Skip to main content

போராளிக் குழந்தை! - ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #1

Published on 21/09/2019 | Edited on 28/09/2019


சீனாவின் இதயம் போன்றது ஹூனான் மாகாணம்.

இந்த மாகாணத்தின் சிறிய கிராமம் சவ்ஷேன்.

சில நாட்களுக்கு முன்புதான் சீனாவின் பாம்பு வருடம் முடிவதை ஒட்டி நடைபெறும் திருவிழா முடிந்திருந்தது.

திருவிழாவைக் கொண்டாடிய களைப்பில் இருந்தனர் விவசாயிகள். நல்ல குளிர்காலம். சில்லென்று வீசும் காற்றில் பனித்துளிகள் கலந்து வந்தது. கண்களுக்குள் தூசுபோல பனித்துளிகள் சுருக்சுருக்கென்று தைத்தன. ஏற்கெனவே, சீனர்களின் கண்கள் லேசான கீறல் போலத்தான் இருக்கும். இப்போது மேலும் அது சுருங்கியிருந்தது. கிராமத்து ஜனங்கள் குளிரைச் சமாளிக்க மெத்தைபோல் தைக்கப்பட்ட உடைகளை அணிந்திருந்தனர். அங்கு மொத்தமே முன்னூறு குடும்பங்கள்தான் வசித்தன. இவர்களில் பெரும்பாலோர் மாவோ என்ற பெயரையே கொண்டிருந்தனர். அதாவது அந்தக் கிராமத்தில் மாவோ என்ற இனக் குழுதான் பெரியது. எல்லோருமே ஒரே வழித் தோன்றலாக இருந்தனர்.

இந்தக் குடும்பங்களில் மாவோ ரென்ஷெங் குடும்பம் ஓரளவு வசதியானது. இருந்தாலும், கடன் சுமையால் அவருடைய குடும்பத்திற்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலமும் அடமானத்தில் இருந்தது. இதையடுத்து, ரென் ஷெங் தனது 16 வயதில் ஹூனான் மாகாணத்தில் ராணுவப் பணியில் சேர்ந்தவர். 6 வருடங்கள் ராணுவத்தில் வேலை செய்து சிறிதளவு பணம் சேர்த்தார். அதைக்கொண்டு தனது நிலத்தை மீட்டார். ஹூனான் மாநிலம் செழிப்பான பிரதேசம். இந்த மாநிலத்தில் இவ்வளவு நிலம் வைத்திருப்பவர் முக்கியமான நபராக மதிக்கப்படுவார். நெல் விளையும் இந்த நிலம் ரென்ஷெங்கையும் கிராமத்தில் முக்கியஸ்தராக மாற்றியிருந்தது.

ரென்ஷெங் மிகவும் சிக்கனமானவர். அவருடைய நிலத்தில் இரண்டு பேர் வேலை செய்தார்கள். அவர்களுக்கு தினக்கூலியாக சிறிதளவு அரிசியை மட்டும் கொடுப்பார். மாதத்துக்கு ஒருமுறை அவர்களுக்கு முட்டையுடன் சமைக்கப்பட்ட அரிசி உணவை வழங்குவார். ஆனால், எப்போதுமே அவர்களுக்கு இறைச்சி உணவு கொடுத்ததில்லை. ரென்ஷெங்கிற்கு இரண்டரை ஏக்கர் நிலத்துடன் பெரிய வீடும் இருந்தது. அது ஒரு பண்னை வீடு. பெரிய வீடு. வீட்டுக்கு பின்னால் உயரமான பைன் மரங்கள் இருந்தன. வீட்டின் முன்புறம் தாமரைக் குளம் ஒன்று இருந்தது. நிலம், வீடு தவிர அந்த நேரத்திலேயே மூவாயிரம் சீன வெள்ளி டாலர்களை சேமித்து வைத்திருந்தார். அந்தக் காலத்தில் இது மிகப்பெரிய தொகை.

தனது இரண்டரை ஏக்கர் நிலத்தை வைத்துக்கொண்டு அடுத்தவர்களின் நிலத்தையும் அடமானமாக வாங்கி  விவசாயம் செய்தார். கிட்டத்தட்ட அவர் ஒரு நிலப்பிரபுவாக மாறி வந்தார். தனது கிராமத்திலிருந்து பக்கத்தில் உள்ள சியாங்டேன் என்னும் நகரத்துக்கு தானிய வியாபாரம் செய்வதற்காக சென்று வருவார். ஹூனான் மாகாணத்திலேயே இந்த நகரத்தில்தான் படகுப் போக்குவரத்து இருந்தது. இந்த நகரத்தில் நல்ல குடியிருப்புகளில் வசித்த சில லட்சம் பேர் இருந்தனர். அவர்களிடம் வியாபாரம் செய்வதற்காகவே தனது கிராமத்தில் உள்ள ஏழை விவசாயிகள் உற்பத்தி செய்யும் தானியங்களை குறைந்த விலைக்கு மொத்தமாக வாங்குவார். கட்டை வண்டிகளில் ஏற்றி சியாங்டேன் நகருக்குச் சென்று கூடுதல் விலைக்கு விற்று வருவார்.

1893 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ம் தேதி ரென்ஷெங்கின் பண்ணை வீட்டில் 13 ஆம் அறையில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. ரென்ஷெங்கின் மனைவி வென் சிமேய் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

 

xh



நடுக்கும் குளிர்காலத்தில் பிறந்த அந்த குழந்தைதான், குடும்பத்திற்கு மூத்த குழந்தை. ஹூனான் மாகாண வழக்கபடி குடும்பத்தில் பிறக்கும் முதல் ஆண் குழந்தையை நான்கு நாட்கள் வரை குளிப்பாட்டக் கூடாது.

பின்னர் அந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதினார்கள்.

"இவன் பிறந்த நேரம் உங்கள் குடும்பத்தில் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும்"

ஜாதகத்தை நம்பிய ரென்ஷெங் தனது குழந்தைக்கு சேதுங் என்று பெயர் சூட்டினார். இந்தப் பெயர் ஜாதகத்தில் உள்ள குறைபாட்டை சரிசெய்யும் என்று அவர் நினைத்தார்.

நான்கு வாரங்கள் கழித்து அந்த குழந்தையின் தலையை மொட்டை அடித்தார்கள். ஆனால், உச்சந்தலையில் சிறிதளவு முடியை விட்டுவைத்தர்கள். இது அந்த குழந்தையை வாழ்க்கையோடு பிணைத்து வைத்திருக்க உதவும் என்ற நம்பிக்கை இருந்தது.

அதுபோலவே சில செப்பு காசுகளை கயிற்றில் கோர்த்து கழுத்தில் அணிவித்தனர். குழந்தையின் தலையில் மழிக்கப்பட்ட தலைமுடியில் சிறிதளவை எடுத்து நாயின் மயிரோடு கலந்து குழந்தை அணியும் உடையில் தைத்தனர்.

தீய ஆவிகள் அந்த குழந்தையை பார்த்தால் நாய் என்று நினைத்து விலகிவிடும் என்ற நம்பிக்கையில் இதைச் செய்தார்கள். சில குடும்பங்களில் ஆண் குழந்தைகளுக்கு காதணிகளை அணிவிப்பார்கள். தீய ஆவிகள் அந்த குழந்தையை பெண் குழந்தை என்று நினைத்து விலகிப்போய்விடும் என்ற நம்பிக்கை சீனாவில் நிலவியது.

 

 

hjl



சேதுங்கிற்கு இரண்டரை வயது ஆனபோது அவருடைய தாய், செமின் என்ற இரண்டாவது மகனை பெற்றெடுத்தார். அதன்பிறகு இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தவுடன் இறந்துவிட்டார்கள். 1903 ஆம் ஆண்டு ஷெடான் என்ற ஒரு ஆண் குழந்தை உயிர்பிழைத்தது.

ஆக, சேதுங்கிற்கு இரண்டு இளைய சகோதரர்கள் இருந்தனர். அவர்களுடன் செஜியான் என்ற பெண் குழந்தையை சேதுங்கின் பெற்றோர் தத்தெடுத்தனர். அந்த குழந்தை சேதுங்கின் சித்தப்பா ஒருவரின் மகள்.

இப்போது சேதுங்கின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறு ஆகிவிட்டது. இவர்களுடன் நிலத்தில் வேலை செய்த ஒருவருக்கும் உணவு அளிக்க வேண்டிய நிலையில் சேதுங்கின் தந்தை இருந்தார்.

 

 

hj



சேதுங்கை இனி மாவோ என்றே அழைக்கலாம்.

ஆறு வயது நிரம்பியவுடன் கிராமத்தில் மற்ற சிறுவர்கள் போல வயல்களில் சிறுசிறு வேலைகளை செய்தான். கால்நடைகளை மேய்ப்பது, வாத்துகளை கவனித்துக்கொள்வது என்று மாவோவுக்கு வேலைகள் ஒதுக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகள் இப்படி கழிந்த பிறகு கிராமத்தில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டான். பள்ளி என்றவுடன் பெரிதாக யோசிக்க வேண்டியது இல்லை. ஒரேஒரு பழங்கால சுவருடன் கூடிய அறை மட்டுமே உள்ளது அந்தப் பள்ளி. சீனாவில் 19ம் நூற்றாண்டில் வசதியான குடும்பங்கள் மட்டுமே கல்வியைப்பற்றி யோசிக்கும் நிலை இருந்தது. ஏனென்றால் ஆரம்பக் கல்விக்காக ஆண்டுக்கு நான்கு அல்லது ஐந்து வெள்ளி டாலர்கள் செலவாகும். விவசாய கூலி ஒருவர் ஆறு மாதம் உழைத்தால் மட்டுமே இந்த தொகை கிடைக்கும். ஏழைகள் யாரும் கல்வியைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது.

கல்வியின் முக்கியத்துவம் என்ன தெரியுமா? கன்ஃபூஷியஸ் எழுதிய இலக்கிய நூல்களை படித்து, பேரரசின் தேர்வுகளில் கௌரவமான மதிப்பெண்களை பெற்று அரசாங்கப் பதவியை அடைய முடியும். இதுதான் அன்றைய சீனாவில் கல்விக்கு இருந்த முக்கியத்துவம். ஆனால், இந்த கனவுகூட ஒருசிலருக்கு மட்டுமே நனவாகும் வாய்ப்பு இருந்தது. அரசாங்க பதவி கிடைத்தால் ஏராளமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை எல்லோருக்கும் இருந்தது. அதேசமயம் எழுதப்படிக்க கற்றுக்கொள்ளக் கூட முடியாத நிலையில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடினார்கள்.

கருமியாக இருந்தாலும் மாவோவின் தந்தை தனது மகனைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்ததற்கு ஒரு காரணம் இருந்தது. அவர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே கல்வி கற்றிருந்தார். எனவேதான், மற்ற விவசாயிகளைப் போல இல்லாமல், அவர் வியாபாரம் செய்தார். அவருக்கு கணிசமான வருமானம் வந்தது. அந்தக் வரவு செலவுக் கணக்கு விவரங்களை கவனிக்க மாவோ படிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

மாவோவின் தாய்க்கு அவருடைய பெற்றோர் வைத்த பெயர் வென் சிமேய். இதற்கு ஏழாவது சகோதரி என்று அர்த்தம். ஹூனான் விவசாயிகள் தங்களுக்குப் பிறக்கும் பெண்குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதில்லை. அதற்கு பதிலாக அவர்கள் பிறந்த வரிசைப்படி எண்களையே பெயராக அழைத்தார்கள். அந்தவகையில் அமைந்ததுதான் வென் சிமேய். மாவோவின் தந்தையைவிட தாய் மூன்று வயது மூத்தவர். அவர் தனது மகனைப் பற்றி நிறைய கனவுகளை தனக்குள் தேக்கியிருந்தார். புத்த மதத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். பல்வேறு மதச் சடங்குகளில் அவர் தனது மகனை ஈடுபடுத்தினார்.
 

h



மிக மோசமான சூழலில்தான் மாவோவின் பள்ளி இருந்தது. குறைந்தபட்சம் ஏழு, எட்டு வயதுடைய சிறுவர்களும், அதிகபட்சமாக 18 வயது வரையான பையன்களும் அந்தப் பள்ளியில் படித்தார்கள். எல்லோருமே ஒரேமாதிரியான தொளதொளப்பான உடைகளை அணிந்திருந்தனர். மாவோவின் ஆசிரியர் அவர்களுக்கு கல்வி கற்பித்த விதம் வினோதமானது. அவர் சொல்லிக் கொடுத்த பாடங்களோ மிகவும் கடினமானவை. பொருள் சொல்லித் தராமல் வெறுமனே மனப்பாடம் செய்யும் வகையில்தான் அவர் பாடம் நடத்தினார். சீனாவில் அதற்குமுன் இரண்டாயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட நடைமுறைப்படியே மாவோ கல்வி கற்றார். கல்வி பெறுவதை கடினமாக்கி, மேட்டுக் குடியினர் மட்டுமே கல்வி கற்க உரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடைமுறை.

இளம் பருவத்தினருக்கு சீன அறிஞரான கன்பூஷியஸ் 11 ஆம் நூற்றாண்டில் எழுதிய இலக்கியத்தை மாவோ கற்க வேண்டியிருந்தது.

அந்த இலக்கியம்,

"மனிதர்கள் பிறக்கும்போது நல்லவர்களாகத்தான் பிறக்கிறார்கள். இதில் எந்த பேதமும் இல்லை. ஆனால், நடைமுறையில் இவர்கள் மிகவும் வேறுபடுகிறார்கள்" என்று தொடங்குகிறது.

சீன சித்திர எழுத்துக்களால் ஆன அந்த இலக்கியத்தில் 356 வரிகள் இருந்தன.

ஆசிரியர் முதலில் ஒரு மாணவனை அழைப்பார். அவனிடம் சில வரிகளைச் சொல்வார். அந்த வரிகளை மாணவன் திரும்பத் திரும்பச் சொல்லி மனப்பாடம் செய்ய வேண்டும். பிறகு அடுத்த மாணவனை அழைத்து அதே வரிகளைச் சொல்வார். மனப்பாடம் ஆகும்வரை மாணவர்கள் அந்த வரிகளை சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். தனது பத்துவயதுவரை படித்த விஷயங்கள் எவை தெரியுமா? "கடின உழைப்பே மதிப்பு மிக்கது. விளையாடுவதால் எந்தப் பயனும் இல்லை"

இப்படிப்பட்ட ஒழுக்கவாத சொற்றொடர்கள்தான். மனப்பாடம் செய்வதும், புத்தகத்திலிருந்து எழுத்துக்களை படியெடுப்பதும், மனப்பாடம் செய்த வரிகளை ஒப்பிப்பதிலும்தான் மாவோவின் பெரும்பாலான நாட்கள் கழிந்தன. மாணவர்களுக்கு ஆசிரியர்களின் தரும் தண்டனை கடுமையாக இருந்தது.

தொடரும்...

Next Story

மாபெரும் அரசியல் குழப்பத்தில் சீனா! ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #9

Published on 10/12/2019 | Edited on 06/01/2020


சிலமாதங்களுக்கு முன்புதான் ஒரு வம்சாவளி அரசு தகர்க்கப்படுவதை மாவோ கண்கூடாக பார்த்தார். ஆனால் இப்போது மேட்டுக்குடியினரின் சூழ்ச்சிகள் மீண்டும் ஒரு ஆட்சிமாற்றத்தை கொண்டுவந்தன. புரட்சியின் பயன்கள் சாதாரண மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்த ஆட்சி மாற்றம் நடைபெற்றது. ஹூனான் ஆளுநர் டான் யாங்கெய் விரட்டப்பட்டது மாவோவுக்கு பிடிக்கவில்லை. அவர் நல்ல மாற்றங்களை கொண்டுவந்ததாக மாவோ நினைத்தார். கோமின்டாங் கட்சிக்கு எதிரான சண்டையில் சாங்ஷா நகரில்  இருந்த பெரிய வெடிமருந்து கிடங்கு பயங்கரமாக வெடித்து  சிதறியது. ஹூனானில் உள்ளவர்களுக்கு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக குடியரசுத் தலைவரின் ஆதரவாளர்களில் இருவர் கிடங்கிற்கு தீ வைத்தார்கள். கோமின்டாங் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி, மாவோவின் மனதுக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
 

n



ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்த ஆண்டுகளில் மாவோ சிறந்த எழுத்தாளராகவும் உருவாகி கொண்டிருந்தார். சாங்ஷாவில் ஜியாங் நதி என்ற நாளிதழைப் படித்து வந்தார். அதில்தான் முதன்முறையாக அவர் சோசலிசம் என்ற வார்த்தையைப் பார்த்தார். சன்யாட் சென் தலைமையில் நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு சில நாட்கள் கழித்து சீன சோசலிஸ்ட் கட்சியை ஜியாங் காங்கூ என்பவர் நிறுவினார். அந்தக் கட்சியின் கொள்கைகள் மாவோவை கவர்ந்தன. "அரசாங்கம் இல்லை; குடும்பம் இல்லை; மதம் இல்லை; தகுதிக்கேற்ற உழைப்பு; தேவைக்கேற்ற ஊதியம்." இது ஆற்றல் மிகுந்த கருத்து என்று தனது தோழர்களுக்கு மாவோ எழுதினார். அவருடைய கடிதங்களுக்கு சில நண்பர்கள் பதில் எழுதினார்கள்.ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஐந்து ஆண்டுகள் மாவோ படித்தார். இந்த ஐந்து ஆண்டுகளில் தனது கவனம் வேறு பக்கம் திரும்பாமல் பார்த்துக் கொண்டார். அங்கு அவருக்கு யுவான் ஜிலியூ, யேங் சாங்ஜி என்ற  இரண்டு பேராசிரியர்கள் உதவி செய்தார்கள். அவர்களில் யுவான், மாவோவின் எழுத்துக்களை கேலி செய்வார். ஒரு பத்திரிக்கையாளனின் எழுத்துக்களைப் போல இருப்பதாக அவர் கிண்டல் செய்வார். இவர், பெர்லின், டோக்கியோ போன்ற வெளிநாட்டு நகரங்களில் படித்து திரும்பியவர். இவருடைய கிண்டல் காரணமாக செவ்வியல் மொழி நடையை மாவோ கற்றுக்கொண்டார்.

யேங் சாங்ஜி மாவோ மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவர் கருத்துமுதல்வாதி. உயர்வான ஒழுக்க நெறிகளை பின்பற்றியவர். நீதிதவறாத, வலிமையுள்ள, நேர்மையான, சமூகத்திற்கு பயன்படக்கூடிய மனிதர்களாக மாணவர்கள் மாறவேண்டும் என்று போதனை செய்வார். 1915 -ஆம் ஆண்டு சீனா மீது ஏகாதிபத்திய அரசுகள் கடுமையான நெருக்கடியை திணித்தன. அந்த நெருக்கடிகளுக்கு சீனா இழிவான விதத்தில் அடிபணிந்து வந்தது. மாவோவின் மனதில் அவநம்பிக்கை தீவிரமடைந்தது. அந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி, யுவான் ஷிகெய்யிடம் ஜப்பானின் இறுதி எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டது. 21 கோரிக்கைகள் என்று அது அழைக்கப்பட்டது.

 

 

jhk



ஜப்பானின் மிகாடோ தலைமையிலான அரசு, சீனாவை முழுவதும் ஜப்பானின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக தெரிவித்தது. அத்துடன் ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த ஷான்டுங் மாகாணத்தில் ஜப்பானுக்கு தனிப்பட்ட உரிமைகள் இருப்பதாக வலியுறுத்தியது. வேறு வழியில்லாமல் சீன குடியரசுத்தலைவர் இதை ஏற்றுக் கொண்டார். இது ஒரு மிகவும் வெட்ககரமான நாள் என்று மாவோ எழுதினார். சீன அரசாங்கத்தை கண்டனம் செய்யுமாறு தனது சக மாணவர்களை கேட்டுக் கொண்டார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் யுவான் ஷிகெய் சீனாவின் பேரரசராக தன்னை அறிவித்துக் கொண்டார். தனது அரசுக்கு ஹூங்க்ஸியான் என்று பெயர் வைத்து கொண்டார்.

இதையடுத்து சீனாவின் பல மாகாணங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அவர்களுடைய எதிர்ப்பு காரணமாக புதிய பேரரசர் தனது முடிவை மறு பரிசீலனை செய்யத் தொடங்கினார். மீண்டும் குடியரசுத் தலைவராக மாற முன்வந்தார். ஆனால் அதற்குள் காலம் கடந்து  விட்டது. 1916 ஆம் ஆண்டு மே மாதம் தெற்கில் இருந்து வந்த படைகள் தலைநகரை நெருங்கின. இதையறிந்த ஹூனான் மாநிலத்தின் ஆளுநரான டாங் ஸியாங்மிங் பேரரசரின் ஆதரவாளர் என்ற நிலைப்பாட்டிலிருந்து விலக முடிவு செய்தார். அதற்கும் அவகாசம் இல்லை. அடுத்த மாதமே அதாவது, ஜூன் மாதம் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக பேரரசர் யுவான் ஷிகெய் திடீரென்று மரணம் அடைந்தார். ஹூனானில் நிலைமை மோசமடைந்தது. அங்கு பேரரசர் யுவான் ஷிகெய்யின் ஆதரவாளரான டாங் ஸியாங்மிங் விரட்டப்பட்டார். தனது அரண்மையிலிருந்து விவசாயி வேடத்தில் அவர் பின் வாசல் வழியாக தப்பிச் சென்றார். அவர் போகும்போது அரசாங்க கருவூலத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டார்.
 

Next Story

எதிர்காலம் குறித்த குழப்பங்களின் முடிவில்… ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #8

Published on 07/12/2019 | Edited on 06/01/2020

புரட்சிக்குப் பிறகு ஹூனான் மாநிலம் வேகமாக மாறிவந்தது. சீனாவில் வம்சாவளி ஆட்சி திடீரென்று தூக்கியெறியப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய நம்பிக்கை பிறந்தது. சீனாவில் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற யுவான் ஷிகெய் கொஞ்ச நாட்கள் வரை நல்ல பிள்ளையாக இருந்தார். தலைநகரில் நடப்பவை இன்னமும் மற்ற பகுதிகளுக்கு சென்று சேருவதில் தாமதம் நிலவியது. ஹூனானில் எழுத்து சுதந்திரம் இருந்தது. அந்த மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்த டான் யாங்கெய் ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தார். அபின் பயிரிடுவதை தடை செய்தார். போதை மருந்து இறக்குமதி நிறுத்தப்பட்டது. எழுத்து சுதந்திரத்தை பயன்படுத்தி பத்திரிகைகள் அமெரிக்காவையும் பிரிட்டனையும் கடுமையாக விமர்சனம் செய்தன. கல்விக்கு நிதி ஒதுக்கீடு மூன்று மடங்காக அதிகரிக்கப் பட்டது.  நவீனப் பள்ளிகள் ஏராளமாக உருவாகின. இளம் பெண்களும் இளைஞர்களும் தங்கள் முடிகளை வெட்டிக் கொண்டார்கள். பெண்கள் முக்காடில்லாமல் வெளியிடங்களில் நடமாடினர்.

 

k



ராணுவத்திலிருந்து மாவோ விலகியபோது அவருக்கு 18 வயது ஆகியிருந்தது. அவரளவில் இந்த காலக் கட்டம் குழப்பம் மிகுந்ததாக இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று அவருக்கு தெரியவில்லை. ஒரே நேரத்தில் பலவிதமான விளம்பரங்கள் அவரைக் கவர்ந்தன. காவல்துறை பயிற்சிப்பள்ளியில் சேருவதற்கு அழைப்பு விடுக்கும் ஒரு விளம்பரத்தைப் பார்த்தார். அதில் சேருவதற்கு பெயரை பதிவு செய்தார். ஆனால் அதற்காக அவரை பரிசோதிப்பதற்கு முன், சோப்புத் தயாரிக்கும் பள்ளியைப் பற்றிய விளம்பரத்தைப் பார்த்தார். அந்தப் பள்ளியில் கல்விப் பயிற்சி எதுவும் அளிக்கப்படவில்லை. ஆனால் உணவுக்கு உத்தரவாதமும் சிறிதளவு சம்பளமும் வழங்கப்படும் என்று அந்த விளம்பரத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

அது ஒரு கவர்ச்சியான விளம்பரம். சோப் தயாரிப்பதால் ஏற்படும் சமூக நன்மைகளை அந்த விளம்பரம் விரிவாக விளக்கியிருந்தது. காவல்துறை பயிற்சி பள்ளியில் சேரும் முடிவை மாவோ கைவிட்டார். அதற்கு பதிலாக சோப் தயாரிப்பாளராக மாறுவது என்று முடிவு செய்தார். ஒரு டாலர் பணம் கட்டி தனது பெயரை பதிவு செய்து கொண்டார். இந்த சமயத்தில் மாவோவின் நண்பன் ஒருவன் சட்டப்பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினான். அந்தப் பள்ளியில் சேரும்படி மாவோவை வற்புறுத்தினான். மூன்று ஆண்டுகளில் எல்லாவிதமான சட்ட நுணுக்கங்களையும் கற்றுத்தருகிறோம். படிப்பு முடிந்தவுடன் மாணவர்கள் வழக்குரைஞர்களாக மாறிவிடலாம் என்று ஒரு விளம்பரம் உறுதி அளித்தது. இந்த விளம்பர விவரங்களை விரிவாக குறிப்பிட்டு தனது செலவுக்கு பணம் அனுப்பும்படி மாவோ கடிதம் எழுதினார். இந்நிலையில் சீனா இப்போது பொருளாதார யுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியமைக்க பொருளாதார நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள் என்று மாவோவின் மற்றொரு நண்பர் யோசனை கூறினார்.

 

i



அதை தொடர்ந்து ஒரு வணிகவியல் நடுநிலைப்பள்ளியில் இன்னொரு டாலர் செலவு செய்து தனது பெயரை பதிவு செய்தார். அங்கு அவர் ஒரு மாணவனாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். ஆனால் இன்னொரு விளம்பரம் மறுபடியும் அவரை குழப்பியது. உண்மையில் உயர்நிலை வணிகவியல் பொதுப் பள்ளியில் படிப்பதுதான் நல்லது என்று அந்த விளம்பரம் தெரிவித்தது. இதையடுத்து அங்கும் ஒரு டாலர் கொடுத்து தனது பெயரை பதிவு செய்தார். தனது மகன் லாபகரமான தொழிலில் ஈடுபடப் போவதாக நம்பிய மாவோவின் தந்தை கல்விக் கட்டணத்துக்கான தொகையை அனுப்பி வைத்தார். உயர்நிலை வணிகவியல் பள்ளியில் மாணவனாக சேர்ந்து படிக்கத் தொடங்கினார் மாவோ. ஆனால் அங்கு பெரும்பாலான வகுப்புகள் ஆங்கில மொழிகளில் நடைபெற்றன. அரிச்சுவடியைக் காட்டிலும் சற்று கூடுதலாக மட்டுமே மாவோவுக்கு ஆங்கிலம் தெரியும். எனவே வெறுப்படைந்து அந்தப் பள்ளியிலிருந்து விலகினார்.

அதன்பிறகு மாவோவின் அடுத்தக் கட்ட சாகசம் தொடங்கியது. சாங்ஷா நகரில் இருந்த முதல் மாகாண நடுநிலைப்பள்ளியில் சேர்ந்தார். மிகவும் மதிப்பு வாய்ந்த அந்தப் பள்ளியில் சீன இலக்கியத்திற்கு வரலாற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்தப் பள்ளியின் நுழைவுத் தேர்வில் மாவோ முதல் மாணவனாக தேறினார். தான் தேடியது கிடைத்து விட்டது என்று நினைத்தார். சில மாதங்கள் மட்டுமே அங்கும் அவரால் தாக்கு பிடிக்க முடிந்தது. சில வரம்புகளுக்கு உட்பட்டு அங்கு பாடம் நடத்தப்பட்டது. பள்ளியின் விதிமுறைகளும் மாவோவால் ஏற்க முடியாதவையாக இருந்தன. எனவே அங்கிருந்தும் அவர் வெளியேறினார். அதன்பிறகு சாங்ஷாவில் புதிதாக திறக்கப்பட்ட பொது நூலகம் அவரை கவர்ந்து இழுத்தது. அங்கேயே தனது நேரத்தின் பெரும்பகுதியை செலவிடத் தொடங்கினார்.

 

i



நூலகம் திறந்தவுடன் உள்ளே நுழையும் முதல் வாசகராக மாறினார். எடுக்கும் நூல்களை மிக கவனமாக வாசிப்பார். மதிய உணவை வாங்குவதில் கூட காலம் தாழ்த்துவார். நூலகம் மூடப்படும் வரை அங்கேயே இருப்பார். இந்த நாட்கள் மாவோவின் வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாக இருந்தன. ஆனால் தனது மகன் வீணாக நாட்களை கழிப்பதாக மாவோவின் தந்தை கருதினார். எனவே அவருடைய மாதாந்திர செலவுகளுக்கு பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். பணம் இல்லாதபோது நமது மனம் ஒருமுகப்படுகிறது. மாவோவுக்கும் அதுமாதிரியான சந்தர்ப்பம் வாய்த்தது. எல்லா இளைஞர்களையும் போல தனது வாழ்க்கைக்கு உதவும் தொழில் குறித்து அவர் சிந்தித்தார்.

ஆசிரியராக மாறுவது என்று முடிவு செய்தார். 1913-ஆம் ஆண்டு ஹூனான் மாகாண நான்காவது ஆசிரியர் பயிற்சிப் பள்ளி வெளியிட்ட விளம்பரத்தைப் பார்த்தார். அங்கு சேருவதற்கு கல்விக் கட்டணம் தேவையில்லை என்ற விஷயம் மாவோவுக்கு ஆறுதலாக இருந்தது. நண்பர்களும் அங்கு சேரும்படி மாவோவை வற்புறுத்தினார்கள். தங்கும் இடத்திற்கும் உணவுக்கும் சிறு தொகை இருந்தால் போதும் என்பதால் மாவோ அங்கு சேரத் தயாரானார். தனது விருப்பத்தை தந்தைக்கும் குடும்பத்தினருக்கும் தெரிவித்து கடிதம் எழுதினார். அவர்களும் ஒப்புதல் அளித்தார்கள். பள்ளியில் சேருவதற்காக மாவோ ஒரு கட்டுரையை தயாரித்தார். அவருடைய நண்பர்கள் இருவரும் தங்களுக்கும் சேர்த்து கட்டுரைகள் தயாரிக்கும்படி மாவோவை கெஞ்சினார்கள்.

 

lk



மொத்தம் மூன்று கட்டுரைகளை மாவோ தயாரித்தார். அந்த மூன்று கட்டுரைகளும் பள்ளியில் ஏற்கப்பட்டன. மூவருக்கும் இடம் கிடைத்தது. உண்மையில் மாவோ மூன்று முறை அங்கு சேர தகுதி பெற்றார். இந்தப் பள்ளியில் சேர்ந்த சமயம் சீனாவின் அரசியல் திசை மாறிக்கொண்டிருந்தது. சன்யாட் சென் தலைமையில் நடைபெற்ற புரட்சி பெரிய மாற்றங்களை கொண்டு வர தவறிவிட்டது. மஞ்சுக்களின் ஆட்சி ஒழிக்கப்பட்டது தவிர வேறு எதுவும் புதிதாக உருவாகவில்லை. சீனாவின் குடியரசுத்தலைவராக பொறுப்பு வகித்த யுவான் ஷிகெய் பழைய சர்வாதிகார அரசில் பணியாற்றியவர். அந்த அரசாங்கத்தைப் போலத்தான் அவருடைய அரசாங்கமும் செயல்பட்டது.

1912 -ஆம் ஆண்டு சன்யாட் சென் கோமின்டாங் என்று அழைக்கப்பட்ட தேசிய கட்சியை தொடங்கினார். அந்தக் கட்சியை ஹூனான் மாகாண அரசு ஆதரித்தது. புரட்சி முடிந்து இரண்டு ஆண்டுகள் வரை யுவான் ஷிகெய் எந்தவிதமான கொள்கையும் இல்லாமல் ஆட்சி நடத்தினார். அவருடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சன்யாட் சென் போர்ப் பயணத்தை தொடங்கினார். இந்தப் போர்ப் பயணத்திற்கு சீனாவின் தெற்குப் பகுதியில் இருந்த ஐந்து மாகாணங்களும் ஜியெங்ஸீ மாகாணமும் தங்களுடைய ஆதரவை தெரிவித்தன. ஆனால் இந்த இரண்டாவது புரட்சி பெரிய அளவில் தீவிரமாக நடைபெறவில்லை. தெற்கு நோக்கி சென்ற புரட்சி படைகள் 1913-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படுதோல்வி அடைந்தன. மாவோ வசித்த ஹூனான் மாநிலத்தின் ஆளுநர் டான் யாங்கெய் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். அங்கு டாங் ஸியாங்மிங்  என்பவர் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  இந்தப் புரட்சி தோல்வி அடைந்த சில நாட்களில் கோமின்டாங் கட்சிக்கு சீனா முழுவதும் தடை விதிக்கப் பட்டது.