந்து வாழவே இல்லை. திருமணம் முடிந்த சில நாட்களில் மாவோ வீட்டைவிட்டு வெளியேறினார். சட்டம் படித்துக் கொண்டிருந்த தனது நண்பர் ஒருவருடன் தங்கிவிட்டார்.

பின்னாளில் அந்தப் பெண்ணை மாவோவின் தந்தை சேர்த்து வைத்திருந்தார். இதன் விளைவாக மாவோவின் தாய் தனது கணவரை விட்டு பிரிந்து தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கேயே அவர் இறந்தார். "நேர்மையில்லாத எனது அப்பாவின் மீது ஏற்பட்ட வெறுப்புதான் என் அம்மாவின் மரணம்" என்று தனது தாயின் இரங்கல் கூட்டத்தில் பேசினார் மாவோ. தனது திருமணத்தை மாவோ ஏற்கவில்லை. அவர் தனது வாழ்க்கையை தானே அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். தனது நண்பருடன் தங்கியிருந்த நாட்களில், மாவோ ஒரு புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அதை அவருடைய தூரத்து சகோதரர் ஒருவர் கொடுத்தார்.

"ஒரு வளமான எதிர்காலத்துக்கு எச்சரிக்கை" என்ற தலைப்பிலான அந்த நூலை ஷாங்காய் நகர தரகு முதலாளி ஒருவர் எழுதியிருந்தார். சீனாவில் மேற்கத்திய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று அந்த நூலில் அவர் எழுதியிருந்தார். மாவோவின் கிராமத்தில் மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாது. கட்டை வண்டிகள் மட்டுமே அவர்கள் அறிந்த வாகனம். ஆனால், தொலைபேசிகள், நீராவிக் கப்பல்கள், ரயில் போக்குவரத்து போன்ற மாவோ அறியாத விஷயங்கள் அதில் விவரிக்கப்பட்டு இருந்தன. வயலில் முழுநேரமும் வேலை செய்துகொண்டிருந்த மாவோவின் கற்பனையாற்றலை இந்த நூல் தூண்டிவிட்டது.

சில மாதங்களில் இன்னொரு துண்டுப் பிரசுரத்தை அவர் படித்தார். "அய்யோ! சீனா அடிமைப்படப் போகிறது!" என்ற தலைப்பிலான் அந்த பிரசுரம் அவருக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரியாவையும், சீனாவுக்குச் சொந்தமான தைவான் தீவையும் ஜப்பான் ஆக்கிரமித்த விதத்தை அந்த பிரசுரம் தெளிவாக தெரிவித்திருந்தது. இந்தோ சீனாவிலும் பர்மாவிலும் சீனா தனது மேலாதிக்க நிலையை இழந்த விதத்தையும் அது விவரித்தது. இதைப்படித்த மாவோ, தனது தாய்நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி கவலை அடைந்தார். நாட்டைக் காப்பாற்றுவது அனைவருடைய கடமை என்று நினைத்தார்.

வயலில் வேலை செய்வதை அவர் விரும்பவில்லை. மீண்டும் படிக்க வேண்டும் என்று விரும்பினார். இதையடுத்து அந்த கிராமத்தில் இருந்த தனியார் பள்ளி ஒன்றுக்கு சென்றார். அதை மாவோவின் குலமரபைச் சேர்ந்த கல்வியாளர் ஒருவர் நடத்திவந்தார். ஒரு ஆண்டு அங்கு படித்தபிறகு, இளம் மாணவர்களுக்கான நடுநிலைப் பள்ளியில் சேர விரும்பினார். அந்தப் பள்ளி மாவோவின் தாய் பிறந்த ஊரான ஹிஸியாங் ஹிஸியாங் என்ற பகுதியில் இருந்தது. அங்கு மாவோவின் சித்தப்பா பையன் ஒருவன் படித்துக் கொண்டிருந்தான். நவீனக் கல்வியில் ஏற்பட்டுவரும் மாறுபட்ட நிலைமைகளை அவன்தான் மாவோவிடம் கூறினான். மேற்கத்திய நாடுகளின் புதிய அறிவு அங்கு புகட்டப்படுகிறது. கல்வி கற்பிக்கும் முறைகளும்கூட தீவிரமானதாக அமைந்திருக்கிறது என்று மாவோவின் ஆர்வத்தை தூண்டினான்.

ஆனால், ஐந்து மாதத்திற்கான் தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்குச் சேர்த்து அப்போதைய நிலையில் ஆயிரத்து 400 சீன செப்புக் காசுகளை பள்ளிக்குச் செலுத்த வேண்டும். "இவ்வளவு பணம் செலவழித்து முன்னேறி கல்வியைப் படித்து என்ன செய்யப் போகிறாய்?" மாவோவின் விருப்பத்தை அவனுடைய தந்தை ஏற்கவில்லை. ஆனால், அவருடைய நண்பர் ஒருவர் மாவோவுக்கு ஆதரவாக பேசினார். "நல்ல கல்வியை கற்றால், மாவோவின் சம்பாதிக்கும் ஆற்றல்தானே அதிகரிக்கும்"இந்த வார்த்தைகளில் அவர் மயங்கினார். உடனே மாவோவுக்கு பண உதவி செய்ய அவர் ஒப்புக் கொண்டார்.

முதல்முறையாக தனது ஊரிலிருந்து 20 கிலாமீட்டர் தூரம் வெளியே செல்கிற வாய்ப்பு மாவோவுக்குக் கிடைத்தது.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்தாலும், தங்களுடைய கிராமத்தின் எல்லையைத் தாண்டி வாழ்க்கையில் வெற்றிபெறும் வாய்ப்பு தனது மகனுக்கு இருப்பதை மாவோவின் தந்தை உணர்ந்தார். இதன் காரணமாகத்தான் அவர் தனது மகனின் கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தடையின்றிச் செய்தார்.

 

 

 
 

Next Story

மாபெரும் அரசியல் குழப்பத்தில் சீனா! ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #9

Published on 10/12/2019 | Edited on 06/01/2020


சிலமாதங்களுக்கு முன்புதான் ஒரு வம்சாவளி அரசு தகர்க்கப்படுவதை மாவோ கண்கூடாக பார்த்தார். ஆனால் இப்போது மேட்டுக்குடியினரின் சூழ்ச்சிகள் மீண்டும் ஒரு ஆட்சிமாற்றத்தை கொண்டுவந்தன. புரட்சியின் பயன்கள் சாதாரண மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்த ஆட்சி மாற்றம் நடைபெற்றது. ஹூனான் ஆளுநர் டான் யாங்கெய் விரட்டப்பட்டது மாவோவுக்கு பிடிக்கவில்லை. அவர் நல்ல மாற்றங்களை கொண்டுவந்ததாக மாவோ நினைத்தார். கோமின்டாங் கட்சிக்கு எதிரான சண்டையில் சாங்ஷா நகரில்  இருந்த பெரிய வெடிமருந்து கிடங்கு பயங்கரமாக வெடித்து  சிதறியது. ஹூனானில் உள்ளவர்களுக்கு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக குடியரசுத் தலைவரின் ஆதரவாளர்களில் இருவர் கிடங்கிற்கு தீ வைத்தார்கள். கோமின்டாங் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி, மாவோவின் மனதுக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
 

n



ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்த ஆண்டுகளில் மாவோ சிறந்த எழுத்தாளராகவும் உருவாகி கொண்டிருந்தார். சாங்ஷாவில் ஜியாங் நதி என்ற நாளிதழைப் படித்து வந்தார். அதில்தான் முதன்முறையாக அவர் சோசலிசம் என்ற வார்த்தையைப் பார்த்தார். சன்யாட் சென் தலைமையில் நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு சில நாட்கள் கழித்து சீன சோசலிஸ்ட் கட்சியை ஜியாங் காங்கூ என்பவர் நிறுவினார். அந்தக் கட்சியின் கொள்கைகள் மாவோவை கவர்ந்தன. "அரசாங்கம் இல்லை; குடும்பம் இல்லை; மதம் இல்லை; தகுதிக்கேற்ற உழைப்பு; தேவைக்கேற்ற ஊதியம்." இது ஆற்றல் மிகுந்த கருத்து என்று தனது தோழர்களுக்கு மாவோ எழுதினார். அவருடைய கடிதங்களுக்கு சில நண்பர்கள் பதில் எழுதினார்கள்.ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஐந்து ஆண்டுகள் மாவோ படித்தார். இந்த ஐந்து ஆண்டுகளில் தனது கவனம் வேறு பக்கம் திரும்பாமல் பார்த்துக் கொண்டார். அங்கு அவருக்கு யுவான் ஜிலியூ, யேங் சாங்ஜி என்ற  இரண்டு பேராசிரியர்கள் உதவி செய்தார்கள். அவர்களில் யுவான், மாவோவின் எழுத்துக்களை கேலி செய்வார். ஒரு பத்திரிக்கையாளனின் எழுத்துக்களைப் போல இருப்பதாக அவர் கிண்டல் செய்வார். இவர், பெர்லின், டோக்கியோ போன்ற வெளிநாட்டு நகரங்களில் படித்து திரும்பியவர். இவருடைய கிண்டல் காரணமாக செவ்வியல் மொழி நடையை மாவோ கற்றுக்கொண்டார்.

யேங் சாங்ஜி மாவோ மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவர் கருத்துமுதல்வாதி. உயர்வான ஒழுக்க நெறிகளை பின்பற்றியவர். நீதிதவறாத, வலிமையுள்ள, நேர்மையான, சமூகத்திற்கு பயன்படக்கூடிய மனிதர்களாக மாணவர்கள் மாறவேண்டும் என்று போதனை செய்வார். 1915 -ஆம் ஆண்டு சீனா மீது ஏகாதிபத்திய அரசுகள் கடுமையான நெருக்கடியை திணித்தன. அந்த நெருக்கடிகளுக்கு சீனா இழிவான விதத்தில் அடிபணிந்து வந்தது. மாவோவின் மனதில் அவநம்பிக்கை தீவிரமடைந்தது. அந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி, யுவான் ஷிகெய்யிடம் ஜப்பானின் இறுதி எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டது. 21 கோரிக்கைகள் என்று அது அழைக்கப்பட்டது.

 

 

jhk



ஜப்பானின் மிகாடோ தலைமையிலான அரசு, சீனாவை முழுவதும் ஜப்பானின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக தெரிவித்தது. அத்துடன் ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த ஷான்டுங் மாகாணத்தில் ஜப்பானுக்கு தனிப்பட்ட உரிமைகள் இருப்பதாக வலியுறுத்தியது. வேறு வழியில்லாமல் சீன குடியரசுத்தலைவர் இதை ஏற்றுக் கொண்டார். இது ஒரு மிகவும் வெட்ககரமான நாள் என்று மாவோ எழுதினார். சீன அரசாங்கத்தை கண்டனம் செய்யுமாறு தனது சக மாணவர்களை கேட்டுக் கொண்டார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் யுவான் ஷிகெய் சீனாவின் பேரரசராக தன்னை அறிவித்துக் கொண்டார். தனது அரசுக்கு ஹூங்க்ஸியான் என்று பெயர் வைத்து கொண்டார்.

இதையடுத்து சீனாவின் பல மாகாணங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அவர்களுடைய எதிர்ப்பு காரணமாக புதிய பேரரசர் தனது முடிவை மறு பரிசீலனை செய்யத் தொடங்கினார். மீண்டும் குடியரசுத் தலைவராக மாற முன்வந்தார். ஆனால் அதற்குள் காலம் கடந்து  விட்டது. 1916 ஆம் ஆண்டு மே மாதம் தெற்கில் இருந்து வந்த படைகள் தலைநகரை நெருங்கின. இதையறிந்த ஹூனான் மாநிலத்தின் ஆளுநரான டாங் ஸியாங்மிங் பேரரசரின் ஆதரவாளர் என்ற நிலைப்பாட்டிலிருந்து விலக முடிவு செய்தார். அதற்கும் அவகாசம் இல்லை. அடுத்த மாதமே அதாவது, ஜூன் மாதம் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக பேரரசர் யுவான் ஷிகெய் திடீரென்று மரணம் அடைந்தார். ஹூனானில் நிலைமை மோசமடைந்தது. அங்கு பேரரசர் யுவான் ஷிகெய்யின் ஆதரவாளரான டாங் ஸியாங்மிங் விரட்டப்பட்டார். தனது அரண்மையிலிருந்து விவசாயி வேடத்தில் அவர் பின் வாசல் வழியாக தப்பிச் சென்றார். அவர் போகும்போது அரசாங்க கருவூலத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டார்.
 

Next Story

எதிர்காலம் குறித்த குழப்பங்களின் முடிவில்… ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #8

Published on 07/12/2019 | Edited on 06/01/2020

புரட்சிக்குப் பிறகு ஹூனான் மாநிலம் வேகமாக மாறிவந்தது. சீனாவில் வம்சாவளி ஆட்சி திடீரென்று தூக்கியெறியப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய நம்பிக்கை பிறந்தது. சீனாவில் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற யுவான் ஷிகெய் கொஞ்ச நாட்கள் வரை நல்ல பிள்ளையாக இருந்தார். தலைநகரில் நடப்பவை இன்னமும் மற்ற பகுதிகளுக்கு சென்று சேருவதில் தாமதம் நிலவியது. ஹூனானில் எழுத்து சுதந்திரம் இருந்தது. அந்த மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்த டான் யாங்கெய் ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தார். அபின் பயிரிடுவதை தடை செய்தார். போதை மருந்து இறக்குமதி நிறுத்தப்பட்டது. எழுத்து சுதந்திரத்தை பயன்படுத்தி பத்திரிகைகள் அமெரிக்காவையும் பிரிட்டனையும் கடுமையாக விமர்சனம் செய்தன. கல்விக்கு நிதி ஒதுக்கீடு மூன்று மடங்காக அதிகரிக்கப் பட்டது.  நவீனப் பள்ளிகள் ஏராளமாக உருவாகின. இளம் பெண்களும் இளைஞர்களும் தங்கள் முடிகளை வெட்டிக் கொண்டார்கள். பெண்கள் முக்காடில்லாமல் வெளியிடங்களில் நடமாடினர்.

 

k



ராணுவத்திலிருந்து மாவோ விலகியபோது அவருக்கு 18 வயது ஆகியிருந்தது. அவரளவில் இந்த காலக் கட்டம் குழப்பம் மிகுந்ததாக இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று அவருக்கு தெரியவில்லை. ஒரே நேரத்தில் பலவிதமான விளம்பரங்கள் அவரைக் கவர்ந்தன. காவல்துறை பயிற்சிப்பள்ளியில் சேருவதற்கு அழைப்பு விடுக்கும் ஒரு விளம்பரத்தைப் பார்த்தார். அதில் சேருவதற்கு பெயரை பதிவு செய்தார். ஆனால் அதற்காக அவரை பரிசோதிப்பதற்கு முன், சோப்புத் தயாரிக்கும் பள்ளியைப் பற்றிய விளம்பரத்தைப் பார்த்தார். அந்தப் பள்ளியில் கல்விப் பயிற்சி எதுவும் அளிக்கப்படவில்லை. ஆனால் உணவுக்கு உத்தரவாதமும் சிறிதளவு சம்பளமும் வழங்கப்படும் என்று அந்த விளம்பரத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

அது ஒரு கவர்ச்சியான விளம்பரம். சோப் தயாரிப்பதால் ஏற்படும் சமூக நன்மைகளை அந்த விளம்பரம் விரிவாக விளக்கியிருந்தது. காவல்துறை பயிற்சி பள்ளியில் சேரும் முடிவை மாவோ கைவிட்டார். அதற்கு பதிலாக சோப் தயாரிப்பாளராக மாறுவது என்று முடிவு செய்தார். ஒரு டாலர் பணம் கட்டி தனது பெயரை பதிவு செய்து கொண்டார். இந்த சமயத்தில் மாவோவின் நண்பன் ஒருவன் சட்டப்பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினான். அந்தப் பள்ளியில் சேரும்படி மாவோவை வற்புறுத்தினான். மூன்று ஆண்டுகளில் எல்லாவிதமான சட்ட நுணுக்கங்களையும் கற்றுத்தருகிறோம். படிப்பு முடிந்தவுடன் மாணவர்கள் வழக்குரைஞர்களாக மாறிவிடலாம் என்று ஒரு விளம்பரம் உறுதி அளித்தது. இந்த விளம்பர விவரங்களை விரிவாக குறிப்பிட்டு தனது செலவுக்கு பணம் அனுப்பும்படி மாவோ கடிதம் எழுதினார். இந்நிலையில் சீனா இப்போது பொருளாதார யுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியமைக்க பொருளாதார நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள் என்று மாவோவின் மற்றொரு நண்பர் யோசனை கூறினார்.

 

i



அதை தொடர்ந்து ஒரு வணிகவியல் நடுநிலைப்பள்ளியில் இன்னொரு டாலர் செலவு செய்து தனது பெயரை பதிவு செய்தார். அங்கு அவர் ஒரு மாணவனாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். ஆனால் இன்னொரு விளம்பரம் மறுபடியும் அவரை குழப்பியது. உண்மையில் உயர்நிலை வணிகவியல் பொதுப் பள்ளியில் படிப்பதுதான் நல்லது என்று அந்த விளம்பரம் தெரிவித்தது. இதையடுத்து அங்கும் ஒரு டாலர் கொடுத்து தனது பெயரை பதிவு செய்தார். தனது மகன் லாபகரமான தொழிலில் ஈடுபடப் போவதாக நம்பிய மாவோவின் தந்தை கல்விக் கட்டணத்துக்கான தொகையை அனுப்பி வைத்தார். உயர்நிலை வணிகவியல் பள்ளியில் மாணவனாக சேர்ந்து படிக்கத் தொடங்கினார் மாவோ. ஆனால் அங்கு பெரும்பாலான வகுப்புகள் ஆங்கில மொழிகளில் நடைபெற்றன. அரிச்சுவடியைக் காட்டிலும் சற்று கூடுதலாக மட்டுமே மாவோவுக்கு ஆங்கிலம் தெரியும். எனவே வெறுப்படைந்து அந்தப் பள்ளியிலிருந்து விலகினார்.

அதன்பிறகு மாவோவின் அடுத்தக் கட்ட சாகசம் தொடங்கியது. சாங்ஷா நகரில் இருந்த முதல் மாகாண நடுநிலைப்பள்ளியில் சேர்ந்தார். மிகவும் மதிப்பு வாய்ந்த அந்தப் பள்ளியில் சீன இலக்கியத்திற்கு வரலாற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்தப் பள்ளியின் நுழைவுத் தேர்வில் மாவோ முதல் மாணவனாக தேறினார். தான் தேடியது கிடைத்து விட்டது என்று நினைத்தார். சில மாதங்கள் மட்டுமே அங்கும் அவரால் தாக்கு பிடிக்க முடிந்தது. சில வரம்புகளுக்கு உட்பட்டு அங்கு பாடம் நடத்தப்பட்டது. பள்ளியின் விதிமுறைகளும் மாவோவால் ஏற்க முடியாதவையாக இருந்தன. எனவே அங்கிருந்தும் அவர் வெளியேறினார். அதன்பிறகு சாங்ஷாவில் புதிதாக திறக்கப்பட்ட பொது நூலகம் அவரை கவர்ந்து இழுத்தது. அங்கேயே தனது நேரத்தின் பெரும்பகுதியை செலவிடத் தொடங்கினார்.

 

i



நூலகம் திறந்தவுடன் உள்ளே நுழையும் முதல் வாசகராக மாறினார். எடுக்கும் நூல்களை மிக கவனமாக வாசிப்பார். மதிய உணவை வாங்குவதில் கூட காலம் தாழ்த்துவார். நூலகம் மூடப்படும் வரை அங்கேயே இருப்பார். இந்த நாட்கள் மாவோவின் வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாக இருந்தன. ஆனால் தனது மகன் வீணாக நாட்களை கழிப்பதாக மாவோவின் தந்தை கருதினார். எனவே அவருடைய மாதாந்திர செலவுகளுக்கு பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். பணம் இல்லாதபோது நமது மனம் ஒருமுகப்படுகிறது. மாவோவுக்கும் அதுமாதிரியான சந்தர்ப்பம் வாய்த்தது. எல்லா இளைஞர்களையும் போல தனது வாழ்க்கைக்கு உதவும் தொழில் குறித்து அவர் சிந்தித்தார்.

ஆசிரியராக மாறுவது என்று முடிவு செய்தார். 1913-ஆம் ஆண்டு ஹூனான் மாகாண நான்காவது ஆசிரியர் பயிற்சிப் பள்ளி வெளியிட்ட விளம்பரத்தைப் பார்த்தார். அங்கு சேருவதற்கு கல்விக் கட்டணம் தேவையில்லை என்ற விஷயம் மாவோவுக்கு ஆறுதலாக இருந்தது. நண்பர்களும் அங்கு சேரும்படி மாவோவை வற்புறுத்தினார்கள். தங்கும் இடத்திற்கும் உணவுக்கும் சிறு தொகை இருந்தால் போதும் என்பதால் மாவோ அங்கு சேரத் தயாரானார். தனது விருப்பத்தை தந்தைக்கும் குடும்பத்தினருக்கும் தெரிவித்து கடிதம் எழுதினார். அவர்களும் ஒப்புதல் அளித்தார்கள். பள்ளியில் சேருவதற்காக மாவோ ஒரு கட்டுரையை தயாரித்தார். அவருடைய நண்பர்கள் இருவரும் தங்களுக்கும் சேர்த்து கட்டுரைகள் தயாரிக்கும்படி மாவோவை கெஞ்சினார்கள்.

 

lk



மொத்தம் மூன்று கட்டுரைகளை மாவோ தயாரித்தார். அந்த மூன்று கட்டுரைகளும் பள்ளியில் ஏற்கப்பட்டன. மூவருக்கும் இடம் கிடைத்தது. உண்மையில் மாவோ மூன்று முறை அங்கு சேர தகுதி பெற்றார். இந்தப் பள்ளியில் சேர்ந்த சமயம் சீனாவின் அரசியல் திசை மாறிக்கொண்டிருந்தது. சன்யாட் சென் தலைமையில் நடைபெற்ற புரட்சி பெரிய மாற்றங்களை கொண்டு வர தவறிவிட்டது. மஞ்சுக்களின் ஆட்சி ஒழிக்கப்பட்டது தவிர வேறு எதுவும் புதிதாக உருவாகவில்லை. சீனாவின் குடியரசுத்தலைவராக பொறுப்பு வகித்த யுவான் ஷிகெய் பழைய சர்வாதிகார அரசில் பணியாற்றியவர். அந்த அரசாங்கத்தைப் போலத்தான் அவருடைய அரசாங்கமும் செயல்பட்டது.

1912 -ஆம் ஆண்டு சன்யாட் சென் கோமின்டாங் என்று அழைக்கப்பட்ட தேசிய கட்சியை தொடங்கினார். அந்தக் கட்சியை ஹூனான் மாகாண அரசு ஆதரித்தது. புரட்சி முடிந்து இரண்டு ஆண்டுகள் வரை யுவான் ஷிகெய் எந்தவிதமான கொள்கையும் இல்லாமல் ஆட்சி நடத்தினார். அவருடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சன்யாட் சென் போர்ப் பயணத்தை தொடங்கினார். இந்தப் போர்ப் பயணத்திற்கு சீனாவின் தெற்குப் பகுதியில் இருந்த ஐந்து மாகாணங்களும் ஜியெங்ஸீ மாகாணமும் தங்களுடைய ஆதரவை தெரிவித்தன. ஆனால் இந்த இரண்டாவது புரட்சி பெரிய அளவில் தீவிரமாக நடைபெறவில்லை. தெற்கு நோக்கி சென்ற புரட்சி படைகள் 1913-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படுதோல்வி அடைந்தன. மாவோ வசித்த ஹூனான் மாநிலத்தின் ஆளுநர் டான் யாங்கெய் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். அங்கு டாங் ஸியாங்மிங்  என்பவர் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  இந்தப் புரட்சி தோல்வி அடைந்த சில நாட்களில் கோமின்டாங் கட்சிக்கு சீனா முழுவதும் தடை விதிக்கப் பட்டது.